அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி
வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு
செய்ய ஏற்றவை.
பொதுவாக அரளிச் செடிகள், குச்சிகள்
மூலமாக பதியம் செய்யப்படுகின்றன. ஆனால்,
விதைகள் மூலமாக நடவு செய்வது அதைவிட வெற்றிகரமாக அமையும்.
அரளிச் செடி பூத்து முடிந்ததும், சுமார் ஆறு
அங்குல நீளத்துக்கு காய்கள் (விதைப் பைகள்) உருவாகும். அவை எருக்கன் காய்களைப் போல
பஞ்சுக்குள் பொதிந்து கிடக்கும். காய்கள் வெடித்துச் சிதறி பறந்து சென்று தன்னை
மீட்டெடுத்துக் கொள்ளும் வசதிக்கான அமைப்பு இது.
அரளிக் காய்கள், தோற்றத்தில்
ஏறக்குறைய கொத்தவராங்காய் போல இருக்கும்.
காய்ந்த அரளிக் காய்களிலிருந்து
விதைகள் எடுப்பதும் எளிதுதான். ஆனால்,
அரளிச் செடி ஓரளவு நச்சுத் தன்மை கொண்டதால், வெறும் கையால் விதைகளைப் பிரித்தெடுக்கும்போது, நமைச்சல்
போன்ற தோல் பிரச்னைகள் ஏற்படலாம். அதனால்,
தோட்ட வேலைகளுக்கு பயன்படும் கையுறைகளை பயன்படுத்துவதே சிறந்தது.
பிரித்தெடுக்கப்பட்ட விதைகளில்
நல்ல வளமான விதைகளை தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும். அப்படி நடவு செய்வதற்கு
ஏதுவாக காலியான இனிப்பு பெட்டகங்களை (Sweet
Container Box) பயன்படுத்தலாம்.
இந்த காலியான இனிப்பு
பெட்டகங்களில், அடிப்புறம்
வடிகால் வசதிக்காக, நாலைந்து
துளைகளை இட்டுக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த பெட்டகத்தின் முக்கால் பகுதி
தென்னங்கழிவுத் தூளையோ (Coco
Peat) அல்லது நன்றாக மக்கிய தொழு உரம் கலந்த இளகிய தோட்ட மண்ணையோ
நிரப்பி கொள்ள வேண்டும்.
மண்ணை ஈரமாக்கி விதைகளை மண்ணின்
மேற்புறமாக இலேசாக அழுத்திவிட்டு அந்த பெட்டகத்துக்கு மூடியிருந்தால் மூடியையோ
அல்லது நெகிழி தாளையோ வைத்து காற்றுப் புகாமல் மூடிவிட வேண்டும்.
இப்படி சீல் செய்யப்பட்ட
பெட்டகத்தை வெய்யிலும்,
நிழலும் கலந்த ஒரு சூழலில் வைத்துவிட வேண்டும்.
சூழ்நிலைக்கு ஏற்ப அவ்வப்போது, விதைகள்
ஊன்றிய பெட்டகத்தை திறந்து பார்த்து ஈரம் உலராமல் ஊர்ஜிதம் செய்து கொள்ள வேண்டும்.
இத்தகைய கண்காணிப்புடன்
ஊன்றப்பட்ட விதைகள் ஒரு மாதத்திலிருந்து மூன்று மாதங்களுக்குள் முளைக்க
ஆரம்பிக்கும்.
அரளி விதைகள் முளைக்கத்
தொடங்கியதும் மூடப்பட்ட நெகிழியையோ அல்லது மூடியையோ எடுத்துவிட வேண்டும்.
நான்கைந்து இலைகள் விட்டு
வளர்ந்த அரளிச் செடியை அதன் பிறகு தனி தொட்டிக்கு மாற்றி கொள்ள முடியும்.
0 comments:
Post a Comment