NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Sunday, August 14, 2016

"பகலில் வரலாற்றை உருவாக்குகின்றேன்!"



"நாங்கள் இரவு 11 மணிக்கு வழக்கம்போல தூங்கச் சென்றோம். இரவு 2 அல்லது 2.30 மணிக்கு நோன்பிற்காக சஹர் (நோன்புக்கால காலை உணவு) செய்தோம். சுமார் 4 மணிக்கு பங்களாவின் வாசலில் காலடிச் சத்தங்கள் கேட்டு விழித்துக் கொண்டேன். "யார் அது?" என வினவியதற்கு, "தாங்கள் தானா, மிஸ்டர் ஷவ்கத் அலி?" - என டிப்டி கமிஷனரான மிஸ்டர் புலூட்டன் கேட்டார். இவர்கள் கைது செய்ய வந்திருக்கிறார்கள் என உணர்ந்து கொண்டேன்....

..... புலூட்டன் கைது செய்ய வந்திருப்பதாக அறிந்ததும் முஹம்மது அலி, "தயாராக இருக்கின்றேன்!"- எனக் கூறினார்.

இதற்குள்ளாக தாயாரும்,  புர்கா அணிந்து வந்து எங்களுடன் வருவதாகக் கூறினார். புலூட்டன், "இவ்விருவரையம் அழைத்துச் செல்லத்தான் எங்களுக்கு உத்திரவு!" - எனக் கூறிவிட்டார்.

முஹம்மது  ஹீஸைன் (குடும்ப உறுப்பினர்) என்னுடன் கட்டித் தழுவும்போது அழுது விட்டான். நான் பலமாக அவன் கன்னத்தில் ஓர் அறை கொடுத்து, "ஜாக்கிரத்தை, வெள்ளையன் முன் அழக்கூடாது!" - என கத்தி எச்சரித்தேன்"

ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய அலி சகோதரர்களில் ஒருவரான மெளலானா ஷவ்கத் அலியின் டைரிக் குறிப்பு ஒன்றே மேலே காணப்படுவது.

இந்திய விடுதலைப் போரில், அலி சகோதரர்கள் என்று சிறப்புப் பட்டம் பெற்ற சகோதரர்களில் மூத்தவர் ஷவ்கத் அலி. இளையவர் முஹம்மது அலி.

முஹம்மது அலி தமது 18 வயதில் பி.ஏ. முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்று சாதனைப் படைத்தார். அதன்பின், ஆக்ஸ்போர்ட்டிலுள்ள லிங்கன் கல்லூரியில் 1898 முதல், 1902 வரை கல்வி கற்றார். மேலைக் கல்வி கற்ற அதேசமயம், சிறந்த சமயப் பற்றாளராகத் திகழ்ந்தார். அங்கு பி.ஏ.ஹானர்ஸ் படித்துத் தேறினார்.

1902 - இல், முஹம்மது அலி இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பினார். சிறிது காலம் ராம்பூர் சமஸ்தானத்தில் கல்வி அதிகாரியாகப் பணியாற்றினார். அதன்பின் இரண்டு வருட நீண்ட விடுப்பில் கல்கத்தா சென்று காம்ரேட் பத்திரிகையைத் தொடங்கினார். 1911 ஜனவரி 11- ஆம், நாள் வெளியான காம்ரேட் வெறும் இரு நூற்றைம்பது ரூபாய் கைமாற்றில் ஆரம்பிக்கப்பட்டு, இந்தியப் பத்திரிகை வானில் தாரகையாய் மிளிர்ந்தது. அரசியல் பிரமுகர்கள் எல்லாம் அதன் வாசகர்கள்.


ஒத்துழையாமை இயக்க நாட்களில் மெளலானா அவர்களின் பேச்சினால் ஏற்பட்ட உத்வேகத்தில் முப்பது நாட்களில் ... முப்பதாயிரம் ஆண்களும், பெண்களும் சிறை நிரப்பும் போராட்டங்களில் பங்கு கொண்டனர்.

பகலில் அரசியல் பணிகளும், இரவில் எழுத்து பணிகளுமாய் மூழ்கி இருக்கும் மௌலானா முஹம்மது அலி, "நான் பகலில் வரலாற்றை உருவாக்குகின்றேன். இரவிலோ வரலாற்றை எழுதுகின்றேன்!" - என்பார்.

வெள்ளையர் ஏகாத்பத்தியத்தின் கொடுந்துன்பங்களுக்கும், வெஞ்சிறைச் சாலைகளுக்கும் அலி சகோதரர்கள் அஞ்சியதில்லை. 1915 - மே, 15 - ஆம் தேதி இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தை முன்னிறுத்தி ஷவ்கத் அலியும், முஹம்மது அலியும் கைது செய்யப்பட்டு சிந்துவாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

25.11.1919 - இல், அரசாங்கக் கட்டளையின்படி அலி சகோதரர்கள் விடுதலையடைந்து நேராக, அமிர்தரஸில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சென்றார்கள். அங்கு ஒருவர், முஹம்மது அலியைப் பார்த்து, "தாங்கள் வெளிவந்துவிட்டீர்களா?" - என்று கேட்க, அவர், "ரிட்டர்ன் டிக்கெட் வாங்கிக் கொண்டுதான் வந்திருக்கின்றோம்!" - என்றார் புன்னகையுடன்.


1923, ஆகஸ்ட் கடைசி வாரத்தில் ஜான்ஸியில் முஹம்மது அலி விடுதலை செய்யப்பட்டார். விடுதலைக்குப் பின் அவர் பேசிய முதல் கூட்டத்தில், "நான் விடுதலையானது.. எனக்கு மிகுந்த மன வருத்தத்தைத் தருகிறது. ஏனென்றால்... நாட்டினுடைய பெரும் சுமை என் மீது சுமத்தப்பட்டுவிட்டது. என் அண்ணன் ஷவ்கத் அலியைவிட நான் அதிகமாக நேசிக்கும் அந்தப் பெருந்தலைவர், காந்திஜி இங்கு இல்லாத நிலையில் நான் சிறிய சிறையிலிருந்து.. பெரிய சிறைக்கு வந்திருப்பதாகவே உணர்கின்றேன்! இனி என் முதல் கடமை, விடுதலையின் (சுயராஜ்ஜியம்) திறவுக்கோலைத் தேடி எடுத்து இந்தியாவின் ஆன்மா அடைப்பட்டுக் கிடக்கும் எரவாடா சிறைக் கதவைத் திறப்பதுவேயாகும்!" - என்றார்.

நாட்டு விடுதலைக்காக.. முதன் முதலில் சிறைப் புகுந்த பெருமை மௌலானா முஹம்மது அலியையே சாரும். அரசியல் போர்க்களங்களின் இடைவிடாத போராட்டங்களில் பல்லாண்டுக் கால தொடர் சிறைவாசத்தை அலி சகோதரர்கள் அனுபவித்தார்கள். அவர்களின் விடுதலையின் போது, வறுமையின் கோரம் தாண்டவமாடியது. உண்ண உணவின்றி, இருந்த இடத்திற்கு வாடகை கொடுக்கப் பணமின்றி சிரமப்பட்டனர். அந்த நிலைமையிலும், மக்கள் திரட்டிக் கொடுத்த ரூபாய் 12 ஆயிரம் பண முடிப்பையும் , அவர்களைக் கவுரவித்து அணிவித்த ஆயிரம் பவுன் மதிப்புள்ள தங்கச் சரிகை மாலையையும் கிலாஃபத் நிதியில் சேர்த்துவிட்டனர்.

லண்டன் வட்டமேஜை மாநாட்டுக்கு வைஸிராய் லார்டு இர்வின் கொடுத்த அழைப்பை ஏற்று மௌலானா புறப்பட்டபோது, அவரது உடல்நிலை கடுமையாய்யப் பாதிக்கப்பட்டிருந்தது. கட்டிலில் படுக்க வைத்தவாறு பம்பாய் துறைமுகத்தில் கப்பலில் ஏற்றிய காட்சி கண்ணீர் வரவழைப்பதாகும். கடுமையான நோய்களால் அவதிப்பட்ட அப்பெரியார் தம் நாடு சுதந்திரம் பெற்றேயாக வேண்டுமென்று முனைப்புடன் பயணம் செய்தார்.


லண்டன் மாநாட்டில், "சமாதானத்திற்காகவும், நேசத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் நாங்கள் இங்கு வந்தோம். இவற்றை எல்லாம் பெற்றே திரும்புவோம்!" - என நம்புகின்றேன். இல்லை என்றால்.. போராட்டக் குழுக்களுடன் இணைந்து விடுவோம். தேசத்துரோகிகள், கலகக்காரர்கள், வரம்பு மீறியவர்கள் என்று நீங்கள் எங்களை அழைத்தாலும் கவலையில்லை!

சுதந்திரத் தாயத்துக்கே நான் திரும்ப விரும்புகின்றேன். இல்லாவிட்டால்.. அந்நிய நாடாக இருந்தாலும், உங்கள் நாடு சுதந்திர நாடாக இருப்பதால்... எனக்கு இங்கேயே ஒரு சவக்குழி தந்துவிடுங்கள்!" - என்று மெளலான முழக்கமிட்டார்.

இந்த வரலாற்றுப் புகழ் மிக்க பேருரைக்குப் பின் அவரது உடல்நிலை மிகவும் சீர்குலைந்தது. 03.01.1931 இல், அவரது ஆவி பிரிந்தது(இன்னா லில்லாஹி).

மௌலானாவின் அடக்கம் சம்பந்தமாக, பிரச்னை எழுந்தது. உடலை இந்தியாவுக்கு அனுப்பினால்.. 'பெரும் எழுச்சி ஏற்படும்!' - என்று பயந்த வெள்ளையர் அரசு, பாலஸ்தீனத்தில் மஸ்ஜிதே அக்ஸாவிற்கு அருகில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்தது.

கடைசிவரை இந்திய விடுதலைக்காகப் போராடிய மெளலான முஹம்மது அலி ஜவஹர் உயிரைத் தன் நாட்டுக்காக தந்தாரே தவிர, உடலைத் தரவில்லை!

ஏனென்றால்... அடிமை மண்ணில் சிறைப்பட அவரது உடல்கூட தயாராக இல்லை!


(தினமணி நாளேட்டில் 20.08.1995 அன்று பிரசுரமான எனது கட்டுரை) 

Share:

Thursday, August 11, 2016

இஸ்லாம் வாழ்வியல்: நபிகள் வாழ்வில்: மனிதரில் சிறந்தவன்



நபிகளார் தமது இறுதி பேருரையில் இப்படி அழுத்தம் திருத்தமாக சொல்லிக் காட்டுகிறார் "மக்களே! இந்த துல்ஹஜ் மாதமும், இந்த துல்ஹஜ் 9ம் நாளும், இந்த மக்கா மாநகரமும் எவ்வளவு புனிதமானவையோ, அவ்வாறே சக மனிதர்களின் உயிர்களும், உடமைகளும் மானம் மரியாதையும் புனிதமானயே..!” - இக்வான் அமீர்

'''''''''''''''''''''''''''''''''''''''''"""""""""""""""""""""""""""""""""""""
அது நபிகளாரின் திருச்சபை.

நபிகளார் தமது தோழர்களை நோக்கி, ”புறம் பேசுதல் என்றால் என்ன என்பதை நீங்கள் அறிவீர்களா தோழர்களே?” – என்று கேட்டார்.

அதற்கு நபித்தோழர்கள், ”இதற்கான விளக்கத்தை இறைவனும், இறைவனின் திருத்தூதருமாகிய தாங்கள்தான் அறிவீர்கள்!” – என்றார்கள்.

“உங்கள் சகோதரர் குறித்து அவர் வெறுக்கும் விதமாக பேசுவதுதான் புறம்பேசுவதாகும்!” – என்றார் நபிகளார்.

“நாங்கள் கூறும் விஷயம் எங்கள் சகோதரரிடம் காணப்பட்டாலுமா புறம்பேசுவதாகும்?” – என்று கேள்வியை எழுப்பினார்கள் நபித்தோழர்கள்.

“ஆம்.. நீங்கள் கூறுவது உங்கள் சகோதரரிடம் காணப்பட்டால் அது புறம் பேசுவதாகும். அவ்வாறு இல்லாவிட்டால் அது அவர் மீது நீங்கள் சுமத்திய அவதூறு ஆகும்” – என்று நபிகளார் எச்சரித்தார்.
உண்மையிலேயே சக மனிதர்களிடம் குறைகளைக் காணும்போது, அவர் மனம் திருந்த வேண்டும் என்ற கவலையில் அக்கறையுடன் சொல்லப்படும் அறிவுரைகளை யாரும் புறக்கணிக்கமாட்டார்கள். இதே அக்கறை மற்றும் கவலையோடு அவரது பொறுப்பாளர்களிடம் முறையிடும்போதும் அது பிரச்னையாக வாய்ப்பில்லை.

ஏனென்றால், இந்த அணுகுமுறையும் குறைகளைக் களையும் ஒரு நல்வழிமுறையாகிவிடும்.

ஆனால், சக மனிதனின் குற்றங்குறைகளை வெளிப்படுத்தி அவனை சமுதாயத்தார் முன்னிலையில் அவமானப்படுத்தி தலைக்குனிவை ஏற்படுத்த வேண்டும் என்ற நினைப்பதும், சம்பந்தப்பட்ட நபர் இல்லாத நிலையில் அவர் குறித்து குற்றங்குறைகளைப் பேசுவதும் எதிர்விளைவுகளை உருவாக்கும் என்பதையே நபிகளார் ரத்தினச் சுருக்கமாக விளக்கமளிக்கிறார்.

சில சந்தேகங்கள் பாவத்தில் கொண்டு சேர்க்கும். அதனால், இறைநம்பிக்கையாளர்கள் அதிகமாக சந்தேகம் கொள்வதை தவிர்த்துக் கொள்ளும்படி திருக்குர்ஆன் எச்சரிக்கிறது. சக மனிதர்களின் தவறுகளை துருவித்துருவி விசாரிப்பதை தடுக்கிறது. இந்த இழிச் செயல் இறந்துவிட்ட தனது சகோதரனின் உடலை உண்பதற்கு ஒப்பான அருவருப்பான செயல் என்றும் எச்சரிக்கிறது.


நபிகளார் தமது இறுதி பேருரையில் இப்படி அழுத்தம் திருத்தமாக சொல்லிக் காட்டுகிறார் "மக்களே! இந்த துல்ஹஜ் மாதமும், இந்த துல்ஹஜ் 9ம் நாளும், இந்த மக்கா மாநகரமும் எவ்வளவு புனிதமானவையோ, அவ்வாறே சக மனிதர்களின் உயிர்களும், உடமைகளும் மானம் மரியாதையும் புனிதமானயே..!”

தனது நாவாலும், கைகளாலும் சக மனிதர்களுக்கு தீது விளைவிக்காதவனே மனிதர்களில் சிறந்தவனாவான்.

“ஒவ்வொரு நாளின் விடியலின் போதும், மனிதனின் உடல் உறுப்புகள் அனைத்தும் நாவிடம், ”இறைவனுக்கு அஞ்சிக்கொள்! உனது அசைவில்தான் எங்களது உயர்வும், தாழ்வும் அடங்கியுள்ளது!” – என்று வேண்டுகோள் விடுப்பதற்கு ஒப்பானது.

நபிகளாரின் விண்ணேற்ற நிகழ்வின்போது, சில மனிதர்கள் கூரிய செம்பு நகங்கள் கொண்ட கரங்களால் தங்கள் முகங்களையும், மார்புகளையும் பிராண்டி ரத்தகளறியாக்கிக் கொண்டிருந்த கொடுமையைக் கண்டார். வானவர் தலைவரான காப்ரீயல் எனப்படும் ஜிப்ரீயலிடம் அவர்கள் குறித்து விசாரித்தார். ”இவர்கள் அவதூறு பேச்சுகளால் சக மனிதர்களின் இறைச்சியை உண்டவர்கள். அவர்களின் கண்ணியத்தை சீர்க்குலைத்தவர்கள்!”- என்று விளக்கமளித்தார் ஜிப்ரீயல்.

புறம்பேசுவது பாலியல் தொழிலைவிட கொடியது என்று நபிகளார் எச்சரிக்கிறார்.

ஏனென்றால் பாலியல் தொழில் என்னும் பெரும் பாவம் புரிபவன் தன் தவறுக்காக மனம் திருந்தி பாவமன்னிப்புக் கேட்கும்போது இறைவன் அவனது பாவங்களை மன்னிக்கும் வாய்ப்புண்டு.

ஆனால், புறம்பேசுதல் மூலமாக சக மனிதனின் மானம், மரியாதைகளைக் குழித்தோண்டிப் புதைத்தவனை அவனால் பாதிக்கப்பட்டவர் மன்னிக்கும்வரை இறைவனும் மன்னிக்கமாட்டான்.

புறம்பேசி அதனால் பாதிக்கப்பட்ட மனிதரிடம் நேரிடையாகச் சென்று தனது தவற்றை ஒப்புக் கொண்டு மன்னிப்பு பெற வாய்ப்புண்டு. ஆனால், அவர் இறந்துவிட்ட நிலையில் செய்ய வேண்டியதென்ன?

”நீங்கள் எவரைப்பற்றி புறம் பேசினீரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்று இறைவனிடம் இறைஞ்சி மன்றாடுவது புறம்பேசியதற்கான பரிகாரங்களில் ஒன்றாகும். ”இறைவா..! புறம் பேசிய என்னையும், அதனால் பாதிக்கப்பட்ட எனது சகோதரரையும் மன்னிப்பாயாக!” – என்று பிரார்த்திப்பது ஒன்றே வழி என்று அறிவுறுத்துகிறார் நபிகளார்.

(தி இந்து, ஆனந்த ஜோதி இணைப்பில் 11.08.2016 அன்று பிரசுரமான எனது கட்டுரை)




Share:

Tuesday, August 9, 2016

நிகழ்வுகள்: என்னை மன்னித்துவிடு தாயே..!



முதல் பயணம் கல்பாக்கம், செஞ்சி, திண்டிவனம், சென்னை என்று ஒரு 400 கி.மீ சுற்றளவு முடிந்தபின்... இது எனது இரண்டாவது போட்டோகிராபி வெளியூர் பயணம்!

சென்னையிலிருந்து சுமார் 150 கி.மீ தொலைவில்.. ஆந்திரம் கூடூர் அருகே உள்ள குக்கிராமங்கள் எங்கள் இலக்கு.

என்னோடு எனது பஜாஜ் சி.டி. 100-ல், எனது மாணவன் Ïmřãñ Şhäkìŕ

நாயுடைப்பேட்டையைத் தாண்டி ஒரு குக்கிராமத்தின் வழியே பயணம் செய்தபோது, வழிநெடுக நாவல் மரங்கள் பரப்பிய நிழலில் அவ்வையாரின் சுட்டப் பழங்களை விற்றுக் கொண்டிருந்த இந்தப் பெண்ணை தொலைவிலிருந்து எடுத்த படம்.

ஏறக்குறைய ஒரு 300 கி.மீட்டர் பயணம் முடித்து கணிணியில் ஏற்றி படங்களை பார்த்துக் கொண்டிருந்த போது, இந்தப் பெண்ணின் விழிகளை எதிர்கொள்ள முடியாமல் நான் தலைகுனிந்து நின்றேன்.

கண்கள் பனிக்க.. ”மாடுகளுக்குத் தரும் முக்கியத்துவத்தை எங்கள் ஆட்சியாளர்கள் மனிதர்களுக்குத் தருவதில்லை! உனது அவலத்தைப் போக்க முடியாத அபாக்கியவான் நான். என்னை மன்னித்துவிடு தாயே..!” - என்ற ஆற்றாமை கனத்து என்னுள் வெளிப்பட்ட அந்த தருணங்களை உங்களோடு நான் பகிர்ந்து கொள்கிறேன் - இக்வான் அமீர்

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
என்னை மன்னித்துவிடு தாயே..!
““““““““““““““““““““““““““

குளு குளு…
நாவல் மரங்களுக்குக் கீழ்
மண் மெத்தையில்,
சருகு போர்வையைப் போர்த்தி
உன் எதிர்கால கனவுகளை
பொத்திப் பொத்திப் 
பாதுகாக்கிறாய்!
உனது கனவு இளவரசன்
எங்கள் என்றைக்குமான
ஏவலாள் என்பதை ஏனோ
உணர மறுக்கிறாய்..!


குடை நிழல் தரும் மரங்கள்
உன் வயிற்றுப் பசியையாற்றும்
முயற்சிதான்
அசைந்தசைந்து கொட்டும்
நாவல் பழங்கள்..!
அத்தனையும்
சுவை மிகுந்த
அவ்வையின்
சுட்டப் பழங்கள்!

மண்ணுக்கும்,
இலைத் தழைக்கும்
மரங்களுக்கும்
சுற்றியிருக்கும்
இயற்கைக்கும்
இருக்கும்
பொறுப்புணர்வு
எங்கள்
ஆட்சியாளர்களுக்கு
சொந்த மக்களிடம் 
இல்லை தாயே!


மாடுகளுக்குத்
தரும் மரியாதை
இங்கே
மனிதர்களுக்கு இல்லை!
நதிகளின் புனிதத்துவம்
இங்கே
தாய்க்குலங்களுக்கில்லை!
மண்ணுக்கும்,
மலைமுகடுகளுக்கும்
தரும் மகத்துவம்…
நாங்கள்
மனிதத்துவத்துக்கு
தர மறுப்பதால்..
என்னை
மன்னித்துவிடு தாயே..!
கையாலாகாத
என்னை
மன்னித்துவிடு தாயே..!








Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive