NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Showing posts with label மனசோட மடல்கள். Show all posts
Showing posts with label மனசோட மடல்கள். Show all posts

Friday, July 3, 2020

வலையொளியில் எனது பயணம்


நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல வசீகரமும், ஈர்ப்பும், குறிப்பிடத்தக்க ஆளுமைகளும்  என்னிடம் இல்லை என்பதை உறுதியாக அறிவேன். ஆனால், உண்மைகளை வெளிக்கொணர, உண்மைகளை மட்டும் பேசும் முயற்சியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன் என்பதில் மட்டும் தெளிவாக இருக்கிறேன்~இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''''''
அன்பு தோழர் - தோழியருக்கு வாழ்த்துகள்!

வலையொளியில் (YouTube) பாமரன் நியூஸ் Pamaran News https://www.youtube.com/channel/UCzPPNS7B6m5ydvB98g8xNlQ என்றொரு சானல் இருப்பதை தாங்கள் அறிவீர்கள்.

அக்.7, 2008 – இல், ஆரம்பி்க்கப்பட்ட இந்த கணக்கு, சென்னை ராயப்பேட்டை காப்பி கேப் ஒன்றில் காப்பி அருந்தியவாறு எனது லாப் டாப்பில் எனது உறவினர் இளைஞர் ஒருவர் ஆலோசனையின் பேரில் அதன் பிறகு சில ஆண்டுகளுக்கு பின் புத்துயிர் பெற்றது.

அப்போதெல்லாம் வலையொளி அவ்வளவாக சமூகத்தில் பிரபலம் அடைந்திருக்கவில்லை. தமிழ் மொழியும் மானிடைஸ்ஸீக்காக அங்கீகரிக்கப்படவில்லை.

இருந்தாலும், சில ஆயிரம் ரூபாய் கொண்ட படப்பிடிப்பு கருவிகளால், நாமே ஒற்றையாய் தலைமைத் தாங்கி, ஒத்த சிந்தனையாளர்களை ஒன்றுபடுத்தி இயக்குநராக, ஒளிப்பதிவாளராக, படத்தொகுப்பாளராக, சில நேரங்களில் கதைச் சொல்லியாக என்று பன்முகங்களில் செயல்பட முடியும் என்று நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற முனைப்பு அது.

சோம்பி கிடக்கும் இளைஞர்களுக்கும், நம்மால் முடியவில்லையே என்று ஏங்கும் இளைஞர்களுக்கும் இப்படி செய்யலாம்; நீங்கள் செய்ய மறுப்பதேன்? என்று வினாக்களை எழுப்பிய தருணம் அது.

காமிராவுக்கு முன் நிற்கும் எந்த வசீகரமும், சொல் ஈர்ப்பும் இல்லாத நிலையிலும், என்னால் முடிந்ததை செய்து காட்டி, இளைஞர்களை செய்ய வைக்க வேண்டும் என்ற துடிப்பு பல மாவட்டங்களுக்கு பயணிக்க வைத்த காலம் அது.

இந்த துடிப்பும், தாகமும் காடு, மேடெல்லாம் அலைய வைத்தது. ஓரிரு கல்லூரி மாணவர்களை இணைத்து அவர்களுக்கும் எனக்குத் தெரிந்ததை எல்லாம் கற்றுக் கொடுத்து விழிகள்என்ற குழுவாய் பயணிக்க காலம் கொடுத்த வாய்ப்பு அது.

ஒரு கட்டத்தில் அந்த ஓரிருவரும் பொருள் தேடல்களுக்காக என்னை விட்டு விலகியபோதும், தளராமல் ஒற்றை ராணுவ வீரனாய் என் குறிக்கோளிலேயே குறியாக இருக்க வேண்டி வந்தது.

விழிப்புணர்வற்ற ஒரு சமூகத்தின் பிள்ளை நான். அதிலும், குழு மனப்பான்மையோடு செயல்படும் சமூகத்தில் எனக்கென்று ஆதரவு தந்தவர் வெகு சொற்பமானவரே! அதுவும், வானத்துக்கு கீழாகவும், பூமிக்கு மேலாகவும் உள்ள அனைத்தையும் படங்களாய், ஆவணங்களாய் அடக்க நினைத்த எனதாசைக்கு ஒத்துழைப்பும், ஆதரவும் குறிப்பிடத்தக்கதாக இல்லை.

ஆனாலும். ஊடகம் என்னும் பெரும் கனவுகளும், சாதிக்க வேண்டும் என்ற பெரும் வெறியும் இந்த ஒற்றை  ராணுவ வீரனை முன் தள்ளியவாறே இருந்தது. 

இளம்தலைமுறையை வார்த்தெடுக்க, காமிராவின் முன் நிற்க பிடிக்காவிட்டாலும் அதன் முன் நின்று கதை சொன்னேன்.

குழந்தைகளின் கற்பனையைத் தூண்ட அவர்களிடையே கதை சொல்ல வைத்தேன்.

சமூகங்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்க குறும்படம் எடுத்தேன்.

சூழல் மாசுவுக்கு எதிராக ஆவணங்களைப் பதித்தேன்.

இருளர், குயவர், உழவர், மீனவர் என்று சமூகத்தின் விளிம்புநிலை வாழ்வியல் போர் நடத்தும் ஒடுக்கப்படுவோரின் குரலை ஆவணப்படுத்தினேன்.

நடப்பு நிகழ்வுகளை பதிவுகளாக்கினேன்.

புகழனைத்தும் இறைவனுக்கே! இதில் எதையும் ஆதாயம் கருதி, பொருள் தேடி நான் செயல்பட்டதேயில்லை.

இடை இடையே குழுவாய் செயல்பட கிடைத்த வாய்ப்புகளும் என்னோடு ஒன்றி போகாததால் மீண்டும் ஒற்றையாகிப் போனதுதான் மிச்சம். 

இப்படியான எனது வலையொளிப் பயணத்தில் நான் உங்களோடு உரையாடும் இந்த தருணம்வரை வலையொளியின் எனது பயணம் 682 பதிவுகளாகவும், எனது பதிவுகளை பார்வையிட்டவர்கள் 684,869 பேராகவும், எனது பதிவுகளின் சந்தாதாரர்கள் (Subscribers) 7.97K என்ற அளவிலும் கடந்து வந்திருக்கிறேன்.

கடைசியாக எனது பதிவுகள், பறவைகளும், இயற்கையுமாய் என்றாகியுள்ள தற்போதைய ஊரடங்கு சூழலில் நமது வெகுஜன ஊடகங்களில் பெரும்பான்மை ஊடகங்கள் வாய்த்திறக்காத பக்கங்களை திறந்து காட்ட பாமரன் நியூஸ் சானலின் இணை சானல் ஒன்று இறைவன் நாடினால், ஆரம்பிக்க நினைக்கிறேன்.

இன்னும் அதற்கான பெயர் முடிவாகாத நிலையில், இந்த சானல் முற்றிலும் அரசியலுக்கான சானல் என்பதை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். 

நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல வசீகரமும், ஈர்ப்பும், குறிப்பிடத்தக்க ஆளுமைகளும்  என்னிடம் இல்லை என்பதை உறுதியாக அறிவேன். ஆனால், உண்மைகளை வெளிக்கொணர, உண்மைகளை மட்டும் பேசும் முயற்சியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன் என்பதில் மட்டும் தெளிவாக இருக்கிறேன்.

வழக்கம் போல, வாருங்கள் என்று யாரையும் அழைக்கப் போவதில்லை.

அந்த அழைப்பு செயற்கையாக நினைக்கப்படுமோ என்ற அச்சத்தில், விரும்பியோர் என்னோடும், என் பணிகளோடும், அந்தப் பணிகள் தடைப்படாத ஆலோசனைகளோடும், ஒத்துழைப்பு களோடும் என்னோடு இணையலாம்.

இது ஒற்றை ராணுவ தலைமையின் கீழான அணிவகுப்பு என்பதை மட்டும் நினைவில் கொள்க.

நம்பிக்கையுள்ளோர் பிரார்த்தியுங்கள். நம்பிக்கையற்றோர் வாழ்த்துங்கள்!

நன்றி தோழர், தோழியரே!

கொரோனா தீ நுண்மியிடமிருந்து பாதுகாப்புடன் இருந்து கொள்ளுங்கள்.



Share:

Wednesday, June 6, 2018

சீமானின் தம்பிகளுக்கு ஒரு மடல்:



சீமானின் தம்பிகளுக்கு,

“உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவுவதாக..!”

அன்பு தம்பிகளுக்கு இந்த மூத்த அண்ணனின் சுருக்கமான அறிவுரை இது. கேட்போர் கேட்கலாம். புறக்கணிப்போர் வழக்கமான பாணியில் புறக்கணித்துவிடலாம். படைப்பியல் ரீதியாகவே இது உங்களுக்கு தரப்பட்டுள்ள சுதந்திரம்.

நான் ஏற்கனவே தம்பி சீமானுக்கு இதே ரமலான் மாதத்தில் எழுதிய கடிதத்தில், (வலைப்பூவில் வாசிக்க: http://ikhwanameer.blogspot.in/2017/05/blog-post_27.html) அவரும், அவர் சார்ந்த இயக்கமும் வெகு விரைவில் பெரும் நெருக்கடிக்கு ஆளாக இருப்பதைக் குறித்து எச்சரித்திருந்தேன். அந்த மடல் கிடைக்கப் பெற்ற சீமானும் எனது கருத்துக்களை கவனத்தில் கொள்வதாக ஒலி வடிவில் (Audio) சொல்லி நன்றி தெரிவித்திருந்தார்.

தம்பிகளே, இதோ வந்துவிட்டது நாம் தமிழர் கட்சிக்கான வனவாச காலம்.

இயக்கத்தின் மூத்த தலைவர்கள் அனைவரும் ஏதோ ஒரு காரணத்துக்காக கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். காரணமே இல்லாமல் கைது செய்து சிறையில் அடைக்கக்கூடிய வெள்ளையனின் சட்டப் பிரிவுகள் இருப்பது உண்மைதான்! ஆயினும், தற்போதைய கைதுகளுக்கும், நெருக்கடிக்கும் சுயமாய் நீங்களாகவே உருவாக்கிக் தந்த காரணங்கள் இல்லாமல் இல்லை. ஆம்.. இது நீங்களாகவே உங்கள் முடிவுகளுக்குத் திரித்துக் கொண்ட கயிறுகள் அன்றி வேறில்லை.

தமிழரை தமிழரே ஆளவேண்டும் என்பது உங்கள் கொள்யையானாலும், ஆட்சி. அதிகார ஆளுமை என்பது ஒரு இனத்தில் பிறந்ததாலேயே மட்டும் கிடைக்கும் வம்சாவழி உரிமை இல்லை. அது மக்கள் மனங்களைக் கொள்ளைக் கொள்ளும் பண்புநலன். மக்களை ஈர்த்து நம்பிக்கையூட்டி வழிகாட்டும் ராஜபாட்டை.

செவிப்பறையை பிளந்தெடுக்கும் வண்ணம் ஓங்கிய குரலில் உணர்ச்சி வசப்படுத்தும் ஆவேசமான பேச்சுகள்,

திரும்ப.. திரும்ப ஒவ்வொரு இடத்திலும் சலிப்படையச் செய்யும் அதே கருத்துக்கள்,

இவை அனைத்தும் வெறுமனே மனித மனங்களை ஒருகாலும் துளைப்பதில்லை.

இயக்கமும், இயக்கத் தலைமையும் கடும் நெருக்கடிகளுக்கு ஆளாகியிருக்கும் இந்த காலகட்டத்தில் உங்கள் மனம் நோகும் அளவுக்கு பெரும் விமர்சனங்களை முன் வைக்க என் மனம் ஒப்பவில்லை. அதனால், மிக எளிமையான சில குறிப்புகளை மட்டும் என்னால் தர முடியும்.

1 பிரச்னைகள்தான் இயக்கம் உயிரோட்டத்துடன் இருக்கிறது என்பதற்கான சான்றுகள். அதனால், பிரச்னைகளைக் கண்டு துவளாமல் இயக்கப் பணியை முன்னெடுத்து சென்றவாறு இருங்கள்.

2 தேவையற்ற சர்ச்சைகளை தவிர்த்து விடுங்கள். சர்ச்சைகள் உங்களைத் திசைத்திருப்பிவிடும். நேரத்தை வீணாக்கிவிடும்.

3 எதிர்வினையை உருவாக்காதீர்கள். சொல்ல வேண்டிய கருத்துக்களை சூழலுக்கு ஏற்றாற்போல சுருக்கி சொன்னாலே போதுமானது. அந்தக் கருத்தின் எல்லா பக்கங்களையும் தொட வேண்டும் என்பது கட்டாயமல்ல என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

4 தயவுசெய்து தொண்டைக் கிழிய கத்தாதீர்கள். கணிணியில் நான் சீமானின் உரைகளைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது என்னருகே வரும் எட்டுவயது பேரன் அந்த கூச்சல் பிடிக்காமல் முகம் சுளித்து கடுமையான விமர்சனமும் செய்கிறான். இதேபோல, இந்தக் கூச்சலுக்கு ஏராளமான விமர்சனங்கள் உண்டு என்பதை மறந்துவிட வேண்டாம்.

5 சீமானின் தம்பிகள் சீமானைப் போலவே பிரதிபலிக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. அவரவர்க்கான குரல்வளம். உடல் மொழி, மக்களுக்கு எடுத்துரைக்கும் பாங்கு தனித்தனியானது. அதனால், அமைதியாக பேசுங்கள். மக்களுக்கு புரிய வைக்க தொடர்ந்து முயலுங்கள்.

6 மக்களிடையே சுயநலம் சூழ்ந்து கொண்ட காலமிது. ஒழுக்கவிழுமியங்கள் அதளபாதாலத்தில் சரிந்துள்ள சூழல். இச்சூழலில் பொதுநல வெளிக்கு மக்களை அணித்திரட்டுவது அவ்வளவு எளிதானதல்ல என்பதை நினைவில் வையுங்கள்.

7 இந்திய ஜனநாயக அமைப்பில் எல்லாமே மாற்றத்துக்குரியவை ஆதலால், பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ முதலில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்துக்கு அடிபணியுங்கள். இது பெருமளவு பிரச்னைகளைத் தீர்த்துவிடும். உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும். மன உளைச்சலைத் தவிர்க்கும்.

8 பொது எதிரி பூதகரமாய் எழுந்து நிற்கும் நிலையில், உங்கள் கவனம் முழுக்க அந்த எதிரியை வீழ்த்துவதில் இருக்கட்டும். இதற்காக ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தில் நீங்கள் இத்தகைய குறிக்கோள் கொண்டவர்களுடன் இணைந்து பயணிப்பதில் ஒரு தவறும் இல்லை.

9 அரசியல் அரங்கில், இதற்கு முன்னிருந்தோர் செய்த தவறுகளால்தான் அவர்கள் வீழ்த்தப்பட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனால், மீண்டும்,.. மீண்டும் அவர்களை நிந்தித்துக் கொண்டு பகையுணர்வை அதிகரித்துக் கொள்ளாதீர்கள். இதற்கு மாறாக, மேலும், மேலும் உங்கள் ஆளுமைப் பண்புகளை வளர்த்தவாறே இருங்கள்.

11 கடைசியாக உங்கள் அம்புகளை கூர்த்தீட்டிக் கொள்ள அவகாசம் தேடுங்கள். இதற்கு சமயோசிதம், விவேகம் இவற்றுடன் செயல்பட வேண்டியதிருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

அன்பு தம்பிகளே, நான் ஏற்கனவே தெரிவித்ததைப் போல, மேற்குறிப்பிட்ட அறிவுரைகளை நீங்கள் கேட்கலாம். நிராகரிக்கலாம் இது உங்கள் விருப்பம். ஆயினும் படைப்பில் நாம் இரு காதுகளோடு படைக்கப்பட்டவர்கள் என்பதில் கவனத்தில் கொள்க.

அன்புடன்,

இக்வான் அமீர்

மூத்த சுதந்திர இதழியலாளர் மற்றும் ஆவணப்பட இயக்குனர்.


Share:

Sunday, May 27, 2018

அன்பு நண்பர்களே




அன்பு நண்பர்களே, எனதருமை சகோதரர்களே,

நோன்பென்னும் யாகத்தீயில் படைத்தவன் ஆணையை சிரமேற்கொண்டு தனது பேரிச்சைகளை கட்டுக்குள் கொணரும் பிரயத்தனத்தில் முஸ்லிம் உலகம் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நேரமிது. மனித இனத்து குழிகற்களாய் இருந்து அவனை நல்வழிப்படுத்தி சமூகத்தின் தீமைகளைக் களையும் அறப்போராளியாக மாற்ற மிக முக்கியத் தேவையான ‘இறைவனின் அச்சத்தைப்’ பெறவே இந்த முயற்சி. அதற்கான பயிற்சி பாசறையே ரமலான்.

பசித்திருந்தும், விழித்திருந்தும், தனித்திருந்தும் ஒரு மாதம் பெறும் இந்த ஆன்மிக பயிற்சியின் விளைவாக உள்ளாற்றலில் புத்துயிர் பெற்று அதைத் தொடர்ந்துவரும் பதினொரு மாதங்களில் அந்தப் பயிற்சியை செயல்படுத்தும் திட்டமே நோன்பின் அடிப்படை. 

இந்த நன்நோக்கத்தை உணராதவர் கடைப்பிடிக்கும் நோன்பு வீணாகிவிடும். வெறும் பசி-பட்டினி, தாகம், இரவில் கால்கடுக்க நின்று, தூக்கமிழந்து தொழுத தொழுகைகளின் பலன் இவை அனைத்தையும் இழந்து சடங்கு, சம்பிரதாயங்களை நிறைவேற்றியவர் போலாகிவிடுவார். 

ஏனெனில் தனது படைப்புகளிடம் எத்தகைய தேவையும் இல்லாதவன் இறைவன். அத்தகைய நிலையில் நமது பசி, பட்டினி விரதங்களில் அவனது தேவைதான் என்ன? 

இறையச்சத்தை கேடயமாக கொண்டு சமூகத்தின் நன்மைக்கு அச்சுறுத்துலாக இருக்கும் அத்தனை தீமைகளுக்கு எதிராக மனிதனை ஆர்த்தெழவைக்கும் புனித மாதமே ரமலான்.

மனிதனுக்கு வழிகாட்டியாக, நன்மை, தீமைகளை பிரித்தறிவித்து வழிநடத்தும் ஒளிவிளக்காய் திருக்குர்ஆன் அருளப்பட்டதும் இந்த மாத்த்தில்தான்! இறைவனின் பேரருளுக்கு ஆளான ஆயிரம் மாதங்களைவிட சிறந்த ஓரிரவும் இருப்பதும் இந்த மாத்த்தில்தான். ஒரு நன்மைக்கு பகரமாக  பல்லாயிரம் நன்மைகளை வாரி வழங்க வள்ளலுக்கெல்லாம் வள்ளல் பரம்பொருள், கருணையாளன், இரக்கமுடையோன் இறைவன் இருகரம் நீட்டி காத்திருப்பதும் இந்த மாதத்தில்தான்!

இத்தகைய சிறப்புக்குரிய மாதமான ரமலான் நம்மிடையே கடந்து கொண்டிருக்கிறது.

இதே கடப்பில், மற்றொருபுறம் நமது அருமை உறவுகள், ஆதிபிதாவின் மைந்தர்கள, இரத்தபந்தங்கள் ஸ்டெர்லைட் என்னும் கொடியவனுக்கு எதிராக நடத்தப்பட்ட அறவழி யுத்தமும் அரங்கேற்றப்பட்ட மாதமும் ரமலான்தான்!  தம்மையும், தம் சந்ததியையும். தம் மண்ணையும் காக்க அப்பாவிகள் மேற்கொண்ட நல்முயற்சியில் இதயமே அற்ற அதிகார எடுபிடிகளின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகி தங்கள் இன்னுயிரை இழந்ததும் இந்த மாதத்தில்தான்!

தம் கண்முன்னால் குடும்பத்தலைவனை இழந்த உறவுகள், பிள்ளைகளைப் பறிக்கொடுத்து பரிதவிக்கும் பெற்றோர்கள், நூற்றுக் கணக்கில் தங்கள் சொந்தங்களைக் காணாமல் தேடிக் கொண்டிருப்போர் என்று சுக்குநூறாகிப் போயிருக்கிறது தூத்துக்குடி.

இந்நிலையில், அதிகாரக் கொலைக்காரர்களை அடையாளம் கண்டு, அவர்கள் செய்த கொலைகளுக்கான மரண தண்டனையைப் பெற்றுத் தருவதும், இந்த படுகொலைகளுக்குக் காரணமான அரசியல் அரியணைப் பித்தர்களை பதவிகளிலிருந்து இறக்கி அவர்களுக்கான தக்க தண்டனைப் பெற்றுதருவதும் அவசியமானது.

வெள்ளையனின் சட்டங்களை இன்னும் நடைமுறைப் படுத்திக் கொண்டு சொந்த மக்களுக்கு எதிராக, அந்த மக்களின் வியர்வையால் பெற்ற வரிப்பணத்திலிருந்து ஊதியம் வாங்கிக் கொண்டு, மக்களைக் காக்க வேண்டிய ஆயுதங்களால் மக்களின் உடல்களை சிதறடிக்கும் இந்த கொடிய சட்டங்களை உடனடியாக மாற்றியமைக்க வேண்டியது இவற்றைவிட முக்கியமானது.

ஜனநாயக அமைப்பின் மிக முக்கியத்தூணாக இருக்க வேண்டிய ஊடகங்களோ அரசியில்வாதிகளின் ஊதுகுழல்களாய், தலையாட்டி பொம்மைகளாய் மாறி நிற்கும் அவலநிலை. ஒவ்வொரு ஊடகத்தின் பின்னும், அவை வெளியிடும் செய்திக்கு பின்னும் ஓர் அரசியல். உண்மைகள் மறைக்கப்பட்டு அரசியல் அதிகாரங்கள் அரங்கேற்ற கடும் முயற்சியில் நடைபெற்று வருவது உண்மை. இதன் நீட்சிதான் தூத்துக்குடி பெரும் சோகத்தில் மூழ்கியிருக்கும் நிலையில் அந்த மக்களுக்கான நீதி கிடைக்கும்வரை முனைப்பு காட்ட வேண்டிய ஊடகங்கள் தற்போது “அம்மா பேசினார்!” என்று மக்களை திசைத்திருப்ப முயல்வதும்.

இச்சூழலில் எனதருமை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், பெருமதிப்பு மிக்க சமூக ஊடகங்களை தூத்துக்குடி மக்களுக்கும், தமிழகத்தின் கிராமங்கள் தோறும் நடக்கும் மக்கள் போராட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து உங்கள் பதிவுகளை முடுக்கிவிடுங்கள். உங்கள் ஒவ்வொரு பதிவும் உண்மையை வெளிப்படுத்துவதாக இருக்கட்டும். நடப்பு நிகழ்வின் முகங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவருவதாக இருக்கட்டும். தேவையற்ற பதிவுகளை முற்றிலும் தவிர்த்து, அரசியல் வர்ணங்களிலிருந்தும், மத மாச்சர்யங்களிலிருந்தும் விலகி மக்களுக்கான பதிவுகளாக இருக்கட்டும்.

அதேபோல, சட்டம் படித்தவர் தூத்துக்குடி மக்களின் சட்டப்பிரச்னைகளுக்கு எவ்வித கைமாறும் கருதாமல் சட்ட உதவிகள் செய்யட்டும்.

பொருள் கொண்டவரோ தம்மால் முடிந்தளவு பொருளாதார உதவிகளை பாதிக்கப்பட்டோருக்கு செய்யட்டும்.

கற்றறிந்தோரோ, எவ்வித எதிர்பார்ப்பின்றி தங்கள் அறிவுத் திறன் கொண்டு தூத்துக்குடி படுக்கொலைகளை உலகறியச் செய்யட்டும்.

எதுவும் செய்ய இயலாத பெண்கள், குழந்தைகள் இவர்கள் ஒன்றுபட்டு பாதிக்கப்பட்டோர்க்கு தேவையான சிறு சிறு உதவிகள் செய்யட்டும்.

இவை அனைத்தும் நீறு பூத்த நெருப்பு நிலையிலேயே இருக்கட்டும். இந்த அதிகாரம் மக்கள் கையிலெடுக்கும் காலம்வரை இந்த போக்கு தொடரட்டும்.

தமிழகத்திலிருந்து தொடரும் இந்த மக்கள் எழுச்சி இந்தியா முழுவதும் பரவட்டும்.

ஒவ்வொரு முகநூல் கணக்காளரின் குறைந்த கணக்கீடாய் நூறு.. நூறு பேராய் திரண்டாலே இந்த எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டி விடும்.

கொடியவர்கள் வீழ்த்தியிருப்பது மனித உயிர்களை அல்ல. பெரும் பிரளயத்துக்கான விதைகளையே இவர்கள் தூவி உள்ளார்கள். காலம் இதை நிச்சயம் உணர்த்ததான் போகிறது.




Share:

Saturday, November 11, 2017

சீமானுக்கு மடல்: 'அந்த வாசிப்புக்கு தக்க தருணம் இதுதான்!



 அன்புள்ள தம்பி சீமானுக்கு,

“நலம் பெற வாழ்த்துகள்..!”

தங்களை, இந்த மடல் நல்ல உடல் நிலையுடனும், வீரியமான நல்லெண்ணங்களுடனும் சந்திக்கும் என்று நம்புகின்றேன். அதற்காக இறைவனிடம் இருகரமேந்தி பிரார்த்திக்கின்றேன்.

தம்பி சீமான்,

இளமைக்காலந்தொட்டே நீங்கள் முஸ்லிம்களுடன் தொடர்புள்ளோராக இருந்திருப்பீர்கள். இன்னும் மிகச் சிறந்த தொடர்புகள் அந்த சமூகத்திலிருந்து உங்களுக்கு நட்புகளாக கிடைத்திருக்கலாம். அவர்களின் சாயல்கள் உங்களை பாதித்திருக்கலாம். இதன் மூலம் குறைந்தபட்சம் முஸ்லிம்கள் மீதான நல்லபிப்பிராயம்கூட விளைந்திருக்கலாம். இருப்பினும் அவர்களின் கொள்கை, கோட்பாடுகளின் வெளிப்பாடுகளை முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இதை அண்மையில் தாங்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய முஸ்லிம்களின் மேடையில் சில வார்த்தைகளுக்கு விளக்கம் கேட்டு தெரிந்து கொண்டது மூலமாக புரிந்து கொள்ள முடிகிறது. இத்தகைய மேடைகளில் இனி தாங்கள் அடிக்கடி கலந்துகொள்ள வேண்டியிருக்கும். தங்களின் பேச்சுரைகள் முஸ்லிம் சமூகத்து இளைஞர்களை பாதித்திருப்பதன் விளைவாக்கூட இருக்கலாம். தங்கள் மீதான நன்மதிப்பு அதிகரிப்பதாகவும் இருக்கலாம். அதனால், இஸ்லாம் குறித்து உங்கள் வாசிப்பும், உள்வாங்கலும் இன்னும் அதிகரித்துக் கொள்ள வேண்டியிருக்கும். இதை சொல்லும்போது, நீங்கள் தொப்பி, தாடியுடன் காட்சி அளிக்க வேண்டுமென்றோ, அவர்களின் நிகழ்வுகளில் கலந்துகொண்டு கஞ்சி அருந்த வேண்டும் என்பதோ பொருளல்ல. நீங்கள் இஸ்லாம் குறித்து மிக ஆழமாக வாசிக்க வேண்டிய தருணம் இது என்பதுதான் நான் சொல்ல வந்த உள்ளடக்கம்.

உலக மக்கள் தொகையில், நாலுபேருக்கு ஒருவர் முஸ்லிம் என்ற விகிதாச்சாரம் கொண்ட ஒரு சமூகத்தாருடன்தான் தாங்கள் தோள் இணைத்திருக்கிறீர்கள்.

இஸ்லாத்தின் எதிரிகளால், முஸ்லிம்கள் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு விதமான அடக்குமுறைகளுக்கும், அபாண்டங்களுக்கும், பழிபாவங்களுக்கும், அழிச்சாட்டியங்களுக்கும் தொடர்ந்து ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள் தாங்கள் நன்கறிந்தவைதான்.

உலகளவில், இத்தனை சிலுவைகளையும் சுமக்கும் ஒரு சமுதாயமாக இருந்தும் அவர்களை ஒழிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள் இஸ்லாத்தின் எதிரிகள்.

ஏனென்றால், முஸ்லிம்களுக்கு என்று உலகளாவிய ஒரு வழிகாட்டி வேதநூல் இருக்கிறது. அந்த வேதநூலின் வழியிலான செயலுரும் தந்த ஒரு தூதரும் இருக்கிறார். அந்த போதனைகள் வாழ்வியல் ஆளுமைகளாய் முஸ்லிம்களை வழி நடத்திக் கொண்டிருக்கிறது.

அதனால், மலைப்போல் எழும் துன்பங்களை எல்லாம் முஸ்லிம்கள் அந்த பேரழகிய ஆளுமைகளைக் கொண்டே தற்காத்துக் கொள்கிறார்கள். எதிரிகளால் திட்டமிடப்பட்டு அவர்கள் தொடர்ந்து வீழ்த்தப்பட்டும், அவர்கள் நிலைகுலையாமல் தங்கள் வாழ்வியல் களத்தில் உறுதியுடன் இருக்கிறார்கள். மொழிவாரியாக, இனவாரியாக, நிறவாரியாக, பல்வேறு மண்வாரியாக அவர்கள் தனித்திருந்தாலும் கொள்கையளவில் ஒன்று திரள இந்த அரும் போதனைகளே காரணம்.

தம்பி சீமான்,

நபிகளார் இறைவனால் அனுப்பப்பட்ட தீர்க்கத்தரிசி என்பது ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கும். சரி… நபிகளார் கொண்டு வந்த செய்திதான் என்ன தெரியுமா உங்களுக்கு?

ரோமப் பேரரசர் ஹெர்குலஸ். அவர் ‘பைத்துல் முகத்தஸ்’ எனப்படும் ஜெருசலேத்தில் இருந்தபோது, நபிகளார் அவருக்கு எழுதியிருந்த கடிதம் கிடைத்தது. யாராவது ஒரு அரபியர் கிடைத்தால். அவரிடம் நபிகளார் பற்றிய தகவல்களை விசாரிக்கலாம் என்று அவர் காத்திருந்த வேளையில்தான் மக்கத்து குறைஷி பிரமுகர் அபூ சுப்யானையும், அவரது தோழர் சிலரையும் தற்செயலாகச் சந்தித்தார்.

அபூ சுப்யானை நோக்கி ஹெர்குலஸ் இப்படி கேட்டார்: “முஹம்மது உங்களிடம் அப்படி என்னதான் கூறுகின்றார்?’

நபிகளாரிடம் கடும் விரோதம் பாராட்டி வந்தவர் அபூசுப்யான். ஆனாலும், நபிகளார் குறித்து நேர்மையான முறையில்தான் அவரால் பதிலளிக்க முடிந்தது. அவர் இப்படி சொன்னார்:

“ஒரே இறைவனை ஏற்றுக் கொள்ளுங்கள். வானங்களிலும், பூமியிலும் இறைவனின் ஆட்சியே நடக்கிறது. சர்வலோகங்களிலும் அவனுடைய ராஜாங்கமே நடக்கிறது. இந்த அதிகாரத்திலும், நிர்வாக அமைப்பிலும் அவன் யாரையும் இணை, துணையாக வைத்துக் கொள்ளவில்லை.

இறைவனின் சக்திக்கு நிகர் வேறு சக்தியில்லை. யதார்த்தம் இதுவாக இருக்கும்போது, மனிதர்கள் இறைவனுக்கு மட்டுமே தலை தாழ்த்தி வணங்கிட வேண்டும். அவன் மீதே அன்பு வைக்க வேண்டும்.

இறைவனுக்கு அடிபணிவதிலும், இறைவனை வணங்குவதிலும், இறைவனின் மேலாதிக்கத்திலும் எவரையும் இணை வைக்கக் கூடாது. எல்லாவற்றுக்காகவும் அவனிடமே உதவி கேட்க வேண்டும்.

முன்னோர்களின் கோட்பாடுகளையும், இணைவைப்புச் செயல்களையும் விட்டுவிட வேண்டும்.

தொழ வேண்டும்.

சொல்லாலும், செயலாலும் வாய்மையுடன் வாழ வேண்டும்.

ஆணும் – பெண்ணும் ஒழுக்கத்தையும், கற்பையும் பேணி வாழ வேண்டும்.

சக மனிதர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்.

மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் மக்களே! ஒருவருக்கொருவர் சகோதரர்களே! ரத்த உறவு முறைகளே!”

ஹெர்குலஸ் மன்ன்னிடம், நபிகளார் குறித்து கூடுதல், குறைவின்றி இப்படிதான் அபுசுப்யானால் சாட்சி அளிக்க முடிந்தது. நபிகளாரின் அழைப்பு, அன்னார் கொண்டு வந்த திருச்செய்தியின் உள்ளடக்கம் இதுதான்!

‘அம்ரு இப்னு அபஸா’ என்பது அந்த நபித்தோழரின் பெயர். இவர் நபிகளாருக்கு நபித்துவம் கிடைத்த தொடக்கக் காலத்தில் நபிகளாரை மக்கா நகரில் சந்தித்தார். அப்போது அவருக்கும் நபிகளாருக்கும் நடந்த உரையாடல் இது:

“நீங்கள் யார்?”

“நான் இறைவனின் தூதராவேன்!”

“… இறைத்தூதர் என்றால்…?”

“இறைவன் என்னைத் தனது தூதராக.. அனுப்பியுள்ளான்!”

“என்ன செய்தியுடன் இறைவன் உங்களை அனுப்பியுள்ளான்?”

மக்கள் தம் உறவினருடன் இணைந்து வாழ அறிவுறுத்த வேண்டும்!

இறைவன் ஒருவன் என்ற ஏகத்துவக் கொள்கை பரப்ப வேண்டும்!

இறைவனுடன் வேறு எவரையும், எதையும் இணை வைக்கக் கூடாது!

இது போன்ற நோக்கங்களுடன் இறைவன் என்னை அனுப்பியுள்ளான்!”

நபிகளார் தமது வருகையின் நோக்கத்தை வாய்ப்பட ரத்தினச் சுருக்கமாக சொன்னது இது:

"இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையிலான உறவை சீர்ப்படுத்த வேண்டும். அந்த உறவு சரியான அடிப்படைகள் மீது நிறுவ வேண்டும். அதற்கான அடிப்படை …. ‘இறைவன் ஒருவன்’ – என்ற ஏகத்துவமாகும். இறைவனின் அதிகாரத்தில் வேறு எவரது தலையீட்டையும் அனுமதிக்கக் கூடாது! இறைவனை மட்டுமே வணங்க வேண்டும். இறைவனின் கட்டளைகளுக்கு மட்டுமே கீழ்ப்படிய வேண்டும்.

மனிதர்களுக்கிடையிலான சரியான தொடர்பின் அடிப்படைகள் பரஸ்பர அனுதாபமும், பரிவும், இரக்கமுமேயாகும். மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள். ரத்த பந்த உறவு முறையினர். அதனால், ஒருவர் மற்றொருவரிடம் பரிவுடனும், இரக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். ஒருவர் அநீதிக்கு ஆளாகும்போது, அனைவரும் அநீதி இழைக்கப்படுபவருக்கு ஆதரவாகக் கிளர்ந்தெழ வேண்டும். ஆபத்தில் சிக்கிக் கொண்டோரை ஓடோடிச் சென்று காக்க வேண்டும்"

நபிகளாருக்கு முன் எல்லா இறைத்தூதர்களும் இந்த அடிப்படைச் செய்திகளைத்தான் சொன்னார்கள். அதாவது, ஏகத்துவம் எனப்படும் ஓரிறைக் கொள்கையும், மனிதர்கள் அனைவரும் முதல் மனிதரும் … முதல் இறைத்தூதருமான ஆதிபிதா ஆதம் அவர்களின் சந்ததிகள். சகோதர உறவுமுறை கொண்டவர்கள் என்பதுதான் அனைத்து இறைத்தூதர்கள் கொண்டு வந்த இறைச்செய்தியின் சாராம்சம்.

முகீரா பின் ஷீஃபா மற்றொரு நபித்தோழர்.

ஒருமுறை, பாரசீகத்து தளபதி ருஸ்தூமுடன் நடந்த உரையாடலில் சொன்னார்:

“அய்யா! நாங்கள் வணிகர்கள் அல்ல. வணிகத்துக்கான புதிய புதிய சந்தைகளைத் தேடிக் கொண்டிருப்பதற்கு! அது எங்கள் நோக்கமும் அல்ல; எங்கள் இலக்கும் அல்ல. எங்களது நோக்கமும், குறிக்கோளும் மறு உலகம்தான்!

நாங்கள் இறைவனின் கட்டளைகளான இஸ்லாத்தின் கொடியை தோளில் சுமந்து நிற்பவர்கள். அந்த வாழ்க்கையின் பக்கம் மக்களை அழைப்பதே எங்கள் குறிக்கோள். வணக்கத்துக்குரியவன் ஒரே இறைவனான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பதும், முஹம்மது நபிகளார் இறைவனின் திருத்தூதர் என்று சான்று பகர்வதும் இந்த மார்க்கத்தின் அடிப்படை. மனிதன் தன்னைப் போன்ற சக மனிதனுக்கு அடிபணிவதிலிருந்து அவனை விடுத்து இறைவனுக்கு அடிபணிந்து வாழச் செய்ய வேண்டும் என்பதும் இந்த வாழ்க்கை நெறியின் அறிவுரையாகும்!”

இதைக் கேட்ட பாராசீக தளபதி வியந்து சொன்னார்:

“நல்ல அறிவுரைதான்! இன்னும் என்ன சொல்கிறது உங்கள் மார்க்கம்?”

அதற்கு நபித்தோழர் முகீரா பதிலளித்தார்:

“மனிதர்கள் அனைவரும் ஆதமின் வழித்தோன்றல்களே! அவர்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் என்பதும் அந்த அறநெறியின் போதனைகளாகும்”

இவை நபிகளார் கொண்டு வந்த இஸ்லாம் என்னும் இறைநெறியின் அடிப்படை செய்திகளில் சில. எவர் விரும்புகின்றாரோ அவரை மனிதர்களின் அடிமைப்படும் தளைகளிலிருந்து விடுவித்து இறைவனுக்கு, எங்கும் வியாப்பித்திருக்கும் அந்த பரம்பொருளுக்கு அடிபணியும் வாழ்க்கை நெறிக்கு அழைத்துச் செல்லும் திருப்பணி இது.

படைத்தவனின் கட்டளைப்படி மனித குலத்தை வாழ அழைப்பதே நபிகளாரின் திருச்செய்தியாகும்.

இஸ்லாம் குறித்து தாங்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய வாசிப்புக்கு மேலே நான் குறிப்பிட்டுள்ள சில விஷயங்கள் உங்களுக்கு துவக்கமாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

நபிகளார் இந்த திருச்செய்தியை முன்வைத்துதான் காலங்காலமாக பிளவுப்பட்டுக் கொண்டிருந்த பல்வேறு குலங்களை, கோத்திரங்களை, உட்கிளைகளை ஒன்றிணைத்து ஒரு தாய் மக்களாக காட்டினார்கள். உலகளாவிய மார்க்கமாய் இஸ்லாத்தை நிலைநிறுத்தினார்கள்.

அதனால், சீமான் இனி தாங்கள் இத்தகைய வரலாறுகளை எல்லாம் வாசித்தேயாக வேண்டியிருக்கும்.

வாழ்க, ஒழிக என்ற கோஷங்களை உச்சரிக்காத முஸ்லிம் பெருமக்களின் மேடைகளை அப்போதுதான் உங்களால் அலங்கரிக்க முடியும்.

எந்த உசுப்பேத்தலுக்கும் ஆளாக்க முடியாத முஸ்லிம் இளைஞர்களின் நன்மதிப்பையும் பெற முடியும். உங்கள் கொள்கை – கோட்பாடுகள், முஸ்லிம்களின் கொள்கை, கோட்பாடுகள் ஆகியவற்றின் ஊடே ஒரு பொதுவெளியை உருவாக்கிக் கொள்ள முடியும்.

உங்களின் நன்மையான பணிகளில் முஸ்லிம் இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கொள்ளவும் முடியும்.

தம்பி சீமான்,

இந்த மடலை ஒரு பத்து நாட்களுக்கு முன்னரே தங்களுக்கு எழுத இருந்தேன். நேரமின்மையால் தாமதமானது.

தங்களுக்கு மடல் எழுத இருப்பதை எனது நண்பர் பாலாவிடம் பகிர்ந்து கொண்டபோது அவர் சொன்னார்: முதலில் மக்களை பிளவுபடுத்த வேண்டாம் என்று அவரிடம் சொல்லுங்கள்.!” இத்தனைக்கும் அவர் பத்தரைமாற்று தமிழர். இந்த மண்ணின் ஆதிகுடி!

ஆட்சி, அதிகாரம் வெறும் இனம் சார்ந்ததல்ல. எந்த மதம், மொழி சார்ந்ததும் அல்ல. இந்திய உபகண்டத்தின் அதிகார வரலாறே அதற்கான சாட்சி. பாரசீகத்திலிருந்து வந்த முகலாயர்கள், முஸ்லிம் மன்னர்கள். அவர்களின் உயரிய விழுமியங்கள் நசிந்துபோன நிலையில், வெள்ளைத்தோலுடன், பழுப்பு நிறக் கண்களுடன் எங்கிருந்தோ வந்து அதிகாரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் என்று கடந்தகால வரலாறு சாட்சியாய் நம் முன் நிற்கிறது.

மனித மனங்களை கொள்ளைக் கொள்ளும் நல்லாட்சியரே நமது நாட்டின் இன்றைய தேவை.

என் கருத்துக்களை பரிசீலியுங்கள். முயலுங்கள். வெற்றியடைவீர்கள்.

இறைவன் நாடினால் மீண்டும் மற்றொரு அறிவுறுத்தலோடு உங்களைச் சந்திப்பேன்.

அன்புடன்,

தங்கள் சகோதரன்,

இக்வான் அமீர்

மூத்த இதழியலாளர்.
Share:

Sunday, August 13, 2017

அன்புள்ள டாக்டர் கபீல் கானுக்கு,


டாக்டர் கபீல் கான்

அன்புள்ள டாக்டர் கபீல் கானுக்கு,

தங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவுவதாக!

செத்த பிணங்களை வைத்து வணிகம் செய்யும் மருத்துவ உலகில், முடிந்தவரை பிடுங்கி பஞ்சபராரியாக்கும் மருத்துவர் இடையில், தாங்கள் தனி ஆளுமைப் பண்பாளராக மிளிர்வதைக் கண்டு உண்மையிலேயே உள்ளம் பூரிக்கின்றேன் டாக்டர்.

உ.பியின் கோராக்பூர் பாபா ராகவ தாஸ் (BRD) அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஐந்து நாட்களாக 60 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தகுந்த மருத்துவ சிகிச்சைகள் இன்றி பலியான சம்பவம் ஓரிரு நாட்களாகதான் உலகின் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது.

முழுக்க... முழுக்க ஆட்சி எந்திரத்தின் கோளாறுகளால், அலட்சியத்தால்..  இந்த பிஞ்சு உயிர்களின் பலி நிகழ்ந்தது.

மாநில அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் நியமிக்காததும், தகுந்த மருந்துபொருட்கள் இல்லாததும், உயிர்காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்களின் பற்றாக்குறையுமாய் சேர்ந்து இந்த மரண பலிக்கு காரணமானது.

வெறுப்பு அரசியல்விதைகளை விதைக்க நேரமில்லாத மதவாத அதிகார வர்க்கத்துக்கு குடிமக்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து என்னதான் கவலை. அதுவும் மாநில முதல்வரின் சொந்த தொகுதியிலேயே நடந்துள்ள இந்த உயிரிழப்பு அவர்களின் மக்களுக்கான அக்கறையின்மையைத் தவிர சொல்லும் செய்திதான் என்ன?

டாக்டர் கான் சாப், 

ஒரு மருத்துவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் நிகழ்கால உதாரணம் என்பதில் பெருமையடைகிறேன்.

வெறுப்பு அரசியல்வாதிகள் அதிகார ஆர்ப்பாட்டத்துக்கு இடையே அமைதியாக தாங்கள் செய்திருக்கும் பணி மகத்தானது.

ஆகஸ்ட் 10 அன்றைய நள்ளிரவில், பிராணவாயு வினியோகத்துக்கான பிரதான குழாயில் எச்சரிக்கை மணி ஒலிக்கிறது. பிராணவாயுவின் அளவு குறைந்து போனதற்கான சிவப்பு அடையாள எச்சரிக்கை அது. உயிர்க்காக்கும் பிராணவாயுவின் அளவு ஓரிரு மணிநேரம்கூட தாக்குப்பிடிக்காது என்ற நிலையில் மருத்துவமனை பணியாளர்களும், மருத்துவர்களும் கைகளைப் பிசைந்து நின்ற கொடுமையான வேளை அது.

ஒரு குழந்தை மருத்துவரான நீங்கள் தாயுமானவராக அல்லவா அந்த நேரத்தில் மாறி நின்றீர்கள்..! எவ்வித பதட்டமும் படாமல் நிலைமையை சமாளிக்க முடிவெடுத்தீர்கள்..! சீரான திட்டமிட்டீர்கள்..! நேரடியாக களத்தில் இறங்கினீர்கள்! ஒருவேளை திரும்பிவருவதற்குள் பிராணவாயு குறைந்து போனால்... செயற்கை சுவாசப் பைகளை (Ambu bag) பயன்படுத்தி குழந்தைகளை காக்க வேண்டும்! என்று கீழ்நிலை மருத்துவர்களுக்கு ஆணை பிறப்பித்தீர்கள்.

ஓடோடி சென்று பிராணவாயு உருளைகளுக்கான வினியோகஸ்தரிடம் கெஞ்சியிருக்கிறீர்கள். அதுவரையிலான பாக்கித் தொகை கணக்கு முடிக்காமல் பிராணவாயுவை வழங்க முடியாது என்று கை விரித்த வணிகரிடமிருந்து தோல்வியுடன் திரும்பிவந்த நீங்கள் அத்துடன் நிற்கவில்லை.

நட்பு ரீதியாய் அண்டை மருத்துவமனைகளை அணுகி மூன்று பிராணவாயு உருளைகளை காரில் எடுத்து வருகிறீர்கள். அவற்றின் கொள்ளளவு வெறும் அரைமணி நேர பயன்பாடுதான்..!

காலை 6 மணி. பதற்றத்துடனேயே விடிகிறது. அவசர சிகிச்சைப் பெற்று வந்த பல குழந்தைகள் பிராணவாயு இல்லாமல் உயிருக்கு போராடும் தகவல் கேட்டு மீண்டும் பதறியடித்துக் கொண்டு ஒவ்வொரு மருத்துவமனையாய் செல்கிறீர்கள். 12 பிராணவாயு சிலிண்டர்கள் மீண்டும் இரவலாக பெற்று வருகிறீர்கள். இதற்காக நான்குமுறை பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்நிலையில் மனம் இளகிய பிராண வாயு வினியோகஸ்தர் ஒரு நிபந்தனையுடன் உருளைகளை தர முன்வருகிறார். மோடி சர்க்காரின் பணமில்லா வர்த்தகம் - காஷ்லெஸ் எகனாமி ஏற்கனவே கேலியான நிலையில், கையில் பணம் கொடுத்து பிராணவாயு உருளைகளை வாங்கிக் செல்ல சம்மதிக்கிறார்.

உண்மையிலேயே உங்கள் தாய், தந்தையர் அற்புதமானவர்கள் டாக்டர் கான் சாப். இவ்வளவு தாராளமனம் கொண்டவராக  உங்களை வளர்த்திருக்கிறார்கள்..! உடனுக்குடன் பத்தாயிரம் ரூபாய் சொந்த பணம் கொடுத்து, அதுவரையிலான போக்குவரத்து செலவுகள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு பிராணவாயு உருளைகளை நீங்கள் வரவழைத்திருக்காவிட்டால்... எங்கள் இளைய சிற்பிகளில் இன்னும் பலர் பரலோகம் சென்றிருப்பார்கள். எங்கள் தாய்மார்கள் ஆற்றாமையால் காலமெல்லாம் அழுதழுது புலம்பியிருப்பார்கள். எங்கள் ஆட்சியாளர்களோ வாக்குக்காக கிளிசரின் போடாமலேயே கண்ணீர் சிந்தியிருப்பார்கள்.

டாக்டர் கபீல் கானின் போற்றுதலுக்குரிய மனிதநேயப் பண்பை கண்டுக் கொள்ள முடியாமல், இந்நேரம், அநேகமாய் இந்திய ஊடகங்கள் அனைத்தும், பார்வையிழந்திருக்கலாம். செவிப்புலன் பறிபோய் இருக்கலாம். வாய்ப்பேச முடியாமையால் தடுமாறியிருக்கலாம். அதனால், தாங்களும், தங்களின் அரிய சேவையும், அவர்களின் உலகாயதப் புலன்களுக்கு படாமல் போயிருக்கலாம். ஆனால், அந்த சில மணி நேரத்தில் நீங்கள் பெற்றிருக்கும் மன நிம்மதியும், பெற்றோர்களிடமிருந்து பெற்ற ஆசிகளுக்கும், தங்களின் சகாக்களின் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும், அவற்றின் கனமும் வார்த்தைகளால் வடிக்க இயலாதவை டாக்டர்.

உண்மையிலேயே இவற்றையெல்லாம் நீங்கள் விளம்பரத்துக்காக செய்யும் அரசியல்வாதி இல்லை என்பதே உண்மை.

நீங்கள் சார்ந்த சமுதாயத்தின் இறந்த பெண்மணிகளின் சடலங்களை தோண்டியெடுத்து அவற்றை வன்புணர்ச்சிக்கு ஆளாக்குங்கள் என்று ஆக்ரோஷமாய் முழக்கமிட்டு, மதவாதம் அரசியல் கடிவாளத்தைக் கைப்பற்றிய அதே உத்தரப் பிரதேசத்தில்தான் நீங்களும் பணியில் இருந்தீர்கள்.

உங்கள் உணவு எது? உறைவிடம் எது? கல்வி எது? உணர்வுகள் எவை? என்று உங்கள் வீட்டு உள்ளறைகள் வரை அத்துமீறி நுழைந்து, மூஸா காலத்து பனீஇஸ்வேரலர் சமுதாயம் ஒடுக்கப்பட்டதுபோல, கடும் சட்டங்களால் ஒடுக்கிக் கொண்டிருக்கும் மதவாத சக்திகளின் மத்தியில்தான் அன்றாடம் நடந்தீர்கள். ஆனாலும், உங்கள் தனித்துவமும், ஆளுமையும் எவரும் உங்களை மிஞ்ச முடியாதளவு உயர்ந்தது என்பது எவ்வித சந்தேகமுமில்லை.


மாடுகளுக்குத் தரும் முக்கியத்துவத்தை மனிதர்களுக்கு தர மறுக்கிறது இந்த ஓட்டுக்கான ஆட்சி அதிகாரம். அப்படி மனிதர்களுக்கு முக்கியத்துவம் தந்திருந்தால்...

காராரும் வானத்தில் காணும் முழுநிலவே!
நீராரும் தண்கடலில் கண்டெடுத்த நித்திலமே!
ஆசை தவிர்க்கவந்த ஆணழகே சித்திரமே!
ஓசை யளித்துமலர் உண்ணுகின்ற தேன்வண்டே!
உள்ளம் எதிர்பார்த்த ஓவியமே என்மடியில்
பிள்ளையாய் வந்து பிறந்த பெரும்பேறே!
சின்ன மலர்வாய் சிரித்தபடி பால்குடித்தாய்
கன்னலின் சாறே கனிரசமே கண்ணுறங்கு!

என்று தாலாட்டுப்பாடி தூங்க வைக்க வேண்டிய மழலையரை தகுந்த மருத்துவ வசதிகள் இல்லாமல் பறிக் கொடுத்த தாய்மார்கள் இப்போது, ஒப்பாரி பாட வைத்துவிட்டார்களே நமது ஆட்சியாளர்கள்.

இனி, எதிர்கட்சிகளின் கூப்பாடுகள் விண்ணதிரும்..! முதல்வர் அய்யா ஆதித்யாநாத்தும் அவரது மதவாத கும்பல்களும் மற்றொரு பக்கம் மக்களை திசைத்திருப்ப எத்தனிப்பார்கள். மீண்டும் தீவிரவாதம் என்பார்கள். குண்டுகளை வெடிக்க வைப்பார்கள். இந்தியர் மனங்களை ஒட்ட வைக்க முயலும் அனைத்து முயற்சிகளையும் சீர்க்குலைப்பாரகள். நீங்களாகவே ஒரு மருத்துவரின் அரிய கடமையாய் கருதி, முன்னெடுத்து குழந்தைகளை காத்திருக்கும் முயற்சிகளைக்கூட திசைத்திருப்பி உங்கள் மீதே குற்றம் சுமத்தி தூக்கு மேடையிலேற்றினாலும் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை டாக்டர்..!

இந்த அனைத்து களேபரத்தின் மத்தியிலும், நல்லதொரு மனிதனை, மருத்துவ சேகவரை கண்ட மகிழ்ச்சி என் மனதில் பொங்கி பிரவாகிக்கிறது.

எப்போதும் கான்கள் உலகுக்கானவர்கள் அல்ல. மனித சேவையில் இறைவனைக் காண்பவர்கள் என்பது பாலூட்டும்போதே அன்னை ஊட்டியது என்று என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. பெருமைப்பட முடிகிறது டாக்டர்.

நீங்கள் நீடூடி வாழ்க என்று மனம் வாழ்த்துகிறது டாக்டர் கபீல் கான்.


பெருமையோடு,

இக்வான் அமீர்
மூத்த இதழியலாளர்.

(மடலுக்கான ஆதார இணைப்பு: http://www.dnaindia.com/india/report-gorakhpur-tragedy-meet-dr-kafeel-khan-the-hero-who-saved-the-lives-of-countless-children-2528035)

 



Share:

Monday, July 10, 2017

மனசோட மடல்கள்: நன்மைகள் பகிர்ந்தளிக்கப்படும் நாள் வரும் முன்...

என் அன்பு நெஞ்சங்களே, உறவுகளே, சகோதர-சகோதரிகளே!

உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் பொழிவதாக..!

மனித உறவுகளில் ஏற்படும் விரிசலுக்கு உச்சவரம்பு மூன்று நாள் என்று நிர்ணயித்த கையோடு மீண்டும் அந்த உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள அழகிய வழிமுறையாய் சலாம் என்னும் முகமனை நபிகளார் முன்மொழிகிறார். பிணங்கியுள்ள ஒருவர் மற்றொருவருக்கு, “இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்!” என்று பரஸ்பரம் பறிமாறிக் கொள்ளும் வாழ்த்து மீண்டும் சகோதரத்துவ உறவுக்கு வழிகோலுகிறது. இதயங்களை இணைக்கிறது. அத்தோடு இறையருளைப் பெற்றுத் தருகிறது.

ஒவ்வொரு பிணக்கிலும் யாராவது ஒருவர் மற்றொருவருக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தியே இருப்பார். இந்த இழப்பை ஈடுகட்டுவதன் முதல் நிலையாக, பாதிப்பை ஏற்படுத்தியவர் வருந்துவதோடு அந்த வருத்தத்தை வாய்மொழியாய் வெளிப்படுத்தும்போது, அந்தப் பிரச்சினை முற்றுப் பெற்றதாகிவிடும்.

“தன்னுடைய சகோதரரின் உரிமைகளைப் பறித்துக் கொண்டவர், தன்னுடைய சகோதரனின் கண்ணியத்தைக் களங்கப்படுத்தியவர் இன்றே உடனடியாக அந்த உறவுகளைச் சீர்செய்து கொள்ளட்டும். இல்லையேல் மறுமைநாளில், அநீதி இழைத்தவரின் நன்மைகள் அவர் இழைத்த அநீதிக்கு ஏற்றாற் போல அநீதி இழைக்கப்பட்டவருக்குப் பகிர்ந்தளிக்கப்படும். ஒருவேளை அப்படி நன்மைகள் இல்லாத பட்சத்தில் அநீதி இழைக்கப்பட்டவரின் தீமைகள் அநீதி இழைத்தவரின் பதிவேட்டில் சேர்க்கப்படும்!” என்று பொருள்படும்படி நபிகளார் எச்சரிக்கிறார்.

அதேபோல, அடுத்தவரால் பாதிப்புக்குள்ளானவர் தனது மென்மையான போக்கால் அவருடைய தவறுகளை மன்னித்துவிடும்படியும் மற்றொரு தரப்பினரையும் நபிகளார் அறிவுறுத்துகிறார். மனிதரிடையே எழும் கருத்துப்பிழைகள் மனங்களில் கொதிநிலையில் இருக்க ஒருபோதும் இஸ்லாம் அனுமதிப்பதில்லை. அவை தணிக்கப்பட்டு சகஜநிலையை அடையவே மார்க்கம் விரும்புகிறது.

ஒருமுறை நபிகளார் தமது தோழரை நோக்கி கேட்கிறார். “சகோதரர்களே. தீயவர் யார் என்று நான் அடையாளப்படுத்தட்டுமா?”

அங்கு கூடியிருந்தோர், அதைத் தங்களுக்கு எடுத்துரைக்கும்படிக் கேட்கின்றனர்.

“உங்களில் மிகவும் தீயவர் யார் என்றால், யார் எப்போதும் பிறரைவிட்டுத் தனிமையில் இருக்கிறாரோ, யார் தன்னுடைய பணியாட்களிடம் கொடுமையாக நடந்து கொள்கிறாரோ, யார் பிறருக்கு அன்பளிப்பு தர மறுக்கிறாரோ அவரேதான்!” என்றுரைத்தார் நபிகளார்.

“யார் அடுத்தவர்க்கு எதிராக காழ்ப்புணர்வு கொண்டிருக்கறாரோ அவர்தான் மிகவும் தீயவர்” என்று சொன்ன நபிகளார் இன்னும் கொடிய தீயவர் யார் என்பதையும் கூறினார்.

“அடுத்தவர் தவறுகளை மன்னிக்காதவர்கள். அடுத்தவர் தம்மை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டும் அவரை மன்னிக்க மறுப்பவர்கள்” என்று நபிகளார் பல்வேறு நிலை மனிதர்களை அடையாளப்படுத்தி தமது தோழர்களை எச்சரிக்கிறார். http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article9555288.ece

கொடிய குணமும், கடினமான மனமும் கொண்ட மனிதர்கள் இறைவனின் அருளிலிருந்து அதிக தொலைவில் இருப்பதால் இவர்கள் நரகின் அடிப்பகுதியில் வைக்கப்படுவார்கள். கண்களில் பெரும் கனலும், இதயத்தில் பாறையென கடினமும் கொண்ட மனிதன் அபாக்கியவான் ஆவான்.

இறைவனின் பேரருளால், அவனது அருளைச் சுமந்து மனிதரிடையே மனித வடிவில் வந்துதித்த நபிகளார் சக மனிதர்களின் துன்பங்களை களைபவராக இருந்தார். மனிதர்களின் மன காயங்களுக்கு மருந்திடுபவராகவும், அவர்கள் துன்பங்களின் துயர் துடைப்பவராகவும், தவறிழைக்ககும்போது அவர்கள் மீது அனுதாபங்கொண்டு அரவணைத்து நல்வழிப்படுத்துபவராகவும், செல்வந்தர்களைக் கொண்டு ஏழைகளுக்கு உதவி செய்பவராகவும், பறிப்போன உரிமைகளைப் பெற்றுத் தருபவராகவும், அதற்காக போராடும் போராளியாகவும் அவர் இருந்தார்.

நபிகளாரின் வாழ்வை அறிவு மற்றும் உண்மை என்னும் அழகான ஆபரணங்களால் அழகுப்படுத்தி வைத்தான் இறைவன். அவர்களின் வாழ்க்கை ஒழுக்கதின் சிகரமாக விளங்கியது. அன்பாலும், இரக்கத்தாலும் நிரம்பி வழிந்தது. சக மனிதர்களின் துன்பத்துயரங்களைக் கண்டு உருகும் குணம் அவர்களது. அடுத்தவர்க்கு உதவி செய்ய ஓடோடும் பரோபகாரி அவர்.

இந்த அருங்குணங்களை முன்வைத்துதான் நபிகளார் மக்கள் மனங்களை வெல்ல முடிந்தது என்று சாட்சியமளிக்கிறது திருக்குர்ஆன்: “நபியே, இறைவனின் மாபெரும் அருளினாலேயே நீர் இவர்களிடம் மென்மையாக நடந்து கொள்கிறீர். நீர் கடுகடுப்பானவராகவும், வன்னெஞ்சராகவும் இருந்திருந்தால், இவர்கள் எல்லோரும் உம்மை விட்டு விலகிப் போய் இருப்பார்கள்”

இந்த அருங்குணங்களின் வெளிப்பாடை உஹது என்னும் இடத்தில் நடந்த அதே பெயராலேயே இஸ்லாமிய வரலாற்றில் வழங்கப்படும் யுத்தத்தில் காணலாம்.  இந்த போரில் நபிகளாரை ஒழித்துவிட எல்லாவித முயற்சிகளையும் எதிரிகள் மேற்கொண்டனர். நபிகளாரின் தரப்பில் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதோடு அவரது உயிருக்கு பெரும் அறைக்கூவலாக இருந்த போர் அது.  எதிரிகளின் அம்பு நபிகளாரின் தலைக்கவசத்தைத் துளைத்து அவரது முன்பற்களில் சில உடைந்து போயின. கன்னங்களில் பெரும் காயம் ஏற்பட்டது.  இந்தத் தீரா துயர் கண்டு நபித்தோழர்களில் சிலர் எதிரிகளைச் சபிக்க நபிகளாரிடம் வேண்டி நின்றார்கள். ஆனால், மனிதர்களின் மீது அளவற்ற பேரன்பு கொண்ட நபிகளாரோ, ”என் சமூகத்தார் என்ன செய்கிறார்கள் என்று அறியாமல் செய்கிறார்கள்; இவர்களை நல்வழிப்படுத்துவாய் இறைவா!”  - என்று இறைவனிடம் இறைஞ்சி நின்றார்.

இப்படி இரக்கமே பிரதானம் என்பதை நபிகளாரால் போதிக்கப்பட்ட இஸ்லாம் முஸ்லிம்களுக்கு கட்டளையிடுகிறது. இதனை அவர்களின் இறைநம்பிக்கையின் ஒரு அளவுகோலகவும் நிர்ணயிக்கிறது. 

”பூமியில் உள்ளோர் மீது இரக்கம் கொள்ளுங்கள். வானத்தில் இருப்பவன் உங்கள் மீது இரக்கம் காட்டுவான்” - என்கிறார் நபிகளார். இரக்கம் காட்டுவது என்பது சக மனிதர்களிடம் மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றியிருக்கும் எல்லா உயிரிகளுக்கும் பொதுவானதாக சுட்டுகிறார்.

”இறைவன் பூமியையும், வானங்களையும் படைத்தபோது, அவன் நூறு கருணைகளையும் சேர்த்தே படைத்தான். அந்த ஒவ்வொரு கருணையின் விசாலமும், வானம்-பூமி இவற்றுக்கு இடைப்பட்ட தூர அளவிலானது. இதன் ஒரு தன்மையைத்தான் அவன் பூமிக்கு அனுப்பி வைத்தான். அதனால்தான் ஒரு தாய் தன் குழந்தையிடம் பேரன்பு கொள்கிறாள். விலங்குகளும், பறவைகளும் தங்களுக்குள் இரக்கம் காட்டிக் கொள்கின்றன” – என்கிறார் நபிகளார்.

அனுபங்களால் அறிவு விசாலமடைவதுபோலவே, பல்வேறு நிலைகளில் மனிதனின் கருணையும் வளர்ந்து பற்றிப் படர்கிறது. இத்தகைய கருணையை அழிக்க அனுமதிப்பது அந்த மனிதனை நரகிற்கு வழிநடத்தும் பாதையாகிவிடும்.  http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article9692432.ece



அன்பு சகோதர, சகோதரிகளே!

1980-களின் பிற்பகுதியில், சிவப்பு சித்தாந்தங்களிலிருந்து விலகி இஸ்லாமிய கொள்கை, கோட்பாடுகளில் மனம் லயித்து, அற்புதமான அந்த வாழ்வியலை தாங்கி திரிந்த வேளையில் சாமரம் வீசி வரவேற்றார்கள் என்றா எண்ணுகிறீர்கள்? கடும் எதிர்ப்புகளை எல்லாம் சமாளிக்க வேண்டியிருந்தது என்பது வியப்புக்குரியது அல்லவா? அதிலும் சொந்த சமூகத்து உறுப்பினர்கள் தந்த துன்பத்துயரங்களுக்கு ஒரு எல்லையில்லாமல் போனது என்பது எவ்வளவு துரதிஷ்டவசமானது.

வழிகேடர்கள் என்று சிலர் அழைக்க, இன்னும் சிலர் ஷியாக்கள் என்றார்கள். இன்னும் சிலரோ காதியானிக்கள் என்றெல்லாம் அழைத்தார்கள்.

பள்ளிவாசல்களில் திருக்குா்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பை வாசிக்கவிடவில்லை. திருநபிகளாரின் பொன்மொழிகளை பகிர அனுமதிக்கவில்லை. பிறந்து வளர்ந்த ஊரில் இந்த நிலை என்றால், அண்டை பகுதிகளில் ஜும்ஆ உரையாற்ற அழைத்துவிட்டு அதற்கான தயாரிப்போடு, நிறுவனத்தில் விடுமுறை விண்ணப்பித்துவிட்டு சம்பந்தப்பட்ட பள்ளிவாசலுக்கு சென்றால், நம்மை பேசவிடாமல் அவமதித்து அனுப்பிய நிகழ்வுகள், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகளை அறிமுகப்படுத்த பள்ளிதோறும் சுமந்து சென்றால், அவற்றை தொட்டு பார்க்கவும் மறுத்ததோடு, அடித்துவிரட்டாத குறையாக ஊர் எல்லைவரை கூடவே வந்து வெளியேற்றிய சம்பவங்கள்.

பள்ளிவாசல் நிர்வாகத்தில் தலையிடுவதாக கூறி பகிரங்கமாகவே பள்ளிவாசலின் அறிவிப்பு பலகையில், இவர்கள் தீவிரவாதிகள் நிர்வாகத்தில் பங்கேற்க எவ்வகையிலும் அனுமதியில்லை என்று நிர்வாகக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அறிவிப்புகள். ஒரு கட்டத்தில் பள்ளிவாசல் லெட்டர் பேடில் தீவிரவாதிகள் என்று எழுதி காவல்துறை, உளவுதுறைக்கு அளிக்கப்பட்ட புகார்கள் என்று பல்வேறு கசப்பான அனுபவங்களின் நிகழ்வுகள்.

அடித்து விரட்ட மிரட்டல்கள், ரவுடிகளின் உதவி தேடல்கள், தாக்குவதற்காக பள்ளி வளாகத்துக்குள்ளேயே உடைக்கப்பட்ட டியூப் லைட்டுகள் என்று அத்தனை அராஜங்களும் தலைவிரித்தாடிய வேளை அது.

இவற்றை நிகழ்த்தியவர்கள் எல்லாம் இஸ்லாம் தெரியாதவர்கள் அல்ல. சமூக சீர்த்திருத்தவாதிகள், சமுதாய அரசியல் பணிகளில் ஈடுபட்டவர்கள் என்று எல்லா குழுவினரும் எங்களுக்கு எதிராக அணிதிரண்டிந்த காலமது.

சரி… இவ்வளவு அராஜகங்கள், அக்கிரமங்கள் அரங்கேறிய வேளையில் இதற்கான எதிர்வினையாக செய்தது என்ன? என்ற கேள்வி உங்களுக்குள் எழுவதை உணர முடிகிறது.

இறைவனின் பெரும் கிருபை..! இந்த பிரச்னைகளை சமாளிக்க.. இதைவிட இன்னும் அதிகளவு பிரச்னைகளை சமாளிக்க எங்களுக்கு எங்கள் தலைவர்கள் திருக்குா்ஆன், திருநபிகளாரின் வழிமுறைகளிலிருந்து அழகிய பயிற்சி அளித்திருந்தார்கள்.

•    தீமையை மிகச்சிறந்த நன்மையைக் கொண்டு தடுத்துக் கொள்ளல், நன்மையும், தீமையும் ஒருகாலும் சமமாக மாட்டா.
•    நெருப்பை நீரூற்றிதான் அணைக்க வேண்டும். பதிலுக்கு தீ வைப்பதல்ல.
•    திருக்குா்ஆன், திருநபிகளாரின் பொன்மொழிகளை பள்ளிவாசலுக்குள் ஓத அனுமதிக்காவிட்டால்.. பள்ளியின் வளாகத்தில் அமர்ந்து அந்தப் பணியாற்றுங்கள். அங்கும் அனுமதி மறுக்கப்பட்டால் வளாகத்தின் வெளிக்கதவருகே அமர்ந்து கொண்டு உங்கள் பணிகளைத்  தொடருங்கள். அங்கும் அனுமதிக்காவிட்டால் வளாகத்துக்கு வெளியே சாலையில் அமர்ந்து அந்தப் பணியாற்றுங்கள்.
•    அமைதியை கடைப்பிடியுங்கள்.
•    வன்முறை ஒருகாலும் பிரச்னைக்கு தீர்வளிப்பதில்லை.

மௌலான குத்புத்தீன் பாகவியிலிருந்து, மௌலானா அப்துல் ஹபீஸ் ரஹ்மானி, மூதறிஞர் ஜமீல் அஹமது , பேராசிரியர் இஹ்ஜாஸ் அஸ்லம் வரை ஒரே மாதிரியான வழிகாட்டுதல்கள்.

இந்த வழிகாட்டுதல்கள் எல்லாம்

”ஒரு கையில் சந்திரனையும், மறு கையில் சூரியனைக் கொடுத்தாலும் தமது பணிகளிலிருந்து பின்வாங்க போவதில்லை!” – என்று முழங்கிய நபிகளாரின் ஆளுமைப் பண்புகளை நோக்கியே எங்களை நகர்த்தியது.

தூக்க முடியாத சுமைகளோடு சமூகப் பணிகளை ஓரிருவர் செய்து கொண்டிருந்த நிலையில் மூன்றாம் நபர் அந்தப் பணிகளுக்காக களத்தில் இறங்கிய வேளையில் இவர்கள் உண்மையிலேயே மகிழ்ந்திருக்க வேண்டும். தனது பணிகளை பங்கிட்டு கொள்வதற்காக மற்றோர் ஆள் கிடைத்த மகிழ்ச்சியில் இணைந்திருக்க வேண்டும். ஆனால், இதற்கு நேர்மாறாகவே அனைத்தும் நடந்தன.

•    சீரான வழிகாட்டுதல்களும்,
•    அதற்கேற்ப அளிக்கப்பட்ட ஒழுக்கப் பயிற்சிகளும்,
•    இஸ்லாம் குறித்து ஆழமான புரிதலும்,
•    நம்மீது சுமத்தப்பட்ட பொறுப்புகளும்,
•    ஆழ்ந்த நூல் வாசிப்புமாய் வளர்ந்த ஆளுமையும்,
•    இவை எல்லாவற்றுக்கும் முதன்மையாய் இறைவனின் பேரருளும் இணைந்து,

சேர்க்க மறுத்த அதே பள்ளியின் நிர்வாகிகளாய் தொடர்ந்து மக்களால் தேர்வு செய்யப்படும் நிலைமையைத் தந்தது.

சகோதர இயக்கங்கள் அவரவர் பணிகளைத் தடையின்றி செய்ய பெருந்தன்மையை வளர்த்தது.

இது நிகழ்காலம்.

சகோதர, சகோதரிகளே! எனதருமை தோழர், தோழியரே..!

இந்தப் புரிதலும், இணக்கமும், நம் மீது இயல்பாகவே சுமத்தப்பட்டுள்ள பொறுப்புகளும், நம் சொந்த நாட்டில் நமது சொந்த மக்களுக்கு அரியணையில் அமர்த்தப்பட்ட அரசியல் அதிகாரத்தால் நிகழ்காலத்தில் இழைக்கப்பட்டுவரும் அநீதிகளும் நம்மை ஒன்றிணைத்தாக வேண்டும். இதில் நாம் காட்டும் பலவீனங்கள் நம்மை இறைவனின் வெறுப்புக்கு ஆளாக்கிவிடும். நரக நெருப்பை நோக்கி நகர்த்திவிடும். (இறைவன் இத்தகைய இழிநிலையிலிருந்து நம்மைக் காப்பானாக!)

நபிகளார் சுவனம் மற்றும் நரகவாசிகளைப் பற்றி தமது தோழர்களுடன் உரையாடி கொண்டிருந்தார். சுவனவாசிகளின் பண்புகள் குறித்து சொல்லும்போது இப்படிச் சொன்னார்:

“தோழர்களே, சுவனத்திற்கு சொந்தமானவர்கள் மூன்று வகைப்படுவார்கள். அவர்களில் முதலாம் பிரிவினர், தங்கள் பரஸ்பர விவகாரங்களில் மிகவும் நீதியுடனும், நடுநிலையுடனும் நடந்துகொண்டவர்கள். வள்ளல் தன்மையும், நற்செயல்களையும் மக்களிடையே பரப்பியவர்கள். அத்துடன் தமது நடவடிக்கைகளில் மென்மையாகவும், நேர்மையுடனும் நடந்து கொண்டவர்கள்.

இரண்டாம் பிரிவினர், மிகவும் தயாள குணம் மிக்கவர்கள். அவர்கள் தங்களின் உற்றார், உறவினரிடையே இளகிய மனதுடனும், சக மனிதர்களுடன் தாராளத் தன்மையுடனும் நடந்து கொண்டவர்கள். மூன்றாம் பிரிவினரோ, மனைவி, மக்கள் குடும்ப நெருக்கடிகள், வாழ்வியல் தள்ளாட்டங்கள் இவை அனைத்தையும் தாங்கியவர்கள். தடுக்கப்பட்டவற்றிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொண்டு வாழ்ந்தவர்கள்.”

சுவனவாசிகளை அடையாளப்படுத்திய கையோடு நபிகளார் நரகவாசிகள் பற்றியும் சொல்லலானார்:

“நரகவாசி நேர்மையின்மையை மட்டுமே தனது அடையாளமாக்கிக் கொண்டவன். அதைப் பின்பற்றுவதையே வாடிக்கையாகக் கொண்டவன். அவனது பேராசை, யாரும் அடையாளம் காண முடியாத அளவு மறைவாக இருக்கும். ஆனால், தொடர்ந்து அடுத்தவரின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டே இருப்பான். கஞ்சத்தனம் மிகைத்திருக்கும். ஆபாச உரையாடல்களில் திளைத்திருப்பான். இங்கிதமற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவான்” என்று நபிகளார் நரகவாசிகள் குறித்து ஒரு நீண்ட பட்டியலிட்டார்.

மனித வாழ்வில் எதிர்ப்படும் இன்னல்கள் எல்லையற்றவை. சூழ்நிலைகள் மனிதனை வசப்படுத்த முனைபவை. அவற்றில் சிக்கிக் கொண்டாலோ கேவலமான வாழ்க்கையில் அவனை வீழ்த்திவிடும். இந்தப் புறச் சூழல்கள் மனிதனை விரக்தியின் விளிம்பில் தள்ளி அவனது பிற செயல்கள் அனைத்தையும் முடக்கிவிடும். அன்றாட வாழ்க்கையை பாதித்துவிடும்.

இறை நம்பிக்கையாளன் அச்சமற்றிருக்க வேண்டும் இத்தககைய சூழல்கள் ஓர் இறை நம்பிக்கையாளனைப் பற்றிப் படரும்போது, அவன் அச்சமற்றிருக்க வேண்டும் என்பதோடு அவற்றைத் துணிவுடன் எதிர்த்து நிற்க வேண்டியதும் இன்றியமையாதது. அந்தத் தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து தனது இலக்கை நோக்கி நகர்வது முக்கியமானது.

புறச் சூழல்களின் தாக்கம் அதிகமாகும் போதெல்லாம் நபிகளார் இறைவனிடம் பாதுகாவல் தேடுவது வழக்கம். இரண்டு கரங்களையேந்தி இப்படி இறைஞ்சுவதும் நபிகளாரின் பழக்கமாகவும் இருந்தது.

“இறைவா! துன்ப துயரங்களிலிருந்து நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். விரக்தியிலிருந்தும், சோம்பலிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். கோழைத்தனத்திலிருந்தும், கஞ்சத்தனத்திலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். கொடுங்கோலர்களின் கொடுமைகளிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்!”

பொறுமை, தன்னம்பிக்கை என்னும் விண்கலங்கள் மூலமாகவேதான் நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்துக்கு மனிதன் கடந்தாக வேண்டும். இந்த மந்திரம் கற்றுக்கொண்டவர்கள் வாழ்வியல் போராட்டங்களைச் சமாளிக்கத் தெரிந்தவராவர். தோல்விகளைக் கண்டு துவளாமல் வெற்றி இலக்கை எட்டுபவராவர். தன்னைப் படைத்தவனற்றி வேறு எவருக்கும் சிரம் பணியாதவராவர். http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article9529131.ece

வஸ்ஸலாம்.

என்றென்றும் உங்கள் நலன்நாடும

உங்கள் சகோதரன்,

இக்வான் அமீர்
(மூத்த இதழியலாளர்)

Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive