NewsBlog

Friday, June 23, 2017

ஆப்பிள் பழமும், மூதறிஞர் ஜமீல் அஹமதும்..!


மூதறிஞர் தொடர்ந்தார்: “இந்த ஆப்பிளின் பின்னணியில் ஓர் அற்புதமான வரலாறு இருக்கிறது. நீங்கள் அதை எழுத வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் இல்லஸ்ட்ரேட் வீக்லி ஆஃப் இந்தியாவில் நான் ஒரு கட்டுரையை வாசித்தேன். ஆப்பிள் இந்தியாவுக்கு வந்தது சம்பந்தமான கட்டுரை அது. நீங்கள் அந்தக் கட்டுரையை வாசித்துவிட்டு எழுத வேண்டும்” – என்றார்.~இக்வான் அமீர்

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

”நாளொன்று ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவர் தேவையே இல்லை” (An Apple a day keeps the doctor away) – என்றொரு சொலவடை உண்டு.

அது சரி… வட அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட ஆப்பிள் பழம் இந்தியாவுக்கு எவ்வாறு வந்தது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

இந்த கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன்பாக ஒரு சின்ன பிளாஷ் பேக் சொல்லியே ஆக வேண்டும்.

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
ஒருநாள், மூதறிஞர் ஜமீல் அஹ்மது சாஹெப்பிடம் பேசிக் கொண்டிருந்த போது, தமக்கு முன்னால் தட்டில் வைத்திருந்த பழத்துண்டுகளில் ஓர் ஆப்பிள் துண்டை எடுத்துக் காட்டி ”இக்வான் சாப்.. இதோ இந்த ஆப்பிள் நமது நாட்டுக்கு எப்படி வந்தது என்ற கதை உங்களுக்குத் தெரியுமா?” – என்று கேட்டார்.

எந்த பதிலும் சொல்லாமல் மௌனம் காப்பதே சரியாக எனக்குத் தோன்ற அவ்வாறே செய்தேன்.

”இந்த ஆப்பிள் இந்தியாவுக்கு வந்ததற்கும், இயக்கத்துக்கும் பெரும் தொடர்பு இருக்கிறது. உண்மைதான், ஓர் இயக்கவாதி தனது இலக்கை அடைய எப்படி எல்லாம் அர்ப்பணிக்க வேண்டும்? மக்களை சீர்த்திருத்த எப்படி எல்லாம் உழைக்க வேண்டும் என்பதற்கு நல்லதொரு உதாரணம் அது.”

பேசுவதைவிட கேட்பது எனக்கு அதிகம் பிடிக்குமாதலால் நான் கவனமாக கேட்க ஆரம்பித்தேன்.

மூதறிஞர் தொடர்ந்தார்: “இந்த ஆப்பிளின் பின்னணியில் ஓர் அற்புதமான வரலாறு இருக்கிறது. நீங்கள் அதை எழுத வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் இல்லஸ்ட்ரேட் வீக்லி ஆஃப் இந்தியாவில் நான் ஒரு கட்டுரையை வாசித்தேன். ஆப்பிள் இந்தியாவுக்கு வந்தது சம்பந்தமான கட்டுரை அது. நீங்கள் அந்தக் கட்டுரையை வாசித்துவிட்டு எழுத வேண்டும்” – என்றார்.

அப்போது, இல்லஸ்ட்ரேட் வீக்லி ஆஃப் இந்தியா மூடுவிழா கண்டிருந்தது.

நான் இதைக் குறித்து சொன்னதும், ”ஆமாம்..! ஆனால், அந்த பத்திரிகை அலுவலகம் சென்று பழைய இதழ்கள் குறித்து கேட்டு குறிப்பிட்ட இதழ் கிடைக்கிறதா என்று முயற்சி செய்யுங்கள்!” – என்று அவர் வழியும் சொன்னார்.

அதன் பின்னும் பலமுறை மூதறிஞர் ஜமீல் அஹமது சாஹெப் எனக்கு ஆப்பிள் வரலாறு சம்பந்தமாக நினைவூட்டியவாறே இருந்தார்.அவரது மறைவுக்கு பின்னும் என்னால் அந்தக் கட்டுரையை எழுத முடியவில்லையே என்ற வருத்தம் என்னை சதா அலைக்கழித்தவாறே இருந்தது.

மேற்படி கட்டுரை வெளியான இதழ் எனக்கு கிடைக்கவேயில்லை. ஆனாலும் நான் தேடுவதை நிறுத்தவே இல்லை.

இது நடந்து பத்தாண்டுகளுக்கு மேலாக இருக்கும். சமீபத்தில் ஒருநாள் கூகுளில் தேடிக் கொண்டிருந்தபோது அந்தக் கட்டுரை சம்பந்தமான தகவல்கள் எனக்குக் கிடைத்தன.

எல்லையற்ற மகிழ்ச்சி எனக்கு. எனது ஆசானின் ஆசையை உயிருள்ள போது நிறைவேற்ற முடியாவிட்டாலும், அவரது மரணத்துக்கு பின்னாவது தட்டாமல் நிறைவேற்றும் மகிழ்ச்சி அது. அதுவும் ரமளானின் ஆயிரம் மாதங்களைவிட கண்ணியம் மிக்க லைலத்துல் கத்ர் இரவில் இதை எழுதி முடிக்கும் வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றியும்… புகழும்..!

மௌலானா தங்கள் ஆசையை நான் நிறைவேற்றிவிட்டேன். காலமே நீ சாட்சியாக இரு! வாசிப்போரே நீங்களும் சாட்சிகளாக இருங்கள்..!

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

இந்தியாவில் முதன் முதலாக ஆப்பிள் பழக்கன்று பிரிட்டீஷ் ராணுவத்தைச் சேர்ந்த R.C லீ என்பவரால் குளு பள்ளத்தாக்கில் 1870-ல், நடப்பட்டது. நியூவ்டவுன் பிப்பின்ஸ், கிங் ஆஃப் பிப்பின், கோக்ஸ் ஆரஞ்ச் பிப்பின் போன்ற பழ வகைகளை அவர் நமது நாட்டில் அறிமுகப்படுத்தியபோதும் அவற்றின் புளிப்பு, இனிப்பு கலந்த சுவையால் அவ்வளவாக நமது விவசாயிகளின் வரவேற்பை பெற முடியவில்லை. மா, பலா போன்ற சுவை மிகுந்த பாரம்பர்ய பழங்களை விளைவித்து வந்த இந்திய விவசாயிகள் ஆப்பிளின் சுவையை விரும்பவில்லை என்பது வியப்பான செய்தியும் அல்ல.

இந்நிலையில்தான் அந்த இளைஞர், வணிக ரீதியாக ஆப்பிள் பழங்களை விளைவித்து பின்தங்கியிருந்த இமாச்சலப்பிரதேசத்தின் ஏழ்மையை விரட்டியடித்தார்.

சாமுவேல் இவான் ஸ்டோக் என்ற பெயர் கொண்ட அந்த இளைஞர், ஆகஸ்ட் 6-1882-ல், அமெரிக்காவின் பிலடெல்பியாவின் புறநகர் பகுதியில் பிறந்தார்.

1900-ல், நியூயார்க்கின் மொஹெகென் லேக் ராணுவ அகடாமியில் பட்டப்படிப்பை முடித்தார். மேற்படிப்புக்காக கார்னெல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

சமூக சேவைகளில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்த சாமுவேல் ஸ்டோக் ஒருமுறை கிருத்துவ தேவாலயத்தில் ஒரு சொற்பொழிவைக் கேட்கும் வாய்ப்பைப் பெற்றார். இந்தியாவில் தமது வாழ்நாள் முழுவதையும் தொழுநோயாளிகளின் சேவைக்காக அர்ப்பணித்திருந்த மருத்துவரான டாக்டர் கார்ல்டன்னின் சொற்பொழிவுதான் அது. சமூகத்தால் தனிமைப்படுத்தப்படும் தொழுநோயாளிகளின் பரிதாபகரமான நிலைகுறித்து உள்ளம் நெகிழச் செய்யும் அந்த சொற்பொழிவு அந்த இளைஞரை உடையச் செய்தது. நிலைகுலைந்து போனவர் கண்ணீர் சிந்தி அழலானார். இதுவே அவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. கடைசியில் தனது மேற்படிப்பை தொடர மனமில்லாமல் டாக்டர் கார்ல்டன்னோடு சமூகப் பணிகளில் தம்மை இணைந்து கொண்டார்.

ஜனவரி 9- 1904-ல், டாக்டர் கார்ல்டன் குடும்பத்தாரோடு இந்தியாவை அடைந்த சாமுவேல் ஸ்டோக் பிப்ரவரி 26, 1904-ல் மும்பையை அடைந்தார்.

தொழுநோயாளிகளின் இல்லம், இமாச்சலப்பிரதேசத்தின் அடிவாரத்தில் கிருத்துவ மெஷினரியால் 1868-ல், அமைக்கப்பட்டிருந்தது.

சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டிருந்த தொழுநோயாளிகளை டாக்டர் கார்ல்டன்னும் அவரது துணைவியாரும் கவனித்து வந்தனர். இங்குதான் மனித இனத்துக்கான சேவையை சாமுவேல் ஸ்டோக் முதன் முதலில் ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில், தொழுநோயாளிகளின் தோற்றம் கண்டு அதிர்ச்சியுற்ற சாமுவேல் ஸ்டோக் அதன்பின், அவர்கள் மீது இரக்கம் கொண்டார். அவர்களின் துன்பம் தீர சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார்.

தொழுநோயல் பாதிக்கப்பட்டு ஆதரவற்றிருந்த 4 வயது கிர்பா ராமை தத்து எடுத்துக் கொண்டார்.

தனது பணியின் எல்லையான பஞ்சாபின் பல பகுதிகளுக்கு டாக்டர் கார்ல்டன்னோடு பயணம் செய்தார். கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டு நோயுற்றார். குணமடைந்ததும், சட்லுஜ் நதிக்கரையில் அமைந்திருந்த கோட்கர் என்னும் குக்கிராமத்துக்கு அனுப்பப்பட்டார்.

1815-ல், அமர் சிங் தாபாவின் தலைமையில் திரண்ட நேபாளி படையினரை பிரிட்டீஷ் படையினர் தோற்கடித்தனர். கோட்கரில் படைத்தளத்தையும் அமைத்தனர். 1872-ல், சிறிய சர்ச் ஒன்றும் அங்கு கட்டப்பட்டது. பசுமையும், குளிர்ச்சியும் மிக்க இந்த இடத்தால் மனம் கவரப்பட்ட சாமுவேல் ஸடோக் அங்கேயே தங்கி தமது பணிகளைத் தொடர முடிவெடுத்தார். வெகு விரைவிலேயே மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள நபராக மாறிவிட்டார்.

1905-ல், இமாச்சல மலையடிவாரத்தில் அமைந்திருந்த கங்கரா நகர் நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதை அறிந்த சாமுவேல் ஸ்டோக் மீட்புக்குழுவினரோடு அங்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டார்.

நிலநடுக்கத்தில், பெற்றோரை பறிக்கொடுத்த நூற்றுக்கணக்கான குழந்தைகள் அனாதைகளாயினர். ஆயிரக்கணக்கானோர் வீடுகள் இடிந்து தெருவில் நின்றனர். இந்தச் சூழலில் ஐந்து குழந்தைகளை சாமுவேல் ஸடோக் தத்தெடுத்துக் கொண்டார்.

1910-ல் சாமுவேல் ஸ்டோக்கின் தந்தையார் மரணமுற்றதைத் தொடர்ந்து அவர் அமெரிக்கா சென்றார். 1911-ல் இந்தியா திரும்பியவர் உள்ளுரைச் சேர்ந்த பெண் அக்னெஸ்ஸை மணந்து கொண்டார்.

இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த எம்மா மாடில்டா பேட்ஸ் என்னும் விதவை சீமாட்டி, தனது தேயிலைத் தோட்டத்தை விற்பனை செய்துவிட்டு பழையபடி இங்கிலாந்து திரும்பி செல்ல விரும்பினார். அந்த தோட்டத்தை விலைக்கு வாங்கி சாமுவேல் ஸ்டோக் விவசாயம் செய்ய ஆரம்பித்தார்.

பின்தங்கியிருந்த பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆப்பிள் பயிரிடுவது உகந்தது என்று முடிவெடுத்த அவர் 1914-ல், தமது பண்ணையின் மண் மாதிரிகளோடு அமெரிக்கா சென்றார். திரும்பிவரும்போது, ஐந்து விதமான ஆப்பிள் பழக்கன்றுகளை உலகப் புகழ் பெற்ற ஸ்டார்க் பிரதர்ஸ் ஆஃப் லூசியானா நாற்றுப் பண்ணையிலிருந்து கொண்டு வந்து நடவு செய்தார்.

ஆப்பிள் குறித்து உள்ளுர் விவசாயிகளிடம் விழிப்புணர்வு பரப்புரைகளை தொடர்ந்து மேற்கொண்டார். அது அவ்வளவு எளிதான பணியாக இல்லை. பழமையான விவசாய முறைமைகளிலிருந்து நவீன விவசாய முறைகளுக்கு அவர்களை மாற்ற மிகவும் உழைக்க வேண்டியிருந்தது. இதற்காக தனது பண்ணைக்குள் ஒரு பள்ளிக்கூடத்தை அமைத்து உள்ளுர் குழந்தைகள் கல்வி கற்ற ஏற்பாடு செய்தார். அந்தக் குழந்தைகளுக்கு பல்வேறு பழவகைகளை பயிரிடுவதற்கான யுக்திகளை அவர்களுக்கு சிறுவயதிலிருந்தே போதித்தார். படித்து முடித்த குழந்தைகள் வளர்ந்து ஆளாகியதும் விவசாய நுணுக்கங்களில் திறமையானவர்களாக மாறத்தான் அந்த ஏற்பாடு.

ஆப்பிள் பயிரிடுவதன் மூலமாக பொருளாதார வளர்ச்சிக்கு உதவியதோடு நில்லாமல் பின்தங்கிய மக்கள் வாழும் அத்தகைய மலைப்பகுதிகளில் ஆப்பிள் பயிர் ஒன்றுதான் அவர்களின் வாழ்வை வளப்படுத்துவதற்கான ஒரே தீர்வு என்பதை செயல் ரீதியாக நிரூபித்தார்.

இந்தியாவைத் தொடர்ந்து நேபாளத்துக்கும், பூடானுக்கும் ஆப்பிள் சென்ற கதை இதுதான்.

ஓர் இயக்கவாதி தனது கொள்கை, கோட்பாடுகளை நிறைவேற்ற தியாகங்களால் முன்னெடுத்துச் சென்ற கதை. ஒவ்வொரு இயக்கத்தாரும் படித்து பாடம் பெற வேண்டிய உண்மை கதை.

ஆதார இணைப்பு
“““““““““““““““““““““““““““
http://www.himachaltravelblog.com/…/thanedhar-a-story-of-…/…
https://en.wikipedia.org/wiki/Satyananda_Stokes

Share:

2 comments:

  1. Dear Br Kkhwan Ameer! Assalamu Alaikum!

    On seeing your Article about Jameel Bhai's request and about your affinity with him I am posting my memoirs about him.

    Mattakkar Jameel Ahmed Bhai is a great personality of Indian Islamic movement. He is the man who Shaped me as a Dhayee. He trained a lot of people as Dhayees including many Ameers - Leaders of JIH in Tamilnad and other states. He is a rarest of rare personalities difficult to find in public service.

    Allah gave me an opportunity to spend a considerable span of my life in my young age. He was true to what he preached. He was a driving force behind many people like You and Me. He motivated us to serve our Deen through his sincerity and dedication to the mission of Islam.

    He founded IFT Chennai by his sweat and blood and developed it to a large extent. Being a Urdu speaking man though hailing from Tamil speaking ancestry of Vaniyambadi it is amazing he learnt Tamil speaking and even literal writting with great translation skill. He even taught people like me how to translate Islamic books in to Tamil from other languages and trained us in that art in a novel way.

    He worked through out his life for the Islamic cause ceaselessly and relentlessly. I am also one of his discoveries. I cannot forget his ways of moulding me to see me useful for the cause of Islam.

    He discovered skills of younger generation in different fields and encouraged them to use their skills to promote Islamic Dawah

    When ever I think of him my heart gets filled with grief, my eyes shed tears and my lips spontaneously pray to Allah the Almighty to shower on him abundant blessings in both the worlds.

    I salute my brother Ikhwan Ameer for his timely tribute to Jameel bhai.

    I seek your pardon for not writing this message in our mother tongue Tamil. It is due to my ignorance of Tamil typing in mobile. I am ashamed of it. Pray for me to learn how to post Tamil messages in Whatsapp and Facebook.

    Br in Islam Kanchi Abdul Rauf Baqavi .

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அழகான பின்னூட்டத்திற்கு நன்றி மௌலானா

      Delete

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive