NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Showing posts with label என் நாடு - என் மக்கள். Show all posts
Showing posts with label என் நாடு - என் மக்கள். Show all posts

Thursday, July 16, 2020

நித்தம் வதைபடுவது யாரெனில்..

காலிலிருந்து பிறந்தவனோ..
காலால் உதைக்கிறீர்!
எப்போதும் ஒடுக்கப்பட்டவனோ..
அடித்து வதைக்கிறீர்!

ஜெயராஜ் - பென்னிக்ஸ்
இருவரையும் கொன்ற
அதே அதிகாரம்..
இதோ மத்தியபிரதேசத்தில்
மற்றொரு ரூபத்தில்..!

சோறு படைக்க நினைத்தது தவறோ
சேற்றில் இறங்கி உலகுக்கு
சோறு கிடைக்க நினைத்தது
கேடோ இங்கே!

தலைக்காய்ந்தவர்
வரிப்பணத்தில்
உயிர் வாழ்பவர்கள்
குண்டாந்தடி எடுத்து
அதிகார கொலைஞராய்
இதோ பார்த்தீரா இங்கே..!

இனி விசாரணைகள்
தொடரும்!
அதிகாரம் அரிதாரம்
பூசி நடிக்கும்!
மாண்பிழந்து போன
மனித உரிமைகளோ
இனி இழப்பதற்கு
ஒன்றுமில்லாமல்
நிர்வாணமாய் நிற்கும்!

மறதி நித்திரைக்குள்
ஜனநாயகம்
குறட்டை விடும்
கணபொழுதுக்குள்
அதோ அதிகார திமிர்
தடியை ஓங்கி
ஆர்ப்பரித்து நிற்கிறது
நாட்டின்
மற்றுமோர் மூலையில்
புதியதோர் பெயரில்..!

அந்தோ!
நித்தம் வதைபடுவது
ஒடுக்கப்படுபவன் மட்டுமே!
விண்ணதிர ஒலிப்பது
அவனது
அழுகை ஒலி மட்டுமே!

'''''''''''''''''''''''''''
இக்வான் அமீர்
''''''''''''''''''''
Share:

Friday, June 26, 2020

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!



இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள் ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்
 
'''''''''''''''''''''''''‘’
 இரவெல்லாம் தூக்கம் வரவில்லை எனக்கு!

அப்படி என்னதான் செய்துவிட்டார்கள் ஜெயராஜும், பென்னிஸீம்?

இந்தளவு கொடுமை இழைக்குமா சொந்த நாட்டின் சொந்த போலீஸ்?

நம்பவே முடியவில்லை!

ஒரேயடியாக சுட்டு கொன்றுவிட்டிருக்கலாம்!

அந்த சித்திரவதை வலியின் வேதனை தெரியாமலிருக்க.. கண நேரத்தில் பாயும் தோட்டாவின் வலியோடு எல்லாம் முடிந்திருக்கும்?

துடிக்க.. துடிக்க.. கதற.. கதற.. அண்டை. அயலாரின் காதுகள் செவிடாகி போனதேன்?

எல்லாம் அறியாமையும், சுயநலமும் ஒருசேர வாய்க்க பெற்ற சுயநல மக்களின் ஜனநாயக அமைப்பில் அவரவர் கால்களில் படும்போதுதான் வலி தெரியும் போலும்!

குற்றவாளிகளாயினும், தண்டனை அளவீடு மிஞ்சுவதில்லை எங்கும்!

அரசு பதக்கங்களும், பாராட்டுகளும், பதவி உயர்வுகளும், சாதீய அமைப்புமான அரசியல் சமூக அமைப்பில் இந்த அதிகார அத்துமீறல்கள் கட்டுக்கடங்காதவை!

தலைக்காய்ந்தவர்களும், சாமான்யர்களும் வாழ தகுதியற்றவர் என்கிறதா இந்த அதிகார அத்துமீறிய அரசியல் அமைப்பு? அல்லது ஒவ்வொரு கணமும் இருப்புகளுக்கான போராட்டமும், விழிப்புணர்வூட்டும் மக்களுக்கான தலைமையும் அவசியம் என்கிறனவா சாத்தான்குளம் படுகொலைகள்?

ஒரு ஜார்ஜ் பிளாய்ட் மூச்சுவிட திணறி இனவெறியனால் கொல்லப்பட்டதற்கு ஒட்டுமொத்த அமெரிக்க சமூகம் திரண்டு நின்றதே தெருக்களில்! நீதி கேட்டு நடந்த அந்த உக்கிர மக்கள் திரள்முன் மண்டியிட்டதே அதிகாரம்! நம்மால் ஏன் செய்ய முடியவில்லை! காரணங்களின் முடிவில் தீர்வாய் தடைபோட்டு நிற்பது அதே தன்னலம்தான்!

வலி பொறுக்க முடியாமல், ஓங்கி.. ஓங்கி ஒலிக்கின்றன பெரியவர் ஜெயராஜின், தம்பி பென்னிஸின் ஓலங்கள்! அதோ தெரித்து சுவர்களில் ஒட்டிக் கொள்கின்றன பிய்ந்தபோன அவர்களின் முன்பின் மறைவான அவையங்களின் நுண்ணிய ரத்தம் தோய்ந்த தசைகள்!

இதே வேதனை, இதே தண்டனை ஆட்சியாளர் முதற்கொண்டு கடைநிலை அதிகாரம்வரை பெற வேண்டாமா? அவர்களின் ஒவ்வொரு அணுத்துகள்களும் அதேஅளவு வேதனையை அனுபவிக்க வேண்டாமா? அதுதானே சமநீதி! அதுதானே பாதிக்கப்பட்டவரின் இழப்புக்கான முதல்நிலை இழப்பீடாக இருக்க முடியும்? மீண்டும் அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்கும்?  

நாகரீக சமூகம் என்று சொல்லிக்  கொண்டு ஒரு காட்டுமிராண்டி சமூகத்தின் நுழைவாயிலில் நிற்கிறோமோ நாம்!

இந்த அதிகார வெறிப்பிடித்த கொடுமைக்கார்ரகளைவிட கொரோனோ எவ்வளவோ மேல்!

''''''''''''''''''''''''''''



Share:

Friday, May 15, 2020

அகல மறுக்கின்றன நினைவுகள்

''''''''''''''''''''''''''''''''''''''''
இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''''''''''''
விழிகளை மூடினால்
அகல மறுக்கின்றன
அந்த நினைவுகள்
நிழலாடுகின்றன
அந்த பாதங்கள்!
 
பஞ்சு கணக்கில்..
பிஞ்சு பாதங்கள்,
இளம் பாதங்கள்,
முதியோர் பாதங்கள்
ரத்தகறை படிந்த
பாதங்கள்!
 
நெடுஞ்சாலை முழுவதும்
குருதியின் தடயங்களாய்
பதிந்திருக்கின்றன
மண்ணின் மைந்தரின்
ஏழை, பாழைகளின்
இயலாமை பாதங்கள்..!
 
தோளில் சுமைகளோடு
சுமைகளாய் குழந்தைகள்!
தன் அன்பு முழுக்க
வெளிப்படுத்தி
துணைவியரை
தாய், தந்தையரை
உடன்பிறப்புகளை
சுமந்து செல்லும்
உறவுகள்!
 
வாழ்வியல் யாத்திரையாய்
நெடுஞ்சாலை முழுவதும்
ஆட்சியாளரின்
கையாலாகாத தனத்தை
வெளிப்படுத்தும்
ரத்த தடயங்கள்!
 
பிள்ளை பேறுகளும்,
இறுதி யாத்திரைகளும்,
வாழ்வின் அனைத்தும்
நெடுஞ்சாலையிலே
வெளிப்படுத்தி
தளராமல்
தொடரும் பயணத்தின்
பெரு வலி படிந்த பாதங்கள்
 
எங்கே செல்கிறது எனது நாடு?
எங்கே செல்கிறது என் சமூகம்?
 
மண்குதிரைகளை
நம்பினால்
என்ன நடக்கும்
பதில் சொல்கிறது காலம்
 
மக்கள் மன்றம் முன்
அதிகாரமும் பதில்
சொல்லிதான்
ஆக வேண்டும்
நாளை!
 
 
Share:

Friday, April 10, 2020

தப்லிக் ஜமாஅத்தாரின் கொரானா வைரஸ் எதிர்ப்பு சக்தியும், ஒரு மருத்துவரின் வியப்பும்!



'''''''''''''''''''''''''''''''''''''''''''
இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''''''''''''
இஸ்லாமிய அறிஞரும் நண்பருமான ஜபருல்லாஹ் ரஹ்மானி அனுப்பியிருந்த ஒரு குரல் பதிவை கேட்டேன்.

தப்லிக் ஜமாஅத்தைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் சம்பந்தமான பதிவு அது. தன்னை டாக்டர் கார்த்திகேயன் என்று அறிமுகப்படுத்தி கொண்ட ஒருவர் அதில் பேசுகிறார். 

கொரானா நோய்த்தொற்றுக்கு ஆளானதாக அரசால் தனிமைப்படுத்தப்பட்ட தப்லிக் ஜமாஅத்தைச் சேர்ந்த நபர்கள் நலமாக இருப்பதாகவும், கொரானா வைரஸ்ஸால் எந்த பாதிப்பும் அவர்களுக்கு இல்லை என்றும் டாக்டர் கார்த்திகேயன் வியப்பு தெரிவிக்கிறார். இதற்கு தப்லிக் ஜமாஅத்தாரின் உடலிலிருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் சொல்கிறார். இந்த எதிர்ப்பு சக்தி இவர்களது உடலில் எப்படி உருவாகிறது? என்று விரிவான ஆய்வை மேற்கொண்டாலே கொரானா தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விடலாம் என்றும் ஆலோசனை தெரிவிக்கிறார்.

இது எந்தளவு உண்மையானது என்பது எனக்கு தெரியாது.

ஆனால், தப்லிக் ஜமாஅத்தோடு கரோனா வைரஸ் புனையப்பட்டிருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் மட்டும் எனக்கு உண்டு. இந்த புனைவை இந்தியர் இல்லந்தோறும் கொண்டு சேர்த்த பெருமை நமது பொறுப்பற்ற ஊடகங்களையே சாரும்.

நானெல்லாம், ஊடகங்களில் அதி ஈடுபாடோடு இருந்த காலகட்டத்தில் என்னை அறியாமலேயே ஒரு பெருமிதம் இருக்கும். இதழியல் மேல்நிலை பட்டப்படிப்பு படிக்கும்போது இந்த உணர்வு இன்னும் தூக்கலாகவே இருந்தது எனலாம்.

மக்கள் சேவன், ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று ஊடகத்துக்கான அறநெறிகள் வார்த்தெடுத்த திமிர் என்றுகூட அதை அழைக்கலாம்.

இந்த வெறியுடன்தான் எனது புலனாய்வு தேடல்கள் தொடர்ந்தன. இதற்காக நிறைய ஆபத்துகளை சந்திக்க வேண்டியிருந்தது. அந்த புலனாய்வு, எழுத்துக்களாய் பத்திரிகைகளில் வடிவம் பெறும்போது பட்ட கஷ்டமெல்லாம் பஞ்சாய் பறந்து போகும்.

அதே ஊடக பெருமிதம் இன்றும் இருந்தாலும், ஊடகவாதி என்று சொல்லிக் கொள்ளவே சில இடங்களில் கூச்சமாக இருக்கிறது. அதுவும் சாமான்ய மக்களிடம், செய்தி சேகரிக்க செல்லும்போது இப்படி அறிமுகப்படுத்திக் கொள்ள வெட்கமாக இருக்கிறது. ஏனென்றால் ஊடகவாதிகள் விலைபோனவர்கள் என்று ஒரு சாமான்ய மனிதனும் தெரிந்து வைத்திருக்கிறான்.

அறநெறியற்ற விலை போன ஊடகங்களின் கெடுமதியின் விளைவை இன்று முஸ்லிம் சமூகம் சுமக்க வேண்டியிருக்கிறது.

ஆனால், பொய்மையால் என்னதான் 'பட்டி'ப்பார்த்து பூசி மெழுகினாலும் உண்மைகள் வெளிப்படவே செய்யும்.

அப்போதும் முஸ்லிம்கள் காலரை தூக்கிவிடாமல் தங்கள் கடமையே கண்ணாக கடந்து சென்று கொண்டேயிருப்பார்கள். ஆனால், கூச்சநாச்சமில்லாமல், வதந்தி பரப்பியவர்கள் எல்லாம் வெட்கத்தால் தலைகுனிய வேண்டியிருக்கும்.

இதைதான் டாக்டர் கார்த்திகேயனின் இந்த குரல் பதிவு சொல்கிறது. 

Share:

முஸ்லிம்களின் டிசைன் உலகம் முழுக்க ஒரே டிசைன்தான்!


'''''''''''''''''''''''''''''''
இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''
எனது இளம் வயதில் நடந்த சம்பவம் இது.

அப்போது, காலராவும், அம்மையும் கதிகலங்கடித்து கொண்டிருந்த நேரம். அதுவும் பெரியம்மை என்றாலே முகங்களில் பள்ளங்கள் விழுந்த விகாரமான தோற்றமாகிவிடும்.

இத்தகைய சூழலில் நடுநிசியில், எனது நண்பன் ராஜுவின் தாய் காலராவால் பாதிக்கப்பட்டு குற்றுயிரும், குலையுயிருமாய் ஆனார். புறநகர் பகுதியாதலால், நடுநிசியில் வாகனம் கிடைக்கவில்லை. ஒருவழியாக அலைந்து, திரிந்து வாகனம் பிடித்து காலரா ஆஸ்பிடல் என்றழைக்கப்படும் வடசென்னை தண்டையார்பேட்டையில் அமைந்துள்ள அரசு தொற்று நோய் கிருமிகளுக்கான சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் சேர்த்து ஒருவழியாக அவர் காப்பாற்றப்பட்டார்.

இந்த சூழலில் ஒருவிதமான தனிமையை எங்களுக்குள்ளாகவே நாங்கள் ஏற்படுத்தி கொண்டோம். நோயாளியை மருத்துவமனையில் சந்திப்பதிலிருந்து, நண்பர்கள் நாங்கள் ஒருவர் மற்றொருவரை சந்திப்பதுவரையிலான சூழல்களில் சற்று விலகியிருந்தே நாங்கள் சமாளித்து கொண்டோம்.

தொற்று நோய்க்கிருமிகள் பரவும் என்ற அடிப்படை அறிவியல் உண்மை தெரிந்திருந்ததைத்தவிர பெரியளவிலான மருத்துவ அறிவு நாங்கள் பெற்றிருக்கவில்லை என்பதே யதார்த்தம். இந்த நோய்க்கான வீண்பழியை எந்த மதத்தின் மீதும் நாங்கள் போடவில்லை. அப்படி ஊக்குவிக்கும் அரசும் அப்போது இல்லை.
 
அது ஒரு காலகட்டம்.

இப்போது 60 வயதை கடந்து நிற்கும்போது, எல்லாமே வித்யாசமான காலகட்டமாக தெரிகிறது.

அப்போது காலரா. இப்போது கொரானா.  அதுவும் கொரானா நோய்த்தொற்று, பச்சை வர்ணத்தால் அப்பப்பட்டு பூதகரமாக நிற்கிறது. படித்தவரிலிருந்து, பாமரர்வரை வதந்திகளால் நிரம்பி வழிகிறது.

வகுப்புவாதிகளும், பொறுப்பற்ற ஊடகங்களும் பரப்பும் வதந்திகளால் ஒரு குறிப்பிட்ட சாரரின் வாழ்வியல் முடங்கிபோயிருக்கும் நிலை தற்போது.

இந்த வதந்திகள் என்னைப்போன்ற சாதாரணமானவர்களையும் https://www.youtube.com/watch?v=JG9kEqZNYpc&t=15s பாதிக்காமலில்லை. மனஉளைச்சல்களால் துளைத்தெடுக்காமல் இல்லை.

இத்தகைய இடர்பாடுகள் நிரம்பிய சூழல்களிலும் உதவும் மனப்பான்மையும், மனித சேவையுணர்வும் முஸ்லிம் சமூகத்தில் நிரம்பிவழிவதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

நண்பர்களே,

நீங்கள் ஏதாவது ஒரு முஸ்லிம் நண்பரின் நிக்காஹ் என்றழைக்கப்படும் திருமண நிகழ்வுக்கு சென்றிருப்பீர்களானால் சில அரபி வசனங்கள் அங்கு ஓதப்படுவதை கேட்டிருக்கலாம். தற்போது, அதன் மொழியாக்கம் அந்த திருமணத்தை நடத்துபவரால் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஓதப்படுகின்றன.

ஒரு ஆணும், பெண்ணும் திருமண உறவில் இணையும் அந்த முக்கிய நிகழ்வில் ஓதப்படும் வசனத்தில் சில முக்கியச் செய்திகள் விவரிக்கப்பட்டு வலியுறுத்தப்படுகின்றன.

1 மனிதர்களே, இறைவனுக்கு அஞ்சி கொள்ளுங்கள்

2 இறைவன்தான் உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான்.

3 அந்த ஆத்மாவிலிருந்தே அதனுடைய துணையையும் படைத்தான்.

4 அவ்விருவரிலிருந்தே ஆண், பெண்களை உலகில் பரவச் செய்தான். அதனால், இரத்த பந்த உறவுகளை முறிப்பதிலிருந்து விலகி இருங்கள்.

5 இறைவன் உங்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற அச்ச உணர்வால் தவறிழைக்காமல் வாழ்ந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு முஸ்லிம் திருமணத்திலும் ஓதி வலியுறுத்தப்படும் கூட்டு சமுதாய அமைப்புக்கான ஐந்து அடிப்படை செய்திகள் இவை.

ஆக, முஸ்லிம் சமுதாயத்தின் முதலாவது அடிப்படையே இறையச்சம் எனப்படும் இறைவனுக்கு அஞ்சி வாழும் வாழ்க்கைதான்.

அது இன்பமோ, கொரானா போன்று நோய்த்தாக்குதல்களுக்கு ஆளாகும்போது, ஏற்படும் துன்பமோ எதுவானாலும் ஒரு முஸ்லிம் இறைவனுக்கு அஞ்சியவாறு வாழ வேண்டியிருக்கிறது.

இரண்டாவதாக,

பூமி பந்தில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களாவர். சகோதரத்துவ உறவுமுறை கொண்டவர்களாவர். அனைவரும் ஒரே தாய், தந்தையரின் வழி வந்தவர்கள்.  இனப்பெருமையும், குலச்செருக்கும் அறிவீனம் அன்றி வேறில்லை.

மூன்றாவதாக,

ஆணும், பெண்ணும் ஒரே இனத்தின் வழித்தோன்றல்களே! இங்கு எந்த ஆணும் உயர்ந்தவரில்லை. எந்த பெண்ணும் தாழ்ந்தவருமில்லை.

நான்காவதாக,

உறவுமுறைகளை பேணி வாழ்வது. பெற்றோர் பிள்ளைகளது உரிமைகளையும், பிள்ளைகள் பெற்றோரின் உரிமைகளையும் பேணி வாழ வேண்டும் என்பதற்கான வலியுறுத்தல்.

இந்த மனித உறவுகளுக்கான உரிமைகளும், கடமைகளும் உற்றார், உறவுகளைத் தாண்டி உலகம் முழுக்க உள்ள மனித சமூகத்தையும் உட்படுத்தி வலியுறுத்தப்படுகிறது. ஒட்டு மொத்த மனித இனமும் இந்த உறவுமுறை வரையறைக்குள் அடங்குகிறது.

கடைசியாக ஐந்தாவது முக்கிய அம்சம்,

இறைவன் தனது செயல்களை சதா கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற உள்ளுணர்வுடன் வாழும் வாழ்க்கை.

இந்த ஐந்து அடிப்படைகளை வலியுறுத்திதான் முஸ்லிம்களின் திருமணத்தின் போது நபிகளாரின் வழிகாட்டுதலின்படி திருக்குர்ஆனிலிருந்து மேலே குறிப்பிட்ட இறைவசனங்கள் ஓதப்படுகின்றன.  

முஸ்லிம்கள் பின்பற்றி வாழ முயலும் இந்த அடிப்படைகளின் முக்கிய கூறான உலக சகோதரத்துவத்தால் உந்தப்பட்டுதான் தனது அண்டை, அயலார் உறவுகளின் தேவைக்கு முஸ்லிம்கள் ஓடியோடி உதவுகிறார்கள்.

அது மழை வெள்ளமானாலும், கொரானாவால் பாதிக்கப்பட்டு உணவில்லாமல் திண்டாடும் எந்த நபராக இருந்தாலும் அவர்களுக்கு உதவ ஓடோடி செல்கிறார்கள். அடி-உதைப்பட்டு சாகிறார்கள்.

இந்த டிசைனை எங்களால் மாற்றிக் கொள்ளவே முடியாது நண்பர்களே. ஏனென்றால், இது எங்களின் இறைநம்பிக்கையோடு சம்பந்தப்பட்டிருப்பது!

அவர்கள் வெறுப்பு விதைத்தாலும் நாங்கள் அன்பையே விதைப்போம்! ஆம்.. அன்பை மட்டுமே விதைப்போம்!

 
Share:

Monday, March 23, 2020

இருள் படிந்திடுமோ என் இரவுகளில்!


கனத்துபோன மனதுடனே
இரவுகளில் நான்!
பேரானந்தம் தரும்
இரவின் அமைதியை
நடுஇரவிலும்
பசுமையுடன் இருக்கும்
என் ரசனையை
தொலைத்துவிட்டேனோ நான்?
அல்லது பறித்துவிட்டனரோ
மனுவாத பாவிகள்!

“உலகில் சிறந்த நாடு
என் நாடு
இந்திய திருநாடு..!”
என்று எத்தனை முறை
பாடியிருப்பேன்?
புளாங்கிதம் அடைந்திருப்பேன்!
எழுத்துக்களாய் வடித்திருப்பேன்!
மேடைதோறும் முழங்கியிருப்பேன்!

மீரட், பீவண்டி, பாகல்பூர்,
பாபரி மஸ்ஜித், குஜராத் என்று
இனப்படுகொலைகளால்
அவநம்பிக்கை கரு மேகங்கள்
வாழ்வில் சூழ்ந்தபோதெல்லாம்
எத்தனை எத்தனை முறை
என் தலைமுறையை
அமைதி படுத்தியிருப்பேன்!
"பொறுங்கள் பிள்ளைகளே
எல்லாம் சீராகிவிடும்!"
என்று ஆற்றுப்படுத்தியிருப்பேன்!

இன்று எல்லாம்
பறிபோகும் நிலையில்
பொய்யுரைத்தேனோ நான்?
ஆம்..!
இன்று எல்லாம்
பறிபோகும் நிலையில்
பொய்யுரைத்தேனோ நான்?

தாயகத்தின் மீதிருந்த
கண்மூடித்தனமான
'தாயகப் பித்தால்'
கடல் கடந்து பொருள்தேட
எத்தனை எத்தனை
வாய்ப்புகள் வந்தும்
அத்தனையும் புறக்கணித்த
என் இறந்தகாலம்
நையாண்டி செய்வதை ஏற்பதா?

இளமையில், கடவு சீட்டிருந்தால்
வற்புறுதப்படுவேனோ என்று
முதுமையில்
ஹஜ் வணக்கத்துக்கான கடமைவரை
அதை வாங்க மறுத்த நினைவுகள்,
கைக்கொட்டி சிரிப்பதை ரசிப்பதா?

இன்று கண்முன்னே
தலைநகர் தில்லி
வகுப்புவாத வானரங்களால்
பற்றவைக்கப்படுகிறது!
மனிதம் தோட்டாக்களால்
துளைக்கப்படுகிறது!
உணவு எரிப்பொருளும்
எதிர்காலம் சிதைக்கும் என்று
எரிவாயு உருளைகளால்
கட்டடங்கள் தகர்க்கப்படுகிறது!
வேலியாய் நின்று காக்க வேண்டிய
காவல்துறையின் பாதுகாப்பில்
அத்தனையும் நடக்கிறது!
நாட்டாமை தீர்ப்புகளாய்
நீதிமன்றங்களில்
தீர்ப்பு வாசிக்கப்படுகிறது

அந்தோ, அழகிய எனது பேரழகு
கனவுநாடு சிதைக்கப்படுகிறதே!
தெய்வமே! இது எனது தேசமா?
அல்லது ஹிட்லரின் தேசமா?
என்ற குழப்பத்தில்
சிதைந்து போகிறது எனதுள்ளம்
மௌனத்தில்
கரைந்து போகிறது எனதுயிர்காற்று

கிள்ளி கிள்ளிப் பார்க்கிறேன்
ஆம்.. என்னை
கிள்ளிக் கிள்ளிப் பார்க்கிறேன்
இது கனவாகவே இருக்கக் கூடாதா
என்று துடியாய் துடிக்கிறேன்!
நனவுகள்தான் என்றானபோது
அனலிட்ட புழுவாய் துடிக்கிறேன்!

மனுவாத எதிரி உக்கிரமாய்
இனவாத யுத்தம் தொடுத்துவிட்டும்
தமக்கென்ன என்றொரு பொது சமூகம்
என்னைச் சுற்றி!
தன் தனயனின் தாயும், மகளும்
நிர்கதியாய் நிற்பதைக் கண்டும்
ஊமையாய் நிற்கிறது
எனது அண்டை, அயலை!

இத்தனை சுமைகளையும்
பொதிகளாய் சுமந்தவண்ணம்
இன்றும் நான்
"சீராகிவிடும் கொஞ்சம்
அமைதியாய் இருங்கள்"
என்றுதான் சொல்ல முடிகிறது!
ஆம்..! இத்தனை சுமைகளையும்
பொதிகளாய் சுமந்தவண்ணம்
இன்றும் நான்
"சீராகிவிடும் கொஞ்சம்
அமைதியாய் இருங்கள்"
என்றுதான் சொல்ல முடிகிறது!

ஒவ்வொரு துன்பத்தின் பின்னும்
இன்பம் துளிர்க்கும் என்கிறது
சுற்றிச் சூழ்ந்து நிற்கும் இயற்கை!
எத்தனை எத்தனை
அநீதியாளர்களை
தன்னுள் விழுங்கி கொண்டது
இதோ நான் நிற்கும் பூமி!

இழப்பதற்கு ஒன்றுமில்லாதவன் நீ
பின்வாங்காமல் போராடு என்கிறது
என் மனஉறுதி!
உன் தேசத்தை மீட்பதற்கான
கடைசி யுத்தம் இது
இதே அஹிம்சை போராட்டத்தை
முன்னெடு அல்லது செத்துபோ
என்கிறது என் நம்பிக்கை!

இத்தனை அவநம்பிக்கைகளைக்
கடந்தும் வரலாறுகளை
எழுதிக் கொண்டிருக்கிறது
எனதருமை சமூகம்!
சமாதான ரோஜாக்களை நீட்டி
தன் குருதி மையால்
மண்ணின் மைந்தர்களின்
விடுதலைக்காக
வரலாறுகளை
எழுதிக் கொண்டிருக்கிறது
எனதருமை சமூகம்!

இன்ஷா அல்லாஹ்
ஆம்.. இறைவன் நாடினால்
இந்த சிறு பறவை ‘அபாபீல்’ கூட்டம்
மனுவாதிகளை புறமுதுகிட்டு ஓடச்செய்யும்
என்ற முழு நம்பிக்கையோடு
என் கண்களை மூடுகிறேன்!


''''''''''''''''''''''''''''''''''''''''''''''
இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Share:

Tuesday, February 25, 2020

இந்த மௌனம் கொல்கிறது நண்பர்களே!




உங்கள் மௌனம் என்னைக் கொல்கிறது நண்பர்களே!

உண்மைதான்!

உங்கள் மௌனம் எனது கொலைக்கு ஒப்பானதாய் நான் கருதுகிறேன் நண்பர்களே!

முகநூலில், ஐந்தாயிரம் நண்பர்கள். இதில் பின்பற்றாளர்கள் இன்னும் சில ஆயிரம். அப்படியிருந்தும் இன்று நாட்டில் நடந்து கொண்டிருக்கும் அராஜகம் குறித்து நீங்கள் மௌனமாக இருப்பது என்னை பெருத்த கேள்விகளால் துளைத்தெடுக்கிறது என்பதே உண்மை.

எனது பதிவுகளுக்கு நீங்கள் தெரிவிக்கும் விருப்புகள், வெறுப்புகள், அழகிய முறையில் விவாதிக்கும் பின்னூட்டங்கள், எனது ஒளிப்படங்களுக்கான உங்களது புகழுரைகள், விமர்சனங்கள் இவை எல்லாம் போலியானவை என்று உங்கள் மௌனத்தின் பொருளாய் நான் எடுத்து கொள்ளலாமா?

இன்னும் ஓரிரு மாதங்களில் பாட்டன், பூட்டன் என்று காலங்காலமாய் வாழ்ந்து வந்த ஒரு சமூகத்தின் அங்கத்தினரான எனது குடியுரிமை சம்பந்தமாக வளர்ந்து நிற்கும் கேள்விக்குறியும், அனுதினமும் நாட்டில் நடக்கும் பதட்டங்களுமாய் கழியும் பொழுதுகள் ஒருவேளை நீங்கள் உள்வாங்காமலிருக்கலாம்.

ஆனால், நானும் என்னைச் சார்ந்தோரும் இந்த நாட்டின் பூர்வகுடிகள் என்று உயிருடன் நெஞ்சை கிழித்து காட்டிகொண்டிருக்கும் முயற்சிகளை நான் எப்படி உங்களிடம் விவரிப்பேன் நண்பர்களே!

கோபம், வருத்தம், கவலை என்று என்னைச் சுற்றியும் படர்ந்து நிராசையுடன் ஒருவர் மற்றொருவரைப் பார்க்கும் நிலையில் உங்களது மௌனம் என்னை பெரிதும் கொல்கிறது தோழர்களே!

நாட்டின் அமைப்பு சட்டத்துக்கு எதிராக, அதன் பன்முகத்துக்கு எதிராக மனுவாதிகள் நடத்திவரும் அட்டூழியங்கள் எங்களுக்கு மட்டுமானவை அல்ல நண்பர்களே உங்களையும் பாதிப்படைய செய்ய இருப்பவை என்பதை காலங்கடந்துதான் உணரப் போகிறீர்களா? அன்று நான் இருப்பேனோ என்னவோ தெரியாது.

நாம் எல்லோரும் ஒன்று என்றால் இல்லை என்கிறார்கள் மனுவாதிகள்.

நீங்களோ யாருக்கோ ஆனதுபோல சம்பந்தமின்றி மௌனமாக இருக்கிறீர்கள்.

ஒரே ஒரு ஆறுதல் வார்த்தையும் சொல்ல மறுக்கிறீர்கள். இந்த மௌனம் என்னைக் கொல்கிறது நண்பர்களே
 
எங்கள் உணவுமுறையில் கைவைத்தார்கள் மனுவாதிகள்.

மாட்டுக்கு தரும் மரியாதையை மனித உயிருக்கு தராமல் உயிருடன் அடித்துக் கொன்றார்கள். வேதனைகளை அடக்கிக் கொண்டு அமைதி காத்தோம்.

உங்களை எவ்வகையிலும், பாதிக்காத எங்களது வாழ்வியல் சட்டங்களில் முத்தலாக்என்று கை வைத்தார்கள் மனுவாதிகள்.

அமைதி குலையக்கூடாதென்று அப்போதும் பொறுத்துக் கொண்டோம்.

எங்கள் வழிபாடு தலத்தை இடித்து தரைமட்டமாக்கினார்கள் மனுவாதிகள்.

நாட்டின் உயரிய நீதிபரிபாலனம் நடுநிலையாக நிற்கும் என்ற நப்பாசையில் பல்லாண்டுகள் காத்து கிடந்தோம்.

இடித்தவனுக்கே நிலம் சொந்தம் என்று ஒரு விசித்திரமான ஒரு தீர்ப்பு எழுதப்பட்டது. அதையும் பொறுத்துக் கொண்டோம்.

கடைசியில், குடியுரிமை என்ற பெயரில், எம் மண்ணிலிருந்து அப்புறப்படுத்த மனுவாதிகள் நினைக்கும்போது, மௌனமாக நிற்போம் என்றா நினைத்தீர் நண்பர்களே?

இறுதியாக ஒன்றே ஒன்றுதான் சொல்ல நினைக்கிறேன். அன்று வெள்ளையனை விரட்ட எழுந்த முதல்குரல் இங்கிருந்துதான் எழுந்தது.

இன்று நாட்டின் அமைதியை, அதன் பன்முகத்தன்மையை சூறையாட நினைக்கும் கொள்ளையரை, மனுவாதிகளை விரட்ட மீண்டும் ஒலித்திருக்கும் குரல் இங்கிருந்துதான்!

எங்கள் கொள்கையை ஒருவேளை வாசித்திருந்தால் ஒன்று உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும் நண்பர்களே. "இறைவன் புறத்திலிருந்து வந்தோம்! மீண்டும் இறைவன் புறத்தில் திரும்பி செல்பவர்களாகவே இருக்கிறோம்!" - என்று ஒவ்வொரு கணமும் எங்களுக்கு எங்கள் முன்னோர்கள் ஊட்டி வளர்த்ததைப் போலவே எங்கள் பிள்ளைகளுக்கும் ஊட்டி வளர்க்கிறோம்.

அதனால், இழப்புகள் எதுவாயினும் அவை இறைவனுக்காகவே என்று உள்வாங்கி வளர்ந்தவர்கள் நாங்கள். எங்களை வாசித்திருந்தால் நண்பர்களே இந்த எஃகு உறுதியை உங்களால் புரிந்து கொண்டிருக்க முடியும்.

மனுவாதிகள், உங்கள் வீட்டு கதவுகளைத் தட்டும் முன் உங்களுக்கும் அரணாய் நின்று அவர்களைத் தடுத்திட நினைக்கிறோம் நண்பர்களே!

ஒருவேளை.. ஆம்.. ஒருவேளை, இந்த அஹிம்சை போராட்டத்தில் மரணமுற நேர்ந்தால் மண்ணறை அருகிலாவது உங்களது மௌனத்தை கலைப்பீரா நண்பர்களே!

 





Share:

Monday, January 6, 2020

இதோ வந்துவிட்டார்கள் உங்கள் வாசல்முன்



இதோ
வந்துவிட்டார்கள்
அவர்கள்

நேற்று ஏஎம்யூ
இன்று ஜேஎன்யூ
நாளை
உங்கள் வீட்டு
வாசல் முன்

இதோ வந்துவிட்டார்கள்
அவர்கள்..
உங்கள் வாசல் முன்..!
அய்யகோ..
கேட்க நாதியற்ற
கையறு நிலையில்
நீங்கள்..!

நெஞ்சம் பதறும்
உங்கள் கண்முன்..
வாழ்நாள் முழுக்க
பணயம் வைதது
சம்பாதித்த சொத்து-சுகங்கள்
தீ வைத்து கொளுத்தப்படலாம்!
ஈரல் குலை.. கண்மணிகளின்
கற்புகள் பறிபோகலாம்..!
வாரிசு கனவுகளின் வயிறுகள்
கிழிக்கப்படலாம்..
"அம்மா-அப்பா" என்று
யாழினும் இனிதாய்
உறவுகளைத்
தொடுக்கும்
எதிர்க்கால கனவு சிசுக்கள்
சுவறுகளில் மோதி
தலை உடைத்து
வீசப்படலாம்..!
தனயன் முன்
தாயின் மானம், மரியாதை
பறிக்கப்படலாம்.
உங்கள் சின்னஞ்சிறார்கள்
வல்லுறவுக்காளாகலாம்!
நேற்றைய குஜராத்
மீண்டும் உயிர் பெற்றெழலாம்!

இதோ வந்துவிட்டார்கள் அவர்கள்
மனுதர்மம் ஏந்தி கொண்டு
ஓராயிரம் வஞ்சக திட்டங்களுடன்
உங்கள் சொந்த உதிரங்களை
ஓரணியில் படையாய்
திரட்டி கொண்டு
சர்வ ஆட்சி அதிகாரத்துடன்
இதோ வந்துவிட்டார்கள்
அவர்கள்..

நேற்று.. ஏ.எம்.யூ
இன்று ஜேஎன்யூ
நாளை உங்கள் வாசல் முன்..

இதோ வந்துவிட்டார்கள அவர்கள்
மனுதர்மம் ஏந்தி கொண்டு
பாபா அம்பேத்கரின்
சமதர்ம சட்டங்களை வீசி எறிந்து..
ஆர்ப்பரிப்பு... கொக்கரிப்போடு
இதோ வந்துவிட்டார்கள் அவர்கள்.

நேற்று ஏ.எம்.யூ
இன்று ஜே.என்.யூ
நாளை
உங்கள் வீட்டு
வாசல் முன்
இதோ வந்துவிட்டார்கள் அவர்கள்

அய்யகோ..
கேட்க நாதியற்ற
கையறு நிலையில்
நீங்கள்..!
Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive