"கார்ல் மார்க்ஸிலிருந்து, நபிகளார் பக்கம் என்னை திருப்பியவை மௌலானா மௌதூதியின் புத்தகங்கள்தான் என்பதை நான் நேரிடையாகவே சொல்ல முடியும். என் வாசிப்புக்கும், என்னுள் எழுந்த கேள்விகளுக்கும் புரிதல்களாகி என்னை திருக்குா்ஆன் பக்கமும், திருநபிகளார் வாழ்வியல் பக்கமும், அந்த வாழ்வியலை தலைமேல் சுமந்து நின்ற நபித்தோழர், தோழியர்கள் பக்கமும், அதைத் தொடர்ந்து அவற்றை பெரும் பாடுபட்டு ஆதாரபூர்வமாக தொகுத்தளித்த பேரறிஞர்கள் பக்கமும் அந்தப் புத்தகங்கள்தான் என்னை திசை திருப்பியவை. ஜமாஅத்தே இஸ்லாமி என்னும் பேரியக்கத்தோடு என்னை இணைத்தவை" ~இக்வான் அமீர்
````````````````````````````
முகநூலில் நான் யாரையும் 'டாக்' செய்வதில்லை. அப்படியிருந்தும் பலர் என்னை “டாக்“ செய்து அதைத் தொடர்ந்து வரும் நோட்டிபிகேஷன் தொல்லையில் சிக்க வைக்கிறார்கள்.இது ஒருபுறமிருக்க… அண்மையில் சகோதரர் ஒருவர் என்னை “டாக்“ செய்திருந்தார். அதில் ஒரு இஸ்லாமிய அறிஞர் எழுதிய புத்தகத்தை மையப்படுத்தியும் இருந்தார்.
பேரறிஞர் மௌலானா மௌதூதியால் அமைக்கப்பட்ட ஜமாஅத்தே இஸ்லாமி ஒரு புதுவிதமான அமைப்பை சமூகத்தில் தோற்றுவிப்பதாக குற்றச்சாட்டு அதில் எழுப்பப்பட்டிருந்தது. அந்த விவாதத்தில் 'மல்லுக்கட்டுக்கு வா..!' - என்று என்னையும் இழுத்துவிடும் விதமாக கமெண்டில்வேறு என் பெயரை சேர்த்திருந்தார்.
நான் விவாதங்களில் எப்போதும் கலந்து கொள்வதில்லை. அதுவும் இத்தகைய விவாதங்கள் வீணானவை. நமது நேரத்தை கொள்ளைக் கொள்பவை.. என்பது நான் இஸ்லாத்தை ஒப்பி ஏற்றுக்கொண்ட 80-களிலிருந்தே இதை நன்றாக அறிந்து வைத்திருப்பவன்.
நாத்திகவாதத்திலிருந்து இறைநம்பிக்கையாளனாக நான் மாறிய நிலையிலும் என்னை இந்த முஸ்லிம் சமூகம் சும்மா விடவில்லை. அநாகரீக விமர்சனங்கள் ஒரு பக்கம் என்றால், வழிகேடன், ஷியா, காதியானி என்று வாய்க்கு வந்தார்போல ஏச்சு, பேச்சுக்கள் பட்டங்கள் இலவசமாக வாரி… வாரி வழங்கியிருக்கிறது. பொதுத்தள நாளேடுகளின் படியேறி எனது எழுத்துக்களை தடைப்போட எவ்வளவோ முயற்சித்திருக்கிறது. இதில் கற்றவர், கல்லாதவர் எல்லாம் அடக்கம்.
கார்ல் மார்க்ஸிலிருந்து, நபிகளார் பக்கம் என்னை திருப்பியவை மௌலானா மௌதூதியின் புத்தகங்கள்தான் என்பதை நான் நேரிடையாகவே சொல்ல முடியும். என் வாசிப்புக்கும், என்னுள் எழுந்த கேள்விகளுக்கும் புரிதல்களாகி என்னை திருக்குா்ஆன் பக்கமும், திருநபிகளார் வாழ்வியல் பக்கமும், அந்த வாழ்வியலை தலைமேல் சுமந்து நின்ற நபித்தோழர், தோழியர்கள் பக்கமும், அதைத் தொடர்ந்து அவற்றை பெரும் பாடுபட்டு ஆதாரபூர்வமாக தொகுத்தளித்த பேரறிஞர்கள் பக்கமும் அந்தப் புத்தகங்கள்தான் என்னை திசை திருப்பியவை. ஜமாஅத்தே இஸ்லாமி என்னும் பேரியக்கத்தோடு என்னை இணைத்தவை.
ஒரு பத்தாண்டு காலம் ஜமாஅத்தில் இணைந்து நான் பணியாற்றியது மறக்க முடியாதது. மிகைத்தலாக கருதினாலும், அந்தப் பணிதான் எனது சுவனம் என்று என்னுள் ஆழமான கருத்துருவாக்கத்தை எழுப்பிய காலகட்டமது. எனது போதாத காலகட்டமோ அல்லது தொலைதூர சிந்தனையாக செயல்பட்டதால் என்னவோ ஒரு “டெக்னிகல் நாக்அவுட்டில்“ நான் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டேன்.
ஜமாஅத்திலிருந்து நான் நீக்கப்பட்டாலும், இறையருளால் பாலர் பருவத்திலிருந்தே நான் உருவாக்கிய இளைஞர், இளைஞிகளும், அவர்களின் அரிய ஆள்வளம் வெளியில் சென்று வீணாகிவிடக்கூடாதே என்ற பதைபதைப்புடன் அவர்களிடையே உருவாக்கிய மணப்பந்தங்களும் இன்றளவும் தில்லிவரை இந்த வட்டம் பேசப்படுகிறது என்பது பெருமையான செய்தியும்… இறைவன் தரப்பிலிருந்து எனக்கு இவ்வுலகிலேயே கிடைத்த சீரிய வெகுமதியுமாகும்.
ஜமாஅத்தோடு இணைந்து நான் செய்த பணிகளின் விளைவுகள், ஜமாஅத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னும் அதன் ஒத்துழைப்பாளராக இருந்து செய்து கொண்டிருக்கும் பணிகளின் விளைவுகள் என்று ஒரு கால்நூற்றாண்டு கால பணிகள் சமூகம் சார்ந்த பொறுப்புகள்தான் என்று என்னால் உறுதியாக அதிலும் அனுபவபூர்வமாக கூறமுடியும். மாறாக இஸ்லாத்தில் ஒரு புதுவிதமான அமைப்பை உருவாக்குபவை என்ற குற்றச்சாட்டு அபத்தமானது. எவ்வித உண்மையும் அற்றது.
மௌலான மௌதூதியால் உருவாக்கப்பட்ட ஜமாஅத்தே இஸ்லாமி, மௌலானாவின் நூல்களை அமைப்பின் கட்டமைப்புக்காக வாசிப்பு நூல்களாக வைத்திருக்கிறது.
ஆனால், ஜமாஅத்தின் கொள்கையும், கோட்பாடுகளும், வழிமுறைகளும் திருக்குர்ஆன் மற்றும் சுன்னா எனப்படும் நபிகளாரின் திருவழிமுறைகளின் மீது கட்டப்பட்டவையாகும். அவற்றை செவ்வன நிறைவேற்ற முயன்று கொண்டிருக்கும் இயக்கம் ஜமாஅத்து இஸ்லாமி.
நமது நாட்டின் ஒவ்வொரு இளைஞனையும், இளம்பெண்ணையும் அறிவுரீதியாக, ஒழுக்க ரீதியாக தயார் செய்து அவர்களது சமூக பொறுப்புகளை உணர்த்தி இந்த நாட்டை புனரமைக்கும் பணிகளை நோக்கி செலுத்திக் கொண்டிருக்கும் இயக்கம் இது. மௌலானா மௌதூதி என்ற மாய்மாலங்கள் இங்கு ஏதுமில்லை.
ஜமாஅத் இந்திய துணைக்கண்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டு அதன் மீது அபாண்டமாக ஏராளமான குற்றச்சாட்டுகள், குற்றம் சுமத்தி புத்தக வெளியீடுகள். ஒரு காலத்து வெள்ளிமேடைதோறும் சொல்லடுக்கு அம்பு வீச்சுக்கள் என்றெல்லாம் நடந்துள்ளன.
ஒரு கட்டத்தில் இவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்று இளைமையின் வீரியம் துடித்தபோது, ”உங்களுக்கான பணியில் கவனம் செலுத்துங்கள். தேவையற்ற பணிகளில் கவனம் சிதறவிடாதீர்கள்..!” – என்று அற்புதமான அறிவுரைகள் காலஞ்சென்ற மூதறிஞர் ஜமீல் அஹ்மது சாஹெப் போன்றவர்களால் அறிவுறுத்தப்பட்டு தடம் புரளாமல் நேர்வழி நடந்தவர்கள். நடந்து கொண்டிருப்பவர்கள்.
தற்போது, ஜமாஅத்தில் எந்தப் பொறுப்பிலும் நான் இல்லை. அதனால், இது அதிகாரபூர்வமான பதிலும் இல்லை. ஆனால், உண்மை இதுதான். இறைவன் நாடினால்… ஜமாஅத்தின் உள்ளிருந்தோ, வெளியிலிருந்தோ, ஆதரவாளனாகவோ, உறுப்பினராகவோ மனித இனத்தை அவனது படைப்பியல் நோக்கத்தில் கட்டமைக்கும் ஜமாஅத்தின் இந்த வெற்றிப் பணிகளை தலைமுறை… தலைமுறையாக அதிலும் குடும்பம் சகிதமாக நாங்கள் முன்னெடுத்து சென்று கொண்டேயிருப்போம். வெற்றியோ தோல்வியோ அது இறைவனின் கையில்.
கடைசியாக, நூற்றாண்டே சாட்சியாக என்ற தலைப்பில் எனது வலைப்பூவில் வைகறை நினைவுகள் என்னும் தலைப்பில் மௌலானா மௌதூதியின் வாழ்கையை சுருக்கமாக எழுதியிருக்கிறேன். http://ikhwanameer.blogspot.in/2016/02/29.html
அதிலிருந்து சில வரிகள்:
ஒருநாள் ஸ்பெயின் நாட்டிலிருந்து ஒரு கடிதம் மௌலானாவுக்கு வந்தது. அதில் இப்படி எழுதப்படிட்டிருந்தது:
"அன்புள்ள தந்தை நிகர் மெளலானாவுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தங்களது புத்தகங்களைப் படித்துதான் நான் இஸ்லாம் தழுவினேன்.
மறுமையில் இறைவனின் சந்நிதியில் தங்களது ஈடேற்றத்துக்கான பரிந்துரையை (சாட்சி) நான் செய்வேன்!"
கடிதத்தை படித்து முடிதத மௌலானாவின் கண்கள் குளமாயின.
"உண்மைதான்! இந்த இளைஞன் நாளை மறுமையில் என் ஈடேற்றத்துக்காக சிபாரிசு செய்வான் என்பது உண்மைதான்!" - என்றார் கனத்த குரலில்.
ஆம்...! யாருடைய சிபாரிசும் ஏற்றுக் கொள்ளப்படாத அந்த மறுமை நாளில், அந்த ஒரு ஸ்பெயின் இளைஞன் மட்டுமல்லாமல் இதை எழுதிக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற ஆயிரக் கணக்கான பேர் மௌலானாவின் பிழைப் பொறுக்க கருணையாளனான இறைவனிடம் இருகரமேந்தி நிற்பார்கள்.
இறைவன் நாடினால்.... இதற்கு வரவிருக்கும் நூற்றாண்டுகள் சாட்சிகளாக நிற்கும்!
0 comments:
Post a Comment