NewsBlog

Sunday, June 11, 2017

வடிவேலு ஹாஸ்யம் மிஞ்சும் நிஜங்கள்.

சற்று நேரத்தில் திடீரென்று ஏதோ எங்கள் பக்கத்தில் வெடிக்க அலறி அடித்துக் கொண்டு எழுந்தால்… சில அடிகள் பக்கத்திலேயே ஒருவர் ராக்கெட் விட்டு வெள்ளோட்டம் பார்த்துக் கொண்டிருந்தார். எங்களைக் கண்டதும், தயவுசெய்து அங்கிருந்து சென்றுவிடும்படியும், வாணவேடிக்கை நடக்கும் பகுதிகளில் அதுவும் ஒன்று என்று தெரிவிக்க நடுஇரவை தாண்டிய அந்த அகால வேளையில் எங்கள் படப்பிடிப்பு இடத்தை முணுமுணுத்துக் கொண்டே மாற்ற வேண்டியிருந்தது. ~இக்வான் அமீர்

''''''''''''''''''''''''''''''''''''''''''
90-களின் பிற்பகுதியில், சென்னையிலிருந்து வடக்கே சுமார் 100 கி.மீ. தொலைவில், ஆந்திரம் எல்லைப்புறமான “இருக்கம்“ என்ற அந்த தீவு பகுதிக்கு சென்றிருக்கிறேன்.

“கல்ப் ஆசியா“ என்ற செய்தி நிறுவனம் சார்பாக “மனிதனின் குரல்“ என்னும் தலைப்பில் பொதிகை தொலைக்காட்சியில் வாரம்தோறும் ஒளிப்பரப்புவதற்காக குறும்படங்கள் தயாரிக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருந்தது. இருபதுக்கும் மேற்பட்ட செய்தி படங்களை அப்போது தயாரித்து தந்துள்ளேன். அதன் ஒரு பகுதியாகதான் நான் ஆரம்பத்தில் சொன்ன அந்தப் பகுதிக்கு சென்றிருந்தேன்.

அப்போது, “தமிழ் கற்க கரைகடந்து வரும் பெண்கள்“ என்னும் தலைப்பில் ஓர் அற்புதமான குறும்படம் தயாரித்து ஒளிபரப்பியது குறிப்பிட்ட ஆவணமாகும்.

இருக்கம் தீவிலிருந்த திருவேங்கடம் நகர் என்ற மீனவர் கிராமத்திலிருந்து, தமிழ் கற்பதற்காக ஒரு மணி நேரம் பாய்மரப்படகு பயணம் வழியாக குழந்தைகள் தமிழகத்தின் சுண்ணாம்புகுளம் என்ற பகுதிக்கு வரவேண்டிய சூழல்.

மழைக்காலங்களில் பெருத்த சிரமம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். வழிபயணம் முழுக்க ஆபத்துக்கள் நிறைந்தது. உயிரை பணயம் வைத்து தமிழ் மீது தீராத பற்றுக் கொண்ட அந்த மாணவமணிகள் குறித்து சிறப்பை விளக்கும் சிலிர்க்க வைக்கும் ஆவணப்படம் அது.

மீண்டும் இருக்கம் தீவு செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தவனுக்கு அந்த தீவிலிருந்து எனது அண்டை வீட்டுக்கு புலன் பெயர்ந்த நண்பரின் உதவியால் அந்த வாய்ப்பும் 04.06.2017 ஞாயிறு அன்று கிடைத்தது.

இருக்கம் தீவின் திருவேங்கடம் நகர் மீனவர் கிராமத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கோயில் திருவிழாவையொட்டிய பயணம் அது. அந்த பயணத்தின் முக்கியத்துவம் பின்னிரவில் நடக்கும் வாணவேடிக்கைதான்!

பண்ருட்டி, பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வாணவேடிக்கை சிறப்புக் குழுவினர் நடத்தும் வாண வேடிக்கை அது. சிறந்த குழுவினருக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு என்ற அறிவிப்பும் கூட!

ரமலான் மாதத்து நோன்பு காலமாதலால் பெரும்பாலும் பயணங்கள் மேற்கொள்ள முடியாது. கோடையின் வெம்மை ஒருபுறம் மற்றும் நோன்பு துவக்கம், அதன் துறப்பு ஆகியவற்றுக்கான சிறப்பு ஏற்பாடுக்கான உணவு தயாரிப்பு என்ற சிரமங்கள் பழக்கமற்ற பகுதியில் கிடைக்காது என்பதால் தயக்கம் வேறு. ஆனாலும் எனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பை நழுவ விட தயாராக இல்லை.

அந்தியின் பேரழகு, வாணவேடிக்கை, சூரிய உதயம் ஆகிய இவற்றை படம் பிடிப்பது என்று அடுக்கடுக்காக செய்ய வேண்டிய பணிகளை ஏற்கனவே குறித்துக் கொண்டேன்.

வழியில் ஆரம்பாக்கம் என்றழைக்கப்படும் பகுதியில் (மாம்பழத்துக்கு பெயர் போன பகுதி இது) நோன்பு துறப்பதற்கான கொஞ்சம் பழங்கள், ரொட்டி என்று வாங்கிக் கொண்டோம். இந்தப் பயணத்தில் எனது மாணவன் மெஹர் அலியும் வந்திருந்தான்.

படகு துறைக்கு சென்றபோது, 10 ஆண்டுகளுக்கு முன் நான் பார்த்த பாய்மரப் படகுகள் நவீன மோட்டார் என்ஜின் பொருத்தப்பட்ட படகுகளாய் மேம்பட்டிருந்தன.

நண்பர் ஏற்பாடு செய்திருந்த சிறு படகில் ஏறிக் கொண்டு புறப்பட்டபோது காற்றின் வேகத்தில் அலைகளாய் மேலெழும்பிய நீர் படகிலிருந்த அனைவரையும் தெப்பமாய் நனைத்துவிட்டது. நல்லவேளை நான் படகின் முனைப்பகுதியில் அமர்த்தப்பட்டதால் எனக்கு ஒன்றும் ஆகவில்லை. வழி நெடுக படம்பிடித்தவாறு அந்த ஒரு மணி நேரத்தை செலவழித்தேன்.

இருக்கம் தீவில் இறங்கிய கையோடு அந்திவரை அதன் முக்கியப் பகுதிகளை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. தீவின் உயரமான பகுதியிலிருந்து காளாஹாஸ்தி மலை முகடுகளில் சூரியன் இறங்கி மறைந்த அந்த அற்புதமான காட்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

தீவுப் பகுதியில் கிடைத்த நுங்கு, நாங்கள் கொண்டு சென்றிருந்த பழங்கள் இவற்றைப் பயன்படுத்தி அந்தியில், நோன்பை துறந்தோம். இறைவணக்கங்களையும் முடித்துக் கொண்டோம். அதன்பின் பொடி நடையாய் நடந்து இருட்டில் மீனவ கிராமத்தை அடைந்தோம்.

உற்றார், உறவினர்களால் முற்றுகையிடப்பட்டிருந்த அந்தக் கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் ஏகக் கூட்டம். ஊர்திருவிழாவுக்கு ஒவ்வொரு குடும்பத்தாரும் ஊருக்குச் செலுத்திய சில ஆயிரம் ரூபாய்களைவிட உறவினர்களை உபசரிக்க பல ஆயிரம் ரூபாய்களை அவர்கள் செலவழிக்க வேண்டியிருந்தது.

சாம்பார், தயிர் இவற்றுடன் வேண்டாம் என்று மறுத்தும் எங்களுக்காகவே சுடச்சுட வறுத்து கொண்டுவந்த மீன் துண்டுகள் என்று எங்கள் இரவு உணவை முடித்துக் கொண்டு வாணவேடிக்கை நடக்கும் திடலை அடைந்தோம்.

• வாண வேடிக்கை வெடிகள் எங்கே வெடிக்கப் போகிறார்கள்?
• எத்தனை மணிக்கு வெடிக்கப் போகிறார்கள்?
• என்னென்ன வகை வெடிகள் பயன்படுத்தப் போகிறார்கள்?
• ஒருவேளை ராக்கெட் போன்ற வெடிகள் எங்கள் மீது பாய்ந்தால் நாங்கள் மேற்கொள்ள அதற்கான பாதுகாப்பு நடவடிக்கை என்ன?

இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டு அதற்கேற்ப திட்டமிட்டு, கோயிலுக்கு பின்னாலிருந்த திடலில் முன்னூறு மீட்டருக்கு அப்பால், மணலில் போர்வையை விரித்துவிட்டு, வீடியோ காமிராவையும், டிஜிட்டல் காமிராவையும் காமிரா தாங்கியில் (Tripod) பொருத்தி தயாராக வாண வேடிக்கை நடக்கும் திசையில் வைத்து விட்டோம்.

எனது காமிரா செட்டிங் இதுதான்:

• Shutter Release Cable பொருத்தப்பட்ட
• Bulb Mode-ல், காமிரா
• Aperture f/8
• Manual Focus

இவற்றுடன் அவ்வப்போது, வாண வேடிக்கை வெள்ளோட்டமிட்டுக் கொண்டிருந்த இடத்தை மையப்படுத்தி Trail ஆக சில படங்களை எடுத்துப் பார்த்தேன்.

தீப்பொறிகள் ஏதாவது சிதறினால் அணைப்பதற்கு தயாராய் கண்டெய்னரில் தண்ணீர்.

ராக்கெட்டுகள் ஏதாவது தவறி எங்கள் மீது பாயாமலிருக்க தோள் பைகளை எங்களுக்கு முன்னால் மணல் மூட்டைகள் போல வைத்துக் கொண்டோம்.

அதிகபட்சமாக ஏதாவது விபத்து ஏற்பட்டால் தப்பி சென்று பதுங்க பக்கத்திலிருந்த ஒரு பாழடைந்த கோயில் கட்டிடத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டோம்.

கையில் தயாராக டார்ச் விளக்கு.

இத்தனை ஏற்பாடுகளுக்கு பிறகு நோன்பு களைப்பில் சிறிது கண்ணயர்ந்தோம்.

சற்று நேரத்தில் திடீரென்று ஏதோ எங்கள் பக்கத்தில் வெடிக்க அலறி அடித்துக் கொண்டு எழுந்தால்… சில அடிகள் பக்கத்திலேயே ஒருவர் ராக்கெட் விட்டு வெள்ளோட்டம் பார்த்துக் கொண்டிருந்தார். எங்களைக் கண்டதும், தயவுசெய்து அங்கிருந்து சென்றுவிடும்படியும், வாணவேடிக்கை நடக்கும் பகுதிகளில் அதுவும் ஒன்று என்று தெரிவிக்க நடுஇரவை தாண்டிய அந்த அகால வேளையில் எங்கள் படப்பிடிப்பு இடத்தை முணுமுணுத்துக் கொண்டே மாற்ற வேண்டியிருந்தது.

பல இடங்களைத் தேடியும் முன்னர் கிடைத்த வசதிகள், தனிமை, கோணம் எங்கும் கிடைக்காததால்… வாண வேடிக்கைகள் நடக்கட்டும்.. அதன் பிறகு இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து மக்களோடு மக்களாய் ஓர் ஓரமாக போர்வையை விரித்து காமிராக்களோடு காத்திருந்தோம்.

பின்னிரவு இரண்டு மணி இருக்கும்.

வாண வேடிக்கை ஆரம்பித்தது.

பயங்கரமான நாட்டு வெடிகள் தெறிக்க ஆரம்பித்தன. ஏதோ நமது தலையில் விழுவதைப் போல சத்தம். நல்லவேளை தோள் பையில் ஹெட்போன் இருந்தது. எடுத்து காதுகளில் அழுத்தி செருகிக் கொண்டேன்.

தலைக்கு மேல் வண்ணமயமாய் சிதறிக் கொண்டிருந்த வாண வேடிக்கையை நான் படமெடுக்க மெஹரோ பாதி தூக்கக் கலக்கத்துடன் அவற்றை வீடியோவாக படம் பிடித்துக் கொண்டிருந்தான்.

சில நிமிடங்கள் சென்றிருக்கும்.

திடீரென தொடராய் வெடிகள் வெடிக்க மக்கள் சிதறி ஓட ஆரம்பித்தார்கள்.

என்ன ஏது என்று பார்த்து சுதாரிப்பதற்குள் மைதானம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. வெடிகள் வெடித்து சிதறிக் கொண்டிருந்தன.

ஏற்கனவே நாங்கள் தெரிவு செய்து வைத்திருந்த அந்த மணற்பாங்கான பகுதி நெருப்பால் பற்றி எரிந்தது. மரங்கள் எல்லாம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன.

இறையருளால் நாங்கள் தப்பித்தோம் என்று இறைவனை புகழ்ந்தவாறே திரும்பிப் பார்த்தால் மெஹரைக் காணோம். தோள் பைகளையும் காணோம்.

ஒரு பத்து நிமிடம் கழிந்திருக்கும். அதன் பிறகுதான் அவன் திரும்பி வந்தான்.

வெடிவிபத்தில் குழம்பிப் போன மெஹர் கையில் கிடைத்த பைகளோடு பாதுகாப்பான இடம் தேடி ஓடியது தெரிந்தது.

இந்த வெடிவிபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்தார். கை சதைகள் பிய்ந்த நிலையில் அவரை, இருக்கத்தில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாததால் அக்கரைக்கு படகில் எடுத்துச் சென்றார்கள்.

இத்தனை களேபரத்துக்கு நடுவிலும் வாண வேடிக்கை ரத்து செய்யப்படவில்லை.

நேரம் காலை 3 மணி.

இனி அந்த கூட்டத்துக்கு நடுவில் இருந்து பயனில்லை என்று தெரிந்தது.

ஒரு ஐநூறு, அறுநூறு மீட்டருக்கு அப்பால் மணற்பரப்பில் போர்வையை விரித்தோம். எங்கள் நோன்பு துவங்குவதற்கு எல்லைக்குள்ளான காலகட்டம் இன்னும் 60 நிமிடங்களுக்கும் குறைவாக இருந்தது.

அதனால், அந்த மணற்வெளியில் கையில் பாக்கியிருந்த ரொட்டி, பழங்களை எங்கள் “சஹர்“ எனப்படும் நோன்பு உணவாக பயன்படுத்தி அங்கேயே வைகறை தொழுகையை தொழுது கொண்டோம்.

சற்று ஓய்வாக சாய்ந்திருந்த போது, விபத்து நிகழ்ந்த குழுவான பண்ருட்டி வாண வேடிக்கையைத் தொடர்ந்து, பாண்டிச்சேரி வாண வேடிக்கை ஆரம்பித்தது.

ஒருமணி நேரம் நடந்த அந்த நிகழ்வை நாங்கள் அழகாக படம் பிடித்தோம்.

எங்கள் அதிஷ்டம் நாங்கள் தப்பித்தோம். இல்லையென்றால், வெடித்துச் சிதறும் வெடிகளுக்கிடையே, புகைமூட்டத்திலிருந்து கருத்த நிறத்துடன் இரண்டு உருவங்களாய் நாங்கள் நின்றிருப்போம்.

உண்மைதான்… வடிவேலு ஹாஸ்யம் மிஞ்சும் நிஜங்கள் இவை!
Share:

2 comments:

  1. திகில் அனுபவங்கள்தான் ..அதுவும் ஹெல்த் அண்ட் safety போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத இடத்தில வான வேடிக்கை படமெடுத்தல் எவ்வளவு கடினம் ..இன்னமும் அந்த நிகழ்வுகள் தொடர்கிறதா அங்கே ..

    படங்கள் அத்தனையும் கொள்ளை அழகு

    ReplyDelete

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive