NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Friday, May 27, 2016

இக்வான் காமெடி: அம்மா..! அம்மா.. நீ எங்கேயம்மா..?



"நீங்க இப்படி ஏதாவது செய்வீங்கண்ணு தெரியும்மா... மொத்த பயன்பாட்டுலே 100 யூனிட் கழிச்சு கணக்கு போட்டாதான் எங்களுக்கு லாபம். நீங்க இப்ப போட்டிருக்கிற கணக்கு அரசியல் ஆதாயம்! இதுதான் உங்க அரசியல் சாமார்த்தியமம்மா!”
Share:

Thursday, May 26, 2016

இஸ்லாம் வாழ்வியல்:சாந்தி நிலவட்டும்



இறை நம்பிக்கையாளர்கள் பரஸ்பரம் தங்களுக்கிடையே அன்பையும், மகிழ்ச்சியையும் பரிமாறிக்கொள்ள ஒரு அழகிய வாழ்த்து மொழியை திருக்குர்ஆன் சொல்கிறது. இரண்டு உள்ளங்களின் பிணைப்புக்கான அழகிய பிரார்த்தனையான அதை ஒருவர் மற்றவரின் நலம்நாடிப் பிரார்த்திக்க வேண்டும். ஒருவர் “அஸ்ஸலாமு அலைக்கும்!”, அதாவது உங்கள் மீது சாந்தி நிலவட்டும் என்று கூற, அடுத்தவர் “வ அலைக்கும் சலாம்!”, உங்கள் மீதும் சாந்தி நிலவட்டும்! என்று பதிலாய்ச் செய்ய வேண்டிய பிராத்தனை அது.

“நீங்கள் இறை நம்பிக்கையாளராய் ஆகும்வரை சுவனம் புக மாட்டீர்கள். நீங்கள் உங்களிடையே அன்பு பாராட்டாதவரை இறைநம்பிக்கையாளராய் ஆக மாட்டீர்கள். நீங்கள் உங்களுக்கிடையே அன்பை அதிகரித்துக்கொள்ளும் வழிமுறையொன்றை நான் கற்றுத் தரட்டுமா? நீங்கள் உங்களுக்கிடையே சலாத்தைப் பரப்புங்கள்” என்று நபிகளார் அறிவுறுத்துகிறார்.

அஸ்ஸலாமு அலைக்கும் என்று ஒருவர் சொல்லும்போது, பதில் முகமனாய் சலாம் கூறுபவரும் இத்தனை உட்பொருளையும் உள்வாங்கி பதிலளிக்கும்போது அன்பு, அமைதி, சாந்தியின் ஊற்றான இறைவனின் பேரருள் முதலில் சலாம் சொன்னவர் மீதும் பொழிகிறது.

இறைவனின் திருநாமங்களில் ஒன்றான அஸ்ஸலாமை அதிகதிகமாகப் பரப்பும்படி நபிகளார் அறிவுறுத்துகிறார்: “அஸ்ஸலாம் இறைவனின் திருநாமங்களில் ஒன்று. பூமியில் வசிப்போருக்காக அதை இறைவன் தேர்ந்தெடுத்துக்கொண்டான். அதனால், சலாத்தை அதிகம் பரப்புங்கள்!”

இறை நம்பிக்கையாளர்களின் உயிர் பறிக்கும் அந்த இறுதி தருணத்தில் வானவர்கள் சலாம் எனப்படும் இந்த வாழ்த்துரையைத்தான் கூறுவார்கள் என்கிறது திருக்குர்ஆன். அதேபோல, சுவனவாசல்களில் இந்த வாழ்த்துரையோடுதான் சுவனவாசிகள் வரவேற்கப்படுவார்கள். சுவனத்தின் எட்டுத் திக்கிலும் சலாம்.. சலாம் என்ற வாழ்த்துரைதான் கேட்டவாறு இருக்கும் என்கிறது திருக்குா்ஆன்.


ஒருமுறை ஒருவர் நபிகளாரிடம் வந்து, “இறைவனின் திருத்தூதரே! “இஸ்லாத்தில் சிறந்த செயலொன்றை எனக்குக் கூறுங்கள்!” என்று கேட்டார்.

“ஏழைகளுக்கு உணவளிப்பதும், அவர் தெரிந்தவராக இருந்தாலும், தெரியாதவராக இருந்தாலும் அவருக்கு சலாம் கூறுவதும் மிகச் சிறந்த செயல்களாகும்!” என்று நபிகளார் அதற்கு பதிலளித்தார்.

நபித்தோழர் துஃபைல் தமது அனுபவம் ஒன்றைப் பகிர்ந்துகொள்கிறார்.

“நான் அப்துல்லாஹ் பின் உமர் (ஜனாதிபதி உமரின் மகன்) அவர்களின் அவைக்கு அடிக்கடி செல்வேன். அவருடன் சேர்ந்து கடைவீதிக்கும் செல்வேன். அப்படிச் செல்லும்போது, எங்களைக் கடந்து செல்லும் ஒவ்வொருவருக்கும் அப்துல்லாஹ் பின் உமர், சலாம் சொல்வார். அவர் சாதாரண மனிதராக இருந்தாலும் சரி, ஒரு வணிகராக இருந்தாலும சரி அல்லது ஏழைபாழையாக இருந்தாலும் சரியே!


ஒருநாள் நான் அவருடைய அவைக்குச் சென்றிருந்தேன். வழக்கம்போல கடைவீதிக்குச் செல்ல என்னை அப்துல்லாஹ் பின் உமர் அழைத்தார். எனது நீண்ட நாள் சந்தேகம் ஒன்றை அப்போது கேட்கும் வாய்ப்பாக அதைப் பயன்படுத்திக்கொண்டேன். “நண்பரே! கடைவீதிக்குச் செல்லும் நீங்கள் எதையும் வாங்குவதில்லை! எந்தப் பொருளின் விலையையும் கேட்பதுமில்லை! அங்குள்ள மக்களோடு அமர்ந்து உரையாடுவதுமில்லை. பிறகு எதற்குதான் கடைவீதிக்கு செல்கிறீர்கள்?”

“நாம் கடைவீதிக்கு வரும் மக்களுக்கு சலாம் சொல்லத்தான் செல்கிறோம் நண்பரே.. வாருங்கள் போகலாம்!” என்று புன்னகையுடன் அப்துல்லாஹ் பின் உமர் என்னை அழைத்துச் சென்றார்.

‘சலாம் சொல்வதில் கஞ்சனாய் இருக்க வேண்டாம்!’ என்று மற்றொரு நபித் தோழர் அபூஹுரைராஹ் அறிவுறுத்துகிறார்.

“சலாம் சொல்வதில் முந்திக் கொள்பரே இறைவனின் நெருக்கத்திற்கு உரியவர் ஆவார்!” என்கிறார் நபிகளார்.

“சாந்தி நிலவட்டுமாக!”

(26.05.2016 அன்றைய தி இந்து, ஆனந்த ஜோதியில், பிரசுரமான எனது கட்டுரை) 

 
Share:

Thursday, May 19, 2016

இறைவன் அழைக்கின்றான்: விளையாட்டல்ல... வாழ்க்கை..!

 
இறைவன் பிரபஞ்சத்தை விளையாட்டுக்காக படைத்திருந்தால், ஆடுவதற்கான மிகச் சிறந்த பொருட்களை உருவாக்கி தானே ஆடியிருப்பான். பூமியில் அறிவும், உணர்வும் கொண்ட பொறுப்பு வாய்ந்த மனிதனை படைக்க வேண்டிய அவசியம்தான் என்ன? மனிதரிடையே சத்தியம், அசத்தியம் இவற்றுக்கான மோதல் நிகழ வேண்டிய தேவையும் இல்லையே! வெறும் பொழுதுபோக்கிற்காக நல்லடியார்களின் குழு ஒன்று துன்ப, துயரங்களுக்கு ஆளாக வேண்டிய தேவையும்தான் என்ன? 
 
 
Share:

Monday, May 16, 2016

எனது கட்டுரைகள்: சிறப்புக் கட்டுரை: தமிழக தேர்தல்களும், பிரெஞ்சு மொட்டையும்...!




'''''''''''''''''''''''''''''''''
மே-2006 மனாருல் ஹுதா இதழில் நான் எழுதிய கட்டுரை இது. எனது 30 ஆண்டு கால எழுத்துப் பணிகளை எனது வலைப்பூவில் (http://ikhwanameer.blogspot.in/) தொகுத்து பதிவேற்றம் செய்யும்போது, தற்போதைய சூழலுக்கு பொருத்தமாக உள்ளதால் அந்தக் கட்டுரையை மீண்டும் பதிவேற்றம் செய்துள்ளேன். அன்றைய காலகட்டத்தில் பேசப்பட்ட கட்டுரை. புள்ளிவிவரங்களும் சம்பவங்களும் அன்றைய காலகட்டத்தைச் சேர்ந்தவை என்பதை நினைவில் வைத்து படிக்கவும்.  - இக்வான் அமீர்

““““““““““““““““““““““
அண்மையில், பத்திரிகையாளர் நண்பர் ஒருவர் தமிழக தேர்தல்களில் முஸ்லிம் அமைப்புகளின் நிலைபாடு குறித்து பெரிதும் வருத்தப்பட்டார். அதற்கு இணையான வருத்தம் ஏற்கனவே எனக்குள் இருந்தது. வருத்தப்பட்டு என்ன பயன்? பலவீனமானவர் குரல் யாரிடம் எடுபடும்?

முஸ்லிம் அமைப்புகள் சார்பாக அரசியல் ஆதரவு நிலபாடு என்பது ஒருவிதத்தில் சகஜமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், தனிநபர் விருப்பு – வெறுப்புகள் அந்த இயக்கங்களின் வழிமுறைகளாகும் போதுதான் சகிக்க முடியவில்லை. அதிலும், குறிப்பாக முஸ்லிம் அமைப்புகள் திராவிட இயக்கங்களின் அறிவிக்கப்படாத அதிகார பூர்வமான வழக்குரைஞர்களாக, கொள்கைப் பரப்பு செயலாளர்களாக மாறிபோனது பரிதாபம். வரலாற்றில் பதிந்துபோன கருப்புப் பக்கங்கள் இவை.

• சமுதாயத்தை வழிநடத்த தகுந்த தலைமையின்மை,
• தமிழகத்தில் நிலவிய சிறுபான்மை எதிர் சூழல்கள்
• இந்த வெற்றிடத்தை நிரப்ப கிடைத்த மக்கள் ஆதரவில் உருவாகிய வெகுஜன அமைப்பு. கடைசியில், அந்த அமைப்பும் தனிநபர் விருப்பு, வெறுப்புகளை தனது கொள்கைகளாக்கிக் கொண்டு பல பிரவுகளாக சிதறுண்டது என்று பல்வேறு அவலங்கள்.

நாள்தோறும் என் மின்னஞ்சல் பெட்டிக்குள் குவிகின்றன இந்த அமைப்புகளின் மட்டரகமான விமர்சனங்கள்.

தமிழகத்தில் மே, 8-ல், நடக்கவிருக்கும் தமிழக தேர்தல்களுக்காக திராவிட கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை விசித்திரமானது. அதிமுக 2001 தேர்தல்களில் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் விழாக் காலத்தில் வாக்குறுதிகள் வான்மழைப் பெய்யும் என்பது எல்லா கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் சாட்சி. அவற்றை நிச்சயம் நிறைவேற்றப் போவதில்லை என்று ஏக மனதாக அந்தக் கட்சிகள் தீர்மானித்தவை போல விடும் அறிக்கைகள் அவை!

1967-ல், திமுக ஒரு ரூபாய்க்கு மூன்று கிலோ அரிசி வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆட்சி பீடம் ஏறியதும், அதை மறுத்துவிட்டது. தற்போது ரேஷன் கடைகளுக்கு அரிசி விநியோகம் செய்ய அரசு, ஆண்டு தோறும் 15 கோடி ரூபாய் செலவிடுகிறது. இரண்டு ரூபாய்க்கு கிலோ அரிசி வழங்க ஆண்டுதோறும் 45 கோடி ரூபாய் சுமையைச் சுமக்க வேண்டியிருக்கும் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

கடந்த தேர்தல்களில் அதிமுக ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்படும் என்று அறிவித்ததற்கு தற்போது திமுக வீடுதோறும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி என்று அறிவித்துள்ளது.
அதிமுக ஆட்சியில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்குவது சம்பந்தமான 10 கோடி ஊழல் குற்றச்சாட்டால் கைதும், விடுதலைகளும், தண்டனைகளுமாய் தீர்ப்புகள் வெளியானது நினைவு கூரத்தக்கது.

திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் இடஒதுக்கீடு சம்பந்தமான வாக்குறுதியும் இதேபோன்றதுதான். ஒருவேளை இந்த கட்சிகளில் ஏதாவது ஒன்று அரியணை ஏறி இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற முயன்றாலும் நீதி மன்றங்கள் அதைத்தடுத்து நிறுத்தாது என்று திட்டவட்டமாக வாக்கறுதி அளிக்க முடியாது. ஏனென்றால்… ஆந்திரத்தில் நடந்தது இதுதான்!

இந்த அமைப்புகளுக்கான முஸ்லிம்களின் அமோக ஆதரவு தற்போது தவறாக பயன்படுத்தப்படுகிறது. இதுவும் தற்காலிகமானதுதான்! இதன் மற்றொரு பக்கம் கசப்பானது. பரிதாபமானது. முஸ்லிம்களின் சக்தி, சாமார்த்தியங்களை இளைய சக்தியை, பொருளாதாரத்தை, காலத்தை துஷ்பிரயோகம் செய்ததால், இறைவனின் திருச்சந்நிதியில் பதிலளிக்க வேண்டிய இருண்ட பக்கங்கள் அவை.

இஸ்லாத்தின் வருகையின் நோக்கம் வெறும் சீர்த்திருத்தங்கள் மட்டுமோ அல்லது அரசியல் கோஷங்கள் மட்டுமோ அல்ல. அது மனித வாழ்வை பரிபூரணமாக வடிவமைப்பது. மனித வாழ்வின் அனைத்துத்துறைகளையும் படைத்தவனின் கட்டளைகளுக்கு அடிபணிய வைப்பது.

நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் பொறுப்புகள் சுமத்தப்பட்ட இஸ்லாமிய சமூகத்தின் ஒரு குழு அழைப்பியல் பணிகளைத் தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்தப் பணி மறுமை நாள்வரை தொடர்ந்தவாறே இருக்கும்.

படைத்தவனுக்கு தன்னையும், அடிபணிய வைத்து சக மனிதரையும் அடிபணிய வைக்கும் மாபெரும் பணி அது. இந்தப் பணிக்காகவே இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டார்கள். அன்பு நபிகளார் தங்களின் வாழ்நாளிலேயே அந்தப் பணியை முழுமையாக்கினார்கள். அதைத் தொடரும்படி தங்களின் இறுதி ஹஜ் பேருரையில் அறிவுறுத்தினார்கள். இதைத்தான் நமது முன்னோர்களும் நிறைவேற்றினார்கள். அதன் விளைவாக நமக்கு எட்டியதுதான் இந்த பிரபஞ்ச வாழ்வியல் திட்டம், இஸ்லாம்.

இஸ்லாம் வெறும் சீர்த்திருத்த அமைப்பல்ல. வெறும் இட ஒதுக்கீடுகளுக்கான போராட்ட களமுமல்ல. அதேபோல, அடுத்த சித்தாந்தங்களின் தலைவர்களை தோளில் சுமந்து செல்லும் சிந்துபாத்துகளும் அல்ல முஸ்லிம்கள்!

இஸ்லாம் வெறும் வணக்க வழிபாடுகளின் தொகுப்பு மட்டும் அல்ல. அது படைத்தவனின் கட்டளையை முழுமையாக செயல்படுத்த வேண்டிய பரிபூரண சித்தாந்தம். இந்த பிரபஞ்சத்தின் ஒரு படைப்பான மனித இனத்திலும் இறைகட்டளைகள் செயல்படுத்தப்பட வேண்டிய அமைப்பு. ”லா இலாஹா இல்லல்லாஹ்!” – என்று முழங்கப்படும் கலிமாவின் முற்பகுதியில் இடம் பெறும் “இலாஹ்“ என்னும் சொல் வணக்கத்தை மட்டுமே குறிப்பதல்ல. இறைவனின் சட்டங்களையும் ஒருசேர குறிப்பது. படைத்தவன்தான் சங்களை அளிக்க வல்லவன் என்பதன் மற்றொரு செய்தியையும் உள்ளடக்கியது.

அழைப்பியலை உயிர் மூச்சாக கொள்ளாத இன்னும் எத்தனை அமைப்புகள் தமிழகத்தில் முளைத்தாலும் பெரும் மக்கள் சமுத்திர அமைப்புகளாய் அவை வளர்ந்தாலும், அந்த அமைப்புகளால் முஸ்லிம் சமூகம் தனது இலக்கை நோக்கி நகரவே முடியாது. ஐம்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகளில் இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. அப்படி என்றால் இருக்கும் அமைப்புகள் பயனற்றவையா? என்ற கேள்வி எழுவது சகஜம்.

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு இருக்கவே செய்யும். இது இறைவனின் படைப்பியல் நியதி. சில உரிமைகளுக்காக… சில முயற்சிகளின் விளைவுகள் பூரணமாகிவிடாது என்றுதான் சொல்ல வருகிறேன். இந்நிலையில், தற்போது செயல்படும் சிறிய, பெரிய முஸ்லிம் அமைப்புகள் ஒருங்கிணையாமல் ஒரே குரலில் உரத்து தங்கள் குரலை எழுப்பாமல் பிளவுபட்டு போனால் விளைவுகள் எப்படியிருக்கும் சிந்தித்துப் பாருங்கள்.

முழுமையான இஸ்லாமிய திருச் செய்தியால் சீர்திருந்திய முஸ்லிம்களின் கொள்கைப் பிடிப்பு எப்படியிருக்கும்? அது எப்படிப்பட்ட தியாகங்களை எல்லாம் எதிர்கொள்ளும்? நாம் எத்தகைய முஸ்லிம் ஆளுமைகளை வார்த்தெடுக்க வேண்டும்? இத்தகைய உயரிய ஆளுமைகளை ஒருங்கிணைத்து இயக்கமாக ஆம்… எக்காலத்துக்கும், இயங்கும் இயக்கமாக எப்படி மாற்றியமைக்க வேண்டும் என்பதை உணர்வு பூர்வமாக பேசும் பிரான்சு நாட்டில் நடந்த உண்மை சம்பவத்தை உங்கள் முன் வைக்கிறேன். தன்னுணர்வு என்னும் ஈகோவால் உந்தப்பட்டு சமுதாயத்தை சுயநலங்களுக்காகப் பலியிட நினைப்போருக்கு இதில் படிப்பினை இருக்கிறது.



”நான் பள்ளிக்குச் செல்லும் முன் கண்ணாடியில் என் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் என்னை அடையாளம் கண்டுகொள்ள திணறுவேன். அந்த நேரங்களில், ”ஏய்..! யார் இந்த மொட்டைத்தலை?” – என்று கூட என்னை அறியாமலேயே முணுமுணுப்பதும் உண்டு. உண்மையில் இந்த அனுபவம் கொடுமையானது!

நானும் என் குடும்பத்தாரும் பிரெஞ்சு முஸ்லிம்கள். ஏற்குறைய 5 மில்லியன் முஸ்லிம்கள் பிரான்சில் வசிக்கிறார்கள் அதாவது மொத்த மக்கள் தொகையில், சுமார் 10 விழுக்காடு. நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய சமயம் இஸ்லாம்.

எனது பெற்றோரின் பூர்வீகம் துருக்கி. ஆனால், அவர்கள் தங்களின் 15 வயதிலேயே அதாவது என் வயதிலேயே புலம் பெயர்ந்து பிரான்சுக்கு வந்துவிட்டார்கள். நானும் என்னுடைய ஐந்து சகோதரர்களும், கிழக்கு பிரான்சின் ஸ்டார்ஸ்பர்க் நகரத்தில்தான் பிறந்தோம். தற்போது இங்குதான் வசிக்கிறோம். வீட்டில் பிரெஞ்சு, துருக்கி முஸ்லிம் என்று பன்முக கலாச்சாரம் பின்பற்றப்படுகிறது. என் பெற்றோருடன் பிரெஞ்சு மொழியில்தான் நான் உரையாடுவேன். அம்மாவோடு மஸ்ஜித்துக்கு சென்று தொழுவேன். கோடை விடுமுறையில் துருக்கிக்குச் சுற்றலா செல்வோம். மொத்தத்தில் எங்கள் குடும்பம் ஆழ்ந்த சமயப்பற்றுள்ள குடும்பம். ஓர் இறைவனான அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டுள்ள குடும்பம்.

இஸ்லாத்தின் கொள்கையின்படி, பெண்களின் தலைமுடி வெளியில் தெரியாமல் மறைத்தாக வேண்டும். அந்நிய ஆடவர் கண்களுக்கு படாமல் மறைக்க வேண்டிய அழகுப் பொருள் அது. அதனால், நானும் எனது தாயாரும் வெளியில் செல்லும்போது, தலையை மறைக்கும் விதமாக ஸ்கார்ப் அணிந்துதான் செல்வோம். வீட்டில் அனுமதிக்கப்பட்ட நெருங்கிய உறவினர் முன் மட்டுமே அதை கழற்றுவோம்.

செப். 1, 2004 – ம், ஆண்டு எனது பள்ளி இறுதியாண்டில் பிரெஞ்சு முஸ்லிம்களின் வாழ்க்கை ஸ்தம்பித்துப் போனது. கல்விக்கூடங்களில் சமய சின்னங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நாள் அது. நான் அதுவரை அணிந்து வந்த ஸ்கார்ப் உட்பட இந்தத் தடை பொருந்தும்.

பிரான்சு மதசார்பின்மையைப் பின்பற்றும் நாடு. 1905-லிருந்து அரசையும், சர்ச்சையும் பிரித்து சட்டம் இயற்றப்பட்டது. எந்தவிதமான சமயத் திணிப்பும் இல்லாமல் அவரவர் சமய நம்பிக்கைகளின்படி வாழ ஒருவிதத்தில் நல்ல சட்டம் இது.

நாங்கள் யாரையும் கட்டாய மதமாற்றம் செய்வதோ அல்லது பிற சமயங்களைவிட எங்கள் சமயம் உயர்ந்தது என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதோ கிடையாது. எங்களை மிகச் சிறந்த மனிதர்களாக மாற்றிக் கொள்ளும் முயற்சிகளைத் தவிர நாங்கள் வேறொன்றும் செய்வதில்லை. அதனால், இந்தச் சட்டம் எங்களை பாதிக்கவில்லை என்றே சொல்லலாம்.

ஆனால், தற்போதைய புதிய சட்டமோ என் இதயத்தை சுக்கால் சுக்கலாக்கி விட்டது. இஸ்லாமிய மார்க்கமா? அல்லது கல்வியா? என்று இரண்டில் ஒன்றை தேர்வு செய்யும் நிர்பந்தத்துக்கு நான் தள்ளப்பட்டேன். எனது எதிர்காலம் பெருத்த கேள்வியாய் மாறி என்னை அச்சுறுத்தியது. திடீரென்று இந்தச் சட்டத்தை பிரெஞ்சு அரசு கொண்டு வரக் காரணம் என்ன என்று புரியவில்லை.

புதிய சட்டம் அமல்படுத்தப்பட்ட அந்த முதல் நாள் என் வாழ்வை நரகமாக்கிய நாள். பள்ளிக்கு புறப்பட ஆடைகள் அணிய கிட்ட தட்ட ஒரு மணி நேரத்துக்கும் அதிகமானது எனக்கு.

இனி நான் தலைக்கு ஸ்கார்ப் அணிய கூடாது. அதனால் தலையை மறைக்கும் விதமாக பாடகர்கள் அணிவது போல பெரிய அளவிலான தொப்பி ஒன்றை அணிந்து கொண்டேன். இருந்தும் என் சமய விதிகளை மீறும் உறுத்தல் உள்ளத்தை துளைத்தெடுத்தது. வேறு வழி தெரியவில்லை.

கடைசியில், பள்ளிக்குச் சென்றபோது, முதல்வரோ என் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவில்லை. என்னை வகுப்பறைக்குச் செல்லவிடாமல் தடுத்து தனி அறைக்கு அனுப்பிவிட்டார். புதிய சட்டப்படி இந்த ஆடைக்கு அனுமதி இல்லை என்றார்.

அடுத்த நாளும் இதேபோலதான் நடந்தது. நான் பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டேன். என் நிலையை யாரும் புரிந்துகொள்வதாய் இல்லை. என்னோடு இன்னும் சில முஸ்லிம் மாணவிகளுக்கும் இதுதான் நடந்தது. இன்னும் சிலர் பள்ளியைவிட்டே முற்றிலும் நின்று விட்டனர்.

நான் பள்ளிக்குச் செல்ல விரும்பினேன். அதேசமயம் என் சமயத்தின் கட்டளைகளுக்கும் அடிபணியாமல் என்னால் இருக்க முடியாது. என் தலைமுடியை அந்நியருக்கு காட்ட முடியாது. என்ன செய்வது? நான் முடிவெடுத்துவிட்டேன். அது கடினமான செயல்தான்! ஆனால், எனக்கு வேறு வழி தெரியவில்லை.

செப்.5.

நான் என்னுடைய அழகிய பழுப்பு நிற முடி முழுவதையும் மழித்துவிட்டேன். இப்போது மொட்டைத் தலையுடன் நான்.

தலைமுடியை மழித்துக் கொள்வது என் வாழ்நாளிலேயே கொடும் துயரச் சம்பவம். என் உருவத்தையே மாற்றிக் கொள்வதற்கு ஒப்பான நிகழ்வு அது.

நான் தனியாளாகவே தலைமுடியை மழித்துக் கொள்ள விரும்பினேன். ஆனால், முடியவில்லை. பின்னந் தலை முடியை மழிப்பது பெரும் சிரமமாக இருந்தது.

என்ன செய்வது என்று தெரியாமல் அடுப்பங்கரையைச் சுற்றி சுற்றி வந்தேன். கடைசியில் என் தாயாரின் உதவியை நாடுவது என்று தீர்மானித்தேன். என் அரைகுறை மொட்டைத் தலைக் கோலத்தைக் கண்டதும் என் தாயார் பதறிவிட்டார். பெரும் விம்லுடன் அவருக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. எனக்கு உதவ அவர் மறுத்துவிட்டார்.

இறுதியாக என் தந்தையார் கலங்கிய கண்களுடன் எனக்கு உதவ முன்வந்தார். என் முடிவு நிச்சயம் அவருக்கு வருத்தமளிக்கவே செய்யும். அதனால், என்னை மன்னித்துவிடும்படி அவரிடம் மெதுவாக சொன்னேன். என்னைக் கட்டியணைத்தவர் எனக்காக பிரார்த்தித்தவாறு எனக்கு உதவ முன்வந்தார்.

தலையை நான் மழித்துக் கொண்டாலும் தலைக்கு தொப்பியை அணிந்துதான் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தேன். எனக்குள் தன்னம்பிக்கை அதிகம் இருந்தாலும் எனது செயல் எனக்குள் பதட்டமளித்தது. ஒவ்வொரு நாளும் தனிமை அறையிலேயே நாட்களை கழிக்க வேண்டிவந்தது.

கடைசியில், ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மொட்டைத் தலையுடன் வகுப்பறையில் நுழைந்தேன்.

முதன்முறையாக என்னை மொட்டைத் தலையுடன் கண்ட மாணவர்கள் ஒரு கணம் திகைத்து விட்டார்கள். பிறகு ஆதரவாக கைத்தட்டி என்னை வரவேற்றார்கள். ஆனால், ஆசிரியர்களோ ஆடி போனார்கள். இது அவர்களுக்கு எதிர்மறை செயலாகவே பட்டது. மாறாக, தனது சமய நம்பிக்கைகளை காத்துக் கொள்ள ஓர் இளம் பெண் அரசாங்க சட்டங்களுக்கு அடிபணியும் அதே நேரத்தில் தனது இறைநம்பிக்கையைக் காத்துக் கொள்ளும் நிகழ்வாக அதைக் கருதவில்லை. என் நாட்டுக்கும், என் சமயத்துக்கும் அடிபணிந்த ஒரு பெண் என்பதில் எனக்கு இனம்புரியாத மகிழ்ச்சியே ஏற்பட்டது.

இங்கு ஒரு விஷயத்தை தெளிவாக வலியுறுத்தி சொல்ல விரும்புகின்றேன். என் பெற்றோர் எப்போதும் எனக்கு உறுதுணையாகவே இருக்கிறார்கள். இருப்பினும் இஸ்லாமிய ஆடை அமைப்பை அணிந்து கொள்ளும்படி அவர்கள் ஒரு நாளும் என்னை வற்புறுத்தியதே இல்லை. அதேபோல, மொட்டை அடித்துக் கொள்ளும் ஆலோசனையையும் அவர்கள் எனக்குத் தரவில்லை. எல்லாமே எனது சொந்த முடிவுகள்தான்!

என் தந்தையார் கார் ஓட்டுநராக பணிபுரிபவர். எனக்கு பிரான்சு மக்களிடையே ஏற்பட்டுவரும் மதிப்பச்சம் மிக்க செல்வாக்கு என் தந்தையாரின் முதலாளியை எரிச்சலுறச் செய்தது. அவர் என் தந்தையாரிடம் கடுமையாக நடந்து கொள்வதை அறிந்து நான் வருத்தமுற்றேன்.

என் பள்ளியில் பணிபுரியும் சில ஆசிரியர்கள் என் செயலால் கோபப்பட்டு ”இனி நீ ஒரு காலும் முக்காடு அணியும் வாய்ப்பே இல்லை. ஏனென்றால், பிரான்சில் இனி எந்த இடத்திலும் சமயச் சின்னங்களை அணியக் கூடாது என்ற சட்டம் வரத்தான் போகிறது. இனி நீ வாழ்நாள் முழுவதும் மொட்டைத் தலையுடன் அலைய வேண்டியதுதான்!” – என்று கோபத்தை கொட்டித் தீர்த்தார்கள்.

அவர்கள் சொல்வது தவறு என்பதை நிரூபிக்க நான் விரும்புகின்றேன். தலைக்கு அணியும் ஆடை என் கண்ணியம் சம்பந்தமானது. வெறும் ஒரு துண்டு துணி சம்பந்தப்பட்டது அல்ல. இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால்.. எனது உரிமை. ஆம்.. எனது ஆடை..! எனது உரிமை..!! எனது ஆடை அலங்காரத்தின் ஒரு பகுதி அது.

பொழுது புலர்ந்ததும், முதல் பணியாய் என் தலையை மறைத்துக் கொள்ள நான் தேர்ந்தெடுத்துள்ள ஆடை, சமூகத்தை பாதிக்காதவரை அந்த ஆடையை எப்படி அணிய வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியது நான்தான்!

எனது பள்ளிப் படிப்பு முடியும்வரை நான் மொட்டைத் தலையுடன்தான் இருப்பேன். வாரம் ஒருமுறை என்னுடைய பெற்றோரின் குளியலறையில் என் தலையை மழித்துக் கொள்கிறேன்.

இரண்டு வயதுடைய என் குட்டித் தம்பி ஹஸனுக்கு எனது மொட்டைத் தலை பிடிக்காது. ”அக்கா! நீ ரொம்பவும் அசிங்கமாக இருக்கே!” – என்பான் மழலை மொழியில். தொடர்ந்து, ”உன் முடியை பிடித்திழுத்து விளையாட முடியலே போ..!” – என்று சிணுங்குவான்.

யார் என்ன சொன்னாலும் கவலையில்லை. என் கொள்கைதான் எனக்கு முக்கியம்.


ஒரு பெண் மொட்டை அடிப்பது கூடுமா? கூடாதா? என்ற விவாத களமல்ல இதன் நோக்கம்.

இறைவனின் கட்டளையை நிறைவேற்ற எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார். அழகுக்கு அணி சேர்க்கும் கூந்தலையும் இழக்கத் தயார். ஆனால், இறைவனின் ஒரே ஒரு கட்டளையைகூட புறக்கணிக்க தயாராக இல்லை என்று அதை நடைமுறைப் படுத்திக் காட்டிய அந்த பிரெஞ்சுப் பெண் எங்கே!

சமுதாயம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. தம் பதவி, புகழ், பணத்திற்காக எதைச் செய்யவும் தயார் என்றிருக்கும் நம் சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் எங்கே!!



Share:

Saturday, May 14, 2016

எனது பார்வையில்: நாகூரான் வாக்கு யாருக்கு?


 நாகூரான் என்றதும் முஸ்லிம் என்று கருதிவிட வேண்டாம். குழந்தை இல்லாத ஒரு தலித் தம்பதிக்கு நாகூராரை வேண்டி பிறந்த குழந்தையாதலால் இந்தப் பெயர் வைக்கப்பட்டது. ஒரு கையில் புட்டி தண்ணீர், மறு கையில் ஒரு கழி, தலைப்பாகை சகிதமாக அந்த நண்பகல் வெய்யிலில் ஆட்டு மந்தையுடன் வந்த நாகூரான் அந்தப் பகுதியின் நடமாடும் வரலாற்று புத்தகமாக இருந்தார். அவர் ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிவந்த மேய்ச்சல் நிலம் அனல் மின்நிலைய விரிவாக்கத்துக்காக அரசால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. - இக்வான் அமீர்

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
அதிகாலை நடை பயிற்சி முடித்துவிட்டு, உறவினரின் ஹோட்டலுக்கு சென்றிருந்தேன். ஹோட்டல்கள், டீக்கடைகள் இவையெல்லாம் வாய்மொழி ஊடகங்கள். உண்மையான கருத்து கணிப்புகளுக்கு ஏற்ற இடங்கள். நடுத்தட்டு மற்றும் அடித்தட்டு மக்கள் கூடும் இடமாகையால் நாட்டு நடப்புகள் இங்கு உடனுக்குடன் பிரதிபலிக்கும். ஆனால், வழக்கத்துக்கு மாறாக இன்று அமைதிதான் காணப்பட்டது. நடைபெறவிருக்கும் தேர்தல்கள் சம்பந்தமாக வலிய பேச்சுகொடுத்தும் யாரும் பிடிகொடுத்து பேசுவதாக காணோம். “கமுக்கமாக“ தேர்தல்கள் முடிவுகள் தீர்மானிக்கப்படவிருக்கின்றன என்பதற்கான அறிகுறி இது.

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிகிறது.  மாலை 6 மணிக்குப் பின் யாரும் எந்த வகையிலும் பிரச்சாரம் செய்யக் கூடாது.

தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் மே 16-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் 3 ஆயிரத்து 776 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதிகபட்சமாக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் 45 பேரும் குறைந்த பட்சமாக, ஆற்காடு, கூடலூர், மயிலாடுதுறையில் தலா 8 பேரும் போட்டியிடுகின்றனர்.

அதிமுக வேட் பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா ஏப்ரல் 9-ம் தேதி பிரச்சாரத்தை தொடங்கி, 12-ம் தேதி நெல்லையில் முடித்தார். இதேபோல், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரும் பிரச்சாரம் செய்தனர். தங்கள் கூட்டணி வேட் பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தியும் பிரச்சாரம் மேற்கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பா.ஜ வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தின் பல இடங்களில் வாக்கு சேகரித்தனர்.

மே 16-ம் தேதி வாக்குப்பதிவு நடப்பதையொட்டி, தேர்தல் விதிகளின்படி இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதன் பிறகு எந்த வகையிலும் யாரும் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் நடக்கும் பொதுக் கூட்டத்திலும், மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியிலும் பிரச்சாரத்தை முடிக்கின்றனர். கனிமொழி திருச்சியிலும், வைகோ தூத்துக் குடியிலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கும்மிடிப்பூண்டி, மணலி, திருவொற்றியூர் மற்றும் வேளச்சேரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதுதவிர, அன்புமணி ராம தாஸ் தான் போட்டியிடும் பென்னாகரத்திலும், காங்கிரஸ் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னையிலும் தங்கள் பிரச்சாரத்தை நிறைவு செய்கின்றனர்.

இன்று மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக் கூடாது என்பதால், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் மட்டுமின்றி ஊடகங்களும் கண் காணிக்கப்படுகின்றன. இன்று மாலை 6 மணிக்கு மேல் 16-ம் தேதி வாக்குப்பதிவு முடியும் வரை, முகநூல் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் உட்பட தேர்தல் தொடர்பான எந்த விளம்பரமும், பிரச்சாரமும் கூடாது என அறிவித்துள்ள தேர்தல் ஆணையம் விதிமீறலில் ஈடுபடு வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகி றது.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும்?

ஒருமுறை மூத்த இதழியாலாளரான சகோரர் சிராஜுல் ஹஸனின் முகநூல் பதிவொன்றுக்கு பின்னூட்டமிடும்போது அவர், ”இக்வான்.. நீங்கள் எந்த கட்சி?” - என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்த நேரத்தில் நான் மௌனம் சாதிக்க வேண்டியிருந்தது. இப்போது நான் அந்த கேள்விக்கு பதில் சொல்லிவிடுகின்றேன்.

80-கள்வரை நான் இடதுசாரி அமைப்பின் முன்னணி ஊழியன். ஆசியாவின் மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனத்தில் நான் முழு நேர பணியாளனாக இருந்ததாலும், இளமையை கடும் வறுமையில் கழித்ததாலும் இயல்பாகவே நான் சுரண்டலுக்கு எதிராக என்னைத் தீட்டிக் கொள்வது தவிர்க்க இயலலாததாக இருந்தது.

80-களுக்கு பிறகு, இஸ்லாம் பரிச்சயம், பிறகு அதற்கு ஒப்புக் கொடுத்தது என்று சித்தாந்த ரீதியாக நான் வேறு முகாமுக்கு புலம் பெயர்ந்தாலும், இதுவரையிலும் நான் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினர் இல்லை. எந்த கட்சியின் ஆதரவாளனும் இல்லை. எந்தக் கட்சியின் சார்பாளனும் இல்லை.

இந்தியாவில் உள்ள கட்சிகள் அனைத்துக்கும் பொதுவான ஒரு மாற்று வழிமுறை என்னிடம் உள்ளது. அதனால் மட்டுமே இன்றைய அமைப்பை மாற்றி முற்றிலும் வேறொரு அமைப்பை நிறுவ முடியும் என்பதிலும் அசைக்க முடியாத ஆதராமும் என்னிடம் உள்ளதால் பிற கட்சிகளுக்கு ஊதுகுழலாக, வழக்குரைஞராக அல்லது எனது தலைவர் நபிகளாரை பிற்படுத்தி பிற கட்சிகளின் தலைவர்களை முற்படுத்தி எனது “ரஸீலாக“ அதாவது எனது வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளும்  அவசியமும் எனக்கில்லை. இது இந்திய கட்சிகள் அனைத்துக்கும் பொருந்தும்.

நான் ஒரு இஸ்லாமியவாதியாகவே இருப்பேன். இறைவன் நாடினால், இஸ்லாமியவாதியாகவே மரணிப்பேன். நான் எந்தக் கட்சி என்பதற்கு விடை இதுவே.

இந்த கட்டுரை ஊடே இதை சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று உங்கள் புருவங்கள் எழலாம். காரணம் உள்ளது. இந்தத் தேர்தலில் யார் வெல்வார்கள்? என்று எனது கருத்தை அறிவிக்க இருக்கும் தருணத்தில் என் மீது யாரும் சார்பு முத்திரை குத்திவிடக் கூடாது என்பதற்காவே இந்த விளக்கம்.

2014-ம், ஆண்டு, விழிகள் வெளிப்புற படப்பிடிப்புக்காக, சென்னைக்கு வடக்கே ஏறக்குறைய ஒரு முப்பது கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் காட்டுப்பள்ளிக்கு சென்றிருந்தபோதுதான் முதன் முதலாக நாகூரானை சந்தித்தேன். (காணொளிக்கு: https://www.youtube.com/watch?v=tpixA1-gGY8)

நாகூரான் என்றதும் முஸ்லிம் என்று கருதிவிட வேண்டாம். குழந்தை இல்லாத ஒரு தலித் தம்பதிக்கு நாகூராரை வேண்டி பிறந்த குழந்தையாதலால் இந்தப் பெயர் வைக்கப்பட்டது. ஒரு கையில் புட்டி தண்ணீர், மறு கையில் ஒரு கழி, தலைப்பாகை சகிதமாக அந்த நண்பகல் வெய்யிலில் ஆட்டு மந்தையுடன் வந்த நாகூரான் அந்தப் பகுதியின் நடமாடும் வரலாற்று புத்தகமாக இருந்தார். அவர் ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிவந்த மேய்ச்சல் நிலம் அனல் மின்நிலைய விரிவாக்கத்துக்காக அரசால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே சுற்றியும் எண்ணூர் அனல் மின்நிலையம், வடசென்னை அனல் மின்நிலையம், வல்லூர் அனல் மின்நிலையங்கள். இவை போதாதென்று நூற்றுக் கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு காட்டுயிரிகள் உயிரிழக்கும் அபாயம். ஆயிரக்கணக்கான மீனவர்கள் தங்கள் பாரம்பர்ய மீன்பிடித் தொழில் இழக்கும் அபாயம். அனல் மின்நிலைய நிலக்கரி சாம்பல் கழிவால் பாதரசம் வெளிப்பட்டு பூமி மலடாகி நச்சு வடிவாகிப் போகும் அபாயம். (காணொளிக்கு: https://www.youtube.com/watch?v=1NrfuRgf8wg)

இத்தகைய சூழல்மாசுவின் அபாயங்கள் சுற்றிப் படர்ந்துள்ள பூமியில்தான் நாகூரானை சந்தித்தேன். அதையெல்லாம் அறிந்து கொள்ளும் கல்வி அறிவு  அவரிடம் நான் எதிர்பார்க்க முடியாது. உண்மையும் அதுதான். அந்த ஆபத்துகள் ஏதும் நாகூரானுக்கு தெரியவில்லை. கடைசியாக விடை பெறும்போது, அவர் கட்டியிருந்த  கரை வேட்டியை சுட்டிக் காட்டி அவரது வாக்கு யாருக்கு என்று கேட்டபோது, அவர் பளிச்சென்று பதில் சொன்னார்.




அண்மையில், அதே காட்டுப்பள்ளியைத் தாண்டி காளாஞ்சி கிராமத்தில் காட்டுயிரி ஆய்வுக்காக சென்றிருந்தேன். அங்கு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த நாமக்கல் பகுதியைச் சேர்ந்த தெலுங்கை தாய்மொழியாக கொண்டிருந்த அந்த ஏழை உழைப்பாளிகளை அவர்கள் விருப்பப்படி படமெடுத்து முடித்தேன். கடைசியாக, ”உங்கள் வாக்கு யாருக்கு?” - என்று கேட்டபோது அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாகூரான்  சொன்ன அதே பதிலைதான் பளிச்சென்று சொன்னார்கள்.

”நாங்கள் எம்ஜிஆர் காலத்திலிருந்தே இரட்டை இலைதான் சாமி!”

ஒரு நாகூரானோ, ஒரு சில ஏழை தொழிலாளர்களோ மட்டும் சொன்ன கருத்துக்கள் அல்ல இவை. வாரத்தில் இரண்டு முறைகள் காட்டுயிரி ஆய்வுக்காகவும், தினமும், ஒளிப்படங்களுக்காகவும் செல்லும் பல பகுதிகளில் நான் சந்தித்த மீனவ மக்கள், இருள இன ஏழைபாழைகள், ஒடுக்கப்பட்டோர், விவசாய கூலிகள் மற்றும் நடுத்தர மக்கள் இவர்கள் எல்லாம் தெரிவித்த ஒரே சின்னம் இரட்டை இலை.

ஆக, இறைவன் நாடினால், ஜெயலலிதா வெல்வது உறுதியாகிவிட்டது. ஜெயலலிதா அம்மையாருக்கு எனது வாழ்த்துக்கள்!

இதில் எரிச்சல் அடையவோ, வேதனைப்படவோ காரணம் ஒன்றுமேயில்லை! மக்களைப் போலதான் அவர்களின் தலைவர்களும் அமைவார்கள். இதுதான் இயக்கவியல் விதி.

இன்று காலையில்கூட எனது இல்லத்தரசியுடன் தேர்தல்கள் சம்பந்தமாக நடந்த உரையாடலில் இடையில் வந்த எனது மகள் ஒருவரை ”ஊத்திக் கொடுத்த உத்தமி” என்று விமர்சிக்கிறார்கள். சரி. அப்போ ஊத்திக் கொடுக்க சாராய ஆலைகளை திறந்து வைத்திருக்கிற மற்றொருவரை ”ஊத்திக் கொடுக்க சீரழிக்கும் உத்தமர்கள்!“ – என்று சொல்லலாமா அப்பா?” என்றாள்.

இருப்பவரில் சற்று மேலானவர்தான் ஆட்சி அதிகாரத்துக்கு வருவார்கள் என்பதே உலக வரலாறு.

''''''''''''''''''''''
Share:

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 18, 'இம்மையில் கொடுத்தால்..?'



நீதித்துறையின் பளுவைக் குறைக்க மத்திய அரசு எந்த அக்கறையும் காட்டவில்லை என்று கூறி, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் கண்ணீர் விட்டு அழுததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள், மாநில முதல்வர்கள் பங்கேற்ற மாநாடு டெல்லி விஞ்ஞான் பவனில் 24.04.2016 அன்று நடந்தது. நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சட்டத் துறை அமைச்சர் சதானந்த கவுடா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநாட்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் பேசும்போது, “நீதித்துறையின் வேலைப்பளு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. தற்போது நாடு முழுவதும் 3 கோடி வழக்குகள் தேங்கி உள்ளன. தேசிய நீதிபதிகள் நியமனச் சட்டம் தொடர்பான வழக்கு காரணமாக நீதிபதிகளின் நியமனத்தில் தேக்கம் ஏற்பட்டது. இதனால், 434 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. வழக்குகளை முடிக்க முடியாமல் நீதித்துறை திணறி வருகிறது. நீதி கிடைக்காமல் விசாரணை நிலையிலேயே அப்பாவி மக்கள் சிறைகளில் வாடி வருகின்றனர். (இவ்வாறு பேசும்போது அவர் பேச்சை நிறுத்திவிட்டு கண்ணீர்விட்டு அழுதார்). சிறைகள் நிரம்பி வழிகின்றன” என்று கூறினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, “நான் மத்திய அரசை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். நீதித்துறையை குறை சொன்னால் மட்டும் போதாது. மொத்த பளுவையும் நீதித்துறை மீது சுமத்த கூடாது. தேசிய நீதிபதிகள் நியமனச் சட்டம் குறித்த உத்தரவு வெளியானபின், பரிந்துரை செய்யப்பட்ட நீதிபதிகள் நியமனத்தில் இன்னும் 169 நியமனங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. இதை இன்னும் எத்தனை காலம்தான் நிலுவையில் வைப்பீர்கள்? அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மட்டும் 10 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிபதிகள் இல்லாமல் எப்படி இந்த நிலையை சமாளிக்க முடியும்?

கடந்த 1987-ம் ஆண்டு சட்ட கமிஷன் பரிந்துரைப்படி, 10 லட்சம் மக்கள் தொகைக்கு 50 நீதிபதிகள் நியமிக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அல்தமஸ் கபீர் தலைமை நீதிபதியாக இருந்தபோது, 2013-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இதுபற்றி கடிதம் எழுதினார். அவர் பதில் கடிதத்தில், மாநில அரசுகள்தான் புதிய நீதிமன்றங்கள் அமைக்க முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று பதிலளித்தார். மாநில அரசுகளைக் கேட்டால், மத்திய அரசுதான் முயற்சி எடுக்க வேண்டும் என்று சொல்கின்றன. அமெரிக்காவில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஆண்டுக்கு 81 வழக்குகளை மட்டுமே விசாரிக்கிறது. இந்தியாவில் நீதிமன்றங்கள் செயல்படும் விதத்தைப் பார்த்து, இவ்வளவு நெருக்கடியில் எப்படி பணியாற்றுகிறீர்கள் என்று ஆச்சரியமாக கேட்கின்றனர். ஜனநாயகத்தின் முக்கிய தூணாக உள்ள நீதித் துறையை காப்பாற்ற வேண்டிய நேரம் இது” என்று கூறினார். அவரது அரைமணி நேர பேச்சில் பலமுறை உருக்கமாக கண்ணீர் சிந்தினார். 

இன்னும் சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் உள்ள 900 நீதிபதிகளில் 500 பேர் மீது ஊழல் புகார்கள் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தெரிவித்தார்.

இவை எல்லாம் பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்ட செய்திகள். உலுத்துப் போன நீதித்துறைக் குறித்து நீதிபதிகளின் வாக்குமூலங்கள்.


நீதிக்கு இலக்கணமாக திகழும் நபிகளாருக்கு ஏற்பட்ட இக்கட்டான அனுபவம் இது:

"இறைவனின் தூதரே, இவர் எனது பேரீச்சம் பழத்தோட்டத்தை எடுத்துக் கொண்டார். அதை நீங்கள்தான் எனக்கு மீட்டுத் தர வேண்டும்.!" - கண்களில் கண்ணீர் பொங்க அழுதவாறு வந்தான் ஓர் அநாதைச் சிறுவன்.

"அழாதே மகனே.. வா..வா.. வந்து இப்படி உட்கார்.

யார் உனது தோட்டத்தைப் பறித்துக் கொண்டார்கள்?

என்ன நடந்தது என்று இப்போது விவரமாக சொல்!" - சிறுவனை அருகில் இருத்திக் கொண்ட நபிகளார், அவன் சொன்னதைப் பொறுமையுடன் கேட்டார்கள்.

அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபரிடமும் விசாரித்தார்கள்.

இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நபிகளார் அநாதைச் சிறுவனுக்கு சாதகமாக நியாயம் இல்லை என்பதை தெரிந்து கொண்டார்கள்.

கடைசியில் தீர்ப்பு அநாதைச் சிறுவனுக்கு எதிராக அமைந்தது.


முடிவைக் கேட்ட சிறுவன் "ஓ..!" வென்று அழ ஆரம்பித்தான்.

இதைக் கண்டு நபிகளார் மிகவும் வேதனைப்பட்டார்கள். அன்னாரது கண்கள் கலங்கிவிட்டன.

"சகோதரரே, உங்கள் வாதத்தில் நியாயம் இருந்தது. அதன்படி தோட்டம் உங்களுடையதுதான்!
 
ஆனால். பாவம்.. இந்தச் சிறுவனைப் பாருங்கள். அதுவும் யாருமில்லாத அநாதைச் சிறுவன். அதனால் தோட்டத்தை இவனுக்கே கொடுத்துவிடுங்கள். இதற்குப் பதிலாக உங்களுக்கு இறைவன் மறுமையில் சொர்க்கத்தில் ஒரு தோட்டத்தை அளிப்பான்!"

நபிகளாரின் வேண்டுகோளை தோட்டக்காரர் ஏற்கவில்லை.

அங்கு குழுமியிருந்தோரில் நபித்தோழர் 'அப்வாலித் ஹத்தாவும்' ஒருவர். நடந்ததைக் கவனித்துக் கொண்டிருந்தவர், தோட்டக்காரரை தனியே அழைத்துச் சென்றார். சொன்னார்: "சகோதரரே, தோட்டத்தை இந்த அநாதைச் சிறுவனுக்கு கொடுத்துவிடுங்கள். இதற்கு பதிலாக நான் எனது தோட்டங்களில் மிகச் சிறந்த தோட்டமொன்றை தங்களுக்குத் தந்துவிடுகின்றேன்! தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள்!"

தனது தோட்டத்தைவிட அப்வாலித் ஹத்தாவின் தோட்டம் செழிப்பானது! குலை குலையாக உயர் ரக பேரீச்சம் பழங்களைத் தரக்கூடியது. இதனால், வழக்கைக் கொண்டு வந்தவர் நபித்தோழரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார்.

நபித்தோழர் அப்வாலித் ஹத்தாவுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. நபிகளாரிடம் சென்றவர், "இறைவனின் தூதரே, எனக்கு ஒரு சந்தேகம் கேட்கலாமா?"- என்றார் பணிவோடு.

"தாராளமாகக் கேளுங்கள் ஹத்தாஹ், என்ன சந்தேகம்?"- என்றார் நபிகளார் புன்னகையுடன்.

"ஒன்றுமில்லை இறைவனின் தூதரே, அநாதைச் சிறுவனுக்கு தரும்படி தாங்கள் கேட்டீர்களே தோட்டம்.. அதை நான் இம்மையில் வாங்கித் தருகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. அதற்குப் பதிலாக மறுமையில் எனக்கு சொர்க்கத்தில் ஒரு தோட்டம் கிடைக்குமா இறைவனின் தூதரே?"

கண்களில் மகிழ்ச்சி பொங்க நபிகளார் சொன்னார்கள்: "நிச்சயம்.. நிச்சயமாக கிடைக்கும் ஹத்தா! நிச்சயமாக உமக்கும் ஒரு தோட்டம் சுவனத்தில் கிடைக்கும்!"

"அப்படியென்றால்.. இறைவனின் தூதரே, என் தோட்டத்தைக் கொடுத்துவிட்டு, இவரது தோட்டத்தை நான் வாங்கி அதை அநாதைச் சிறுவனிடம் கொடுத்துவிடுகின்றேன். இந்தச் செயலுக்கு தாங்களே சாட்சி!" - என்றார் நபித்தோழர் அப்வாலித் ஹத்தா (இறையருள் பொழிவதாக!)

நபி பெருமானார் தமது தோழரைப் பாராட்டி வாழ்த்தினார்கள்.

"அநாதைகளைப் பற்றி உம்மிடம் வினவுகிறார்கள். நீர் கூறுவீராக: "அவர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய செயல்முறையை மேற்கொள்வதே உத்தமமாகும்!"

- என்ற திருக்குர்ஆனின் கட்டளையை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் நபிகளார் அநாதைச் சிறுவனை அழைத்தார்கள். அன்போடு அவனை அணைத்துக் கொண்டார்கள்.

ஒரு அநாதைச் சிறுவனுக்கு நன்மை பயக்கக் கூடிய செயல்முறையை நிறைவேற்றிய திருப்தி நபிகளார் முகத்தில் நிலவியது.

தோட்டம் திரும்பவும் கிடைத்த மகிழ்ச்சியில் அந்த அநாதைச் சிறுவனும் சிரித்தான்.

- இறைவன் நாடினால்... அருட்கொடைகள் தொடரும்.





முந்தைய அருட்கொடைகளுக்கு:

1. அண்ணல் நபி : http://ikhwanameer.blogspot.in/2015/08/blog-post_12.html
2.. நற்குணங்களை நிறைவாக்குவதற்காக: http://ikhwanameer.blogspot.in/2015/08/2.html
3. குட்டி எறும்புகளும், அன்பு நபியும் : http://ikhwanameer.blogspot.in/2015/09/3.html
4. கடலில் மிதந்துவந்த கடன் : http://ikhwanameer.blogspot.in/2015/09/4.html
5. ரொட்டித் துண்டுகள் : http://ikhwanameer.blogspot.in/2015/09/5.html
6. அன்று கண்ட பிரேமை இன்றும்... என்றென்றும்..: http://ikhwanameer.blogspot.in/2015/09/6.html
7.ஓர் இறை.. ஓர் நிறை..  : http://ikhwanameer.blogspot.in/2015/10/7.html
8. அடிமைத் தளையிலிருந்து விடுதலை: http://ikhwanameer.blogspot.in/2015/10/8.html
9. ஒரு ராஜாதி ராஜா... பஞ்ச பராரியாய்... : http://ikhwanameer.blogspot.in/2015/10/9.html
10. அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்த வதந்தி : http://ikhwanameer.blogspot.in/2015/11/10.html
11. அவர்கள் எதிரிகள் குழந்தைகளாயினும்... : http://ikhwanameer.blogspot.in/2015/11/11.html
12. குற்றம் குற்றமே!:  http://ikhwanameer.blogspot.in/2015/11/blog-post_19.html
13 . பாவங்களின் பரிகாரம் http://ikhwanameer.blogspot.in/2015/12/13.html
14. அழுதபடியே தொழுத அண்ணல்http://ikhwanameer.blogspot.in/2015/12/14.html
15 இருளில் வந்த வெளிச்சம்: http://ikhwanameer.blogspot.in/2016/01/15.html
16 உதவி சிறிது. பதவி பெரிது: http://ikhwanameer.blogspot.in/2016/01/16.html
17 தலைக்கு மேல் பறந்த தாய்க்குருவி: http://ikhwanameer.blogspot.in/2016/04/17.html
 

 


Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive