NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Thursday, July 16, 2020

நித்தம் வதைபடுவது யாரெனில்..

காலிலிருந்து பிறந்தவனோ..
காலால் உதைக்கிறீர்!
எப்போதும் ஒடுக்கப்பட்டவனோ..
அடித்து வதைக்கிறீர்!

ஜெயராஜ் - பென்னிக்ஸ்
இருவரையும் கொன்ற
அதே அதிகாரம்..
இதோ மத்தியபிரதேசத்தில்
மற்றொரு ரூபத்தில்..!

சோறு படைக்க நினைத்தது தவறோ
சேற்றில் இறங்கி உலகுக்கு
சோறு கிடைக்க நினைத்தது
கேடோ இங்கே!

தலைக்காய்ந்தவர்
வரிப்பணத்தில்
உயிர் வாழ்பவர்கள்
குண்டாந்தடி எடுத்து
அதிகார கொலைஞராய்
இதோ பார்த்தீரா இங்கே..!

இனி விசாரணைகள்
தொடரும்!
அதிகாரம் அரிதாரம்
பூசி நடிக்கும்!
மாண்பிழந்து போன
மனித உரிமைகளோ
இனி இழப்பதற்கு
ஒன்றுமில்லாமல்
நிர்வாணமாய் நிற்கும்!

மறதி நித்திரைக்குள்
ஜனநாயகம்
குறட்டை விடும்
கணபொழுதுக்குள்
அதோ அதிகார திமிர்
தடியை ஓங்கி
ஆர்ப்பரித்து நிற்கிறது
நாட்டின்
மற்றுமோர் மூலையில்
புதியதோர் பெயரில்..!

அந்தோ!
நித்தம் வதைபடுவது
ஒடுக்கப்படுபவன் மட்டுமே!
விண்ணதிர ஒலிப்பது
அவனது
அழுகை ஒலி மட்டுமே!

'''''''''''''''''''''''''''
இக்வான் அமீர்
''''''''''''''''''''
Share:

Tuesday, July 14, 2020

பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!



மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார்.  80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''''''  

"1983- ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தின் குண்டூரில் நான் வேலை செய்து கொண்டிருந்தபோது, விசாரணைக்காக காவலர்கள் என்னை அழைத்துச் சென்றனர். என்னைப் போன்றே மொழி தெரியாமல், ஆதரவில்லாமல் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 20-க்கும் மேற்பட்டோர் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டிருந்தனர். விசாரணை என்ற பெயரில் நாங்கள் அனைவரும் அடித்து உதைக்கப்பட்டோம். 
 
எலும்புகள் நொறுங்கும் அளவிற்கு அடி விழுந்தது. செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி எங்களை காவல்நிலையத்தில் சித்ரவதை செய்தனர். ஆனால், எவ்வளவு அடி வாங்கினாலும் ஒப்புக்கொள்ள கூடாது என்ற மனஉறுதியில் நான் இருந்தேன். 5 மாத சிறை தண்டனைக்குப் பிறகு நிரபராதி என நிரூபிக்கப்பட்டு தப்பித்து வந்தேன். 
 
சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், அவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்டவைதான். உடலுக்குள் லத்தியை விட்டு சித்ரவதை செய்து, உருக்குலைத்து, ரத்த கசிவு ஏற்படவைத்து உயிரிழக்கச் செய்துள்ளனர். அவ்வாறு செய்தால் உயிரிழந்து விடுவார்கள் என காவலர்களுக்கு தெரியாமல் இருக்குமா?" 
 
காவலர்களின் தாக்குதலில் இருந்து தப்பித்துவந்து பல வருடங்கள் ஆனாலும், என் கண் முன் நிகழும் எல்லா பிரச்சனைகளையும், நான் அங்கிருந்து தான் தொடங்குவேன். அந்தவகையில், சித்ரவதை நாட்களில் பென்னிக்ஸும் ஜெயராஜும் அனுபவித்த வலியை என்னால் உணர முடிந்தது. அடிவாங்கி உயிரிழந்த பென்னிக்ஸும் ஜெயராஜும் நான் தான் என தோன்றியது. அவர்கள் மீது விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலாகவே நான் கருதுகிறேன்." 
 
காயங்கள் வெளியே தெரியாத வகையில் தான் காவலர்களின் அடி இருக்கும். விதவிதமாக சித்ரவதை செய்து வலி ஏற்படுத்துவார்கள். மருத்துவர்களில் எப்படி குறிப்பிட்ட சிகிச்சைக்கான நிபுணர்கள் இருப்பார்களோ, அதேபோல் விசாரணை என்ற பெயரில் சிக்கியவர்களை அடித்து உதைக்க கைதேர்ந்த காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். 
 
காவலர்களின் சித்ரவதையில் இருந்து மீண்டு வந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் ஏதாவது ஒரு உடல்நலக்குறைவு அல்லது பாதிப்போடு தான் உயிர் வாழ்வார்கள். உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்து சில ஆண்டுகளில் உயிரிழந்துவிடுவர். 
 
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் முக்கிய ஆதாரங்கள் அனைத்தும் சமூகவெளியில் பரவியதால் தான் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
 
முன்பெல்லாம் காவல்நிலையம் அல்லது சிறையில் மரணம் ஏற்பட்டால், அந்த தகவல் பொதுமக்களை சென்றடைய காவலர்களிடமிருந்து தான் தகவல்களை பெற வேண்டும், அதை பிரசுரிக்க செய்தி ஆசிரியரின் அனுமதி வேண்டும். 
 
ஆனால், இப்போது ஒரு தகவலை ஒரு சில நிமிடத்தில் உலக மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த முடிகிறது. பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மீது தொடுக்கப்பட்ட ரத்தவெறி தாக்குதலின் ஆதாரங்கள் அனைத்தும் நம் அனைவருக்கும் வந்து சேர்ந்தது. தொலைக்காட்சி ஊடகங்கள் இந்த பிரச்சனை குறித்து விவாதித்தன. 
 
காவல்துறையின் அதிகாரம் எளிய மக்களை எப்படி கொன்றது என்பதை அனைவரும் தெரிந்துகொண்டனர். இவ்வாறான தொலைத்தொடர்பு வசதி இல்லாததால், ஆதாரங்கள் வெளிவராமல் ஏராளமான மனித உயிர்கள் காவல்துறையின் அடக்குமுறையால் பலியாகியுள்ளன"

 (நன்றி: பிபிசி-தமிழ்)
Share:

Sunday, July 12, 2020

இயற்கையோடு இயைந்த இல்லம்



இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''' 
என் பெற்றோர், ரயில்வே பணி நிமித்தமாக 60 ஆண்டுகளுக்கு முன் ஆந்திராவிலிருந்து சென்னை எண்ணூருக்குப் புலம்பெயர்ந்து வந்தவர்கள். பல ஆண்டுகள் இந்த நகரத்தில் வசித்தாலும் அவர்களுக்கு என்று சொந்த இடம் இல்லாமல் வாழ்ந்து முடித்தவர்கள்.

சிறுவயதிலிருந்தே மரம், செடி-கொடிகள், வளர்ப்புப் பிராணிகள் என்று வளர்ந்துவிட்ட சூழலில் திருமணத்துக்குப் பிறகு ஒவ்வொரு வாடகை வீட்டிலும் பிரச்சினைதான். மாடியில் செடி வளர்க்கக் கூடாது. கோழி வளர்க்கக் கூடாது, நாய், பூனை வளர்க்கக் கூடாதுஎனக் கூடாதுகளால் நாடோடியானது எங்கள் வாழ்க்கை.

இந்நிலையில், 90-களில், எனது பால்ய சிநேகிதன் ராஜு சொந்தமாக மனை வாங்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தினான். எனக்கு அதில் உடன்பாடு இருந்தாலும் சொந்தமாக மனை வாங்கும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. ஆனால் என் தயக்கத்தைப் புரிந்துகொண்டு அவனே கைமாற்றாக, பணம் கொடுத்து மனை வாங்க உதவினான். அவன் கொடுத்த பணத்தில் 5 செண்ட் இடம் எங்களுக்குச் சொந்தமானது.

நமக்கு என்று ஓர் இடம் சொந்தமானதும் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா? வாடகை வீடுகளில் நிறைவேற்றிக்கொள்ள முடியாத என் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டேன். 5 சென்ட் முழுக்கத் தோட்டம் அமைக்க நினைத்து காய்கறிகளைப் பயிரிட்டேன். அதைச் செய்து முடித்ததும் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.

சுற்றியும் எட்டுத் தென்னைகளை நட்டுச் சில மாதங்கள் கழித்து அந்த இடத்தில் பேஸ்மெண்ட் போட்டுச் சுவர் எழுப்பி மேலே கூரையாய்த் தென்னங் கூரையை வேய்ந்து, அதன் பின் கல்நார் கூரை என்று கொஞ்சம் கொஞ்சமாக உருமாறலாயிற்று எனது மனித நேயக் குடில்’. இதுதான் என் இல்லத்தின் பெயரும்கூட!

தமிழகத்தின் தலைசிறந்த இனமான கோம்பை இன நாய்கள் முதல், காவல் நாய்களான ஜெர்மன் ஷெப்பர்ட், கிரேட் டேன் வரை வளர்த்தேன். இது மட்டுமல்லாது கோழிப் பண்ணை, வாத்துப் பண்ணை, வண்ண மீன் பண்ணைகளையும் வைத்துப் பராமரித்து வந்தேன். எல்லா ஜீவராசிகளும் கை கோத்து வளர்ந்தன.

சென்னை எண்ணூர் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் முழு நேரப் பணியாளனாக வேலை கிடைத்தது. குடும்பத்தின் மூத்தவனாக இருந்ததால் தங்கைகளின் திருமணங்களை நடத்திவைக்கும் பொறுப்பு எனக்கு இருந்தது. எங்கள் நிறுவனத்தின் வைப்புநிதியிலிருந்து பெற்ற கடன்தொகையில் தங்கைகளின் திருமணம் நடத்தியது போக மிச்சம் மீதி இருந்த தொகையில் ஓரளவு வீட்டைத் தளம் போட்டு முழுமையாக்கினோம்.

வீட்டின் தளத்தில் வெதர் புரூப்புக்காகப் பரப்பிய செங்கல் - சுண்ணாம்புக் கலவையின் மீது மாடித் தோட்டம் அமைக்கப்போய் சில ஆண்டுகளிலிலேயே மழைநீரும், செடிகளுக்கு ஊற்றிய நீரும் ஊறித் தரைத்தளத்தில் விரிசல் விடத் தொடங்கிவிட்டது.

மழை நேரத்தில் ஓலைக் குடிசை வீடு போல தளத்திலிருந்து ஆங்காங்கே மழை நீர் ஒழுகும் இடங்களில் நானும் எனது குடும்பத்தாரும் தட்டு, முட்டுச் சாமான்களை வைத்துச் சமாளிப்பது ஒருபக்கம் என்றால், மறுபக்கமோ வீட்டின் உள்துறை அமைச்சரான என் மனைவியிடமிருந்து, “மாடியில செடி வளர்க்காதீங்க... வளர்க்காதீங்கன்னு சொன்னா கேட்டாதானே..? வீடே நாசமாய்ப் போச்சு..!என்ற அர்ச்சனை கிடைக்கும்.

வாடகை வீடுகளில் ஏற்பட்ட அனுபவத்தைப் போலவே சொந்த வீட்டிலும் சங்கடமான நிலை தொடர்ந்தது. இச்சூழலில் பதவி உயர்வு, மூத்த அதிகாரி என்று உயர்ந்த ஒரு கட்டத்தில் பத்திரிகை ஆர்வத்திற்காக விருப்ப ஓய்வுபெற்றபோது கிடைத்த கணிசமான பணத்தை, வேறு எதிலும் முதலீடு செய்யத் தைரியமில்லை. வங்கியில் போட்டு வட்டியைச் சாப்பிடவும் முடியாத நிலை.

கடைசியில் ஒரு சொத்தாவது இருக்கட்டுமே என்று மேல் தளம் அமைக்கும் முயற்சியைத் தொடங்கினேன். மிக அழகிய முறையில் என் மருமகனும், இளைய மகளும் முன்னெடுத்துக் கட்டிய வீடு இறையருளாள் அற்புதமாய் அமைந்தது.

இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை.

அதேபோல, காய்த்து குலுங்கும் கொய்யா மரத்தையும், வெட்ட முடியாது என்று மறுத்ததால், வீட்டுக்குள்ளேயே காய்த்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது கொய்யா. கூடவே பசும் மேகமூட்டமாய் படர்ந்துள்ள சப்போட்டா மரம். வாழை, கிணற்றடியில் வளர்ந்து நிற்கும் புளியம் மரம் என்று ஒரு சிறுதோப்பு எனது குடில்.

சமீபத்தில் என்னைப் பார்க்க வந்திருந்த சன் டிவி காமிரா மேன் சலீமுடன்
மேல்தளத்துக்காக மாடியில் சுற்றுச் சுவர் எழுப்பும்போது தோட்டம் வைப்பதற்கு ஏதுவாக அந்தச் சுவருக்கு வடிகால் வசதியோடு தொட்டிகள் போன்ற வடிவமைப்போடு கட்டியாகிவிட்டது.

பெரிய திறமையாளர் என்று சொல்ல முடியாவிட்டாலும், சொன்னதைச் செய்யும் நல்ல மேஸ்திரி, அற்புதமான எலெக்ட்ரீஷியன், நல்ல இன்ட்டீரியர் டெக்ரேட்டர் என்று ஏகத்துக்கும் நல்லவர்கள் கிடைத்தார்கள்; திருஷ்டிக்கு ஒரு தச்சரைத் தவிர.

வீடு கட்டி முடிக்கப்பட்ட கையோடு வீட்டுக்குக் குடிபோனபோது, மேஸ்திரி, எலெக்ட்ரீஷியன், தச்சர் உட்பட ஆளாளுக்கு நாங்கள் தர வேண்டிய நிலுவைத் தொகை கணிசமான கடனாக நின்றது. அப்போது எங்கள் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அவகாசம் கொடுத்து திரும்பப் பெற்றுக் கொண்ட நல்லுள்ளங்களால்தான் நிமிர்ந்து நிற்கிறது எனது மனித நேயக்குடில்.

(29 Nov 2014 அன்றைய தி இந்து தமிழ் திசை, சொந்த வீடு இணைப்பில் வெளியான https://www.hindutamil.in/news/supplements/sontha-veedu/20984-.html என் வீடு சம்பந்தமான கட்டுரை இது. அப்போதுதான் கட்டப்பட்டிருந்த வீடானாதால் உடனே மாடி தோட்டம் அமைக்க முடியவில்லை)


Share:

Saturday, July 11, 2020

காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?



ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

பால் வடியும்வரை நிழலான பகுதியில் வைத்து ஓரிரு நாள் கழித்து நடுங்கள்.

பொடி கற்கள், ஆற்று மணல், சிறிதளவு தோட்ட மண், கிடைத்தால் அடுப்பு கரி இவற்றை கலந்து நல்ல வடிகால் வசதியோடு கூடிய ஒரு மண் கலவையை தயார் செய்து நடுங்கள்.

அப்படி நடும்போது, மண்ணில் ஈரமிருந்தால் அதுவே போதுமானது.

அதனால், தண்ணீர் ஊற்ற வேண்டாம்.

நல்ல வெய்யிலில் வைத்து விடுங்கள்.

துளிர்விடும்வரை அதிக மழை விழாமல் பார்த்து கொள்ளுங்கள்.

கள்ளி செடிகளுக்கு அதிக தண்ணீர் ஆபத்தாகிவிடும்.
Share:

Friday, July 10, 2020

புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை


நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியா நேபாள அரசின் செய்தி தொடர்பாளர் யூபா ராஜ் காத்திவாடா, "ஊடகங்கள் மீது தடை விதிக்க அரசு விரும்பவில்லை என்றும், ஆனால் ஊடகங்கள் ஒழுக்கமுடன் நடந்து கொள்ள வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்!” - என தெரிவித்தார்.

எந்த ஒரு ஊடகத்தின் பெயரையும் குறிப்பிடாமல், சில இந்திய ஊடகங்கள் நேபாளம் குறித்து எதிர்மறையான செய்தி வெளியிடுவது குறித்து குறிப்பிட்ட அவர், "நேபாள மக்களின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் பெருமையை வெளிநாட்டு ஊடகங்கள் கெடுப்பதை இந்த அரசு விரும்பவில்லை" என தெரிவித்தார்.

மேலும் அவர், “இது போன்ற செய்திகள் வெளியிடுவது தொடர்ந்தால் கடும் அரசியல் மற்றும் ராஜீய நடவடிக்கைகள் எடுக்க நேரிடும் என எச்சரித்தார்.
Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive