NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Friday, March 11, 2016

ஆன்மிகத் தலைவருக்கு அழகல்ல!


ஆன்மிகம், மனிதனுள் புதைந்திருக்கும் உயரிய மனித விழுமியங்களை ஒளிரச் செய்யும் ஒரு வாழ்வியல் தேட்டம். அக, புற வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு சாதனம். படைத்தவனோடு மனித உள்ளங்களை இணைக்கும் ஒரு பாலம். கொள்ளையனான ரத்னாகரனை, வால்மீகியாய் பண்படுத்தி உயரிய இதிகாச நாயகனாய் ராமனை படைத்துக் காட்ட வைத்த ஒரு வித்தை அது.

அதிலும், இந்திய நாட்டின் தொன்றுதொட்டுவரும் ஆன்மிக தொன்ம மரபுகள்தான் இந்தியர்களின் உலகளாவிய அடையாளங்கள். இந்திய சமூக அமைப்பில், நல்லிணக்கத்தையும், சகிப்புத்தன்மையையும் உருவாக்கி உயரிய மனிதர்களாக உலகில் இந்தியர்களை அடையாளப்படுத்தியது ஆன்மிகம்தான் என்றால் அது மிகையல்ல.

மனித உள்ளங்களில், வாழ்க்கைக் குறித்த விரக்தியும், நிராசையும் ஏற்படும் போது, அமைதியையும், சீரான வாழ்வியல் போக்கையும் தரவல்ல ஒரு பாசறையாக ஆன்மிகம் இருப்பதால்தான் மேற்கத்தியர்கள் எல்லாம் அமைதி தேடி ஆன்மிகத் தலைவர்களான சாமியார்களை தஞ்சமடைகிறார்கள்.

போதிக்கும் சொல் வடிவங்கள் எல்லாம் செயல்களாய் வாழ்வில் பரிணமிக்க வேண்டிய இத்தகைய ஆன்மிக தலைவர்களின் சுய ரூபங்கள் துரதிஷ்டவசமாக சில நேரங்களில் வெளிப்பட்டு அவர்கள் போலியானவர்களோ என்று பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தற்போது, வாழும் கலை (ஆர்ட் ஆஃப் லிவிங்) அமைப்பினர் திட்டமிட்டிருந்த ஓர் ஆன்மிக கலாசார மாநாடு நீதிமன்ற வழக்கினால் சிக்கல்களைச் சந்தித்துள்ளது. இந்த ஆன்மிக மாநாட்டை ரூ.5 கோடி அபராதம் செலுத்தி நடத்திக் கொள்ளலாம் என்று பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.

ஆனால், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த ரூ.5 கோடி அபராதம் தொடர்பாக, சிறை சென்றாலும் செல்வோமே தவிர ஒரு பைசாகூட அபராதமாக செலுத்த மாட்டோம் என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

யமுனை நதிக்கரையில் வாழும் கலை அமைப்பினர் நடத்தும் உலகக் கலாசாரத் திருவிழா தொடர்பாக சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த அக்கறைகளில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அந்த அமைப்புக்கு ரூ.5 கோடி முதற்கட்ட அபராதம் விதித்து உத்தரவிட்டது.

இதனை நிகழ்ச்சிக்கு முன்னதாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டதோடு, யமுனை நதி நீரில் மனித கழிவு நொதிமங்களை (என்சைம்) மிதக்க விடக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில் என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியில், ரவிசங்கர் கூறும்போது, “நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. சிறை செல்லவும் தயார். ஆனால் ஒரு பைசா கூட அபராதமாகச் செலுத்த மாட்டோம்!” - என்றும் தெரிவித்திருக்கிறார். "இந்த உலகக் கலாசாரா மாநாடு கலாச்சார ஒலிம்பிக்ஸ் போன்றது. பொதுவாக இத்தகைய நிகழ்வுகள் வரவேற்கப்பட வேண்டும். லட்சக்கணக்கானோர் வரும் ஒரு நிகழ்வு எப்படி தனியார் நிகழ்வாகும்? இதுவே கும்பமேளாவாக இருந்தால் ராணுவம் பயன்படுத்தப்பட்டிருக்காதா?” - என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறார் ஆன்மிகத் தலைவர் ரவிசங்கர்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில் யமுனை நதிக்கரையில் உலக கலாச்சார விழா தொடங்குவது சம்பந்தமாக யமுனை நதிச்சமவெளியில் பல நூறு ஏக்கர் பரப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேடைகள், நதி மீது தற்காலிக மிதக்கும் பாலங்கள் என பிரம்மாண்ட ஏற்பாடுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என எழுந்த புகாரில் உண்மைகள் இல்லாமல் இல்லை.

நதியில் விடப்படவுள்ள மனித கழிவுகள், மிதக்கும் பால கட்டுமானத்துக்கு ராணுவம் பயன்படுத்தப்பட்டது, கூட்ட நெரிசலால் துயரம் ஏற்படக் கூடும் என்ற டெல்லி காவல் துறையின் எச்சரிக்கை போன்ற வற்றால் பெரும் சர்ச்சை எழுந்தது. இதனால், நிகழ்ச்சியில் பங்கேற்பதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ரத்து செய்தார்.
நிகழ்ச்சிக்கு தடை கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு, பசுமைத் தீர்ப்பாய தலைவர் ஸ்வந்தர் குமார் தலைமையிலான அமர்வு முன்பு வந்தது. இவ்வழக்கு விசாரணையின் முடிவாக, பசுமைத் தீர்ப்பாய அமர்வு, “நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக, சுற்றுச்சூழல் பாதிப்பு இழப்பீடாக ரூ.5 கோடியை வாழும் கலை அமைப்பு செலுத்த வேண்டும்” என உத்தரவிட்டது.

மேலும், “மனித கழிவுகளை டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி இன்றி நதியில் விடக்கூடாது, சுற்றுச்சூழலுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது. நிகழ்ச்சி நடைபெறும் ஒட்டுமொத்த பகுதியையும் பல்லுயிர்ச்சூழல் பூங்காவாக 'வாழும் கலை அமைப்பு' மாற்ற வேண்டும்” - என உத்தரவிட்டது. முறையாக செயல் படாததற்காக டெல்லி மாசு கட்டுப்பாட்டு குழுவுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது தொடர்பாக மத்திய அரசு, மாநில அரசுகளை பசுமைத் தீர்ப்பாயம் கடும் கேள்விகளால் துளைத்தெடுத்தது.

விசாரணையின்போது, மத்திய நீர்வளத் துறை அமைச்சகம், “இவ்விழா தொடர்பாக எவ்வித அனுமதியையும் வழங்கவில்லை. இதுதொடர்பான விண்ணப்பம் எதுவும் நிலுவையில் இல்லை” - என கூறி நழுவியது.

ஆனால், சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம், யமுனை நீர்ச் சமவெளிப் பகுதியில் தற்காலிக கட்டுமானங்களுக்கு எவ்வித சுற்றுச்சூழல் அனுமதியும் பெறத் தேவையில்லை என தன் பிரமாணப் பத்திரத்தில் கூறியது.

சுமார் 35 லட்சம் மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு துயர சம்பவங்கள் நிகழக்கூடும் என டெல்லி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பிரதமர் பங்கேற்கும் மேடையை தனியாக அமைக்க வலியுறுத்தி மத்திய பொதுப் பணித்துறை கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளது.

முன்னதாக, நடந்த வழக்கு விசாரணையின்போது, 'தற்காலிக மிதவைப் பாலங்கள் அமைப்பதற்கு யார் அனுமதி கொடுத்தது?' - என டெல்லி மேம்பாட்டு ஆணையத்திடம் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

மூன்று நாள் ஆன்மிக மாநாடு யமுனை நதிக்கு மாபெரும் சூழல் பாதிப்பை, இழப்பை உருவாக்கிவிடும். இதில் வியப்படைவதற்கு ஒன்றுமேயில்லை. ஏனென்றால், யமுனை நதி தினமும் படுமோசமான பாதிப்புக்கும், மீட்கவியலாத இழப்புக்கும் ஆளாகிக் கொண்டிருக்கும் இடம் தில்லி பெருநகரம். தில்லியின் ஊடாக சுமார் 20 கி.மீ. தொலைவு கடந்து செல்லும் யமுனை நதி, அதன் பாதையில் வேறு எந்த இடத்திலும் இல்லாத அளவுக்கு மாசடைகிறது.

கடந்த பத்து ஆண்டுகளாக தொழில்துறைக் கழிவுகளால் யமுனை படுமோசமாக மாசுபட்டுக்கொண்டிருக்கிறது. யமுனையில் கலக்கும் தொழில்துறைக் கழிவுகளின் அளவு, மாசுக்கட்டுப்பாடு வாரியம் அனுமதிக்கும் அளவைக் காட்டிலும் 13 மடங்கு அதிகமாக உள்ளன.
தில்லியின் புறநகர் பகுதிக்குள் நுழையும் யமுனை நதியின் நீரில் ஒரு லிட்டரில் 7.5 மில்லி கிராம் ஆக்ஸிஜன் உள்ளது. ஆனால், சூழல் மாசுவால், தில்லியை விட்டு வெளியேறும்போது ஒரு லிட்டரில் 1.3 மில்லி கிராம் ஆக்ஸிஜன் என்று குறைந்து போகிறது. தில்லியை விட்டு வெளியேறிய பிறகு அதில் கலக்கும் கிளை நதிகளால்தான் யமுனை மீண்டும் உயிர் பெறுகிறது என்பது முக்கியமானது.

தில்லியில் உள்ள வீடுகளில் 55% முதல் 60% மட்டுமே புதைச் சாக்கடைத் திட்டத்தில் உள்ளன. இவையும் முழுமையாக சுத்திகரிக்கப்படவில்லை என்கிற புகார் ஒருபுறம் இருக்க, தில்லி நகருக்குள்ளிருந்து புறப்படும் 18 வாய்க்கால்கள் மூலம் வெளியேறும் கழிவுநீர் யமுனையில்தான் கலக்கிறது. இந்தக் கழிவுநீர்க் கலப்பால் யமுனை மாசுபடுவதைத் தடுக்க இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இவ்வளவு களேபரம் கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கும் நிலையில், வாழும் கலையின் மூன்று நாள் ஆன்மிக மாநாட்டினால் யமுனை பாழ்படும். மீட்கவியலாத இழப்பை யமுனை சந்திக்கும். வெள்ளப்படுகையில் வரக்கூடிய பறவைகள் வேறு இடமின்றி திண்டாடும். என்று சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளது உண்மையான அக்கறையால் எழுந்த கவலைகள் என்றே சொல்லமுடியும்.

ஒரு சாதாரண மனிதனின் பார்வையில், இத்தனை அக்கிரமங்களையும் இத்தனை ஆண்டுகளாக யமுனை தாங்கிக்கொண்டிருக்கிறது. இது போதாதென்று தற்போது, மூன்று நாளில் லட்சக்கணக்கான மக்களால் எத்தகைய கேட்டினை யமுனை அடையும் என்ற அச்சம் ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை.

வாழும் கலை அமைப்பு தனது 35-ஆவது ஆண்டு விழாவை உலக கலாசார விழாவாக நடத்த முற்பட்டதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், மனித வாழ்வை சீர்க்குலைக்க உதவும் ஆன்மிக மாநாடுகளை எப்படி பொருத்தக் கொள்ள முடியும்? இந்த மாநாட்டுக்கு 35 லட்சம் பேர் வருகைத் தரவிருக்கிறார்கள் என்று அந்த அமைப்பினர் அறிவித்தது பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடையே பலத்த அச்சத்தை உருவாக்கியது.

அத்துடன், குடியரசுத் தலைவர், பிரதமர், பல்வேறு மத்திய - மாநில அமைச்சர்கள் வருவிருப்பதாக தில்லியின் பல பகுதிகளிலும் பெரிய பிளக்ஸ் பேனர்களையும் வாழும் கலை அமைப்பு வைத்து தடபுடலாக விளம்பரப்படுத்தியது. 

மனிதனை எளிமைப்படுத்தி, அவனுக்கு இம்மையின் நிலையாமை உணர்த்தி வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஆன்மிகம் பன்னாட்டு நிறுவனங்கள் போல வணிகமயமாகிவிட்டதே உண்மை. இதில் வாழும் கலை அமைப்பும் சர்வதேச அளவில் ஆன்மிக வணிகமயமாகலின் முயற்சியாக மக்களால் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த ரூ.5 கோடி அபராதம் தொடர்பாக, சிறை சென்றாலும் செல்வோமே தவிர ஒரு பைசாகூட செலுத்த மாட்டோம் என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உறுதிபட தெரிவித்துள்ளார். சட்டத்துக்கு கட்டுப்படமாட்டோம் என்றுதான் இதற்கு பொருள். சொந்த நாட்டு சட்டங்களை மதிக்காத ஒரு ஆன்மிகத் தலைவரிடம் எத்தகைய வழிகாட்டுதல்களை அதன் ஆதரவாளர்கள் பெற முடியும் என்று பலத்த கேள்வி எழுவதை தவிர்க்க இயலவில்லை.

சொல்லும், செயலும் முரண்படாத வாழ்வியலே, ஆன்மிக தேடல்களின் அடிப்படை. அதற்கான தகுதியை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இழந்துவிட்டார் என்பதே அவர் தந்துள்ள வாக்குமூலத்தின் விரிவு.

Share:

Saturday, March 5, 2016

இருளைக் கிழித்த ஒளி


ஊதுலையிலிருந்து தீப்பிழம்பாய் வெளிவந்துக் கொண்டிருந்த இரும்பின் மீது சம்மட்டியின் அடி விழுந்து கொண்டிருந்தது. காய்ச்சப்பட்ட இரும்பை கொரடால் மாற்றி.. மாற்றி வைத்து தேவையான வடிவமைப்புக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார் கருப்பச்சாமி.

”ஆஹ்.. அல்லாஹ்!..!”

”என்ன ஹஜரத்..? என்ன ஆச்சு?” – பதறி எழுந்த கருப்பச்சாமி சம்மட்டி அடித்துக் கொண்டிருந்த ஹஜரத்தை நெருங்கினார்.

”ஒண்ணுமில்லே..! இரும்பிலிருந்து சின்னதா பிசிறு தெரிச்சு கன்னத்தைத் தாக்கிடுச்சு. நல்லவேளை கண்ணில் விழாமல் இறைவன் காப்பாத்திட்டான். “எல்லாப்புகழும் இறைவனுக்கே!”

”நான் அப்பவே சொன்னேன் ஹஜரத், இந்த வேலை வேண்டாம் உங்களுக்குன்னு. பள்ளிவாசல்லேயே கொஞ்சம் வளைஞ்சு கொடுத்துட்டு பொறுமைய்யா இருந்திருக்கலாம்!”

பிசிறுப்பட்ட இடத்தை தடவிக் கொண்டே ஹஜரத், ”என்னை நல்லா புரிஞ்சுகிட்ட நீங்களா இப்படிப் பேசறது? இல்லே.. முடியாது என்னாலே மார்க்கத்துக்கு புறம்பான காரியங்களை நிச்சயமாய் செய்ய முடியாது. அதனால், என்ன இழப்பு, கஷ்டம் வந்தாலும் சரி. உங்களுக்கு நான் தொல்லையாயிருந்தா சொல்லுங்க.. இருக்கவே இருக்கு.. மாடசாமி அண்ணாச்சி ரிக்ஷா!”

”அய்யய்யோ..! என்ன ஹஜரத் இப்படி சொல்லிட்டீங்க.. மிருகமா அறியாமையிலே வாழ்ந்திட்டிருந்த என்னை மனிதனாக பண்படுத்தியது உங்களுடைய தொடர்புதான். நீங்க எனக்குக் தொல்லையாய் இருக்க முடியுமா? மார்க்கத்தை போதிக்க வேண்டிய நீங்க இப்படி உலைகளத்திலே கஷ்டப்படுறதைப் பார்க்க மனசு கேட்காமத்தான் அப்படிச் சொன்னேன்!”

கருப்பச்சாமி ஹஜரத்தின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

”சரி.. சரி.. வாங்க தம்பி..! இரும்பு குளிர்ந்திடப் போவுது!” – ஹஜரத் மீண்டும் சம்மட்டியை கையிலெத்துக் கொண்டு இரும்பின் மீது அடித்தார்.

”ணங்..! ணங்..!” – சுதி தவறாமல் சம்மட்டி அடி இரும்பின் மீது விழுந்து இசையெழுப்ப ஹஜரத்தின் மனம் இறந்த காலத்தில் நுழைந்தது.

““““““““““““““““““““““““““““““““““““

ஜும்ஆ தொழுகைக்காக பள்ளி புத்துணர்ச்சிப் பெற்றிருந்தது. மஹல்லாவாசிகளில் பெரும்பான்மையோர் அணி அணியாக தொழுகைக்காக பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார்கள்.

பள்ளியினுள் ஹஜரத் பயான் – சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார்.

”சகோதரர்களே! இஸ்லாம் என்னும் வாழ்க்கை நெறியின், தீனின் அடிப்படை இதுதான். இந்த பூமியின் உரிமையாளன், படைப்பினங்களின்  அதிபதி, மனிதர்களின் அரசன் இறைவனேயாவான். எனவே அவனுக்கு மட்டுமே அடிபணிந்து வாழ வேண்டும். இறைவன் நமக்களித்த ஷரீஅத் என்ற வாழ்க்கைமுறையை நம்முடைய வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். நமக்குள் உண்டாகும் பிரச்னைகளில், சண்டைச்சச்சரவுகளில், கொடுக்கல் – வாங்கல்களில் அதன் அடிப்படையிலேயெ தீர்வுகள் காண வேண்டும்.

நாட்டு நிர்வாகமும், ஆளுவோரும் இறைவனின் சட்டதிட்டங்களின்படியே அரசாள வேண்டும். இறைவனுக்கு அஞ்சி வாழ வேண்டும். வேறு எந்த தலைவருக்கும், இஸங்களுக்கும் அடிமையாகாமல் உலக முஸ்லிம்களின், இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றி வாழ வேண்டும்!”

ஹஜரத் சத்தியத்தை பறை சாற்றிக் கொண்டிருக்க மக்கள் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.

ஆனால், ஒரு ஓரத்தில் அமர்ந்து அந்த சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த, ஜும்ஆவில் மட்டுமே தொழுகைக்காக பள்ளிவாசலை எட்டிப் பார்க்கும் பள்ளி நிர்வாகிகளான தாவூத் மற்றும் ஜப்பார் பாய்களின் முகங்களில் தீப்பூக்கள் மலர்ந்து சிவந்து கொண்டிருந்ததை ஹஜரத் கவனிக்கவில்லை.

தொழுகை முடிந்தது.

”ஹஜரத்..! ஹஜரத்..! இப்படி வாங்க..!” – ஜும்ஆ முடிந்து தொழ வந்தவர்கள் கிளம்பிக் கொண்டிருக்க பள்ளியின் செயலாளரான தாவூத்தும், தலைவரான ஜப்பாரும் ஹஜரத்தை அவருடைய அறைக்கு அழைத்துச் சென்றனர்.

”வாங்க.. உட்காருங்க..!” – ஹஜரத் தாவூத்தையும், ஜப்பாரையும் வரவேற்று அமரவைத்தார். ”என்ன விஷயம்?” – சொல்லுங்க என்று கேட்டார்.

”ஹஜரத்.. என்ன இன்னைக்கு பயானிலே இப்படி பேசிட்டீங்க?” – தாவூத்தின் குரலில் உஷ்ணம் ஏறியது.

”ஆமாம்.. தாவூத் பாய்.. நேரம் போதலே..! இன்னும் விரிவாக பேசியிருக்கலாம்.. சரி அடுத்த வாரம் பாா்த்துக்கலாம்!” – ஹஜரத் சகஜமாக சொன்னார்.

”என்ன இன்னும் விரிவாகவா?”

”ஆமாம் பாய்..! தௌஹீதை - ஓரிறைக் கொள்கையை அதன் பல்வேறு அம்சங்களை இன்னும் மக்களுக்கு விரிவாக விளக்கியிருக்கலாம்”

”ஹஜரத்.. கொஞ்சம் நாளா.. உங்க போக்கு சரியில்லே!”

”எந்த போக்கு தாவூத் பாய்? எனக்கு புரியலே. கொஞ்சம் விளக்கமாய் சொன்னா நல்லது” – ஹஜரத் கேட்டார்.

”எல்லாம்தான்! ஜும்ஆவிலே ஏதாவது கதைகளை பயான் செய்றதை விட்டுட்டு.. என்னமோ.. தீன்.. தீன்னு.. இந்த நவீன உலகத்துலே மறுபடியும் மதத்தின்படி நடக்கிறதுக்கு  மக்களை தூண்டிவிடுறது நல்லாயில்லே..!

மதரஸா பசங்களுக்கு ஓத கத்துக் கொடுங்கன்னா ஏதோ குர்ஆன் விளக்கமெல்லாம் சொல்லித் தர்ரீங்களாமே! பெண்களுக்கும் பயான் செய்யணும், அவங்களையும் ஜும்ஆ தொழுகைக்கு வசதியாய் ஒரு கொட்டாய் கட்டச் சொன்னீங்களாமே! ம்.. என்ன இதெல்லாம்..?”

”ஆமாம்.. உண்மைதான்! சொன்னேன்.. இருங்க.. முதல்லே ஒரு திருத்தம்.. இஸ்லாம் மதம் கிடையாது. அது ஒரு மார்க்கம். மனிதர்கள் பின்பற்றி வாழ இறைவனால் அளிக்கப்பட்ட வாழ்க்கை நெறி.

குழந்தைகளுக்கு பொருள் தொியாமல் ஓதக்கொடுத்து என்ன பயன்? அதனாலே அவங்களுக்கு புரியும்படி பொருளோடு சின்ன சின்ன உதாரணங்களோடு சொல்லித் தர்ரேன்!

பெண்களுக்கும் தீன் தேவைதானே! அவங்க அடுப்படியிலே மட்டும் வெந்துக் கிடக்க நாயகம் நமக்குக் கற்றுத் தரலியே! நாளைய சமுதாயத்தை உருவாக்கப் போற அவங்களுக்கும் மார்க்கப் போதனை அவசியம்தானே? இதிலே என்ன பாய் தப்பிருக்கு?” – ஹஜரத் விளக்கினார்.

”இதோ..! பாருங்க ஹஜரத்.. நாங்க சொல்றதை நல்லா கவனிச்சுகுங்க.. இங்கே பள்ளியிலே உங்க பயானையெல்லாம் மூட்டைக் கட்டி தூர வச்சிட்டு… கிஸ்ஸாக்களை மட்டும் நிறைய சொல்லணும். பசங்களுக்கு வெறும் அரபி மட்டும் ஓதிக் கொடுங்க போதும். பெண்களுக்கு அது வேணும்… இது வேணும்னு உளறிட்டிருக்காம பிழைப்பை நடத்திற வழியைப் பாருங்க. இல்லேன்னா…. வேலையை இழக்க வேண்டியிருக்கும்.. ஜாக்கிரத்தை..!”

தாவூத்தின் மிரட்டலுக்கு ஜப்பாரும் தலையாட்டினார்.

சிறிது நேரம் மௌனமாய் இருந்த ஹஜரத், ”ஜப்பார் பாய்.. தாவூத் பாய்.. ஆலிம்களை - அறிஞர்களை மிரட்டி உங்க மன இச்சைப்படி நடக்கச் சொல்ற இடத்துலே என்னாலே நிச்சயம் இருக்க முடியாது! அதனாலே நான் பள்ளியைவிட்டு போறேன்” – என்றார் திட்டவட்டமாக.

”வேலையை விட்டு போவப் போறீங்களா? சரியான ஆளாயிருப்பீங்க போலிக்கே! இந்தக் காலத்துலே நீங்க சொல்றதெல்லாம் எங்கே எடுபடும் ஹஜரத்? சரி…! அது உங்க இஷ்டம். இருந்தாலும் உங்க மேலே தனிப்பட்ட முறையிலே மதிப்பும், மரியாதையும் இருப்பதாலே… உங்களுக்கு ஒரு வாரம் தவணைத் தர்ரோம்! அதுவரை மோதினார் தொழ வைப்பார். வெளியே போய் நல்லா சிந்தியுங்க. ஒரு வாரத்துக்குள்ளே நீங்க எப்ப வேணுமானாலும் வேலையிலே நாங்க சொன்ன நிபந்தனைகளுக்கு உட்பட்டு வந்து சேர்ந்துக்கலாம். நல்லா யோசிச்சு முடிவெடுங்க. வாங்க.. ஜப்பார்.. போகலாம்!” இருவரும் கிளம்பினர்.

““““““““““““““““““““““““““““““““

”ஹஜரத்..! ஹஜரத்..! என்ன பலமான யோசனை? இந்தாங்க டீ குடிங்க..”

கருப்பச்சாமியின் குரலில் சுயநினைவை அடைந்த ஹஜரத்தின் சிந்தனை தடைப்பட்டது.

சூடான டீயிலிருந்து ஆவி கிளம்பிக் கொண்டிருந்தது. ஸ்டூலில் அமர்ந்திருந்த ஹஜரத் எதிரே தரையில் அமா்ந்து டீயைப் பருகிக் கொண்டிருந்த கருப்பச்சாமியைப் பார்த்தார்.

கருத்த, பருத்த உடல். உருண்டை விழிகள். உருவத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத குழந்தை உள்ளம். மழிக்கப்படாத முகம், உள்ளத்தின் மாறுதல்களை, நாயகத்தின் நேசத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.

பள்ளிவாசலில் அந்திநேரத் தொழுகையான மக்ரீப் வேளையில் மந்தரித்துக் கொள்ள வந்த கருப்பாச்சாமியோடு உண்டான சிநேகிதத்தின் இறுக்கத்தில் மெல்ல.. மெல்ல ஏகத்துவத்தை விளக்கியது. அதனால், நபிமார்கள் அடைந்த துயரங்களைக் கேட்டு, விழிகள் நனைய தலைகுனிந்து விம்மியது. சத்தியத்தின் அழைப்பை ஏற்றுக் கொள்ளத் தயாராகி அறியாமைக் கால பழக்க வழக்கங்களை மெல்ல மெல்ல துறந்து கொண்டிருந்தது.  பெரும் மன மாற்றம் கருப்பச்சாமிக்குள் நிகழ்ந்து கொண்டிருந்ததை ஹஜரத் கவனித்துக் கொண்டிருந்தார்.

”அல்ஹம்துலில்லாஹ்!” – ஹஜரத் கொஞ்சம் சத்தமாகவே இறைவனைப் புகழ்ந்துரைத்தார்.

”என்ன ஹஜரத்? இறைவனைப் புகழுறீங்க?”

”ஒண்ணுமிலே தம்பி..! கடந்தகாலம் நினைவுக்கு வந்தது அதுதான்!” – ஹஜரத் மென்மையாக சிரித்தார்.

”என்கொரு சந்தேகம். கோபப்படாம பதில் சொல்றீங்களா ஹஜரத்?”

”கோபமா? உங்களிடமா? என்ன தம்பி இப்படி சொல்லிட்டீங்க? நீங்க எதை வேண்டுமானாலும் தாராளமாய் கேட்கலாம். கேளுங்க..”

”பெரிசாய் ஒண்ணுமில்லே! நபிகள் நாயகம் மக்காவிலே எத்தனை வருஷம் போதனைச் செஞ்சாங்க ஹஜரத்?”

ஹஜரத் சிரித்தவாறு, “பதிமூணு வருஷக்காலம்” – என்றார்.

”ஹஜரத்.. நான் கேட்பதற்கு பொறுமையாய் பதில் சொல்றதா வாக்கு கொடுத்திருக்கீங்க. அதனாலே நான் கேட்கிறதுக்கெல்லாம் பதில் சொல்லணும்”

”ஒண்ணும் பயப்படாம கேளுங்க தம்பி..”

”இறைதூதுவத்திற்கு முன்னே நபிகளாருக்கும், மக்காவாசிகளுக்கும் இடையே எப்படிப்பட்ட உறவு இருந்தது?”

”அல் அமீன் – நம்பிக்கைக்குரியவர், அஸ்ஸாதிக் – உண்மைப்படுத்துபவர், இன்னும் கண்ணியமிக்கவர்! என்றெல்லாம் மக்கள் நாயகத்தை சிறப்பித்து அழைச்சாங்க!”

”இந்த சிறப்பெல்லாம் பின்னாளிலே ஏன் மாறிடுச்சு?”

கருப்பச்சாமியின் கேள்விகளில் அழுத்தம் அதிகமிருந்ததை உணர்ந்த ஹஜரத் உரையாடலில் மிகவும் கவனம் செலுத்தினார்.  சொன்னார் – ”இறைவனின் தூதர் மக்களை ஓர் இறைக் கொள்கையின் பக்கம் அழைச்சாங்க. பழைய பழக்க வழக்கங்களிலிருந்தெல்லாம் வெளிவரச் சொன்னாங்க. இறைவனுக்கு அஞ்சி நல்லவர்களாக வாழ அறிவுறுத்தினாங்க…”

குறுக்கிட்ட கருப்பச்சாமி, ”இன்னும் மனுஷங்க நல்லவங்களாக நல்ல விஷயங்களை எல்லாம் சொன்னாங்க. அதனாலே எதிர்ப்பு வந்திடுச்சு.. இல்லையா ஹஜரத்?” – என்றார்.

”சரியாய் சொன்னீங்க தம்பி. இதனாலே, சொந்த நாடே அந்நியமாய் போய் சொல்ல முடியாத அளவுக்கு துன்பத்துயரங்களையெல்லாம் அன்பு நபி அனுபவிச்சாங்க” – ஹஜரத்தின் குரல் கம்மி கரகரத்தது.

”பிறகு?”

”பிறகென்ன? பதிமூணு வருஷக்காலம் பொறுத்திருந்த இறைவனின் திருத்தூதர் இறைவனின் கட்டளைப்படியே மக்காவைத் துறந்து மதீனாவுக்கு சென்றாங்க தம்பி!”

”அப்போ.. உண்மையை எடுத்துரைக்க நாயகம் பதிமூணு வருஷம் மக்காவிலே பல்வேறு துன்பங்களை அனுபவிச்சாங்க. சொல்லடியோட.. கல்லடியும் பட்டாங்க சரிதானே ஹஜரத்?”

கருப்பச்சாமி பதிமூன்று வருடங்களை சற்று அழுத்திச் சொன்னார்.

ஹஜரத் நிமிர்ந்து உட்கார்ந்தார். கருப்பச்சாமியையே உற்று நோக்கினார். ஏதோ புரிவதும், புரியாததுமாய் மனதில் அலைபாய்ந்தது.

”ஆமாம்.. தம்பி..!” – என்று முணுமுணுக்கவும் செய்தார்.

”உண்மைக்கு எப்போதும் எதிர்ப்பு உண்டு என்று நபிகளாரின் வரலாறே சொல்லுது.  அவற்றையெல்லாம் சமாளித்து நபிகளார் பதிமூணு வருஷம் மக்காவிலே தாக்குப் பிடிச்சிட்டு அவங்க பணியிலேயே கவனமாக இருந்தாங்க”

கருப்பச்சாமி… சொல்ல சொல்ல ஹஜரத்தின் புலன்கள் கூர்மையடைந்தன.

”சரி ஹஜரத்.. நீங்க எத்தனை வருஷம் எதிர்ப்புகளையெல்லாம் சமாளிச்சீங்க?”

கருப்பச்சாமியின் அந்த ஒற்றைவரி கேள்வி ஹஜரத்தின் நெஞ்சைத் துளைத்தது.

”இப்போ.. நான் உங்களை நேரிடையாகவே கேட்குறேன்.. மூச்சுக்கு மூச்சு இறைவேதம், நபிமொழி என்று முழங்கும் நீங்க இந்த விஷயத்துலே மட்டும் எப்படி பலவீனமடைஞ்சு  போனீங்க? பள்ளியிலே நீங்க சொல்றதை கேட்கிறதுக்கு எத்தனையோ பேர் ரொம்ப தொலைவிலேயிருந்தெல்லாம் வர்ராங்க. இவங்களையெல்லாம் புறக்கணிச்சு இரண்டு, மூணு பேருடைய பேச்சை கேட்டு, அவங்க எதிர்ப்பைக் கண்டு போகப் போறீங்க.  நாயகம் நின்னு மக்களுக்கு போதிச்ச இடத்தை துறக்கப் போறீங்க.

நபிகளாரின் வரலாற்றை வரிக்கு வரி நினைச்சுப் பாருங்க ஹஜரத். இதெல்லாம் நீங்க எனக்குக் கொடுத்த புத்தகங்களைப் படிச்சு நான் தெரிஞ்சுகிட்டவை.

நீங்க பள்ளியைவிட்டு போயிட்டா அடுத்த ஹஜரத் வருவார். அவர் அந்த நிர்வாகிகள் சொல்றதுக்கு வளைஞ்சு கொடுத்து பிழைப்பை ஓட்டுவார். உங்க பணி தடைப்பட்டுபோனதுதான் மிச்சம்.

அதனாலே இந்த தம்பி சொல்றதை தயவுசெஞ்சு கேளுங்க. இன்னும் பள்ளிவாசல் நிரா்வாகிங்க கொடுத்த தவணை முடியலே. அதனாலே மறுபடியும் அந்த பொறுப்பைத் தொடருங்க. பொறுமையாய் திட்டம் போட்டு.. இதோ இந்த இரும்பை நாம மெது மெதுவாய் தட்டி உருமாற்றுவதைப் போல திட்டம் போட்டு உங்க வேலையைச் செய்யுங்க. ஓய்வு நேரத்தை மக்கள் மத்தியிலே செலவிடுங்க. மெல்ல மெல்ல நீங்க சொல்ல நினைக்கிறதை சொல்லுங்க.. மக்கள் மனசை மார்க்கம் பக்கம் திருப்புங்க..”

அந்த பாமரனின் உள்ளத்திலிருந்து அழகிய வழிகாட்டுதல் அறிவொளியாய் பாய்ந்து கொண்டிருந்தது.

ஹஜரத் எழுந்தார். கருப்பாச்சாமியை நோக்கி மெல்ல நடந்தார். இறுகக் கட்டித் தழுவிக் கொண்டார். இருவரின் வாயிலிருந்தும் ஒருசேர ”அல்ஹம்துலில்லாஹ்!” உதிர்ந்தது.

ஹஜரத்தின் கண்கள் சூட்கேசைத் துழாவ கருப்பாச்சாமி அதை உள்ளறையிலிருந்து எடுத்து வந்து பவ்வியமாக நீட்டினார்.

பள்ளிவாசலில் ஹஜரத் அறையின் பூட்டப்பட்டிருந்த கதவுகள் திறந்தன. அவரின் மனக்கதவுகளும்தான்!

 ““““““““““““““““““““

சமரசம் மாதமிருமுறை இதழில் மார்ச் 1-15, 1987 அன்று பிரசுரமான எனது சிறுகதை.

Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive