NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Thursday, May 28, 2020

Monday, May 18, 2020

சிலந்தி வலை


'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
இரவின் கும்மிருட்டு, நட்சத்திரங்களின் கண் சிமிட்டல், இதனூடே மக்காவுக்கு தெற்கிலிருந்த மலைப்பகுதியை நபி பெருமானாரும், அபூபக்கரும் சென்றடைந்தார்கள். யார் கண்ணிலும் படாமலிருக்க நல்லதொரு மறைவிடம் தேடினார்கள். அங்கு தெளர்என்னும் மலையிலேயே இருந்தது ஒரு குகை. குறுகியதும், ஆழமானதுமான தக்க புகலிடம்.~இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''' 

இருண்ட இரவு. இன்னும் சில மணி நேரத்தில் கிழக்கு வெளுத்துவிடும். அதன் பிறகு மக்கத்து குறைஷியருக்கு விஷயம் தெரிந்து போகும். தங்களின் இரவு முற்றுகை வீணாய் போனதை அறிந்து மக்கா கொதிக்கும். நகரம் சல்லடை போடப்படும்!

மக்காவில் இறைத்தூதர் முஹம்மது நபிகளார் தம் போதனைகளை எடுத்துரைத்துக் கொண்டிருந்த காலமது. உருட்டலும், மிரட்டலும், பொன், பெண் பேரங்கள் தலை குப்புற விழுந்தபின், சாம, பேத, தான, தண்டமாய் எதிரிகள் எடுத்த முடிவு படுகொலை’. தனிநபர் மீது பழி விழுந்திடாமலிருக்க ஒவ்வொரு குலத்திலிருந்தும ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுக் கொலைக்கான நாளும் நிர்ணயிக்கப்பட்டது. இரவில் தப்பிப் போகாமல் முற்றுகையிட்டுக் காவல் காப்பது, பொழுது புலரும் வேளையில் கொன்றுவிடுவது. இதுவே எதிரிகளின் திட்டம். கருத்தை, கருத்தைக் கொண்டு உரசாமல் ஆயுதங்களின் கூர்மையால் ஒடுக்க நினைத்தது மக்கத்து இளவட்டம்.

தம்மைச் சுற்றி நடப்பதை நபி பெருமானார் அறிந்து கொண்டார். நுண்ணறிவுடன் ஒரு திட்டம் தீட்டினார். அதற்கு முழுமையாய் ஆதரவு தர 12 வயது நிரம்பிய இளந்தோழர் அலியும் ஒப்புக் கொண்டார். தாம் தப்பி விட்டதை எதிரிகள் அறிந்து கொள்ளாமலிருக்க அலி படுக்கையில் பொழுது புலரும்வரை துயில் கொள்ள வேண்டும். முள் படுக்கையை மலர் படுக்கையாய் எண்ணி அத்தோழரும் அதற்கு இசைந்திட்டார்.

நபி பெருமானார் தம் அருமைத் தோழர் அபூபக்கருடன் மக்கா மாநகரை விட்டுக் கிளம்பிவிட்டார். ஏற்கனவே இறைவனிடமிருந்து முன்னெச்சரிக்கையாய் மக்காவைத் துறக்க வேண்டியிருக்கும் என்ற சமிக்ஞைகள் வந்துவிட்டிருந்தன. அதற்கொப்ப ஏற்பாடுகளும் சித்தமாயிருந்தன.

வீட்டிலிருந்து கிளம்பிய நபிகளார் கஅபாவுக்குத் தெற்காக அமைந்திருந்த மிஸ்பலாவை அடைந்தார். அங்குதான் அபூபக்கரின் வீடும் இருந்தது. மக்காவைத் துறந்து மதீனாவை அடைவது நபிகளாரின் திட்டம்.

மதீனா வட திசையிலிருக்க பயணமோ தென் திசை நோக்கி அமைந்தது. ஏனெனில், நபிகளாரைக் காணாத எதிரிகள் முதலில் விரைவது இரண்டு இடங்கள். ஒன்று அபூபக்கரின் வீடு; அடுத்தது மதீனாவுக்குச் செல்லும் பாதை. எதிரிகளைக் குழப்பி, பாதுகாப்பாக, தாம் எண்ணிய இடத்தை அடைய நபிகளார் தம் பயணத்தை வேறு விதமாக அமைத்தார்.

இரவின் கும்மிருட்டு, நட்சத்திரங்களின் கண் சிமிட்டல், இதனூடே மக்காவுக்கு தெற்கிலிருந்த மலைப்பகுதியை நபி பெருமானாரும், அபூபக்கரும் சென்றடைந்தார்கள். யார் கண்ணிலும் படாமலிருக்க நல்லதொரு மறைவிடம் தேடினார்கள். அங்கு தெளர்என்னும் மலையிலேயே இருந்தது ஒரு குகை. குறுகியதும், ஆழமானதுமான தக்க புகலிடம்.

இரவு இன்னும் இருட்டிலிருந்து கரையவில்லை.

நபித்தோழர் அபூபக்கர் குகைக்குள் நுழைந்தார். அதைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தார். விஷ ஜந்துக்களால் தம் தோழருக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாதே என்ற கவலை அவருக்கு. குகையின் தரையில் நிறைய பொந்துகள் இருந்தன. அபூபக்கர் தம் மேலாடையைக் கழற்றி அதை சிறு சிறு துண்டுகளாய் கிழித்தார். ஒவ்வொரு துண்டையும் உருட்டி பந்தாக்கினார்; பொந்துக்களை அடைத்தார். இனிக் கவலையில்லை என்ற முழு நிம்மதியுடன் நபிகளாரைக் குகைக்குள் அழைத்துச் சென்றார்.

பொழுது புலர்ந்தது.

விடியலில் தம் எதிரியை அஸ்தமனமாக்கிடஉருவிய வாட்களுடன், பயங்கர ஆயுதங்களுடன் நின்றனர் மக்கத்து இளைஞர்கள். வீட்டில் கண்டதோ சிறுவர் அலியை. கோபத்தின் உச்சிக்கே சென்றவர்கள் பெரும் கூப்பாடு போட்டார்கள். வசை மாரி பொழிந்தார்கள்.

விடாதீர்கள்..! ஓடுங்கள்..! அபூபக்கர் வீட்டிற்கு! தேடுங்கள்.. நகர் முழுவதும் வலை வீசி! மக்காவை விட்டுச் செல்லும் பாதைகள் அனைத்தையும் அடைத்துவிடுங்கள்!

எங்கே அந்த பாலையின் வேடுவர்கள்? சென்று தேடுங்கள்.. அப்துல்லாஹ்வின் மைந்தன் முஹம்மதுவை! பெறுங்கள் அளவற்ற பரிசுகளை!

தேடுங்கள்..! விடாதீர்கள்..! விடாதீர்கள்…!!”

கூச்சலும், குழப்பமுமாய் பொழுது புலர்ந்தது.

வழித்தட தடயங்களில் நிபுணத்துவம் பெற்ற சில பாலைவாழ் மக்கள் நபி பெருமானார் சென்ற பாதையைக் கண்டுபிடித்தும் விட்டனர். அதைத் தொடர்ந்து மலைப்பகுதிக்கும் வந்து சேர்ந்தனர். எதிரிகளால் இவ்வளவு சீக்கிரம் வளைக்கப்படுவோம் என்று நபிகளார் எண்ணவில்லை.

மலையின் ஒவ்வொரு அங்குலமும் எதிரிகளின் கண் வீச்சுக்கு ஆளாக.. குகைக்குள் இருந்த நபித்தோழரின் நெஞ்சமோ பட படத்தது. தம் உயிரினும் இனிய தோழர்க்கு ஊறு ஏதும் நேர்ந்திடக் கூடாதே!’ – என்ற உணர்வின் வெளிப்பாடு அது.

இப்போது காலடிகளின் ஓசையும், வாட்களின் உரசலும் தெளிவாய்க் கேட்டன.

தெளர்மலைக்குகையையும் எதிரிகள் கண்டுபிடித்து விட்டனர். குகையின் வாயிலோ சிலந்தி வலையயால் பின்னப்பட்டிருந்தது. தேடி வந்தவர்களில் ஒருவன், “காலடிச் சுவடுகள் இத்துடன் முடிகின்றன. அவர்கள் இங்கு எங்கோதான் இருக்க வேண்டும். எதற்கும் குகைக்குள் நழைந்து பார்த்து விடுவோம்!” – என்றான்.

மற்றவர்களும், “ஆம்..! ஆம்..! குகைக்குள் தேடுவோம்!” – என்றவாறு பளபளக்கும் வாட்களுடன் குகைக்குள் நுழையத் தயாரானார்கள்.

இந்தச் சமயத்தில் குறைஷிகளின் கனவான் உமைய்யா பின் கலப்’, தலையை அசைத்தவாறு நாம் தேடி வந்தவர்கள் குகைக்குள் இருக்க வாய்ப்பே இல்லை. இதோ! பார்த்தீர்களா சிலந்தி வலையை? யாராவது குகைக்குள் நுழைந்திருந்தால் இவ்வலை அறுந்திருக்க வேண்டுமே!

நாம் இங்கு கிடந்து நேரத்தை வீணாக்க வேண்டாம்! வாருங்கள்! வேறு பக்கம் தேடுவோம்! அவர்கள் தப்பி விடுவதற்குள் பிடித்தாக வேண்டும்!” – என்றான் பதற்றத்துடன்.

அதேநேரத்தில் குகைக்குள் வெளியில் நடப்பதைச் சரியாகத் தெரிந்து கொள்ள முடியாத நிலையில் நபித்தோழர் அபூபக்கர் பெரும் கவலை அடைந்தார். தமது அருமைத் தோழருக்கு எதிரிகளால் ஆபத்து விளைந்திடுமோ என கலங்கி நின்றார். நபிகளாரோ எவ்விதமான சலனமுமின்றி இறைவனைத் தொழுது கொண்டிருந்தார்.

எண்ணங்கள் குவிக்கப்பட்ட அமைதி! பரம் பொருளைச் சரணடைந்துவிட்ட உள் அமைதி!

பிராணனில் அமைதி!
பேரானந்தத்தை
தொட்டுவிட்ட அமைதி!
இறையருளைப் பெற்றுவிட்ட
பிரத்தியட்ச அமைதி!"

நபிகளார் தொழுது முடித்தார். ஏறிட்டுப் பார்த்தார். தம் தோழரின் விழிகளிலிருந்து கண்ணீர்த்துளிகள் வழிந்தோடுவதைக் கண்டார். 

இறைத்தூதரே! அவர்கள் நம்மை நெருங்கிவிட்டார்கள். நாமோநாமோ.. இருவர்..!

தம் தோழரின் நிலையைக் கண்டதும் நபிகளாரின் வதனத்தில் புன்னகை மலர்ந்தது. அது பூரண சந்திரனாய்த் தகதகத்தது. விழிகளோ சுடர்விட்டுப் பிரகாசித்தன.

எதிரிகளை எதிர்கொள்ளத் தக்க ஆயுதமும், வேண்டிய ஆள் பலமும் இல்லாத நிர்க்கதியான அந்நிலையில் நபி பெருமானாரின் அமுத வாயிலிருந்து தெள்ளத் தெளிவாய் நீரோடையின் சலசலப்பாய் வார்த்தைகள் வெளிப்பட்டன.

அஞ்சற்க தோழரே! அஞ்சற்க! இருவர் அல்ல நாம் மூவர்; இறைவனையும் சேர்த்து! இறைவன் நம்மோடு இருக்கிறான் அஞ்சற்க!

இறைநம்பிக்கையின் இறுக்கமான உறுதியால் மலை போல வந்த பேராபத்து பனியாய் விலகிக் போனது.

மலைக்குகையின் வாயை, அற்ப சிலந்தி வலையால் பின்னச் செய்து தன் அடியாரை இறைவன் காத்துக் கொண்டான்.

(ஜனவரி 1, 2015 அன்றைய தி இந்துவில் பிரசுரமான எனது கட்டுரை. இணைப்புக்கு: https://www.hindutamil.in/news/spirituals/29906-.html)




Share:

Friday, May 15, 2020

அகல மறுக்கின்றன நினைவுகள்

''''''''''''''''''''''''''''''''''''''''
இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''''''''''''
விழிகளை மூடினால்
அகல மறுக்கின்றன
அந்த நினைவுகள்
நிழலாடுகின்றன
அந்த பாதங்கள்!
 
பஞ்சு கணக்கில்..
பிஞ்சு பாதங்கள்,
இளம் பாதங்கள்,
முதியோர் பாதங்கள்
ரத்தகறை படிந்த
பாதங்கள்!
 
நெடுஞ்சாலை முழுவதும்
குருதியின் தடயங்களாய்
பதிந்திருக்கின்றன
மண்ணின் மைந்தரின்
ஏழை, பாழைகளின்
இயலாமை பாதங்கள்..!
 
தோளில் சுமைகளோடு
சுமைகளாய் குழந்தைகள்!
தன் அன்பு முழுக்க
வெளிப்படுத்தி
துணைவியரை
தாய், தந்தையரை
உடன்பிறப்புகளை
சுமந்து செல்லும்
உறவுகள்!
 
வாழ்வியல் யாத்திரையாய்
நெடுஞ்சாலை முழுவதும்
ஆட்சியாளரின்
கையாலாகாத தனத்தை
வெளிப்படுத்தும்
ரத்த தடயங்கள்!
 
பிள்ளை பேறுகளும்,
இறுதி யாத்திரைகளும்,
வாழ்வின் அனைத்தும்
நெடுஞ்சாலையிலே
வெளிப்படுத்தி
தளராமல்
தொடரும் பயணத்தின்
பெரு வலி படிந்த பாதங்கள்
 
எங்கே செல்கிறது எனது நாடு?
எங்கே செல்கிறது என் சமூகம்?
 
மண்குதிரைகளை
நம்பினால்
என்ன நடக்கும்
பதில் சொல்கிறது காலம்
 
மக்கள் மன்றம் முன்
அதிகாரமும் பதில்
சொல்லிதான்
ஆக வேண்டும்
நாளை!
 
 
Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive