NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Friday, July 28, 2017

அழகை விரும்பும் இறைவன்



மனிதன் மிடுக்கான தோற்றத்துடனிருக்க தன்னை அலங்கரித்துக்கொள்வதை இறைவணக்கத்துடன் ஒப்பிடுகிறது இஸ்லாம். "ஆதமுடைய மகனே..! தொழும்போதெல்லாம் உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள்" - என்று திருக்குா்ஆன் இதைக் கட்டளையாகவே வைத்துள்ளது.

இறைநம்பிக்கையாளர்கள் கண்ணியம் மிக்கத் தோற்றத்திலிருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் நபிகளார், இதற்காக தம் தோழர்களுக்குத் தூய்மைப் பயிற்சியும் அளிக்கிறார். தனிப்பட்ட வாழ்விலும் சமூக வாழ்விலும் வீட்டிலும் வெளியிலும் இறையடியார்கள் தங்கள் தோற்றத்தில் கவனம் செலுத்திட வேண்டும் என்பது முக்கியமானது.

நபிகளாரிடம் ஒருவர் வந்தார். அவருடைய தலைமுடியும் தாடியும் கலைந்து அலங்கோலமாகக் காணப்பட்டன. தலைமுடியை வெட்டி அழகுபடுத்தி வரும்படி நபிகளார் அவரைப் பணித்தார். அதன் பின்னர், தோழர்களை நோக்கி, “உங்களில் ஒருவர் என்னிடத்தில் நல்ல தோற்றத்தில் வருவது, மோசமான சாத்தானின் தோற்றத்துடன் வருவதைவிடச் சிறந்தது அல்லவா?” என்று சிலாகித்துப் பேசினார்.

மற்றொருமுறை ஒரு மனிதர் அழுக்கடைந்த ஆடைகளோடு வருவதை நபிகளார் கண்டார். “நீங்கள் உங்கள் ஆடைகளைத் தூய்மையாக வைத்துக்கொள்ளும் அளவுக்கு உங்களிடம் பணவசதி இல்லையா சகோதரரே?” - என்று அவரிடம் விசாரிக்கவும் செய்தார்.

வீண் செலவுகள் இன்றி, செயற்கைத்தனமின்றி ஒருவர் தன்னை அலங்கரித்துக்கொள்வதை இஸ்லாம் ஒருபோதும் தடுப்பதில்லை.

நபிகளாரிடம் ஒருவர், “தமது ஆடைகளைச் சிறந்ததாகவும், காலணிகளை அழகுமிக்கதாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புவது பெருமை என்ற கணக்கில் வருமா இறைவனின் திருத்தூதரே?” என்று கேட்டார். “இறைவன் அழகன். அவன் அழகை விரும்புகிறான்!” என்றார் நபிகளார்.

ஒருமுறை நபிகளார் உடல் நலமின்மையால் பாதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் போர்வை ஒன்றைத் தம்மீது போர்த்தியிருந்தார். அதுபோன்ற சுத்தமானதொரு போர்வையை நான் பார்த்ததேயில்லை என்று நபித்தோழர் பாராவின் பதிவே உள்ளது.

“இறைவன் தூய்மையானவன். அவன் தூய்மையை விரும்புகிறான். இறைவன் தாராளத்தன்மை மிக்கவன். அந்தக் குணத்தையே அவன் விரும்புகிறான். இறைவன் கருணையானவன். அவன் சக மனிதர்களிடம் கருணை காட்டுவதை விரும்புகிறான். எனவே, நீங்கள் உங்கள் உடலையும் வசிப்பிடங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்!” என்று வலியுறுத்துகிறார் நபிகளார்.

(தி இந்து, ஆனந்த ஜோதியில் 27.07.2017 அன்று வெளியான எனது கட்டுரை)

Share:

Wednesday, July 26, 2017

மலைத்து நிற்கிறேன் நான்

லட்சங்கள் கோடிகள் என்று பொருளியல் மதிப்பீட்டில் கணக்கிட்டாலும், மனிதனின் வாழ்நாள் என்னவோ சில ஆயிரங்கள்தான் என்பது எவ்வளவு விசித்திரமானது!

நூறாண்டுகள் வாழ்வதாக வைத்துக் கொண்டாலும், 36600 நாட்கள்தான் இந்த உலகில் மனிதன் வாழ முடியும் என்பது எவ்வளவு யதார்த்தமானது..!

இந்த ஆயுளை சர்வசாதாரணமாக கடக்கின்றன சில விலங்குகள், விருட்சங்கள், இன்னும் சில உயிரிகள் என்பதும் அப்பட்டமானது..!

இந்த யதார்த்ததை மனித மனம் ஏற்றாலும், ஏற்க மறுத்தாலும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளைத் தாண்டி இந்தப் பூமியில் மனித இனம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது நிதர்சனம். 

இதற்கு இன்னும் முன்னர் லட்சக்கணக்கான ஆண்டுகளாய் இந்த பிரமாண்டமான பிரபஞ்சமும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் சத்தியம்.

பூமி பந்தோடு மனிதனை ஒப்பிட்டால் கடற்கரையோரமாக உள்ள மணலின் ஒரு துகள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

இந்த மனிதத் துகளின் உற்பத்தி எவ்வளவு விந்தையானது..!

ஒரே ஒரு துளியிலிருந்து புறப்பட்ட கண்ணுக்குத் தெரியாத ஒரு உயிரிக்குள், உயிராற்றலுக்குள் இயங்கும் அத்தனை மனித உறுப்புகள். ஒப்பற்ற இந்த அமைப்பைக் கண்டு நவீன அறிவியல் தொழில்நுட்பம் செயலிழந்து போகும் அதிசயம்!

வெறும் சில தாதுக்களின் கலவையான மனிதனை சக மனிதன் அறிவியல் கூடங்களில் உற்பத்தி செய்யமுடியாத அளவு நுணுக்கம். கட்டமைப்பு என்று ஏக பிரமிப்பு.

படைப்பாற்றலின் பிரமிப்பு ஒருபுறம் செயலிழக்கச் செய்கிறதென்றால், பரிபாலிக்கும் ஆற்றலோ மூச்சடைக்க வைக்கிறது. 

50-களின் பிற்பகுதியில் சென்னையில் பிறந்து, சில ஆண்டுகள் ஆந்திரத்தில் சாமான்ய ஏனாதி (இருளர்) சிறுவர்களோடு தோழமை..!

பள்ளியில் சேர இன்னும் வயதாகவில்லை என்ற நிலையில்,

மாலை நேரத்தில், வயலுக்குள் கல்விக்கூடமோ என்ற வியப்புறும்வண்ணம் இருந்தது அந்த கிராமத்துப் பள்ளி.

பள்ளியைச் சுற்றியும் பசேல் என்றிருக்கும் தோட்டத்தைக் கண்டு மலைப்போடு பசுமையுடன் பரிச்சயம் கொண்ட அந்தக் குட்டிப்பையன் என்னுள் இன்னும் நடமாடுவதை மறக்க முடியாமலிருக்கிறேன் நான்.

அறுவடைக்காலங்களில் கடைசியாக கதிரறுத்த வயலில் மிச்சம் மீதியிருக்கும் பணிகளை செய்து வயல்காரர் அள்ளித் தரும் நெல்மணிகளை பிஞ்சு கைகளில் ஏந்தி, சில நேரங்களில் மடிப்பிச்சைப் போல சட்டையை நீட்டி நெற்மணிகளை பெற்ற காலமது.

அந்த நெல்மணிகளுக்கு பண்டமாற்றாய் செட்டியார் கடையில் தரும் இளகிய வெல்லத்தை மணிக்கட்டில் கடிகாரம் போல வளைத்துச் சுற்றி சுவைத்து மகிழ்ந்த பருவம் இன்னும் மனதில் பளிச்சென்று தெரிகிறது.

அதன் பிறகு மீண்டும் சென்னை, பள்ளி படிப்பு நிலைகொண்ட பருவம்.

அறிவாற்றல் கூர்தீட்டப்பட்ட பட்டறை பருவம் அது.

நான்காவது, ஐந்தாவது வகுப்புகளிலேயே ஷேக்ஸ்பியர் பரிச்சயமான நாட்கள்.

அதேபோல, வறுமையின் அத்தனை துன்பங்களையும் அனுபவித்த காலமது.

ஒரே ஒருவேளை இரவு உணவில்தான் ஒரு நாளை கடந்தாக வேண்டும்.

கூரைவீட்டிலிருந்தே வானத்து நட்சத்திரங்களை எண்ணிவிடலாம். சில சமயம் போர்வையாய் கிடைக்கும் அம்மாவின் புடவையின் ஓட்டைகள் அந்த நட்சத்திரங்களையும் மிகைக்கும் அனுபவங்கள் அவை.

ஐந்தாம் வகுப்பு பள்ளி நாட்களிலேயே பள்ளியில் மாதிரி சட்டமன்ற நிகழ்வுகளும், சபாநாயகர் பொறுப்புகளும், அலெக்சாண்டருமாய் பாத்திரங்களில் மின்னிய நாட்கள் நெஞ்சில் எழுந்து புன்னகைக்க வைக்கின்றன.

அதிகாலை ஜில்லிட வைக்கும் குளிருக்கு இதமாக குடிசைக்கு வெளியே குப்பைக்கூளங்களின் கனப்பு வெளிச்சமும், சிறிது வளர்ந்து உயர்நிலை பள்ளிக்குச் சென்றபோது, இரயில் நிலைய மின்விளக்கு வெளிச்சமும்தான் முன்னேற்றத்துக்கு பாதை வகுத்தன.

அரசு நூலகத்தின் அத்தனை புத்தகங்களையும், நூலகரின் கெடுபிடிகளைத் தாண்டி (புத்தகங்கள் கலைந்துவிடும் என்பதால், சிறார் வாசிப்புக்கு சுயமாய் அவர் வயது வரம்பு நிச்சயித்திருந்தார்) வாசித்து புதிய புத்தகங்களை எதிர்நோக்கியிருக்கும் பள்ளிப்பருவத்து சிறுவன் நினைவில் எழுகின்றான்.

வாண்டுமாமா, சாண்டில்யன், கல்கி, லட்சுமி, தமிழ்வாணன், நா.பார்த்தசாரதி, ராஜம் கிருஷ்ணன், வாசந்தி, சிவசங்கரி ஆகியோரின் படைப்பாற்றல் கற்றலில் திளைத்திருந்த பருவம்.

இயற்கை, வளர்ப்பு பிராணிகள் என்று தோழமைகளோடு கழிந்த நாட்கள்.

ஆசையாய் வளர்க்க கொண்டு சென்ற நாய்க்குட்டியை  பிடுங்கிக் கொண்டதோடல்லாமல் அடிக்கவும் எத்தனித்த அனுபவம் குத்துச்சண்டை வீரனாக்கியது. அந்த சுட்டி மாணவன் மீண்டும் வாலாட்டாமலிருக்க அச்சுறுத்தியது.

பள்ளிப்படிப்பை முடித்தபோது, அதற்குமேல் படிக்க வைக்க முடியாது என்று தந்தையார் கைவிரித்திட, கூடபடித்த நண்பர்கள் எல்லாம் கல்லூரிக்கு சென்றபோது, மௌனமாய் தலைகுனிந்து கண்ணீர் சிந்திய துன்பப்படலம்.

கல்விக் கற்கும் வாய்ப்பு பொருளியலால் முடங்கிப் போன நிலையில், விஞ்ஞானியாக மாற வேண்டும் என்று நினைத்திருந்த அந்த ஒல்லியான உடல்வாகு கொண்ட அரும்பு மீசை இளைஞனின் அத்தனை கனவுகளும் தொலைந்துபோன பரிதாபம்  நினைவில் எழுகின்றது.

அதன்பின், சென்னை அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பயிற்சியாளனாக பணியில் சேர்ந்தது... காதல் குறுக்கிட்டது... எதிர்பாராமல் நடந்த திருமணம் என்று பல மலைப்புகளை கடந்து காலம் தள்ளியது விந்தையாக இருக்கிறது.

70-களின் பிற்பகுதியில் பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பும் அத்தனை படைப்புகளும் பிரசுரிக்க இயலவில்லை என்று திரும்பி வரும்போது, மனைவியின் கேலி, கிண்டல்களையும் தாண்டி மீண்டும், மீண்டும் எழுத தொடங்கி 80-களில் அச்சேறி, இதுவரையில் அநேகமாய் எல்லா பத்திரிகைகளிலும் எழுதியாகிவிட்டது. குழந்தை இலக்கியத்தில் பன்னூலாசிரியர் என்ற பட்டப்பெயரும் 15 மேற்பட்ட சிறார் நூல்கள் மூலமாக “மழலைப்பிரியனாய் அங்கீகாரம் கிடைத்தது.

கல்லூரிக்கு செல்ல முடியாமல் கண்கலங்கி நின்ற அதே மாணவன் 2000-ம் ஆண்டுகளில் தமிழ் இலக்கியங்களில் இளநிலை மற்றும் முதுநிலை, இதழியலில் முதுநிலை, மனித உரிமைகள் பாடத்தில் முதுநிலை, பின்னாளில் நிறுவனத்தில் அதிகாரியாய் பதவி உயர்வு கிடைத்தபோது, தொழில் சம்பந்தமான மற்றொரு பட்டயப்படிப்பு (Diploma in Materiel Management) என்று இளமையில், இழந்ததை எல்லாம் பெற முடிந்தது.

ஒரு கட்டத்தில் வறுமை மட்டுமே சொந்தம் கொண்டாடியதால் செங்கொடி ஏந்தி மக்கள் போராட்டங்களில் நின்ற முன்னணி தோழனாய் கனல் கக்கி முழக்கமிட்ட இளைஞனின் மனதில் மனித பிறப்பு, வாழ்க்கை, மரணம். அதன்பின் என்ன...? - என்ற தேடல் மேலெழுந்தது.

அந்த தேடலின் தொடராய் சாமியார்கள், சித்தர்கள் என்று கடைசியில் இஸ்லாம் சமயத்துக்கு  கொண்டு வந்து சேர்த்ததுவரையிலான  இந்த 59 ஆண்டுகளில் எத்தனை எத்தனை மலைப்புகளோடு கடந்து நிற்கிறேன் என்பது வியப்புடன் இருக்கிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில் பாட்டி, அம்மா, அப்பா போன்ற நெருக்கமான உறவுகள், உறவாடிய தோழர்கள், ஒரே தட்டில் சாப்பிட்டு மகிழ்ந்த நண்பர்கள், நன்கு பரிச்சயமான அண்டை, அயலார் எல்லாம் மரணம் என்னும் ஒரு நிரந்தமான தடுப்புக்குள் வெறும் நினைவுகளாகிபோன துயர அனுபவங்கள்.

நமது முறை எப்போது? அதற்கான தயாரிப்பாய் சேர்த்து வைத்திருக்கும் நல்லறங்கள்தான் என்ன? என்று கணம்தோறும் எழும் கேள்விகளுக்கும் பதில் மலைப்பாய் இருக்கிறது.

மலைப்போன்ற இடர்களையெல்லாம் கடந்து, மனைவி, மக்கள், பேரன், பேத்திகளோடு, மகிழ்ந்திருக்கும் தருணமிது.

இந்த பேரண்டத்தில் எதுவும் செய்ய முடியாத கையாலாகாத நிலையில் என் மீது சொரியப்பட்ட, சொரிய்யபடும் இறையருளுக்கு நன்றியோடு பணிந்து துதிக்கிறேன் நான்.

அதேபோல, அழகிய பூமியில் எனது வருகையையொட்டி - 25.07.1957 - உலகின் பல பகுதிகளிலிருந்தும் தங்களின் பேரன்பை வெளிப்படுத்தி, வாழ்த்துக்கள் சொல்லி இன்னும் அழகூட்டிய எனது உடன்பிறவா சொந்தங்கள் ஒவ்வொருவருக்கும் சாத்தியமற்ற நிலையிலும் நேரில் நன்றி தெரிவிக்கவே மனம் விழைகிறது.

சுமக்க முடியாத பாரத்தை யார் மீதும் இறைவன் சுமத்துவதில்லை என்பதற்கு இந்த எளியவனே ஓர் உதாரணம்.

அதனால், வாழ்வியல் பிரச்னைகளுக்கு சோர்வடைந்து விட வேண்டாம் என்பதே இந்தத் தருணத்து எனது அறிவுரை அல்லது அனுபவ பகிர்வு.

நன்றி இறைவா..! நன்றி தோழர், தோழியரே, அன்பு உடன்பிறப்புகளே..!

மனம் நிறைந்த அன்போடு,


இக்வான் அமீர்

(படம்: தம்பி அனஸ் Shahul Hameed https://www.facebook.com/shahulhameednutron கோவை)

முந்தைய வைகறை நினைவுகளை வாசிக்க:
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html
வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html
வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html
வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html
வைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?: http://ikhwanameer.blogspot.in/2015/08/9.html
வைகறை நினைவுகள் பகுதி 10: http://ikhwanameer.blogspot.in/2015/08/10.html
வைகறை நினைவுகள் பகுதி 11 : நான் தொலைந்து போனது இங்குதான் : http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html
வைகறை நினைவுகள் பகுதி 12: இதோ என் இப்ராஹீமா: http://ikhwanameer.blogspot.in/2015/08/11_14.html
வைகறை நினைவுகள் பகுதி 13: ஒரு கேள்விக்கு விடை தேடி நான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/13.html
வைகறை நினைவுகள் பகுதி 14, ஒரே டேக்கில் ஓகே: http://ikhwanameer.blogspot.in/2015/08/14.html
வைகறை நினைவுகள் பகுதி 15: வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/15.html
வைகறை நினைவுகள் பகுதி 16 : கதைச் சொல்லியாய் மழலைப்பிரியன்: http://ikhwanameer.blogspot.in/2015/08/16.html
வைகறை நினைவுகள் பகுதி 17: பாகல் கொடி : http://ikhwanameer.blogspot.in/2015/08/17.html
வைகறை நினைவுகள் பகுதி 18: மறக்க முடியாத அந்த குட்டிச் சுவர்: http://ikhwanameer.blogspot.in/2015/09/18.html
வைகறை நினைவுகள் பகுதி 19: அந்த இருபது ரூபாய்: http://ikhwanameer.blogspot.in/2015/09/19.html
வைகறை நினைவுகள் பகுதி 20: பாதுகாத்துவரும் அந்த இரண்டு மடல்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/09/20.html
வைகறை நினைவுகள் பகுதி 21: உள்நாட்டு அஞ்சல் பரிச்சயம் செய்த அழகிய ஒளிவிளக்கு: http://ikhwanameer.blogspot.in/2015/09/21.html
வைகறை நினைவுகள் பகுதி 22: வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நடுநிசி இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/10/22.html
வைகறை நினைவுகள் பகுதி 23:  மர்யம் ஏன் அழுதாள்?:  http://ikhwanameer.blogspot.in/2015/10/23.html
வைகறை நினைவுகள் பகுதி 24:  வேட்டைக்காரன்:  http://ikhwanameer.blogspot.in/2015/12/24.html
வைகறை நினைவுகள் பகுதி 25:  லென்ஸ் விழி வழியே..:  http://ikhwanameer.blogspot.in/2015/12/25.html
வைகறை நினைவுகள் பகுதி 26:  ரஷ்ய கரடியை விரட்டியடித்த திருக்குர்ஆன்: http://ikhwanameer.blogspot.in/2016/02/26.html
வைகறை நினைவுகள் பகுதி 27:  ஈந்து கசிந்த மனம்:  http://ikhwanameer.blogspot.in/2016/02/27.html   
வைகறை நினைவுகள் பகுதி 28: நான் புரிந்துகொண்ட இஸ்லாம்: http://ikhwanameer.blogspot.in/2016/02/28.html
வைகறை நினைவுகள் பகுதி: 29 காலப்பெட்டகம்: நூற்றாண்டே சாட்சியாக…!: http://ikhwanameer.blogspot.in/2016/02/29.html
வைகறை நினைவுகள் பகுதி: 30 - ஓ.. ஜமீலாபாத்..! சாட்சியாய் இருப்பாய்.. நீ.. - http://ikhwanameer.blogspot.in/2016/04/30.html
வைகறை நினைவுகள் பகுதி 31 - என்னவானது எனது அன்பு உள்ளங்களுக்கு..? https://ikhwanameer.blogspot.in/2016/07/31.html
வைகறை நினைவுகள் பகுதி 32 - முதுமைக் கரைச் சேர்த்தக் காலம்  https://ikhwanameer.blogspot.in/2017/05/blog-post_17.html 

 

Share:

Sunday, July 23, 2017

எங்கள் வேலையைப் பறித்துக் கொள்கிறாய்!

 
 
”எங்கள் வேலையைப் பறித்துக் கொள்கிறாய்!” - என்பதில் நிஜமில்லை என்கிறது இந்த கருத்துப்படம்.

வெளிமாநிலத்தாரோ, அயல்நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டுக்காரரோ அந்தந்த பகுதிகளில் உள்ளுர்வாசிகள் செய்ய மறுக்கும் பணிகளை அதுவும் குறைந்தளவு ஊதியத்தில் செய்துவரும் மனிதவளம் என்பதுதான் உண்மை.
Share:

Saturday, July 22, 2017

எங்கே என் விண்மீன்கள்?

காணாமல் போன
என் விண்மீன்கள்
கண்டவர்கள்
தயவுசெய்து
தெரிவிப்பீரா
என்னிடம்?

அவர்கள்
விடுதலை இந்தியாவின்
நம்பிக்கை
நட்சத்திரங்கள்..!
அதனால்,
மெதுவாக …
ஆம்… மெதுவாக...
களைத்திருக்கும்
அவர்கள்
உறக்கம் கலையாமல்
செய்தியை
தெரிவிப்பீராக..!

பத்துமாதம்
சுமந்து பெற்ற
தாயினும் அதிகமதிகம்
அகமகிழ்ந்திருந்தேன் நான்…
என் நாட்டின்
அத்தனை பிரச்னைகளுக்கும்
தீர்வளிப்பவர்கள் என்று
நெஞ்சமெல்லாம்
நம்பிக்கையோடு
காத்திருந்தேன் நான்..
அந்த
மெரீனா இளம் போராளிகளின்
உக்கிரத்தாண்டவம் கண்டு..
ஆகா… இனி
என் நாட்டுக்கு
இல்லை… கவலை என்று
மகிழ்ச்சிக்கரை
புரண்டிந்தேன் நான்!

ஒரு காந்தியும், ஒரு மார்க்ஸும்
ஒரு கட்டபொம்மனும், திப்புச்சுல்தானும்,
ஒரு வேலு நாச்சியாரும், அலி சகோதரர்களும்,
ஒரு வஉசியும், சுபாஷ் சுந்திர போஸுமாய்
எத்தனை கலவைகளுடன்
தோள் தட்டி நின்றார்கள்
அந்த
ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட
எனது பிள்ளைகள்..!

ஆகா…! எனது நாட்டின் விடிவெள்ளிகள்
இந்திய அரசியல் நீரோக்களை
விரட்டவந்த அறப்போராளிகள்
என்று எத்தனை இரவுகள்
சந்தோஷத்தால்
தூங்க மறந்தன
எனது விழிகள்..!
ஆனால், அத்தனை கனவுகளும்
பகல் கனவுகளோ என்று
திகைப்புடன்
நிற்கிறேன் நான்..!

மெரீனாவுக்கு பின்
எங்கே போனீர்கள்…
எனது பிள்ளைகளே..!
நெடுவாசலில்
உங்கள் முகங்களைக்
காணாமல்
தேடித்… தேடி..
களைத்து
போனேன் நான்..!
கதிராமங்கலத்திலாவது
போராடும்
எம் மக்களை
கரைச்சேர்ப்பீர்கள்
என்று எத்தனை எத்தனை
கனவுகளை
சுமந்திருந்தேன் தெரியுமா…?
அத்தனைக் கனவுகளும்
கலைந்ததுதான் நிஜம்..!

எண்ணெய் துரப்பண கிணறுகள்தோறும்
பூமித்தாயின் முகத்தில்
கருமைப்பூசி
பிசுப்பிசுப்புடன்
வழிந்தோடும்
கச்சா எண்ணெய்யில்
உங்கள் முகம் காண
ஆவலோடு மேற்கொண்ட
எனது அத்தனை பயணங்களிலும்…
தொலைந்து போன
எனது அன்பு உறவுகளாகிய
நீங்கள்
திரும்ப கிடைக்காமல்
தலை குனிந்து
நின்றதுதான் நிஜம்..

கணம் தோறும்…
பொன்னான மண்ணை
இந்த நீரோ மன்னர்கள்
ஊதிய அரசியல்வாதிகள்…
அன்னியனுக்கு
சொற்ப ஆதாயங்களுக்கு
மண்ணையும், மரத்தையும்,
வேளாண் நிலங்களையும்,
ஆற்றையும், காற்றையும்
விற்பனை செய்யும்
ஒவ்வொரு கணம் தோறும்…
இறந்து… இறந்து
பிழைக்கிறேன் நான்!

நாளைய
என் பிள்ளைகளுக்கு
அற்புதமான
இந்த நிலத்தை,
காற்றை, மரத்தை,
செடி-கொடிகளை,
நம்மைச் சுற்றி வாழும்
அற்புதமான உயிர்களை
ஒப்படைத்து
”இனி நீங்கள்தான்
பொறுப்பாளிகள்
பத்திரமாய்
பாதுகாத்து வாருங்கள்!” என்று
அவர்களுக்கான
அடைக்கலப் பொருளை
ஒப்படைத்து…
நிம்மதியாய்
வந்த ஊர்
சென்று சேர
ஆவலுடன் காத்திருக்கும்
ஒவ்வொரு கணம் அது..!

நம்பிக்கைகளாய்…
துன்பத்துயரங்கள்
விலகும் என்ற
நம்பிக்கைகளாய்
எனது பொழுதுகள்
விடிகின்றன..!

காணாமல் போன
என் விண்மீன்கள்
திரும்பவும்
நான் மீட்டெடுப்பேன் என்ற
பெருத்த நம்பிக்கையோடு
நகர்கின்றன
எனது தேய்மான பொழுதுகள்..!

அதனால்,
தொலைந்துபோன
என் விண்மீன்களை
அடிவானத்து
நட்சத்திரங்களை
தேடித்தேடி
திரிகின்றேன் நான்..!
எங்கேயாவது
அவர்களைக் கண்டால்…
தயவுசெய்து
அய்யன்மீர்…
சத்தம்போடாமல்
களைத்திருக்கும்
அவர்களின்
துயில் களையாமல்
தெரிவிப்பீர்..
என்னிடம்..!

- நம்பிக்கை இழக்காமல் இக்வான் அமீர்

Share:

Monday, July 10, 2017

மனசோட மடல்கள்: நன்மைகள் பகிர்ந்தளிக்கப்படும் நாள் வரும் முன்...

என் அன்பு நெஞ்சங்களே, உறவுகளே, சகோதர-சகோதரிகளே!

உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் பொழிவதாக..!

மனித உறவுகளில் ஏற்படும் விரிசலுக்கு உச்சவரம்பு மூன்று நாள் என்று நிர்ணயித்த கையோடு மீண்டும் அந்த உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள அழகிய வழிமுறையாய் சலாம் என்னும் முகமனை நபிகளார் முன்மொழிகிறார். பிணங்கியுள்ள ஒருவர் மற்றொருவருக்கு, “இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்!” என்று பரஸ்பரம் பறிமாறிக் கொள்ளும் வாழ்த்து மீண்டும் சகோதரத்துவ உறவுக்கு வழிகோலுகிறது. இதயங்களை இணைக்கிறது. அத்தோடு இறையருளைப் பெற்றுத் தருகிறது.

ஒவ்வொரு பிணக்கிலும் யாராவது ஒருவர் மற்றொருவருக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தியே இருப்பார். இந்த இழப்பை ஈடுகட்டுவதன் முதல் நிலையாக, பாதிப்பை ஏற்படுத்தியவர் வருந்துவதோடு அந்த வருத்தத்தை வாய்மொழியாய் வெளிப்படுத்தும்போது, அந்தப் பிரச்சினை முற்றுப் பெற்றதாகிவிடும்.

“தன்னுடைய சகோதரரின் உரிமைகளைப் பறித்துக் கொண்டவர், தன்னுடைய சகோதரனின் கண்ணியத்தைக் களங்கப்படுத்தியவர் இன்றே உடனடியாக அந்த உறவுகளைச் சீர்செய்து கொள்ளட்டும். இல்லையேல் மறுமைநாளில், அநீதி இழைத்தவரின் நன்மைகள் அவர் இழைத்த அநீதிக்கு ஏற்றாற் போல அநீதி இழைக்கப்பட்டவருக்குப் பகிர்ந்தளிக்கப்படும். ஒருவேளை அப்படி நன்மைகள் இல்லாத பட்சத்தில் அநீதி இழைக்கப்பட்டவரின் தீமைகள் அநீதி இழைத்தவரின் பதிவேட்டில் சேர்க்கப்படும்!” என்று பொருள்படும்படி நபிகளார் எச்சரிக்கிறார்.

அதேபோல, அடுத்தவரால் பாதிப்புக்குள்ளானவர் தனது மென்மையான போக்கால் அவருடைய தவறுகளை மன்னித்துவிடும்படியும் மற்றொரு தரப்பினரையும் நபிகளார் அறிவுறுத்துகிறார். மனிதரிடையே எழும் கருத்துப்பிழைகள் மனங்களில் கொதிநிலையில் இருக்க ஒருபோதும் இஸ்லாம் அனுமதிப்பதில்லை. அவை தணிக்கப்பட்டு சகஜநிலையை அடையவே மார்க்கம் விரும்புகிறது.

ஒருமுறை நபிகளார் தமது தோழரை நோக்கி கேட்கிறார். “சகோதரர்களே. தீயவர் யார் என்று நான் அடையாளப்படுத்தட்டுமா?”

அங்கு கூடியிருந்தோர், அதைத் தங்களுக்கு எடுத்துரைக்கும்படிக் கேட்கின்றனர்.

“உங்களில் மிகவும் தீயவர் யார் என்றால், யார் எப்போதும் பிறரைவிட்டுத் தனிமையில் இருக்கிறாரோ, யார் தன்னுடைய பணியாட்களிடம் கொடுமையாக நடந்து கொள்கிறாரோ, யார் பிறருக்கு அன்பளிப்பு தர மறுக்கிறாரோ அவரேதான்!” என்றுரைத்தார் நபிகளார்.

“யார் அடுத்தவர்க்கு எதிராக காழ்ப்புணர்வு கொண்டிருக்கறாரோ அவர்தான் மிகவும் தீயவர்” என்று சொன்ன நபிகளார் இன்னும் கொடிய தீயவர் யார் என்பதையும் கூறினார்.

“அடுத்தவர் தவறுகளை மன்னிக்காதவர்கள். அடுத்தவர் தம்மை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டும் அவரை மன்னிக்க மறுப்பவர்கள்” என்று நபிகளார் பல்வேறு நிலை மனிதர்களை அடையாளப்படுத்தி தமது தோழர்களை எச்சரிக்கிறார். http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article9555288.ece

கொடிய குணமும், கடினமான மனமும் கொண்ட மனிதர்கள் இறைவனின் அருளிலிருந்து அதிக தொலைவில் இருப்பதால் இவர்கள் நரகின் அடிப்பகுதியில் வைக்கப்படுவார்கள். கண்களில் பெரும் கனலும், இதயத்தில் பாறையென கடினமும் கொண்ட மனிதன் அபாக்கியவான் ஆவான்.

இறைவனின் பேரருளால், அவனது அருளைச் சுமந்து மனிதரிடையே மனித வடிவில் வந்துதித்த நபிகளார் சக மனிதர்களின் துன்பங்களை களைபவராக இருந்தார். மனிதர்களின் மன காயங்களுக்கு மருந்திடுபவராகவும், அவர்கள் துன்பங்களின் துயர் துடைப்பவராகவும், தவறிழைக்ககும்போது அவர்கள் மீது அனுதாபங்கொண்டு அரவணைத்து நல்வழிப்படுத்துபவராகவும், செல்வந்தர்களைக் கொண்டு ஏழைகளுக்கு உதவி செய்பவராகவும், பறிப்போன உரிமைகளைப் பெற்றுத் தருபவராகவும், அதற்காக போராடும் போராளியாகவும் அவர் இருந்தார்.

நபிகளாரின் வாழ்வை அறிவு மற்றும் உண்மை என்னும் அழகான ஆபரணங்களால் அழகுப்படுத்தி வைத்தான் இறைவன். அவர்களின் வாழ்க்கை ஒழுக்கதின் சிகரமாக விளங்கியது. அன்பாலும், இரக்கத்தாலும் நிரம்பி வழிந்தது. சக மனிதர்களின் துன்பத்துயரங்களைக் கண்டு உருகும் குணம் அவர்களது. அடுத்தவர்க்கு உதவி செய்ய ஓடோடும் பரோபகாரி அவர்.

இந்த அருங்குணங்களை முன்வைத்துதான் நபிகளார் மக்கள் மனங்களை வெல்ல முடிந்தது என்று சாட்சியமளிக்கிறது திருக்குர்ஆன்: “நபியே, இறைவனின் மாபெரும் அருளினாலேயே நீர் இவர்களிடம் மென்மையாக நடந்து கொள்கிறீர். நீர் கடுகடுப்பானவராகவும், வன்னெஞ்சராகவும் இருந்திருந்தால், இவர்கள் எல்லோரும் உம்மை விட்டு விலகிப் போய் இருப்பார்கள்”

இந்த அருங்குணங்களின் வெளிப்பாடை உஹது என்னும் இடத்தில் நடந்த அதே பெயராலேயே இஸ்லாமிய வரலாற்றில் வழங்கப்படும் யுத்தத்தில் காணலாம்.  இந்த போரில் நபிகளாரை ஒழித்துவிட எல்லாவித முயற்சிகளையும் எதிரிகள் மேற்கொண்டனர். நபிகளாரின் தரப்பில் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதோடு அவரது உயிருக்கு பெரும் அறைக்கூவலாக இருந்த போர் அது.  எதிரிகளின் அம்பு நபிகளாரின் தலைக்கவசத்தைத் துளைத்து அவரது முன்பற்களில் சில உடைந்து போயின. கன்னங்களில் பெரும் காயம் ஏற்பட்டது.  இந்தத் தீரா துயர் கண்டு நபித்தோழர்களில் சிலர் எதிரிகளைச் சபிக்க நபிகளாரிடம் வேண்டி நின்றார்கள். ஆனால், மனிதர்களின் மீது அளவற்ற பேரன்பு கொண்ட நபிகளாரோ, ”என் சமூகத்தார் என்ன செய்கிறார்கள் என்று அறியாமல் செய்கிறார்கள்; இவர்களை நல்வழிப்படுத்துவாய் இறைவா!”  - என்று இறைவனிடம் இறைஞ்சி நின்றார்.

இப்படி இரக்கமே பிரதானம் என்பதை நபிகளாரால் போதிக்கப்பட்ட இஸ்லாம் முஸ்லிம்களுக்கு கட்டளையிடுகிறது. இதனை அவர்களின் இறைநம்பிக்கையின் ஒரு அளவுகோலகவும் நிர்ணயிக்கிறது. 

”பூமியில் உள்ளோர் மீது இரக்கம் கொள்ளுங்கள். வானத்தில் இருப்பவன் உங்கள் மீது இரக்கம் காட்டுவான்” - என்கிறார் நபிகளார். இரக்கம் காட்டுவது என்பது சக மனிதர்களிடம் மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றியிருக்கும் எல்லா உயிரிகளுக்கும் பொதுவானதாக சுட்டுகிறார்.

”இறைவன் பூமியையும், வானங்களையும் படைத்தபோது, அவன் நூறு கருணைகளையும் சேர்த்தே படைத்தான். அந்த ஒவ்வொரு கருணையின் விசாலமும், வானம்-பூமி இவற்றுக்கு இடைப்பட்ட தூர அளவிலானது. இதன் ஒரு தன்மையைத்தான் அவன் பூமிக்கு அனுப்பி வைத்தான். அதனால்தான் ஒரு தாய் தன் குழந்தையிடம் பேரன்பு கொள்கிறாள். விலங்குகளும், பறவைகளும் தங்களுக்குள் இரக்கம் காட்டிக் கொள்கின்றன” – என்கிறார் நபிகளார்.

அனுபங்களால் அறிவு விசாலமடைவதுபோலவே, பல்வேறு நிலைகளில் மனிதனின் கருணையும் வளர்ந்து பற்றிப் படர்கிறது. இத்தகைய கருணையை அழிக்க அனுமதிப்பது அந்த மனிதனை நரகிற்கு வழிநடத்தும் பாதையாகிவிடும்.  http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article9692432.ece



அன்பு சகோதர, சகோதரிகளே!

1980-களின் பிற்பகுதியில், சிவப்பு சித்தாந்தங்களிலிருந்து விலகி இஸ்லாமிய கொள்கை, கோட்பாடுகளில் மனம் லயித்து, அற்புதமான அந்த வாழ்வியலை தாங்கி திரிந்த வேளையில் சாமரம் வீசி வரவேற்றார்கள் என்றா எண்ணுகிறீர்கள்? கடும் எதிர்ப்புகளை எல்லாம் சமாளிக்க வேண்டியிருந்தது என்பது வியப்புக்குரியது அல்லவா? அதிலும் சொந்த சமூகத்து உறுப்பினர்கள் தந்த துன்பத்துயரங்களுக்கு ஒரு எல்லையில்லாமல் போனது என்பது எவ்வளவு துரதிஷ்டவசமானது.

வழிகேடர்கள் என்று சிலர் அழைக்க, இன்னும் சிலர் ஷியாக்கள் என்றார்கள். இன்னும் சிலரோ காதியானிக்கள் என்றெல்லாம் அழைத்தார்கள்.

பள்ளிவாசல்களில் திருக்குா்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பை வாசிக்கவிடவில்லை. திருநபிகளாரின் பொன்மொழிகளை பகிர அனுமதிக்கவில்லை. பிறந்து வளர்ந்த ஊரில் இந்த நிலை என்றால், அண்டை பகுதிகளில் ஜும்ஆ உரையாற்ற அழைத்துவிட்டு அதற்கான தயாரிப்போடு, நிறுவனத்தில் விடுமுறை விண்ணப்பித்துவிட்டு சம்பந்தப்பட்ட பள்ளிவாசலுக்கு சென்றால், நம்மை பேசவிடாமல் அவமதித்து அனுப்பிய நிகழ்வுகள், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகளை அறிமுகப்படுத்த பள்ளிதோறும் சுமந்து சென்றால், அவற்றை தொட்டு பார்க்கவும் மறுத்ததோடு, அடித்துவிரட்டாத குறையாக ஊர் எல்லைவரை கூடவே வந்து வெளியேற்றிய சம்பவங்கள்.

பள்ளிவாசல் நிர்வாகத்தில் தலையிடுவதாக கூறி பகிரங்கமாகவே பள்ளிவாசலின் அறிவிப்பு பலகையில், இவர்கள் தீவிரவாதிகள் நிர்வாகத்தில் பங்கேற்க எவ்வகையிலும் அனுமதியில்லை என்று நிர்வாகக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அறிவிப்புகள். ஒரு கட்டத்தில் பள்ளிவாசல் லெட்டர் பேடில் தீவிரவாதிகள் என்று எழுதி காவல்துறை, உளவுதுறைக்கு அளிக்கப்பட்ட புகார்கள் என்று பல்வேறு கசப்பான அனுபவங்களின் நிகழ்வுகள்.

அடித்து விரட்ட மிரட்டல்கள், ரவுடிகளின் உதவி தேடல்கள், தாக்குவதற்காக பள்ளி வளாகத்துக்குள்ளேயே உடைக்கப்பட்ட டியூப் லைட்டுகள் என்று அத்தனை அராஜங்களும் தலைவிரித்தாடிய வேளை அது.

இவற்றை நிகழ்த்தியவர்கள் எல்லாம் இஸ்லாம் தெரியாதவர்கள் அல்ல. சமூக சீர்த்திருத்தவாதிகள், சமுதாய அரசியல் பணிகளில் ஈடுபட்டவர்கள் என்று எல்லா குழுவினரும் எங்களுக்கு எதிராக அணிதிரண்டிந்த காலமது.

சரி… இவ்வளவு அராஜகங்கள், அக்கிரமங்கள் அரங்கேறிய வேளையில் இதற்கான எதிர்வினையாக செய்தது என்ன? என்ற கேள்வி உங்களுக்குள் எழுவதை உணர முடிகிறது.

இறைவனின் பெரும் கிருபை..! இந்த பிரச்னைகளை சமாளிக்க.. இதைவிட இன்னும் அதிகளவு பிரச்னைகளை சமாளிக்க எங்களுக்கு எங்கள் தலைவர்கள் திருக்குா்ஆன், திருநபிகளாரின் வழிமுறைகளிலிருந்து அழகிய பயிற்சி அளித்திருந்தார்கள்.

•    தீமையை மிகச்சிறந்த நன்மையைக் கொண்டு தடுத்துக் கொள்ளல், நன்மையும், தீமையும் ஒருகாலும் சமமாக மாட்டா.
•    நெருப்பை நீரூற்றிதான் அணைக்க வேண்டும். பதிலுக்கு தீ வைப்பதல்ல.
•    திருக்குா்ஆன், திருநபிகளாரின் பொன்மொழிகளை பள்ளிவாசலுக்குள் ஓத அனுமதிக்காவிட்டால்.. பள்ளியின் வளாகத்தில் அமர்ந்து அந்தப் பணியாற்றுங்கள். அங்கும் அனுமதி மறுக்கப்பட்டால் வளாகத்தின் வெளிக்கதவருகே அமர்ந்து கொண்டு உங்கள் பணிகளைத்  தொடருங்கள். அங்கும் அனுமதிக்காவிட்டால் வளாகத்துக்கு வெளியே சாலையில் அமர்ந்து அந்தப் பணியாற்றுங்கள்.
•    அமைதியை கடைப்பிடியுங்கள்.
•    வன்முறை ஒருகாலும் பிரச்னைக்கு தீர்வளிப்பதில்லை.

மௌலான குத்புத்தீன் பாகவியிலிருந்து, மௌலானா அப்துல் ஹபீஸ் ரஹ்மானி, மூதறிஞர் ஜமீல் அஹமது , பேராசிரியர் இஹ்ஜாஸ் அஸ்லம் வரை ஒரே மாதிரியான வழிகாட்டுதல்கள்.

இந்த வழிகாட்டுதல்கள் எல்லாம்

”ஒரு கையில் சந்திரனையும், மறு கையில் சூரியனைக் கொடுத்தாலும் தமது பணிகளிலிருந்து பின்வாங்க போவதில்லை!” – என்று முழங்கிய நபிகளாரின் ஆளுமைப் பண்புகளை நோக்கியே எங்களை நகர்த்தியது.

தூக்க முடியாத சுமைகளோடு சமூகப் பணிகளை ஓரிருவர் செய்து கொண்டிருந்த நிலையில் மூன்றாம் நபர் அந்தப் பணிகளுக்காக களத்தில் இறங்கிய வேளையில் இவர்கள் உண்மையிலேயே மகிழ்ந்திருக்க வேண்டும். தனது பணிகளை பங்கிட்டு கொள்வதற்காக மற்றோர் ஆள் கிடைத்த மகிழ்ச்சியில் இணைந்திருக்க வேண்டும். ஆனால், இதற்கு நேர்மாறாகவே அனைத்தும் நடந்தன.

•    சீரான வழிகாட்டுதல்களும்,
•    அதற்கேற்ப அளிக்கப்பட்ட ஒழுக்கப் பயிற்சிகளும்,
•    இஸ்லாம் குறித்து ஆழமான புரிதலும்,
•    நம்மீது சுமத்தப்பட்ட பொறுப்புகளும்,
•    ஆழ்ந்த நூல் வாசிப்புமாய் வளர்ந்த ஆளுமையும்,
•    இவை எல்லாவற்றுக்கும் முதன்மையாய் இறைவனின் பேரருளும் இணைந்து,

சேர்க்க மறுத்த அதே பள்ளியின் நிர்வாகிகளாய் தொடர்ந்து மக்களால் தேர்வு செய்யப்படும் நிலைமையைத் தந்தது.

சகோதர இயக்கங்கள் அவரவர் பணிகளைத் தடையின்றி செய்ய பெருந்தன்மையை வளர்த்தது.

இது நிகழ்காலம்.

சகோதர, சகோதரிகளே! எனதருமை தோழர், தோழியரே..!

இந்தப் புரிதலும், இணக்கமும், நம் மீது இயல்பாகவே சுமத்தப்பட்டுள்ள பொறுப்புகளும், நம் சொந்த நாட்டில் நமது சொந்த மக்களுக்கு அரியணையில் அமர்த்தப்பட்ட அரசியல் அதிகாரத்தால் நிகழ்காலத்தில் இழைக்கப்பட்டுவரும் அநீதிகளும் நம்மை ஒன்றிணைத்தாக வேண்டும். இதில் நாம் காட்டும் பலவீனங்கள் நம்மை இறைவனின் வெறுப்புக்கு ஆளாக்கிவிடும். நரக நெருப்பை நோக்கி நகர்த்திவிடும். (இறைவன் இத்தகைய இழிநிலையிலிருந்து நம்மைக் காப்பானாக!)

நபிகளார் சுவனம் மற்றும் நரகவாசிகளைப் பற்றி தமது தோழர்களுடன் உரையாடி கொண்டிருந்தார். சுவனவாசிகளின் பண்புகள் குறித்து சொல்லும்போது இப்படிச் சொன்னார்:

“தோழர்களே, சுவனத்திற்கு சொந்தமானவர்கள் மூன்று வகைப்படுவார்கள். அவர்களில் முதலாம் பிரிவினர், தங்கள் பரஸ்பர விவகாரங்களில் மிகவும் நீதியுடனும், நடுநிலையுடனும் நடந்துகொண்டவர்கள். வள்ளல் தன்மையும், நற்செயல்களையும் மக்களிடையே பரப்பியவர்கள். அத்துடன் தமது நடவடிக்கைகளில் மென்மையாகவும், நேர்மையுடனும் நடந்து கொண்டவர்கள்.

இரண்டாம் பிரிவினர், மிகவும் தயாள குணம் மிக்கவர்கள். அவர்கள் தங்களின் உற்றார், உறவினரிடையே இளகிய மனதுடனும், சக மனிதர்களுடன் தாராளத் தன்மையுடனும் நடந்து கொண்டவர்கள். மூன்றாம் பிரிவினரோ, மனைவி, மக்கள் குடும்ப நெருக்கடிகள், வாழ்வியல் தள்ளாட்டங்கள் இவை அனைத்தையும் தாங்கியவர்கள். தடுக்கப்பட்டவற்றிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொண்டு வாழ்ந்தவர்கள்.”

சுவனவாசிகளை அடையாளப்படுத்திய கையோடு நபிகளார் நரகவாசிகள் பற்றியும் சொல்லலானார்:

“நரகவாசி நேர்மையின்மையை மட்டுமே தனது அடையாளமாக்கிக் கொண்டவன். அதைப் பின்பற்றுவதையே வாடிக்கையாகக் கொண்டவன். அவனது பேராசை, யாரும் அடையாளம் காண முடியாத அளவு மறைவாக இருக்கும். ஆனால், தொடர்ந்து அடுத்தவரின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டே இருப்பான். கஞ்சத்தனம் மிகைத்திருக்கும். ஆபாச உரையாடல்களில் திளைத்திருப்பான். இங்கிதமற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவான்” என்று நபிகளார் நரகவாசிகள் குறித்து ஒரு நீண்ட பட்டியலிட்டார்.

மனித வாழ்வில் எதிர்ப்படும் இன்னல்கள் எல்லையற்றவை. சூழ்நிலைகள் மனிதனை வசப்படுத்த முனைபவை. அவற்றில் சிக்கிக் கொண்டாலோ கேவலமான வாழ்க்கையில் அவனை வீழ்த்திவிடும். இந்தப் புறச் சூழல்கள் மனிதனை விரக்தியின் விளிம்பில் தள்ளி அவனது பிற செயல்கள் அனைத்தையும் முடக்கிவிடும். அன்றாட வாழ்க்கையை பாதித்துவிடும்.

இறை நம்பிக்கையாளன் அச்சமற்றிருக்க வேண்டும் இத்தககைய சூழல்கள் ஓர் இறை நம்பிக்கையாளனைப் பற்றிப் படரும்போது, அவன் அச்சமற்றிருக்க வேண்டும் என்பதோடு அவற்றைத் துணிவுடன் எதிர்த்து நிற்க வேண்டியதும் இன்றியமையாதது. அந்தத் தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து தனது இலக்கை நோக்கி நகர்வது முக்கியமானது.

புறச் சூழல்களின் தாக்கம் அதிகமாகும் போதெல்லாம் நபிகளார் இறைவனிடம் பாதுகாவல் தேடுவது வழக்கம். இரண்டு கரங்களையேந்தி இப்படி இறைஞ்சுவதும் நபிகளாரின் பழக்கமாகவும் இருந்தது.

“இறைவா! துன்ப துயரங்களிலிருந்து நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். விரக்தியிலிருந்தும், சோம்பலிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். கோழைத்தனத்திலிருந்தும், கஞ்சத்தனத்திலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். கொடுங்கோலர்களின் கொடுமைகளிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்!”

பொறுமை, தன்னம்பிக்கை என்னும் விண்கலங்கள் மூலமாகவேதான் நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்துக்கு மனிதன் கடந்தாக வேண்டும். இந்த மந்திரம் கற்றுக்கொண்டவர்கள் வாழ்வியல் போராட்டங்களைச் சமாளிக்கத் தெரிந்தவராவர். தோல்விகளைக் கண்டு துவளாமல் வெற்றி இலக்கை எட்டுபவராவர். தன்னைப் படைத்தவனற்றி வேறு எவருக்கும் சிரம் பணியாதவராவர். http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article9529131.ece

வஸ்ஸலாம்.

என்றென்றும் உங்கள் நலன்நாடும

உங்கள் சகோதரன்,

இக்வான் அமீர்
(மூத்த இதழியலாளர்)

Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive