NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Thursday, November 30, 2017

Fire Trust

Share:

Monday, November 27, 2017

Friday, November 17, 2017

Tuesday, November 14, 2017

Saturday, November 11, 2017

சீமானுக்கு மடல்: 'அந்த வாசிப்புக்கு தக்க தருணம் இதுதான்!



 அன்புள்ள தம்பி சீமானுக்கு,

“நலம் பெற வாழ்த்துகள்..!”

தங்களை, இந்த மடல் நல்ல உடல் நிலையுடனும், வீரியமான நல்லெண்ணங்களுடனும் சந்திக்கும் என்று நம்புகின்றேன். அதற்காக இறைவனிடம் இருகரமேந்தி பிரார்த்திக்கின்றேன்.

தம்பி சீமான்,

இளமைக்காலந்தொட்டே நீங்கள் முஸ்லிம்களுடன் தொடர்புள்ளோராக இருந்திருப்பீர்கள். இன்னும் மிகச் சிறந்த தொடர்புகள் அந்த சமூகத்திலிருந்து உங்களுக்கு நட்புகளாக கிடைத்திருக்கலாம். அவர்களின் சாயல்கள் உங்களை பாதித்திருக்கலாம். இதன் மூலம் குறைந்தபட்சம் முஸ்லிம்கள் மீதான நல்லபிப்பிராயம்கூட விளைந்திருக்கலாம். இருப்பினும் அவர்களின் கொள்கை, கோட்பாடுகளின் வெளிப்பாடுகளை முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இதை அண்மையில் தாங்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய முஸ்லிம்களின் மேடையில் சில வார்த்தைகளுக்கு விளக்கம் கேட்டு தெரிந்து கொண்டது மூலமாக புரிந்து கொள்ள முடிகிறது. இத்தகைய மேடைகளில் இனி தாங்கள் அடிக்கடி கலந்துகொள்ள வேண்டியிருக்கும். தங்களின் பேச்சுரைகள் முஸ்லிம் சமூகத்து இளைஞர்களை பாதித்திருப்பதன் விளைவாக்கூட இருக்கலாம். தங்கள் மீதான நன்மதிப்பு அதிகரிப்பதாகவும் இருக்கலாம். அதனால், இஸ்லாம் குறித்து உங்கள் வாசிப்பும், உள்வாங்கலும் இன்னும் அதிகரித்துக் கொள்ள வேண்டியிருக்கும். இதை சொல்லும்போது, நீங்கள் தொப்பி, தாடியுடன் காட்சி அளிக்க வேண்டுமென்றோ, அவர்களின் நிகழ்வுகளில் கலந்துகொண்டு கஞ்சி அருந்த வேண்டும் என்பதோ பொருளல்ல. நீங்கள் இஸ்லாம் குறித்து மிக ஆழமாக வாசிக்க வேண்டிய தருணம் இது என்பதுதான் நான் சொல்ல வந்த உள்ளடக்கம்.

உலக மக்கள் தொகையில், நாலுபேருக்கு ஒருவர் முஸ்லிம் என்ற விகிதாச்சாரம் கொண்ட ஒரு சமூகத்தாருடன்தான் தாங்கள் தோள் இணைத்திருக்கிறீர்கள்.

இஸ்லாத்தின் எதிரிகளால், முஸ்லிம்கள் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு விதமான அடக்குமுறைகளுக்கும், அபாண்டங்களுக்கும், பழிபாவங்களுக்கும், அழிச்சாட்டியங்களுக்கும் தொடர்ந்து ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள் தாங்கள் நன்கறிந்தவைதான்.

உலகளவில், இத்தனை சிலுவைகளையும் சுமக்கும் ஒரு சமுதாயமாக இருந்தும் அவர்களை ஒழிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள் இஸ்லாத்தின் எதிரிகள்.

ஏனென்றால், முஸ்லிம்களுக்கு என்று உலகளாவிய ஒரு வழிகாட்டி வேதநூல் இருக்கிறது. அந்த வேதநூலின் வழியிலான செயலுரும் தந்த ஒரு தூதரும் இருக்கிறார். அந்த போதனைகள் வாழ்வியல் ஆளுமைகளாய் முஸ்லிம்களை வழி நடத்திக் கொண்டிருக்கிறது.

அதனால், மலைப்போல் எழும் துன்பங்களை எல்லாம் முஸ்லிம்கள் அந்த பேரழகிய ஆளுமைகளைக் கொண்டே தற்காத்துக் கொள்கிறார்கள். எதிரிகளால் திட்டமிடப்பட்டு அவர்கள் தொடர்ந்து வீழ்த்தப்பட்டும், அவர்கள் நிலைகுலையாமல் தங்கள் வாழ்வியல் களத்தில் உறுதியுடன் இருக்கிறார்கள். மொழிவாரியாக, இனவாரியாக, நிறவாரியாக, பல்வேறு மண்வாரியாக அவர்கள் தனித்திருந்தாலும் கொள்கையளவில் ஒன்று திரள இந்த அரும் போதனைகளே காரணம்.

தம்பி சீமான்,

நபிகளார் இறைவனால் அனுப்பப்பட்ட தீர்க்கத்தரிசி என்பது ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கும். சரி… நபிகளார் கொண்டு வந்த செய்திதான் என்ன தெரியுமா உங்களுக்கு?

ரோமப் பேரரசர் ஹெர்குலஸ். அவர் ‘பைத்துல் முகத்தஸ்’ எனப்படும் ஜெருசலேத்தில் இருந்தபோது, நபிகளார் அவருக்கு எழுதியிருந்த கடிதம் கிடைத்தது. யாராவது ஒரு அரபியர் கிடைத்தால். அவரிடம் நபிகளார் பற்றிய தகவல்களை விசாரிக்கலாம் என்று அவர் காத்திருந்த வேளையில்தான் மக்கத்து குறைஷி பிரமுகர் அபூ சுப்யானையும், அவரது தோழர் சிலரையும் தற்செயலாகச் சந்தித்தார்.

அபூ சுப்யானை நோக்கி ஹெர்குலஸ் இப்படி கேட்டார்: “முஹம்மது உங்களிடம் அப்படி என்னதான் கூறுகின்றார்?’

நபிகளாரிடம் கடும் விரோதம் பாராட்டி வந்தவர் அபூசுப்யான். ஆனாலும், நபிகளார் குறித்து நேர்மையான முறையில்தான் அவரால் பதிலளிக்க முடிந்தது. அவர் இப்படி சொன்னார்:

“ஒரே இறைவனை ஏற்றுக் கொள்ளுங்கள். வானங்களிலும், பூமியிலும் இறைவனின் ஆட்சியே நடக்கிறது. சர்வலோகங்களிலும் அவனுடைய ராஜாங்கமே நடக்கிறது. இந்த அதிகாரத்திலும், நிர்வாக அமைப்பிலும் அவன் யாரையும் இணை, துணையாக வைத்துக் கொள்ளவில்லை.

இறைவனின் சக்திக்கு நிகர் வேறு சக்தியில்லை. யதார்த்தம் இதுவாக இருக்கும்போது, மனிதர்கள் இறைவனுக்கு மட்டுமே தலை தாழ்த்தி வணங்கிட வேண்டும். அவன் மீதே அன்பு வைக்க வேண்டும்.

இறைவனுக்கு அடிபணிவதிலும், இறைவனை வணங்குவதிலும், இறைவனின் மேலாதிக்கத்திலும் எவரையும் இணை வைக்கக் கூடாது. எல்லாவற்றுக்காகவும் அவனிடமே உதவி கேட்க வேண்டும்.

முன்னோர்களின் கோட்பாடுகளையும், இணைவைப்புச் செயல்களையும் விட்டுவிட வேண்டும்.

தொழ வேண்டும்.

சொல்லாலும், செயலாலும் வாய்மையுடன் வாழ வேண்டும்.

ஆணும் – பெண்ணும் ஒழுக்கத்தையும், கற்பையும் பேணி வாழ வேண்டும்.

சக மனிதர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்.

மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் மக்களே! ஒருவருக்கொருவர் சகோதரர்களே! ரத்த உறவு முறைகளே!”

ஹெர்குலஸ் மன்ன்னிடம், நபிகளார் குறித்து கூடுதல், குறைவின்றி இப்படிதான் அபுசுப்யானால் சாட்சி அளிக்க முடிந்தது. நபிகளாரின் அழைப்பு, அன்னார் கொண்டு வந்த திருச்செய்தியின் உள்ளடக்கம் இதுதான்!

