NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Tuesday, July 31, 2018

எழுந்து வாரும் எம் தலைவரே..!


“உயிருடனிருந்தபோது பூரண நிலவாய் தகதகத்தது போலவே, இப்போதும் நான் உங்களைக் காண்கிறேன் எனதருமைத் தோழரே!"~இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''''''''
“தொழுகை.. தொழுகை.. தொழுகை..பணியாட்கள்… பணியாட்கள்.. பணியாட்கள்.. பெண்கள்.. பெண்கள்.. பெண்கள்..”

நேரம் செல்ல.. செல்ல கனக்க ஆரம்பித்தது அந்த பொன்னுடல்.

மூச்சுவிட மிகவும் சிரமமான அந்நிலையிலும், தொழுகையை அதற்குரிய பேணுதலுடன் நிறைவேற்றும்படியும், பணியாட்களின் உரிமைகளைப் பேணும்படியும், பெண்ணுரிமைகளை அளித்து அவர்களைப் போற்றும்படியும் வார்த்தைகள் உதிர்கின்றன.

கடைசியான அந்த தருணம் வரவும் செய்தது.

“உயரிய தோழனான இறைவனிடமே மீள்கிறேன்!”

– என்று மும்முறை அசைந்த அதரங்கள் அதன்பின் மௌனமாயின.

பேரருள் சுமந்துவந்த கண்கள் காரிருளில் கரைந்தன.

நபிகளாரை தமது மடியில் சுமந்திருந்த அன்னை ஆயிஷாவின் விழிகள் அருவியாயின.

இறைவனின் திருத்தூதர் காலமான செய்தி மதீனா பெருநகரெங்கும் நொடியில் எரிதழலாய் பற்றிப் படரியது.

நம்பியும், நம்ப முடியாமலும் திகைத்துப் போன அந்த தோழமை உள்ளங்கள் “எழுந்து வாரும் எமதருமைத் தலைவரே..!” என்று நெஞ்சம் ஓலமிட பதறி அடித்துக் கொண்டு அன்னை ஆயிஷாவின் இல்லம் நோக்கி விரைந்தன.

நபித்தோழர் உமர் அவர்களோ, வாளை உருவிக் கொண்டார். “இறைவனின் தூதர் காலமானார் என்றுரைப்போரின் தலையைத் துண்டிப்பேன்!” - என்று பம்பரமாய் சுற்றிச் சுழல ஆரம்பித்தார்.

இது மக்கள் மத்தியில் இன்னும் குழப்பத்தை ஏற்படுத்த அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

இந்நிலையில் இறைத்தூதர் காலமானதை அறிந்து நேராக அருமை மகளார் அன்னை ஆயிஷாவின் இல்லத்தை நோக்கி விரைந்தார் தோழர் அபூபக்கர். நபிகளாரின் பொன் முகத்தை இமைக்காமல் நோக்கினார்.

“உயிருடனிருந்தபோது பூரண நிலவாய் தகதகத்தது போலவே, இப்போதும் நான் உங்களைக் காண்கிறேன் எனதருமைத் தோழரே! இறைவனின் திருத்தூதரே, “தாங்கள் மரணமுற்றது உண்மைதான்..!” – என்று கனத்த இதயத்துடன் கூறியவாறு நபிகளாரின் நெற்றியில் முத்தமிட்டார். துணியால் நபிகளாரின் திருமுகத்தை போர்த்திவிட்டு வீட்டைவிட்டு வெளியே வந்தார்.

வீட்டுக்கு வெளியே தமது தோழர் உமர் நபிகளாரின் பேரிழப்பை தாங்க இயலாமல் வாளை உருவிக் கொண்டு அங்கும், இங்குமாய் வேட்டைச் சிங்கமாய் நடந்து கொண்டிருப்பதைக் கண்டார். அவரை அமரும்படி கேட்டுக் கொண்டார். பிறகு மக்களிடம் சொன்னார்:

“மக்களே, நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள்; இறைவனின் திருத்தூதரை வணங்குபவர்கள் இங்கு யாராவது இருந்தால் அவர்கள் அறிந்து கொள்ளட்டும்.. நபிகளார் இறந்துவிட்டார். மாறாக, இறைவனை வணங்குபவர்கள் இருந்தால் அவர்கள் அறிந்து கொள்ளட்டும்… இறைவன் பிறப்பு, இறப்பு அற்றவன். அவன் மரணமில்லா நித்திய ஜீவன்..!”

– இந்த பிரகடனத்துக்கு பின் நபித்தோழர் அபூபக்கர் தொடர்ந்து உரையாற்றினார். மக்களின் இறைநம்பிக்கையை வலுப்படுத்தினார்.

நபித்தோழர் அபூபக்கரின் இந்த பிரகடனத்தைக் கேட்டு நபித்தோழர் உமர் வாளை வீசி எறிந்து அழுது புலம்பலானார்.

மதீனா பெருநகர் முழுவதும் கண்ணீர் சூழ்ந்து கொண்டது.

Share:

Wednesday, July 18, 2018

ஒரு தீயாய் எழு மகளே..!



மிகச் சுருக்கமாக சொல்லப்போனால், ஓர் ஆண் மகனுக்கு தாயான 34 வயதான கூட்டுக்குடும்பத்தில் வாழும், பெண்ணொருத்தி தனிக்குடித்தனம் போக விரும்புகிறார்.

அதற்கு கணவன் உடன்படவில்லை. மறுக்கிறார். அடிக்கவும் செய்கிறார்.

இத்தகைய சூழல்களில் கணவனை விட்டு பிரிந்துவிட நினைக்கிறார் மனைவி.

ஆனால், தானாக மணவிலக்கு பெற்றுக் கொண்டால் ஒன்றும் கிடைக்காது அதனால் கணவன் மணவிலக்கு அளித்தால் ஜீவனாம்சம் கிடைக்கும் என்ற நினைப்பில் இருக்கிறார் அவர். பிரிந்து சென்றால் மறுமணம் செய்துகொள்ள விருப்பமில்லை என்றும் சொல்லி தன்னிடம் ஆலோசனைக் கேட்டதாக  Nasrath S Rosy Nsr ஒரு https://www.facebook.com/rosyrascalring/posts/2041841332517129 பதிவிட்டிருந்தார்.

நேரிடையாக சொல்ல வேண்டுமென்றால்… பெண்ணுரிமைகள் சம்பந்தமான இந்த பதிவிற்கு பின்னூட்டமிட்டிருந்தவர்கள் அனைவரும் ஆண்கள்.

•    சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நல்ல மனநல மருத்துவரின் ஆலோசனை தேவை.
•    பொறுத்துக் கொள்ள சொல்லுங்கள்.
•    ஊர் சுற்ற நினைக்கும் பெண்ணுக்கு அறிவுரை சொல்லுங்கள்.
•    பேராசைப்பட வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள்

இப்படி தலையைப் பிய்த்துக் கொள்ள வைக்கும் ஏக அறிவுரைகள்

அவரவர் பார்வையில், கருத்துக்களும், அறிவுரைகளும் வரைந்திருந்தார்கள்.  ஒரு பெண்ணும் சம்பந்தப்பட்ட அந்த சகோதரியின் பிரச்னையை உள்வாங்கி, விவாதிக்க முன்வரவில்லை. 

இந்த மனோநிலை முகநூலில் மட்டுமல்ல. பொதுவிலும் இப்படிதான் நடைமுறையில் உள்ளது.

பெண்கள் சம்பந்தமாக பள்ளிவாசல்களுக்கு வரும் குடும்ப வழக்குகளை விசாரிக்க மிடுக்காய் அமரும் ஜமாஅத் நிர்வாகிகளில் ஒருவர்கூட பெண்களாய் இருப்பதில்லை.  விஷய ஞானமுள்ள ஒரு பெண்ணிடமும் அந்தப் பிரச்னை குறித்து ஜமாஅத் நிர்வாகிகள் விவாதிப்பதுமில்லை.

பிறகு அந்தப் பிரச்னைக்கு பெண்ணீய மனோநிலையில் எப்படி தீர்வு காண முடியும்? பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் எப்படி வழங்க முடியும்?

இதில், இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் குறித்து வானளாவிய சொற்பொழிவுகள் வேறு!

இந்த நடைமுறை சிக்கல்களோடு 14 நூற்றாண்டுகள் கடந்து இன்னும் தலை நிமிர்ந்து நிற்கிறது அருள் நபி கொணர்ந்த மார்க்கம்.

பெண்கள் தனிக்குடித்தனம் போக விரும்பினால்… அதற்கு ஏற்பாடு செய்வது கணவனின் கடமையா? இல்லையா?

இந்தக் கேள்விக்கு நேரிடையாக பதில் சொல்ல இந்த சமூகம் ஏன் மழுப்புகிறது?

ஒரே பேராத்மாவிலிருந்து வெளிப்பட்டவர்கள் ஆண், பெண் என்பது உண்மையானால், பொறுப்புகள், கடமைகள், உரிமைகள் என்ற வழிகாட்டுதல்களைத் தவிர இவர்களில் மேலானாவர், கீழானவர் என்ற பாகுபாடெல்லாம் எதற்கு? ஆணாதிக்கம் எதற்கு?


Share:

சனிக்கிழமைக்காரர்கள்

தான் வாழும் சமூகத்தில் தீமைகள் மிகைத்திடும்போது அல்லது நல்வழி தெரியாமல் மக்கள் தவிக்கும்போது, அவர்களை அச்சமூட்டி எச்சரிப்பதும், நல்வழிக்கான நேர்வழிப்படுத்துவதும் அந்த சமூகத்தில் வாழும் நல்லவர்களின் கடமையாகும் அதிலும் குறிப்பாக அறிவுஜீவிகளின் பொறுப்பாகும்.

இந்தக் கடமையுணர்வுக்கும், பொறுப்புணர்வுக்கும் அச்சுறுத்தல் தற்போது தமிழகத்தில் எழுந்துள்ளது. 'போராட்டங்களைத் தூண்டிவிடுவோர் கடுமையாக ஒடுக்கப்படுவர் என்று சட்டமன்றத்தில் நமது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளது விந்தையாக உள்ளது.

இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுத்துகளும் தனது இருத்தலுக்காக போராடதான் வேண்டியிருக்கிறது.. நமது உடல் உட்பட. போராட்டமில்லாத நேரம் மரணமின்றி வேறில்லை. அந்த மரணத்தின் ஜடமாய் தெரியும் உடலையும் புழு-பூச்சிகள் போராடி மக்க வைக்க வேண்டியுள்ளது என்பதையும் நாம் மறக்கக் கூடாது.

எட்டுமணி நேர வேலைக்காக போராடிதான் உரிமைகள்  பெற வேண்டியிருந்தது. நாட்டு விடுதலைக்காக வெள்ளையனுக்கு எதிராக மண்டையுடைந்தோர், நெஞ்சு துளைக்கப்பட்டோர், தூக்கு மேடை ஏறியோர் என்று இந்தியர்கள் செய்த தியாகம் விலை மதிப்பற்றதாய் விடுதலையானது!

நமது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று இத்தகைய ஆலோசனைகள் வழங்கிக் கொண்டிருப்போர் யார்? இந்த அணுகுமுறை எதிர்விளைவுகளை ஏற்படுத்தாதா? மக்களின் உரிமைகளைப் பறித்தலாகாதா? என்ற கேள்விகளும், கவலைகளும் தொற்றிக் கொள்கின்றன.

இந்த சந்தர்பத்தில் திருக்குர்ஆனின் 'சனிக்கிழமைக்காரர்கள்' என்று பிரசித்திப் பெற்று வழங்கப்படும் இந்த வரலாற்று சம்பவம் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று கருதி அதை பதிவிடுகிறேன். இந்த வரலாறு வெறும் மக்களின் மனோநிலையை மட்டும் பிரதிபலிப்பதல்ல.. ஆட்சியாளர்கள் உட்பட படிப்பினைத்தருவது.-இக்வான் அமீர்

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

கடற்கரையோரம் அமைந்திருந்த அந்த பட்டினத்தின் பெயர் அய்லா என்பதாகும். போக்குவரத்து முதலான எல்லா வசதிகளும் கொண்ட பெரு நகரம் அது.

மீன்பிடித்தல் முக்கியத் தொழிலாகக் கொண்ட அய்லாவாசிகள் நல்ல வசதியுடன் வாழ்ந்தார்கள். அறிஞர்களும், அறிவாளிகளும் சமுதாயத்தில் மிகைத்திருந்தார்கள். சனிக்கிழமை அவர்களுக்கு சிறப்பு நாளாக இருந்தது.

புனித சனிக்கிழமையில் இறைவழிப்பாடுகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். உலகப் பணிகளில் அறவே ஈடுபட கூடாது. வணிகம், வேளாண்மை, வேட்டை இவை அனைத்தும் தடுக்கப்பட்டிருந்தன. பணியாட்களிடம் வேலை வாங்கக் கூடாது. அடுப்பெரிக்கவும் கூடாது என்று கடுமையான சட்டங்களும் அமலில் இருந்தன. சட்டங்களை மீறுவோர் தண்டிக்கப்பட்டார்கள். தலைமுறை தலைமுறையாக இந்த சட்டங்கள் பேணப்பட்டும் வந்தன.

ஆனால், வாரந்தோறும் பெரும் சோதனையாக அந்த விந்தையான சம்பவம் தவறாமல் நடந்து வந்தது.

சனிக்கிழமை பொழுது விடிந்ததோ இல்லையோ கடல்மட்டத்தில், கரையோரம் மீன்கள் அலை அலையாய் திரண்டுவரும். ஆனால், சனிக்கிழமை பொழுது சாய்ந்ததும் நிலைமை தலைக்கீழாய் மாறிவிடும். ஒற்றை மீன்கூட தென்படாது.

வெள்ளிக்கிழமை மாலை கடற்கரையோரமாக பெரும் கால்வாய்களை வெட்டி அவற்றின் முனைகளில் ஆழமான பள்ளங்களை அமைப்பது. சனிக்கிழமை திரளாய் வரும் மீன்கள் கால்வாய்களின் வழியே பள்ளங்களில் வீழ்ந்துவிடும். அடுத்தநாள் மீன்களைப் பிடித்து கொள்ளை லாபம் சம்பாதிப்பது போன்ற சூழ்ச்சிகளில் எல்லாம் அவர்கள் ஈடுபடலானார்கள்.

“நாங்கள் என்ன சனிக்கிழமைகளிலா மீன் பிடித்தோம்? இறைவனின் கட்டளைகளையா மீறினோம்?” – என்று அப்பாவித்தனமாய் பதிலளித்து கேட்பவரை வாயடைக்க செய்வார்கள்.

காலம் செல்லச் செல்ல, அய்லாவாசிகளிடம், புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் புறக்கணிக்கப்பட்டது. சமூகத்தில் தீமைகள் அதிகரித்தன. இறைவழிபாடு பெரும் சுமையாகி, அது முதியவர்களுக்கு மட்டுமே என்றானது.

அய்லாவில் நல்லோர் சிலர் இருக்கவே செய்தார்கள். அவர்களும் இரு பிரிவினராக இருந்தார்கள்.

முதல் பிரிவினர், “இவர்கள் நாம் சொல்வதை கேட்கப் போவதில்லை. இவர்களை நம்மால் திருத்தவும் முடியாது. அதனால், நாம் மட்டும் இறைவனுக்கு அஞ்சி பயபக்தியுடன் வாழ்ந்தாலே போதுமானது” - என்ற சுயநல மனப்பான்மை கொண்டவர்கள்.

இரண்டாவது பிரிவினரோ, பயபக்தியுடன் வாழ்ந்ததோடு, தாங்கள் மட்டும் நல்லோராய் இருந்தால் போதாது. தங்கள் சமூகத்தாரும் நல்லோராய் வாழ வேண்டும் என்று பொதுநலத்தை விரும்பியவர்கள்.

ஆனால், நல்லவற்றை போதித்து, தீயவற்றை தடுக்க முயன்ற இந்தப் பிரிவினர் தீயோரின் கேலி, கிண்டலுக்கு ஆளானார்கள். சில சமயம் வன்முறையையும் இவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இத்தகைய சந்தர்பங்களில், நல்லவர்களில் முதல் பிரிவினர், “நாங்கள் சொன்னதை நீங்கள் கேட்டால்தானே? உங்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்!” - என்று கடிந்துரைத்தார்கள்.

அந்த நிலையிலும் நல்லோரில் இரண்டாம் பிரிவினர், “முடிந்தளவு நாங்கள் முயற்சிக்கிறோம். எங்கள் முயற்சிகளுக்கு இறைவன் சாட்சியாக இருக்கிறான்” - என்று பதில் தந்து தீமையைத் தடுக்கும் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவந்தார்கள்.

அய்லாவாசிகள் நல்லோராக வாழ விரும்பவில்லை. நல்லோர் சொல்லையும் கேட்கத் தயாராக இல்லை. தொடர்ந்து அவர்கள் தீமைகளிலேயே திளைத்து வந்தார்கள். அவர்களுக்கான இறுதி வாய்ப்பும் முடிந்தது. இறைவனின் கோபமும் அவர்களின் மீது இறங்கியது.

இந்தத் தண்டனையிலிருந்து நல்லோரில் முதல் பிரிவினரான ‘தானுண்டு தன் வேலையுண்டு!’ - என்றிருந்தவர்களும் தப்பவில்லை.

தாங்களும் நல்லோராக வாழ்ந்து பிறரையும் நல்லோராக்க முயன்று கொண்டிருந்த நல்லோரில் இரண்டாம் பிரிவினர் மட்டுமே உயிர் தப்பினர்.

‘அஸ்ஹாபுஸ் ஸப்த் – சனிக்கிழமைக்காரர்கள்’ என்றழைக்கப்படும் இந்த அய்லாவாசிகள் வரலாறு திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளது.


Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Pages

Labels