NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Showing posts with label விருந்தினர் பக்கம். Show all posts
Showing posts with label விருந்தினர் பக்கம். Show all posts

Friday, September 15, 2017

இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று....


அன்பு நண்பர் ஒளிப்பட வித்தகர் சுபான் பீர் முஹம்மது, தனது திருமண நாளன்று  முகநூலில் https://www.facebook.com/subhan.mohamed.5/posts/10212695087706457 பதிவேற்றிய நினைவலை இது. அழகான வட்டார மொழியில், மலராய் சரம் சரமாக தொடுத்து நினைவுகூர்ந்திருந்த நினைவுகள். மணமக்கள் எல்லா நலமும், வளமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன். இனி சுபானின் நினைவுகள் அவரோடு எழுத்துக்களாய்.. -இக்வான் அமீர்


எந்த ஒரு நோய் நொடி என்றாலும் நாசரேத் லூக்காஸ் ஆஸ்பத்திரிக்குத்தான் போகணும்.. எங்க ஊரு பக்கத்துலே அந்த காலத்துலே அதுதான் பெரிய மிசன் ஆஸ்பத்திரி. தம்பிக்கு உடல்நலக்குறைவு இளப்பு அதிகமாகிவிட்டது.உம்மா ,அக்காச்சி என்கிற முதிய பெண்மணியும் ஆறு வயதான அவனையும் அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தாகிவிட்டது இரண்டு நாள் தங்கி பார்க்கனுன்னு டாக்டர் சொல்லிட்டார். குசினி வார்டில் ரூம். அவசரமா புறப்பட்டதால் சமையல் பாத்திரங்கள் அதிகம் எடுத்து வரவில்லை.

அடுத்த நாள் காலை அவனிடம், "வாப்பா, பே வார்டுலே நம்ம ஊர்காரங்க பிரசவத்துக்கு வந்துருகாங்கலாம். அவங்ககிட்ட போயி டீ போட ஒரு வலந்து (பாத்திரம் ) வாங்கிட்டு வாம்மா"

அவனும் பே வார்டு போய் அங்கிருந்த வயதான கம்மா (பாட்டி) விடம் சலாம் சொல்லி “இன்னாங்கோ எனக்கு சித்தன் தெருவு, பகரைன் வீடு, தம்பிக்கு சுகமில்லை குசினி வார்டுலே தங்கி இருக்கோம் உம்மா உங்ககிட்டே டீ போட ஒரு வலந்து வாங்கிகிட்டு வர சொன்னோ”

அந்தம்மா பாத்திரம் எடுக்க அடுப்பாங்கறை போக இவன் மெதுவாக அந்த அறையை நோட்டமிட்டான். பிரசவம் முடிந்து தாய் அரை மயக்கத்தில் தூங்கி கொண்டிருக்க அருகே ஆஸ்பத்திரிக்கு சொந்தமான வெள்ளை நிற இரும்பு தொட்டிலில் குழந்தை.

“வாப்பா, இந்த இதை கொண்டு போயி உம்மாகிட்டே கொடு” அவன் பாத்திரத்தை வாங்கி புறப்பட முற்பட்ட போது, "பொம்பளை புள்ளே பொறந்திருக்கு. காலைலே தான் பொறந்தா. அவோ வாப்பா மூணு நாளா கூடவே இருந்துட்டு நேத்து நைட்டு தான் அவசர வேலைன்னு திருநெல்வேலி போனோ. புள்ளைய பார்த்து மோந்துட்டு (முகர்ந்துவிட்டுப்) போமா”

தொட்டிலின் கிட்டே சென்று எட்டிபார்கிறான் பிஞ்சு கை கால்களை அசைத்தபடி சிறிய விழிகளால் அவனை நோக்கி புன்னகைத்த அவளின் நெற்றியில் முத்தமிட்டு கன்னத்தை விரல்களால் வருடி அந்த விரல்களுக்கும் ஒரு முத்தம் தந்து பாத்திரத்தோடு புறப்பட்டான் அவன்.

ஆறு வருடங்களுக்கு பின்னர்...

பக்கத்துக்கு வீட்டு முறுக்கு கஸ்ஸாலியப்பா குடும்பத்துடன் ஏரலுக்கும் பழைய காயலுக்கும் இடையே உள்ள கஸ்ஸாலி மரைக்கார் சாலையில் தர்காகந்தூரிக்கு செல்ல நானும் கூடப்போவேன் என உம்மாவிடம் அடம்பிடிக்க அரை மனதுடன் அவர்களோடு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

தர்காவும் அம்மன் கோவிலும் அடுத்து அடுத்து ஒற்றை சுவர் கொண்டுப் பிரிக்கப்பட்டிருக்கும். அம்மன் கோவிலையொட்டி அகன்ற வாய்கால். அதன் கரைகளில் பெரிய தடித்த மரங்கள் கால்வாய்க்கு கூரை போட்ட மாதிரி தன் கிளைகளை பரப்பி படர்ந்து இருக்கும். மரங்களில் ஏறி கால்வாய்க்குள் குதிப்பது சிறார்களின் விளையாட்டாய் இருந்தது.

தண்ணீர் வருகின்ற பகுதியில் பெண்களும் சற்று தள்ளி தண்ணீர் போகின்ற பகுதியில் ஆண்களும் துணிகள் துவைத்துக் கொண்டும் குளித்துக் கொண்டும் இருந்தார்கள்.

இவன் மரத்தில் ஏறி குதிக்க தயாரானபோது பெண்கள் பகுதியில் படிக்கட்டில் அமர்ந்து இருந்த சிறுமி கால் தவறி தண்ணீரில் விழுந்து விட்டாள். கூட வந்திருந்த அதே கம்மா (பாட்டி) "அல்லாஹ்வே! எம்புள்ளே தண்ணிலே விழுந்துட்டே!" - என்று சத்தமிட மரத்தின் மேலிருந்த அவன் சட்டென நீரில் குதித்து அந்த சிறுமியை தூக்கி அந்தக் கம்மா (பாட்டி) யிடம் ஒப்படைத்தான். ஆறுவயது சிறுமியின் கண்களில் கண்ட நன்றிப் பார்வையை பரிசாக பெற்று நகர்ந்தான் ..

பத்தொம்பது வயசுலேயே நல்ல வேலை நல்ல சம்பளம் என்றிருந்தவனுக்கு தந்தை பெண் பார்க்க தொடங்கிவிட்டார்.

"இப்ப என்ன அவசரம்?" - என தாயார் சொல்ல, "எம் புள்ளைய பத்தி எனக்கு தெரியும் கல்யாணம் ஆனானும் அவன் கடமைகளை சரி வர செய்வான்” - என மகனின் மேல் உள்ள முழு நம்பிக்கையோடு சொல்லிட்டார்.

பல இடங்களில் கேட்டு வந்தார்கள்.

இவனுக்கு எதிலும் சரியான நாட்டமில்லை.

இறுதியா “தீவு தெரு,அப்துல்லா தங்கை பொண்ணு பத்தாம் கிளாஸ் படிக்குது. +2 முடித்ததும் கல்யாணம் வச்சிகிறலாம்னு சொல்லுறாங்க உன் பதில் என்ன?”

- வாப்பா போனில் கேட்ட போது “சரி வாப்பா, உங்களுக்கும் உம்மாக்கும் பிடிச்சி இருந்தால் முடிவு பண்ணுங்க” என ஒரு வரி பதில் சொல்லி முடித்தான்.

முகம் பார்க்காமலே, குறைந்தபட்சம் ஒரு போட்டோ கூட பார்க்காமலே நிச்சயமாயிற்று. (அப்புறம் போட்டோ கேட்டதற்கு அவளின் மூன்றை வயசில் எடுத்த போட்டோ ஓன்று தரப்பட்டது)

இரண்டு வருஷம் கழித்து 1985, செப்டம்பர் 12-ம் தேதி வியாழக்கிழமை காலை கல்யாணம். அப்போதும் சரி வர பெண்ணை பார்க்க முடியலே. பூவும், முக்காடும் முகத்தை மறைத்து இம்சை படுத்தியது. இரவு தாலி கட்டு, ஒட்டுப்பணம், பல்லாங்குழி என குடும்பத்தார் முன்னிலையில் கலகலப்பாக நிகழ்வுகள்.

“அவ பொறந்த அன்னிக்கே வந்து மொத மொத அவளை மோந்துட்டு போனவருலோ அவரு! அல்லாஹ் இவ பொறந்த அன்னிக்கே மாப்பிளையை கண்ணுலே காமிச்சிட்டான்”

அந்த (கம்மா) பாட்டியம்மா பெருமையோடு சத்தமா சொன்ன போது, இவனும் பக்கமா அமர்ந்திருந்த பெண்ணை திருப்பி பார்க்க... ஆஹா..! அதே கண்கள்!“

அந்த அவன் நான்தான்.. வாழ்க்கைத் துணையுடன் இணைந்து இன்றுடன் வருடங்கள் முப்பத்திரண்டு.

"யப்பு ...நாங்க பொறந்த உடனே பொண்ணை பார்த்தவைங்க...."


Share:

Thursday, August 17, 2017

செக்கிழுத்த செம்மல் அறிஞர் மொஹானி

டாக்டர் அம்பேத்காருடன் அறிஞர் மொஹானி

1931 ம் ஆண்டு அஹமதாபாத்தில் கூடிய காங்கிரஸ் பொதுக்குழுவில் அறிஞர் மொஹானி "இந்தியாவுக்கு பூரண விடுதலை" என்ற தீர்மானத்தை முன்மொழிந்தபோது இந்தியா ஆச்சரியத்தில் விழியுயர்த்தியது! ஆம் அதுவரை "பூரண விடுதலை" என்ற கற்பனை கூட இந்தியாவில் காணப்படவில்லை!

இந்தத்தீர்மானம் நிறைவேற்றப்படாதா என மக்கள் எதிர்பார்த்தனர்!

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தீர்மானத்துக்கு எதிர்ப்பு காந்திஜீயிடமிருந்தே எழுந்தது! இதன் விளைவாக தீர்மானம் தோகடிக்கப்பட்டது!

ஆனால் இதில் முரண்நகை என்ன தெரியுமா? எட்டு ஆண்டுகள் கழித்து லாஹூர் காங்கிரஸ்ஸில் "பூரண விடுதலை" என்ற தீர்மானம் அதே காந்தியால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டதுதான்!

அறிஞர் மொஹானி அவர்கள் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு எண்ணிய எண்ணம் காந்திஜியால் எட்டு ஆண்டுகள் கழித்து வடிவம் பெற்றது!

அறிஞர் மொஹானி மிகச் சிறந்த உர்து கஜல் கவிஞராகவும் விளங்கினார்!

"சுப்கே சுப்கே ராத் தின்" https://www.youtube.com/watch?v=5bLN85bo48s என்ற அவரது "கஜல்" பாடல் மிகவும் பிரசித்திப் பெற்றது.

இந்தப் பாடல், "நிக்காஹ்" என்ற ஹிந்தித் திரைப்படத்தில் ஒலித்து 80 களில் இந்தியாவைக் கலக்கியது!

மிகச் சிறந்த ஊடகவியலாளரான, அறிஞர் மொஹானி, தன் எழுத்தாற்றலைத் தேச விடுதலைக்கு அர்ப்பணிக்கும் முகமாக "உருது முஹல்லா" என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தார்; அப்பத்திரிக்கை பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்களைச் சிந்திக்க வைக்கும் அதிர்ச்சி வைத்தியமாக அமைந்தது.

ஒருமுறை உருது முஹல்லாவில் பிரிட்டீஷாருக்கு எதிரான அக்னி வார்த்தைகளைத் தாங்கிய ஓர் இளைஞனின் கவிதை பிரசுரமானது. அக்கவிதை ஏற்படுத்திய சலசலப்பினால் கொதித்துப்போன ஆங்கில அரசு அறிஞர் மொஹானிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அக்கவிதையை எழுதியவர் யார் என்பதை எங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸ் அச்சுறுத்தியது. அதை தெரிவிக்க, மொஹானி மறுத்து விட்டார். மிகச் சிறந்த ஊடகவியலார் என்று வரலாற்றில் உயர்ந்தார்.

கவிதையைப் பிரசுரித்த பத்திரிக்கையின் ஆசிரியர் நான், எனவே அதற்கு நான் தான் பொறுப்பு. எழுதியவரை அடையாளம் காட்டமுடியாது. வேண்டுமானால் என்மீது நடவடிக்கை எடுங்கள் என்று அந்த நோட்டீசுக்குத் துணிச்சலுடன் பதிலளித்தார்.

ஆங்கில அரசு அறிஞர் மொஹானி மீது நடவடிக்கை எடுத்தது. கோர்ட்டுக்கு அவரை அலைக்கழித்தது. இறுதியில் ஆறுமாதச்சிறைத் தண்டனை வழங்கியது. உருது முஹல்லா பத்திரிக்கையைத் தடை செய்தது. அப்பத்திரிக்கை அச்சிடப்பட்ட ஹஜ்ரத்துக்கு சொந்தமான அச்சுக்கூடத்தை ஜப்தி செய்தது.

”யாரோ எழுதிய கவிதைக்காக நீங்கள் இத்தனைத் துன்பங்களை அனுபவிக்க வேண்டுமா?” – என்று மொஹானியிடம் கேட்டபோது, அது யாரோ எழுதிய கவிதைதான். ஆனால் எனக்கு உடன்பாடான கவிதை. என் தேசநலன் நாடும் வார்த்தைகளைச் சுமந்த கவிதை. அக்கவிதையை என் பத்திரிக்கையில் பிரசுரித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். அதற்காக எனக்கு இத்தணடனை என்றால், என் தேசத்தின் விடியலுக்காக இத்தண்டனையை மகிழ்வோடு ஏற்கிறேன்!. – என்று பதிலளித்தார்.

ஹஜ்ரத் மொஹானி அவர்கள் கைது செய்யப்படும்போது அவரது மனைவியார் நிறைமாதக் கர்ப்பிணி. குழந்தையை ஈன்ற அத்தாய், தன் கணவனிடம், அவரது, வாரிசைக் காட்ட குழந்தையைக் கையில் ஏந்திக் கொண்டு ஒவ்வொரு சிறைச்சாலையாக அலைந்தார். எந்தச் சிறையில் அவர் அடைக்கப்பட்டிருக்கிறார் என்ற குறைந்தபட்ச தகவலைக்கூட தர ஆங்கில அரசு மறுத்து விடுகிறது.

மூன்று நாட்கள் பட்டினியுடன் பல சிறைகளுக்கும் அலைந்த அத்தாய், இறுதியில் தன் கணவனைச் சந்தித்தார்.

தனது வாரிசை முதன் முதலாகப் பார்த்த அறிஞர் மொஹானி பாசம் பொங்க, சிறைக் கம்பிகளினூடே குழந்தையை வாங்கி முத்தமிட்டார். 

தன் குழந்தைக்கு ஒரு தந்தை, முத்தமிட்டது குற்றமா?

ஆங்கில அரசு அதனையும் குற்றமாக்கியது. சிறை விதிகளை மீறி நடந்தார் என்று குற்றம் சாட்டி மேலும் இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. இதைத் தொடர்ந்து சிறைச்சாலையில் அறிஞர் மொஹானி செக்கிழுத்த கொடுமையும் நடந்தது!

செக்கிழுத்த செம்மல் மொஹானி என்று இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு பேசட்டும்.





Share:

Sunday, January 22, 2017

ஜல்லிக்கட்டு - பண்பாட்டுக் கொண்டாட்டமும், நவீன புரிதலும்

மேலத்தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் பிரிவு கல்லணைக் கால்வாய்களில் ஒன்றான புது ஆற்றுப்பாசனத்தில் உள்ள ஊர் வடக்கூர்.

சிற்றூர் எனக் கூற முடியாது; ஏனெனில் ஆயிரம் தலைக்கட்டுகள் உள்ள கொஞ்சம் பெரிய ஊர்.

அந்த ஊரில் பிறந்து 1980 வரை அங்கு வாழ்ந்தவன். எங்கள் ஊரின் மந்தை அந்த வட்டாரத்தில் பிரபலம். மந்தை என்பது பொங்கல் விழாவின் தொடர்ச்சியாக தை ஐந்தாம் நாள் கொண்டாடப்படும் ஏறு தழுவுதல் அல்லது மாடு பிடித்தல் அல்லது ஜல்லிக்கட்டு.

இதைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுகிறேன்.

தென் இந்தியத் தீபகற்பத்தின் முனையில் இருக்கிற தமிழ்நாடு, கேரளம்,ஆந்திரம், கர்நாடகம் ஆகிய நிலப்பகுதிகளில், தமிழ்நாடு நீண்ட மேய்ச்சல் நிலப்பகுதியைக் கொண்டிருக்கிறது.

இதனை முல்லை நிலம் என்று தொல்காப்பியம் கூறுகிறது. இப்பகுதியில் கால்நடைகள் வளமாக வாழ்வதற்கான இயற்கைக் கூறுகள் உண்டு.

எங்கள் ஊரிலும் ஊரின் நான்கு பகுதிகளில் நீண்ட மேய்ச்சல் நிலங்கள் இருந்தன. ஊரில் உள்ள மாடுகள் எல்லாம் காலை எட்டு மணியளவில் ஊரின் பொது இடத்திற்கு வந்து சேரும். மாடுகளை வீட்டில் இருந்து பொது இடத்திற்கு விரட்டி விடுவார்கள். அவற்றை மேய்ப்பதற்குப் பொதுவான ஒரு குடும்பத்தினர் இருந்தனர். அக்குடும்பம் மாடுகளை ஓட்டிச் சென்று நாள் முழுவதும் புல்வெளிகளில் மேய்ந்த பிறகு மாலை வீடுகளுக்குத் திருப்பி ஓட்டி வருவார்கள். இது நாள்தோறும் நடைபெறும்.

இந்த மாட்டு மந்தையில் 'சாமி மாடு' அல்லது 'ஊர் மாடு' அல்லது ’பொலி காளை’ என ஒன்றிரண்டு காளைகள் இருக்கும். அவை கொழுகொழுவென வளமான சதைப்பிடிப்போடு நீண்ட கொம்புகளோடு ஊரைச் சுற்றி வலம் வரும்.

'பொலி காளை போல் அலைகிறான்’ ‘ ஊர் மாடு போல் சுற்றுகிறான்' என்பது ஊரில் உள்ள சொலவடை. வீட்டு வேலைகள் செய்யாமல் சுற்றித் திரியும் இளைஞர்களுக்கு மேலே சொன்ன சொலவடைகள் பொருந்தும்.

இப்படியான பொலி மாடுகளே மந்தைகளில் ஏறுதழுவுதல், பட்டிகளில் அடைத்துத் திறந்துவிட்டுப் பிடிக்கும் ’வாடிவாசல்’ ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் காளைகள் ஆயின.

ஒரு ஊரின் பொலிமாட்டை அருகில் உள்ள ஊர்களில் நடக்கும் 'மஞ்சுவிரட்டு' அல்லது மாடு பிடித்தல் நிகழ்ச்சிகளுக்குக் கொண்டு செல்வார்கள். இந்த நிகழ்வு எனது இளம் வயது முதல் (1960) இருபத்து ஐந்தாம் வயது வரை (1980) நான் நேரில் கண்ட காட்சி. தமிழ்நாட்டில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சிவகங்கை, தேனீ எனப்படும் பகுதிகளில் இவ்வகையான காளைகளைக் கொண்டு நடைபெறும் இக்கொண்டாட்டம் காலம் காலமாக நடைபெற்று வருகிறது. புதிதாக உருவானது இல்லை.

மேலே சொன்ன இந்த இயல்பான பண்பாட்டு நிகழ்வுக்கு வரலாறு உண்டா என்று தேடினால் தொடர்ச்சியாக வரலாற்றுத் தரவுகள் இடம் பெற்றிருப்பதைப் பார்க்கிறோம்.

வரலாறுகள் என்பவை மக்களின் அன்றாட புழக்கத்தில் உள்ள நிகழ்வுகள். கல் போன்ற ஊடகங்களில் பதிவாகியிருக்கும் செய்திகள், தொல்பழம் இலக்கண இலக்கியங்களில் பேசப்படும் நிகழ்வுகள் ஆகிய பிற தரவுகளைக் கொண்டு வரலாறு கட்டமைப்பு செய்யப்படுகிறது. நடைமுறையில் இருக்கும் நிகழ்வுகளிலிருந்து பழைய நிகழ்வுகள் குறித்த தரவுகளைப் புரிந்து கொண்டு வரலாற்றை எழுதலாம். இது புனைவாக இருக்காது; இருக்கும் தரவுகளைத் தர்க்க மரபில் ஒழுங்குபடுத்தி ஒரு தொடர்ச்சியைக் கண்டறிந்து புரிந்து கொள்வது.

ஜல்லிக்கட்டுக்கு இப்படியான வரலாற்றைக் கண்டறிய முடிகிறது.

திராவிட நாகரிகத்தின் தொல்லியல் தரவாகச் சிந்து சமவெளி நாகரிகம் பல வரலாற்று ஆசிரியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பான அகழ்வாய்வுகளில் கிடைத்த முத்திரைகளை நவீன முறையில் வாசித்தறிந்து (deciphering) பல்வேறு வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளனர்.

ஒரு காளையின் கொம்பை ஒரு மனிதர் பிடிப்பது போன்ற முத்திரை கிடைத்துள்ளது. இதனை ஏறு தழுவுதல் நிகழ்வின் தொடக்க காலத் தரவாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இவ்வகையான உருவம் பொதித்த சிற்பங்கள் பிற்காலங்களிலும் கிடைத்துள்ளன. மேய்ச்சல் நிலம் சார்ந்த வாழ்க்கையின் ஒரு குறியீடாக இதனைக் கொள்ள முடியும். மேய்ச்சல் சமூகம் என்பது உலகம் தழுவிய ஒரு நிகழ்வு.

சிந்து சமவெளி நாகரிக தொடர்ச்சி என்பது நமது தொல்பழம் இலக்கியப் பிரதிகளில் பேசப்பட்டுள்ளது. மலைபடுகடாம்,பட்டினப்பாலை,சிலப்பதிகாரம் ஆகியவற்றில் ஏறு தழுவுதல் பற்றிய செய்திகள் பேசப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில் பிற்பட்ட கலித்தொகையில் முல்லைக்கலி எனும் பகுதியில் ஆயர் இன மக்கள் வாழ்க்கைப் பேசப்படுகிறது. மாடுகளோடு வாழும் மக்கள் ஆயர் மக்கள். ஏறு தழுவுதல் எனும் நிகழ்வு அவர்களிடத்தில் செல்வாக்குடன் இருந்ததை பல பாடல்களில் காண்கிறோம்.

"கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள்"

எனும் கலித்தொகைக் குறிப்பு ஆயர்மகள் தனது காதலன் ஏறு தழுவும் வீரியம் உடையவனாக இருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் மறுபிறப்பில் கூட அவனைக் காதலனாக கொள்ள மாட்டாள் என்று கூறுகிறது. இதன் மூலம் காளைகளுக்கும் ஆயர் மக்களுக்கும் இருந்த உறவைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களது செல்வமே கால்நடைகள் தாம். `மாடு’ என்ற சொல்லுக்கு ’செல்வம்’ எனும் பொருள் தமிழில் உண்டு. இதனை திருவள்ளுவரும் பயன்படுத்தியுள்ளார்.

சிந்து சமவெளி நாகரிகம் சங்க இலக்கியப் பிரதிகள் ஆகியவை வழியாக தொடரும் இவ்வரலாறு 15ம் நூற்றாண்டுக்குப் பின் குறிப்பாக நாயக்க மன்னர்கள் தமிழ்நாட்டில் ஆட்சி செலுத்தியபோது ஏறுதழுவுதல் நிகழ்வை ’ஜல்லிக்கட்டு’ என்று அழைத்திருப்பதை அறிகிறோம். ஜல்லி என்பது சல்லி என்ற சொல்லின் மணிப்பிரவாள வடிவமாகக் கருதப்படுகிறது. காளையின் கொம்பில் கட்டப்படும் சல்லிக்காசுகள் சார்ந்து ’ஜல்லிக்கட்டு’ பெயர் உருவானதாகக் கருதுகிறார்கள். தமிழ் லெக்சிகனிலும் இவ்வகையான பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வு ஏறுதழுவுதல் ’ஜல்லிக்கட்டு’ ‘மஞ்சுவிரட்டு’ ’மாடு பிடித்தல்’ எனப் பல பெயர்களில் வட்டாரம் சார்ந்து வழங்கப்படுகிறது.

இந்த பண்பாட்டுக் கொண்டாட்டம் தடைசெய்யப்பட்டிருப்பது தொடர்பான சில குறிப்புகளைப் பதிவு செய்யலாம்.

காளைகள் இக்கொண்டாட்டத்தில் துன்புறுத்தப்படுவதாக் கருதும் மனநிலை மேலோட்டமானது. ஆதிக்க சாதி சார்ந்த மனநிலை; நகரியப் பண்பாடு சார்ந்த புரிதல், அதிகார வெறி சார்ந்த செயல் என பல பரிமாணங்களில் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பண்பாட்டு நிகழ்வுகள் சார்ந்த மேட்டிமைத்தனம் இதில் முதன்மையாகச் செயல்படுகிறது. மேட்டிமைத்தனம், வீடுகளில் வளர்க்கும் செல்லப் பிராணிகளாக நாய், பூனை ஆகிய பிற குறித்துக் கொள்ளும் ஐரோப்பிய மரபு சார்ந்த மனநிலை; காளைகள் குறித்தும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அடிப்படையான வேறுபாடுகள் குறித்த புரிதல் இல்லை. இதனைக் களம் சார்ந்த மக்கள் வாழ்நிலை, வாழ்வாதாரம், பண்பாட்டுக் கொண்டாட்டங்கள் ஆகிய பலகூறுகளில் புரிந்து கொள்ளும் மனநிலை மேட்டிமைத்தனத்தோடு செயல்படுபவர்களுக்கு இருப்பதாகக் கருத முடியாது.ஜல்லிக்கட்டு விவகாரம்: பா ஜ க இளைஞர்களை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு

விலங்கினங்கள், பயிரினங்கள் ஆகிய பிறவற்றில் வட்டார மரபுகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு, இறக்குமதி சார்ந்த மரபுகளை நவீன உலகமயக் கோட்பாடுகள் முன் வைக்கின்றன.

காளைகளில் உள்ள பல்வேறு வகையினங்கள், இவ்வாறான கொண்டாட்டங்களால் தொடர்ந்து இருக்கும் வாய்ப்பு உருவாகிறது. இவ்வாய்ப்பைத் தடுப்பதன் மூலம், ஒரே வகையான உயிரின மரபுகளை,வணிக நோக்கில் முதன்மைப்படுத்த முடியும். இதன் மூலம் உலகம் தழுவிய வணிக முறை உருவாக்கப்படும். உணவுப் பொருட்கள் சார்ந்து இப்போது கட்டமைக்கப்படும் இவ்வகையான உலகமயம், வட்டார மரபுகளை அழிக்கும் பணியில் தீவிரமாகச் செயல்படுவதாகக் கருத முடிகிறது.

தமிழகத்தில் ஆலம்பாடி, புளிகுளம், உம்பலஞ்சேரி, பருகூர், மலைமாடு, காங்கேயம் எனப்படும் காளை வகையினங்கள் உள்ளன.

இதில் ஆலம்பாடி வகை இப்போது இல்லை. அழிந்து விட்டது. ஜல்லிக்கட்டுத் தடை மூலம் படிப்படியாக வட்டார வகையின் அழிவு உருவாகும். சீமை சார்ந்த வகையினங்கள் இறக்குமதி செய்யும் வாய்ப்பு ஏற்படும். இவ்வகையில் வட்டார மரபுகளே அழிந்து போகும் சூழல் உருப்பெறும்.

நன்றி: பி.பி.சி - தமிழ்.

(கட்டுரையாளர் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியர்)
Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive