NewsBlog

Wednesday, September 23, 2015

முக்கிய செய்திகள்: இரு சக்கர வாகனத்துடன் 2 ஹெல்மட்: மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு



இரு சக்கர வாகனத் தயாரிப்பாளர்கள் வாகனத்துடன் சேர்த்து இரண்டு தரமான தலைக்கவசங்களை வழங்குமாறு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டது.

தமிழகத்தில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் முன்பாக, தலைக்கவசம் தொடர்பான வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்குப் பிறகு, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

நகரப் பகுதிகளில் மட்டும் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிகின்றனர். கிராமப்புறங்களில் கட்டாய தலைக்கவச உத்தரவு சரிவர அமல்படுத்தப்படவில்லை. எனவே, கட்டாய தலைக்கவச உத்தரவை அரசு தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.

மத்திய மோட்டார் வாகன விதியின்படி, இரு சக்கர வாகனத்தைத் தயாரிப்பவர்கள் வாகனத்தை விற்பனை செய்யும்போது தலைக்கவசத்தையும் அளிக்க வேண்டும்.

தற்போது இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்வோரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதால், இரு சக்கர வாகன தயாரிப்பாளர்கள் வாகனத்துடன் சேர்த்து இந்திய தர நிர்ணய அமைவனம் (ஐஎஸ்ஐ) நிர்ணயித்துள்ள தரத்துடன் கூடிய இரண்டு தலைக்கவசங்களை வழங்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

இதன்மூலம் இரு சக்கர வாகன ஓட்டிகள் தரமற்ற தலைக்கவசங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியும். தலைக்கவசத்தைப் பாதுகாப்பதில் நடைமுறைச் சிக்கல் இருப்பதால் பலரும் தலைக்கவசம் அணியாமல் செல்கின்றனர்.

எனவே, தலைக்கவசத்தைப் பாதுகாப்பாக வைக்க பூட்டு தேவைப்படுகிறது. இதைக் கருத்தில்கொண்டு இரு சக்கர வாகன தயாரிப்பாளர்கள் பூட்டை தனியாகத் தயாரித்துக் கொடுக்காமல், வாகனத்திலேயே அதற்கான வசதி இருக்கும்படி தயாரிக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பளித்த நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 30-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive