NewsBlog

Friday, June 16, 2017

அந்த பஞ்சாயத்துக்கான தீர்ப்பை அவனிடமே விட்டுவிடுவோம்..!



என்னைக் கேட்டால் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட பெரும்பாலோர் நபிகளாரின் திருச்செய்தி என்னவென்று அறியாதவர்கள்தான் என்பேன். ~இக்வான் அமீர்

“““““““““““““““““““““““““““““““““““““““““““

இரண்டு நாட்களுக்கு முன், நண்பர் ஒருவர், வாட்ஸ்அப்பில் நிகழ்படம் (நிகழ்ச்சியை அசையும் படமாகப் பதிவு செய்து காணல்) ஒன்றை எனக்கு அனுப்பியிருந்தார்.

உள்ளரங்கு நிகழ்ச்சி அது.

தலைப்பாகை, நீண்ட தாடி என்றிருந்த ஒருவர், தமிழ் மொழியை சிதைத்து உரையாற்றிக் கொண்டிருந்தார்.

ஐந்து நிமிடங்களுக்கான அந்தப் பதிவு, இறைவனிடம் நம்பிக்கையோடு இறைஞ்சுதல் சம்பந்தமானது. அதற்கு ஒப்புமை காட்டியது சகோதர சமயத்தாரின் நம்பிக்கையை!

உண்மையிலேயே இவர் யார் என்று எனக்குத் தெரியாது. எந்த அமைப்பைச் சார்ந்தவர் என்றும் தெரியாது. ஆனால், பயன்படுத்திய வார்த்தைகளோ சிலை வணங்கிகள், காஃபிர்கள். அதன்பிறகு அவர் பேச்சு எனக்கு அறவே பிடிக்கவில்லை.

நாம் திரும்ப… திரும்ப செய்யும் தவறுகள் மிக எளிதாக சம்பந்மேயில்லாமல் சொற்களை கொட்டுவதும், பட்டங்களைச் சூட்டுவதும்தான்!

• படைத்தவன் யார் என்று தெரிந்தும் மனம் முரண்டாக அவனை நிராகரிப்பதற்கும்,

• படைத்தவன் கட்டளைகள் இவைதான் என்று தெரிந்து அவற்றை ஏற்கப் பிடிக்காமல் மனதிற்கு திரையிட்டுக் கொள்வதற்கும்,

• படைத்தவன் குறித்த சரியான புரிதல் இல்லாமைக்கும் எவ்வளவோ வேறுபாடுகள் உண்டு.

“ஷிர்க்“ என்ற இணைவைப்பும், “குப்ர்“ எனப்படும் இறைமறுப்பும் விரிந்த பொருள் கொண்ட வார்த்தைகள். மாற்று சமூகத்தை நோக்கிதான் இவை பாயும் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை. சொந்த சமூகத்தை நோக்கியும் பாயலாம். முடிவில்லாத சர்ச்சைகளில் சமூகத்தை சிக்க வைக்கலாம்.

அதனால், எல்லா மனிதர்களையும் படைத்து, பரிபாலிக்கும் இறைவனிடமே இந்த பஞ்சாயத்துக்கான தீர்ப்பை விட்டுவிடுவோம்.

இது விளங்காமல் வார்த்தைகளில் ஒருவிதமான வெறுப்பை உமிழ்ந்து பேசுவது கடும் எதிரிகளையும் நேசித்த அன்பு நபிகளாரை தலைவராக ஏற்ற சமூகத்துக்கு அழகல்ல.

என்னைக் கேட்டால் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட பெரும்பாலோர் நபிகளாரின் திருச்செய்தி என்னவென்று அறியாதவர்கள்தான் என்பேன்.

வரலாற்றுக் கால கொடியவன் “பாரோ“ என்று பரவலாக அழைக்கப்படும் சர்வாதிகாரி, இறுமாப்பால் தன்னை இறைவன் என்று பிரகடனம் செய்து கொண்டவன் எகிப்தின் பிர்அவ்ன். அந்த கொடுங்கோலனிடம் மூஸா நபியை அனுப்புகிறான் இறைவன்.

படைப்பின் இயல்பான மனிதனுக்கு அளிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட சுயஅதிகாரத்துக்கும், விதிக்கும் இடையிலான ஒரு மெல்லிய இழையினூடே நகருகிறது அந்த வரலாற்று சம்பவம். அதில் இறுதி வாய்ப்பாய் தன்னைக் குறித்து அறிவுறுத்த மூஸா நபிக்கு ஆணையிடுகின்றான் இறைவன். ஒருவேளை கொடுங்கோலன் பிர்அவ்ன் மனம் திருந்தலாம் என்று தாயன்போடு அளிக்கப்படும் வாய்ப்பு அது.

இந்த புரிதலை உள்வாங்கியவர்கள் மேலே சொன்ன சகோதரர் அர்ஜுன் சம்பத்வரை இறைவனின் திருச் செய்தியை சேர்ப்பதில் எந்த கருத்து வேறுபாடும் கொள்ள மாட்டார்கள்.

எங்கள் எதிர் வீட்டு கிருத்துவ குடும்பத்தார் சென்றாண்டுவரை நோன்பு கஞ்சிவரை எந்த பேதமும் பார்க்காமல் சகஜமாக வாங்கி குடிப்பார்கள்.

ஆனால், இப்போது என்னவோ நாங்கள் தீண்டத் தகாதவர்களைப் போலவே எங்களிடம் நடந்து கொள்கிறார்கள். ஊரெல்லாம் ரமலானின் புனிதமான உணவாய் அருந்தும் நோன்பு கஞ்சியை ஏற்க மறுக்கிறார்கள். புதிதாய் அவர்கள் சேர்ந்து வழிப்படும் அமைப்பின் ஷிர்க் எனப்படும் இணை வைப்பாளர் பட்டியலில் நாங்கள் இடம் பெற்று விட்டோமோ என்னவோ!

நாம் விளங்க மறுப்பது போலவேதான் இதுவும்.


Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive