பூர்வீகம் மலைநாடு; கேரளம்.
ஒரு மாத குழந்தையாக இருந்தபோது, குடும்பத்தாரோடு புலம் பெயர்ந்தது சேலம் மாவட்டம் ஆத்தூர்.
ஹோட்டல் தொழில்.
பள்ளி படிப்பு முடிந்ததும், கல்லூரி படிப்புக்காக தூத்துக்குடி பயணம்.
கல்லூரியில் இடம் கிடைத்தும் ஹாஸ்டலில் இடம் கிடைக்காத சூழல் என்று எல்லாமே கணகச்சிதமான இறைவனின் ஏற்பாடுகள்.
கடைசியில் அண்ணனின் நண்பர் முத்து என்றழைக்கப்படும் ஷேக் தாவூதின் இல்லத்தில் தங்கி படிக்க வேண்டிவந்தது இளைஞன் ராஜகோபாலுக்கு!
ஆழ்ந்த உறக்கத்தில் லயித்திருந்த ஒரு நள்ளிரவு.
பக்கத்தில் யாரோ அழும் குரல் கேட்டு ராஜகோபால் வாரி சுருட்டிக் கொண்டு எழுந்து பார்த்தபோது…
தஹஜ்ஜத் நேரத்து தொழுகையில், தேம்பி.. தேம்பி அழுது தொழு கொண்டிருந்தான் நண்பன் முத்து.
தொழுகையும், அழுகையுமான அந்த நடுநிசி இரவு தனது வாழ்வில் அத்தகைய மாற்றங்களை நிகழ்த்த இருப்பதை ராஜகோபால் அறியவில்லை. அறிந்திருக்க நியாயமுமில்லைதான்!
எண்ணற்ற நன்மைகளைத் தாங்கிக் கொண்டு மனிதரின் எல்லா முறையீடுகளும் அருளாளனிடம் வானவர்களால் பதிவேற்றம் செய்யப்படும் அற்புத இரவின் நேரமல்லவா அது!
அந்த நடுநிசி அழுகைக்கான துருவல்களில் இஸ்லாம் பரிச்சயமானது ராஜகோபாலுக்கு.
அதன்பின், இடைவிடாத தேடல்களால் ஏற்பட்ட மனமாற்றங்கள், உற்றார் உறவுகளின் நெருக்குதல்கள் என்று கடைசியில் வீடு துறத்தல்வரை அது நீண்டது.
“வாணியம்பாடி சென்றால் கல்வி கற்கலாம்!” - என்று யாரோ சொன்னதைக் கேட்டு மேற்கொண்ட பயணம் பேராசியர் மௌலானா அஸ்லம் சாஹெபிடம் கொண்டு சேர்த்தது. அவரது வழிகாட்டலில் இறைநெறி முகிழ்ந்தது.
அதைத் தொடர்ந்து,
• வேலூர் இஸ்லாமிக் சென்டரின் முதல்வர் மௌலானா அப்துல் ஹபீஸ் ரஹ்மானியின் மருமகன்,
• ஜமாஅத்தின் கடைநிலை ஊழியன்,
• ஜுன் 1980-ல் சமரசத்தின் பொறுப்பாசிரியர்,
• குர்ஆன் மொழிப்பெயர்ப்பில் பங்களிப்பாளன்
• 9 புத்தகங்களின் பன்னூல் ஆசிரியர்
என்று அந்த ‘அழகிய ஒளிவிளக்கு’ சுடர்விட்டு பிரகாசித்தது.
யார் அந்த அழகிய ஒளிவிளக்கு?
எனது ஆசான்களின் பிறிதொருவர் அருமை சகோதரர் சிராஜுல் ஹஸன்தான் அவர்!
அவருடைய நீண்ட பயணத்தின் எளிய சுருக்கம்தான் மேற்சொன்னது.
நண்பர்களே!
சிராஜுல் ஹஸனை நான் எப்போதும் முகம் சுளித்துப் பார்த்ததில்லை. அதிர்ந்து பேசியும் கேட்டதில்லை. இதுவே அவரது பலவீனமோ என்று நான் பின்னாளில் சிந்தித்திருக்கிறேன்.
ஒரு எளிய அறையில்தான் சமரசத்தின் அத்தனைப் பொறுப்புகளையும் அவர் சுமந்து கொண்டிருந்தார்.
வலிமையான ஊடகமாக வெளியில் போற்றப்பட்ட சமரசம் பிற ஊடகங்கள் நவீனமயமானபோதும், அந்த நவீனத்துவத்தின் வாடைகூட படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், நவீன ஊடகங்களுக்கு சரிநிகராக அது வெளிவந்து கொண்டிருந்தது. இதற்கு சகோதரர் சிராஜுல் ஹஸனின் இடைவிடாத உழைப்புதான் காரணம் என்பேன்.
பத்திரிகைகளில் ஓரிரு கட்டுரைகள் எழுதியதும் தம்மை ஊடகவான்களாக பேசிக் கொண்டு வெளியில் வலம் வருபவர்களுக்கும், இயக்கம், பத்திரிகை, நூல் வெளியீட்டகம் என்ற அடையாளங்களோடு அயலகம் சென்று பொருள்நிறை பெற்றவர்களுக்கும் இடையே சிராஜுல் ஹஸன் பிழைக்கத் தெரியாதவராக இருந்தவர்.
வெளியிடங்களில், பத்திரிகையாளன் என்று சொல்லிக் கொண்டு அவர் எந்த சலுகையையும் பெற்றதாக எனக்கு தெரியவில்லை.
தன்னைப் பற்றியும், தன் சொந்த வாழ்க்கையைப் பற்றியும் அவர் வெளியில் யாரிடமும் சொல்லிக் கொண்டதில்லை!
1987-லிருந்து பழக்கமுள்ள சிராஜுல் ஹஸன் இதே மௌனத்தைதான் என்னிடமும் கடைப்பிடித்தார்.
கடைசியில் வைகறை நினைவுகளின் அவரோடான எனது நினைவுகளை பறிமாறிக் கொள்ளும் வேளையில்தான் அந்த மௌனம் ஓரளவு கலைந்தது.
மௌலானா குத்புத்தீன் அஹ்மது பாகவி, மூதறிஞர் ஜமீல் அஹ்மது சாஹெப், மௌலான மஸ்தான் அலி பாகவி, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் முன்னாள் தமிழக தலைவர் அப்துற் றகீப் சாஹெப், மௌலான சையத் முஹம்மது மதனீ போன்ற மாபெரும் ஆளுமைகளுடன் தான் பணியாற்றியதை ஒரு சிறப்பாக கருதுகிறார்.
35 ஆண்டு காலம் சமரசத்தில் பணியாற்றி பிறகு அப்பொறுப்புகளிலிருந்து விலகியது அல்லது விலக்கப்பட்டது சர்ச்சைக்குரியதாக வெளியில் பேசப்படுகிறது.
ஒரு அவரசநிலைக்காலம், அதன் பின் ஜமாஅத்தின் தடை என்றெல்லாம் பெரும் கடினங்களை கடந்து சமரசத்தை கரை சேர்த்தவர் சிராஜுல் ஹஸன். அத்தகைய அனுபவங்களையும், முதிர்ச்சியையும் புறக்கணித்திருப்பது ஆக்கப்பூர்வமான செயலாக எனக்குத் தெரியவில்லை.
அசோக் லேலண்ட் என்னும் ஆசியாவின் மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனத்தின் மூத்த அதிகாரியாக பணியில் இருந்து, நூற்றுக் கணக்கான பணியாளர்களை வைத்து நிறுவனத்தை இயங்கச் செய்த நான் எனது நிறுவனத்தின் சிராஜுல் ஹஸன் போன்ற இத்தகைய பணியாளர்களை இழக்க ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன்.
உற்பத்தி மற்றும் லாபத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்ட இத்தகைய நிறுவனங்களைவிடவா நாம் மிகவும் பின்தங்கிவிட்டோம்? என்ற உறுத்தல் என்னை துளைத்துக் கொண்டேயிருக்கிறது.
ஒருவேளை இது உலகமாயமாக்கலின் பாதிப்போ என்னவோ தெரியவில்லை.
இருள் சூழ்ந்த ஒரு நடுநிசியை பிரகாசத்தின் பெரு வெள்ளமாக்கி நேர்வழியைக் காட்டிய இறைவன் தனது அடியார்களுக்கு ஒரு போதும் அநீதி இழைப்பதில்லை என்பது மட்டும் உறுதி.
இறைவன் நாடினால்… வைகறை நினைவுகள் தொடரும்.
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வைகறை நினைவுகள் முந்தைய தொடர்களை வாசிக்க:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வைகறை நினைவுகள் பகுதி 1:
கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை
மன்னிப்பானாக: -
http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html