‘அம்ரு இப்னு அபஸா’ என்பது அந்த நபித்தோழரின் பெயர். இவர் நபிகளாருக்கு நபித்துவம் கிடைத்த தொடக்கக் காலத்தில் நபிகளாரை மக்கா நகரில் சந்தித்தார். அப்போது அவருக்கும் நபிகளாருக்கும் நடந்த உரையாடல் இது:

“நீங்கள் யார்?”

“நான் இறைவனின் தூதராவேன்!”

“… இறைத்தூதர் என்றால்…?”

“இறைவன் என்னைத் தனது தூதராக.. அனுப்பியுள்ளான்!”

“என்ன செய்தியுடன் இறைவன் உங்களை அனுப்பியுள்ளான்?”

மக்கள் தம் உறவினருடன் இணைந்து வாழ அறிவுறுத்த வேண்டும்!

இறைவன் ஒருவன் என்ற ஏகத்துவக் கொள்கை பரப்ப வேண்டும்!

இறைவனுடன் வேறு எவரையும், எதையும் இணை வைக்கக் கூடாது!

இது போன்ற நோக்கங்களுடன் இறைவன் என்னை அனுப்பியுள்ளான்!”

நபிகளார் தமது வருகையின் நோக்கத்தை வாய்ப்பட ரத்தினச் சுருக்கமாக சொன்னது இது:

"இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையிலான உறவை சீர்ப்படுத்த வேண்டும். அந்த உறவு சரியான அடிப்படைகள் மீது நிறுவ வேண்டும். அதற்கான அடிப்படை …. ‘இறைவன் ஒருவன்’ – என்ற ஏகத்துவமாகும். இறைவனின் அதிகாரத்தில் வேறு எவரது தலையீட்டையும் அனுமதிக்கக் கூடாது! இறைவனை மட்டுமே வணங்க வேண்டும். இறைவனின் கட்டளைகளுக்கு மட்டுமே கீழ்ப்படிய வேண்டும்.

மனிதர்களுக்கிடையிலான சரியான தொடர்பின் அடிப்படைகள் பரஸ்பர அனுதாபமும், பரிவும், இரக்கமுமேயாகும். மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள். ரத்த பந்த உறவு முறையினர். அதனால், ஒருவர் மற்றொருவரிடம் பரிவுடனும், இரக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். ஒருவர் அநீதிக்கு ஆளாகும்போது, அனைவரும் அநீதி இழைக்கப்படுபவருக்கு ஆதரவாகக் கிளர்ந்தெழ வேண்டும். ஆபத்தில் சிக்கிக் கொண்டோரை ஓடோடிச் சென்று காக்க வேண்டும்"

நபிகளாருக்கு முன் எல்லா இறைத்தூதர்களும் இந்த அடிப்படைச் செய்திகளைத்தான் சொன்னார்கள். அதாவது, ஏகத்துவம் எனப்படும் ஓரிறைக் கொள்கையும், மனிதர்கள் அனைவரும் முதல் மனிதரும் … முதல் இறைத்தூதருமான ஆதிபிதா ஆதம் அவர்களின் சந்ததிகள். சகோதர உறவுமுறை கொண்டவர்கள் என்பதுதான் அனைத்து இறைத்தூதர்கள் கொண்டு வந்த இறைச்செய்தியின் சாராம்சம்.

முகீரா பின் ஷீஃபா மற்றொரு நபித்தோழர்.

ஒருமுறை, பாரசீகத்து தளபதி ருஸ்தூமுடன் நடந்த உரையாடலில் சொன்னார்:

“அய்யா! நாங்கள் வணிகர்கள் அல்ல. வணிகத்துக்கான புதிய புதிய சந்தைகளைத் தேடிக் கொண்டிருப்பதற்கு! அது எங்கள் நோக்கமும் அல்ல; எங்கள் இலக்கும் அல்ல. எங்களது நோக்கமும், குறிக்கோளும் மறு உலகம்தான்!

நாங்கள் இறைவனின் கட்டளைகளான இஸ்லாத்தின் கொடியை தோளில் சுமந்து நிற்பவர்கள். அந்த வாழ்க்கையின் பக்கம் மக்களை அழைப்பதே எங்கள் குறிக்கோள். வணக்கத்துக்குரியவன் ஒரே இறைவனான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பதும், முஹம்மது நபிகளார் இறைவனின் திருத்தூதர் என்று சான்று பகர்வதும் இந்த மார்க்கத்தின் அடிப்படை. மனிதன் தன்னைப் போன்ற சக மனிதனுக்கு அடிபணிவதிலிருந்து அவனை விடுத்து இறைவனுக்கு அடிபணிந்து வாழச் செய்ய வேண்டும் என்பதும் இந்த வாழ்க்கை நெறியின் அறிவுரையாகும்!”

இதைக் கேட்ட பாராசீக தளபதி வியந்து சொன்னார்:

“நல்ல அறிவுரைதான்! இன்னும் என்ன சொல்கிறது உங்கள் மார்க்கம்?”

அதற்கு நபித்தோழர் முகீரா பதிலளித்தார்:

“மனிதர்கள் அனைவரும் ஆதமின் வழித்தோன்றல்களே! அவர்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் என்பதும் அந்த அறநெறியின் போதனைகளாகும்”

இவை நபிகளார் கொண்டு வந்த இஸ்லாம் என்னும் இறைநெறியின் அடிப்படை செய்திகளில் சில. எவர் விரும்புகின்றாரோ அவரை மனிதர்களின் அடிமைப்படும் தளைகளிலிருந்து விடுவித்து இறைவனுக்கு, எங்கும் வியாப்பித்திருக்கும் அந்த பரம்பொருளுக்கு அடிபணியும் வாழ்க்கை நெறிக்கு அழைத்துச் செல்லும் திருப்பணி இது.

படைத்தவனின் கட்டளைப்படி மனித குலத்தை வாழ அழைப்பதே நபிகளாரின் திருச்செய்தியாகும்.

இஸ்லாம் குறித்து தாங்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய வாசிப்புக்கு மேலே நான் குறிப்பிட்டுள்ள சில விஷயங்கள் உங்களுக்கு துவக்கமாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

நபிகளார் இந்த திருச்செய்தியை முன்வைத்துதான் காலங்காலமாக பிளவுப்பட்டுக் கொண்டிருந்த பல்வேறு குலங்களை, கோத்திரங்களை, உட்கிளைகளை ஒன்றிணைத்து ஒரு தாய் மக்களாக காட்டினார்கள். உலகளாவிய மார்க்கமாய் இஸ்லாத்தை நிலைநிறுத்தினார்கள்.

அதனால், சீமான் இனி தாங்கள் இத்தகைய வரலாறுகளை எல்லாம் வாசித்தேயாக வேண்டியிருக்கும்.

வாழ்க, ஒழிக என்ற கோஷங்களை உச்சரிக்காத முஸ்லிம் பெருமக்களின் மேடைகளை அப்போதுதான் உங்களால் அலங்கரிக்க முடியும்.

எந்த உசுப்பேத்தலுக்கும் ஆளாக்க முடியாத முஸ்லிம் இளைஞர்களின் நன்மதிப்பையும் பெற முடியும். உங்கள் கொள்கை – கோட்பாடுகள், முஸ்லிம்களின் கொள்கை, கோட்பாடுகள் ஆகியவற்றின் ஊடே ஒரு பொதுவெளியை உருவாக்கிக் கொள்ள முடியும்.

உங்களின் நன்மையான பணிகளில் முஸ்லிம் இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கொள்ளவும் முடியும்.

தம்பி சீமான்,

இந்த மடலை ஒரு பத்து நாட்களுக்கு முன்னரே தங்களுக்கு எழுத இருந்தேன். நேரமின்மையால் தாமதமானது.

தங்களுக்கு மடல் எழுத இருப்பதை எனது நண்பர் பாலாவிடம் பகிர்ந்து கொண்டபோது அவர் சொன்னார்: முதலில் மக்களை பிளவுபடுத்த வேண்டாம் என்று அவரிடம் சொல்லுங்கள்.!” இத்தனைக்கும் அவர் பத்தரைமாற்று தமிழர். இந்த மண்ணின் ஆதிகுடி!

ஆட்சி, அதிகாரம் வெறும் இனம் சார்ந்ததல்ல. எந்த மதம், மொழி சார்ந்ததும் அல்ல. இந்திய உபகண்டத்தின் அதிகார வரலாறே அதற்கான சாட்சி. பாரசீகத்திலிருந்து வந்த முகலாயர்கள், முஸ்லிம் மன்னர்கள். அவர்களின் உயரிய விழுமியங்கள் நசிந்துபோன நிலையில், வெள்ளைத்தோலுடன், பழுப்பு நிறக் கண்களுடன் எங்கிருந்தோ வந்து அதிகாரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் என்று கடந்தகால வரலாறு சாட்சியாய் நம் முன் நிற்கிறது.

மனித மனங்களை கொள்ளைக் கொள்ளும் நல்லாட்சியரே நமது நாட்டின் இன்றைய தேவை.

என் கருத்துக்களை பரிசீலியுங்கள். முயலுங்கள். வெற்றியடைவீர்கள்.

இறைவன் நாடினால் மீண்டும் மற்றொரு அறிவுறுத்தலோடு உங்களைச் சந்திப்பேன்.

அன்புடன்,

தங்கள் சகோதரன்,

இக்வான் அமீர்

மூத்த இதழியலாளர்.
Share:

Friday, November 10, 2017

திப்பு சுல்தான்: மதச்சார்பின்மையின் மகத்தான முன்னோடி!



இன்று மாவீரர் திப்பு சுல்தான் பிறந்த தினம் .திப்புவின் மதச்சார்பின்மைக் குறித்து தி இந்து, (தமிழ்) ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. கட்டுரையாளர் செல்வ புவியரசன் அதை எழுதியிருந்தார்.. அக்கட்டுரையை மாற்றான் தோட்டத்து மல்லிகையில் இங்கே பதிவு செய்யப்படுகிறது. (நன்றி: தி இந்து-தமிழ்.10.11.2017)

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

சிறீரங்கப்பட்டணத்தின் புகழ்பெற்ற ரெங்கநாதர் கோயிலிலிருந்து கூப்பிடு தொலைவில்தான் திப்பு சுல்தானின் அரண்மனை இருந்தது. திப்பு மதவெறியராக இருந்ததில்லை என்பதற்கு அந்தக் கோயிலே முதன்மைச் சான்று. இன்றும் நஞ்சன்கூடு கோயிலில் அவர் அளித்த மரகத லிங்கமும் மேல்கோட்டை நரசிம்மர் கோயிலில் அவர் வழங்கிய முரசும் பார்வைக்கு இருக்கின்றன. மேலும், அவரது அரசாங்கத்தால் சமய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கொடைகளில் 90% இந்து சமய நிறுவனங்களுக்கே அளிக்கப்பட்டன. அதனால்தான் நரசிம்மர் கோயிலில் புராண நிகழ்ச்சிகளை விவரிக்கும் ஓவியங்களுக்கு இடையே திப்பு சுல்தானின் படத்தையும் வரைந்து பெருமை சேர்த்திருக்கிறார்கள். ~- செல்வ புவியரசன்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
கர்நாடகத்தில் மூன்றாவது ஆண்டாக திப்பு சுல்தானின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவுக்கு இந்துத்துவ அமைப்புகளிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. திப்பு சுல்தான் இந்து மதத்தினரைத் துன்புறுத்தியவர் என்று ஆங்கிலேயர்கள் தங்களை நியாயப்படுத்திக்கொள்ள புனைந்த கதைகளை இப்போது இந்துத்துவவாதிகள் கையிலெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

திப்பு சுல்தானின் ஆட்சி எல்லையைத் தற்போதைய மாநில எல்லைகளின்படி கர்நாடகத்துக்குள்ளேயே அடக்கிவிட முடியாது. கேரளமும் ஆந்திரத்தின் சில பகுதிகளும் தமிழ்நாட்டின் கொங்குப் பகுதியும் அவரது ஆளுகைக்கு உட்பட்டு இருந்திருக்கின்றன. திப்பு சுல்தான், குடகுப் பகுதியை இணைத்துக்கொண்ட போது 80,000 பேரை இஸ்லாமிய சமயத்துக்கு மதம் மாற்றியதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால், அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளில் குடகில் 10,000 சொச்சம் பேரே இஸ்லாமியர்களாக இருந்தார்கள் என்று தெரிகிறது. உண்மையில், தனது ஆட்சிக் காலத்தில் திப்புவின் சமய அணுகுமுறை இந்துக்களுக்கு எதிராகவும் இல்லை, இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும் இல்லை. மதச்சார்பற்ற ஆட்சியையே அவர் நடத்தியிருக்கிறார்.

சுல்தானின் பெருமை

சிறீரங்கப்பட்டணத்தின் புகழ்பெற்ற ரெங்கநாதர் கோயிலிலிருந்து கூப்பிடு தொலைவில்தான் திப்பு சுல்தானின் அரண்மனை இருந்தது. திப்பு மதவெறியராக இருந்ததில்லை என்பதற்கு அந்தக் கோயிலே முதன்மைச் சான்று. இன்றும் நஞ்சன்கூடு கோயிலில் அவர் அளித்த மரகத லிங்கமும் மேல்கோட்டை நரசிம்மர் கோயிலில் அவர் வழங்கிய முரசும் பார்வைக்கு இருக்கின்றன. மேலும், அவரது அரசாங்கத்தால் சமய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கொடைகளில் 90% இந்து சமய நிறுவனங்களுக்கே அளிக்கப்பட்டன. அதனால்தான் நரசிம்மர் கோயிலில் புராண நிகழ்ச்சிகளை விவரிக்கும் ஓவியங்களுக்கு இடையே திப்பு சுல்தானின் படத்தையும் வரைந்து பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

மராட்டியர்கள் சிருங்கேரி மடத்தைக் கொள்ளையிட்டு, அங்கிருந்த பிராமணர்களைக் கொன்று, சாரதாதேவி யின் பொற்சிலையைக் கொண்டுசென்றபோது, அம்மடத்தின் பணிகள் மீண்டும் தொடர்வதற்குக் கொடைகளை அளித்ததுடன் சிருங்கேரி சங்கராச்சாரியாருக்குப் பாதுகாப்பாக சையத் முகமது என்ற தளபதியையும் ஒரு படையையும் அனுப்பிவைத்தவர் திப்பு சுல்தான்.

திப்பு சுல்தான் கேரளத்தின் மலபார் பகுதியை நோக்கிப் படையெடுத்துச் சென்றபோது, குருவாயூர் கோயிலில் இருந்த பிராமணர்கள் அங்கிருந்த சிலையை மறைத்து வைத்தனர். அவர்களது அச்சத்தை அறிந்த திப்பு சுல்தான், சிலை இருந்த இடத்தில் மீண்டும் அதை நிறுவச் செய்து அக்கோயிலுக்குக் கொடையளித்துத் திரும்பினார். மலபார் பகுதியில் பெண்கள் மேலாடை இல்லாமல் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த திப்பு சுல்தான், அவ்வழக்கத்துக்குக் காரணம் எதுவென்றாலும் அது உடனடியாகச் சரிசெய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார்.

இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே சச்சரவுகள் எழுந்தபோதும் திப்பு சுல்தான் சமயச் சார்புக்கு ஆளாகிவிடவில்லை. சிறீரங்கப்பட்டணத்தில் நடந்த ஒரு இந்து மத ஊர்வலத்தின்போது இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டனர். இஸ்லாமிய சமய அறிஞரான பீர்லதா அரசரிடம் புகார் செய்தார். விசாரித்த திப்பு சுல்தான், அந்த ஊர்வலத்தில் சிக்கல் உருவாவதற்கு இஸ்லாமியர்களே காரணம் என்று அறிந்து அவர்களைத் தண்டித்தார். இஸ்லாமியர்களுக்கு ஆதரவு அளிக்கப்படாவிட்டால் நாட்டை விட்டே தான் வெளியேறப் போவதாகப் பயமுறுத்தினார் பீர்லதா. ‘தங்களது விருப்பம் அதுவானால் அப்படியே நடக்கட்டும்!’ என்று பதிலளித்தவர் திப்பு சுல்தான்.

திரிக்கப்பட்ட வரலாறு

1787-ல் திப்பு சுல்தான் வெளியிட்ட பிரகடனம், பிற மதங்களிடம் சகிப்புத்தன்மையே புனித குர்ஆனின் கோட்பாடு என்று தொடங்கி சாதி, மதம், இனம் இவற்றின் பெயரால் மைசூர் அரசின் ஆளுகையில் உள்ள எவரையும் வேறுபடுத்திப் பார்ப்பதும் ஒதுக்குவதும் சட்டவிரோதமானது என்று முடிகிறது.

இப்படியெல்லாம் நடந்திருந்தும் திப்பு சுல்தானின் மீது மதவெறியர் என்று பழிசொல்ல நேர்ந்தது எப்படி? திப்பு வரலாற்றை எழுதிய ஆங்கிலேயர்கள் பெரும்பாலும் முதல், இரண்டாம் மைசூர் போர்களில் அவரால் சிறைபிடிக்கப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டவர்கள். திப்புவின் வரலாற்றை எழுதிய இஸ்லாமியர்களோ ஆங்கிலேய அரசிடம் ஓய்வூதியம் பெற்றவர்கள். இரண்டு வகையிலும் திப்புவின் வரலாறு திரித்து எழுதப்பட்டிருக்கிறது.

திப்பு சுல்தானுக்கு இந்திய விடுதலைப் போராட்டத் தில் தவிர்க்கவே முடியாத இடம் உண்டு. ஆங்கிலேயர் களுக்கு எதிராக துருக்கி, ஆப்கானிஸ்தான், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் ஆதரவை அவர் பெற முயற்சித்தார். சூழல் கைகூடவில்லை. மராட்டியர்களும் சரி, நிஜாமும் சரி நம்பிக்கைக்கு உரியவர்களாக இல்லை என்பதால், அவர்களுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்க்கவும் வாய்ப்பில்லாமல் போனது. தோல்வி உறுதி என்றபோதும் ஓடி ஒளியாமல், சரணடையாமல் போரிட்டு மடிந்தது திப்பு சுல்தானின் வீரத்தை எடுத்துச் சொல்லும்.

மைசூரை ஆண்ட இந்து அரசர்களான உடையார் களிடமிருந்து ஹைதர் ஆட்சியைக் கைப்பற்றினார். எனவே, அவரும் அவரது மகன் திப்புவும் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்ற பார்வையும் இருக்கிறது. ஔரங்கசீப்புக்கும் அதன் பிறகு மராட்டியர்களுக்கும் கப்பம் கட்டும் சிற்றரசாகத்தான் மைசூர் இருந்தது. உடையார்கள் வலிமை இழந்துபோய் அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோதுதான் அதன் ஆட்சிப்பொறுப்பை ஹைதர் ஏற்றுக்கொண்டார். அதனால், மராட்டியர்கள் கப்பம் பெறும் வாய்ப்பை இழந்தனர்.

விவசாயிகளின் நண்பர்

திப்பு சுல்தான் தொலைநோக்கு கொண்ட நிர்வாகத் திறமையாளரும்கூட. 17 ஆண்டுகால ஆட்சியில் அவர் மேற்கொண்ட திட்டங்கள் இன்றைக்கும் வியந்துநோக்கும் வகையிலேயே அமைந்திருக்கின்றன. இந்தியாவிலேயே முதன்முறையாகத் தொழில் மற்றும் வணிகக் கொள்கையை வகுத்த மன்னர் அவர். விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை நேரடியாகக் கொள்முதல் செய்து, அவற்றை நியாயவிலைக் கடைகள் மூலமாக விற்கும் முறையை அறிமுகப்படுத்தியவர். விவசாயம் செய்யப்படாத நிலங்களைக் கண்டறிந்து, அவற்றை நிலமில்லாதவர்களுக்கு அளித்தார்.

நான்கு மைல்களுக்கு ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவியவர், ‘‘குழந்தைகளுக்கு பள்ளிக்கல்வி அளிக்காத தந்தை கடமையை மறந்தவன்’’ என்று அறிவித்தார். பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்திய திப்பு சுல்தான், அதனால் அரசுக்கு ஏற்படும் வருமான இழப்பைப் பற்றி கவலைப்படவே இல்லை. திப்பு சுல்தானின் இச்செயலுக்காக அவரை உன்னதமான மன்னர் என்று வியந்து பாராட்டி எழுதியிருக்கிறார் காந்தி. காவிரிக் கரையோரத்தில் இருந்த ஆயுதத் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கந்தகக் கழிவால் நதிநீர் மாசுபட்டு, நீர்வாழ் உயிரினங்கள் அழியுமென்று அத்தொழிற்சாலையை வேறிடத்துக்கு மாற்றியவர் திப்பு சுல்தான். இன்றைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் அவர் முன்னோடி.

விடுதலை வீரர், சிறந்த நிர்வாகி என்ற காரணங்களுக்காக திப்பு சுல்தான் என்றென்றும் நினைவுகூரப்பட வேண்டியவர். குறிப்பாக, மதச்சார்பற்ற ஆட்சிமுறைக்காக அவரைப் போற்றுவது இன்றைய சூழலில் மிகவும் பொருத்தம்.

- செல்வ புவியரசன் தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in

Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive