NewsBlog

Friday, June 23, 2017

ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்

 
இந்த வசனங்களை ஓதிய பின், மக்கள் இறைவழியில் தர்மம் செய்ய வேண்டும். அதற்காக, பொற்காசுகளையும் வெள்ளிக்காசுகளையும் வழங்கிட வேண்டும். துணிமணிகளை அளித்திட வேண்டும். கோதுமை ஒரு மரக்காலும் பேரீச்சம் பழம் ஒரு மரக்காலும் தந்துதவ வேண்டும். அதுவுமில்லாதவர் ஒரு பேரீச்சம் பழத்தின் பாதித் துண்டையாவது தந்திட வேண்டும்!” என்று அறிவுறுத்தினார்~ இக்வான் அமீர்
 
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
அது ஒரு காலை நேரம். நபிகளாரின் திருச்சபையில் நபித்தோழர்கள் அமர்ந்திருக்க, சிலர் முரட்டுக் கம்பளியைப் போர்த்திக்கொண்டு அங்கு வந்தார்கள். முளர் குலத்தைச் சேர்ந்த அவர்களது உடலின் பெரும் பகுதி நிர்வாணமாக இருந்தது. அவர்களின் ஏழ்மைக் கோலம் நபிகளாரைப் பாதிக்க அவருடைய திருமுகம் வருத்தத்தால் வாடிவிட்டது.

நபிகளார் வீட்டுக்குள் சென்றார். அதன்பிறகு வெளியே வந்தார். இதற்குள் தொழுகை நேரம் வந்துவிடவே தோழர் பிலாலை அழைத்து, தொழுகைக்கான அழைப்பு விடுக்கும்படி பணித்தார். தொழுகை முடிவில் நபிகளார் சிற்றுரையாற்றினார். அந்த உரையில் திருக்குா் ஆனின் சில முக்கிய வசனங்களை ஓதிக் காட்டினார்.

“மனிதர்களே! உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள். அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். அவை இரண்டின் மூலம் உலகில் அதிகமான ஆண்களையும் பெண்களையும் பரவச் செய்தான். எந்த இறைவனின் பெயரைக் கொண்டு நீங்கள் மற்றவரிடம் உரிமைகளைக் கோருகிறீர்களோ, அந்த இறைவனுக்கு அஞ்சுங்கள். ரத்த பந்த உறவுகளைச் சீர்குலைப்பதிலிருந்து விலகி வாழுங்கள். திண்ணமாக, இறைவன் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்துகொள்ளுங்கள்”

மனிதர்கள் அனைவரும் ஒரே இறைவனால் படைக்கப்பட்ட ஒரே தாய்-தந்தை வம்சாவழியினர். ரத்த பந்த உறவுமுறையினர். அதனால், ஒவ்வொருவரும் அடுத்தவரிடம் பரிவுடனும் இரக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். தேவையுள்ளோரின் தேவைகளைத் தீர்த்து வைக்காமலிருப்பது இறைவனின் கோபத்தைப் பெற்றுத் தரும் என்று அறிவுறுத்தும் வசனம் இது.

அடுத்ததாக , “இறைநம்பிக்கை கொண்டவர்களே! இறைவனுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொரு மனிதனும் நாளைய தினத்துக்காக எதைத் தயார் செய்து வைத்திருக்கிறான் என்று பார்க்கட்டும். இறைவனுக்கு அஞ்சிய வண்ணம் இருங்கள். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் திண்ணமாக இறைவன் அறிபவனாக இருக்கிறான்” என்ற வசனத்தை நபிகளார் ஓதினார். இதன் மூலமாக ஏழை, எளியோருக்காகச் செலவிடப்படும் செல்வம் மனிதனுக்கு மறுமை நாளில் அழியாத சேமிப்பாக மாறுகிறது என்ற கருத்தைச் சுட்டிக் காட்டினார்.

இந்த வசனங்களை ஓதிய பின், மக்கள் இறைவழியில் தர்மம் செய்ய வேண்டும். அதற்காக, பொற்காசுகளையும் வெள்ளிக்காசுகளையும் வழங்கிட வேண்டும். துணிமணிகளை அளித்திட வேண்டும். கோதுமை ஒரு மரக்காலும் பேரீச்சம் பழம் ஒரு மரக்காலும் தந்துதவ வேண்டும். அதுவுமில்லாதவர் ஒரு பேரீச்சம் பழத்தின் பாதித் துண்டையாவது தந்திட வேண்டும்!” என்று அறிவுறுத்தினார்.

உணர்ச்சி மிக்க இந்த உரையைக் கேட்டதும் நபித்தோழர்கள் ஒருவர் பின் ஒருவராகத் தர்மம் செய்ய ஆரம்பித்தார்கள். கடைசியில் தானியங்கள், துணிமணிகள் என்று இரண்டு குவியல்கள் சேர்ந்துவிட்டன.

மக்களின் அறப்பணிகளுக்கான ஆர்வம் கண்டு நபிகளாரின் திருமுகம் மகிழ்ச்சியால் பொன்னிறம் பூசியதுபோல மலர்ந்து பிரகாசிக்கலாயிற்று.

அதேபோல, மற்றோர் இடத்தில், ரமலான் மாதத்தின் சிறப்புகளை உணர்த்தி அதற்கு முந்தைய மாதமான ஷ அபான் மாதத்தின் கடைசியில் நபிகளார் உரையொன்றை நிகழ்த்தினார். அந்த உரையின் கடைசிப் பகுதியாக, ரமலான் மாதம் சமுதாயத்திலுள்ள ஏழை, எளியோர் மீது அனுதாபமும் பரிவும் காட்ட வேண்டிய மாதம் என்று குறிப்பிட்டு வலியுறுத்துகிறார்.

தேவையுள்ளோர்க்கு வாரி வழங்கும் பண்பினரான நபிகளார் ரமலான் மாதத்தில் வேகமாக வீசும் காற்றைப்போல தான, தர்மங்களை விரைந்து செய்பவராக இருந்தார்.

(தி இந்து, ஆனந்த ஜோதி இணைப்பில் 22.06.2017 அன்று பிரசுரமான எனது கட்டுரை)
 
Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive