பிரியமுள்ள மகளுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் – உன் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் பொழிவதாக!
இறைவனின் பேரருளால் நலம். உன் நலத்துக்காகவும் அந்த கருணையாளனிடமே இரு கரமேந்தி இறைஞ்சுகிறேன்.
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
”இனி, என்னிடம் நீங்கள் இருவரும் பேசக்கூடாது!”
- சண்டையிட்டுக் கொண்டிருந்த அந்தச் சிறுவர்கள் இரண்டுபேரும் அம்மாவின் கோபத்தைக் கண்டு பயந்து போனார்கள். அவர்களின் கண்களில் ஏகத்துக்கும் மிரட்சி சூழ்ந்து கொண்டது!
”போய்விடுங்கள் இங்கிருந்து..!”
தங்களை இதுவரை அப்படி கடிந்து கொள்ளாத அம்மாவின் கோபம் அவர்களை ஆச்சரியப்பட வைத்தது.
”சரி, சிறிது நேரத்தில் அம்மாவின் கோபம் மறைந்துவிடும். பிறகு பேசிக் கொள்ளலாம்!” – என்று அவர்கள் அங்கிருந்து சென்றார்கள்.
சிறிது நேரம் சென்றது.
”அம்மா.!” பிள்ளைகள் இருவரும் குழைந்து கொண்டே தாயிடம் சென்றார்கள்.
”நான் அப்போதே சொன்னேனில்லையா? என்னிடம் இனி யாரும் பேசவே கூடாது என்று! போய்விடுங்கள் இங்கிருந்து..!”
அம்மா கோபமாக போட்ட சத்தத்தில் அந்த சின்னஞ்சிறு குழந்தைகள் பயந்து அங்கிருந்து ஓடிவிட்டார்கள்.
நேரம் கழிந்து கொண்டிருந்தது.
அம்மாவின் கோபத்திற்கான காரணமும் புரியவில்லை. ஒரு நொடியும் தங்களைப் பிரிந்திருக்காத அம்மா இன்று பல மணி நேரமாகியும் தங்களிடம் முகம் கொடுத்து பேசவில்லை என்பது ஒரு சாதாரண விஷயமாக தெரியவில்லை.
சிறுவர்கள் குழம்பித் தவித்தார்கள்.
நேரம் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. பாவம் அந்தக் குழந்தைகள்! அவர்களை அறியாமலேயே அவர்களின் கண்களில் கண்ணீர் சூழ்ந்து கொண்டது. கண்கள் ஏக்கம் சூழ அம்மாவை பார்த்தன. சின்னஞ்சிறு உதடுகள், ”அம்மா.. அம்மா..” – என்று அசைந்தன. அவர்களின் மூச்சுக் காற்றுக்கூட ”அம்மா.. அம்மா” என்று அழைப்பதாகவே வெளிப்பட்டது.
கடைசியில், தாங்கள் போட்ட சண்டைதான் அம்மாவின் கோபத்துக்குக் காரணம் என்று புரிந்தது.
ஒருவரின் தோளில், மற்றொருவர் கைகளைப் போட்டுக் கொண்டார்கள்.
நேராக அம்மாவிடம் சென்றார்கள்.
கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென்று கொட்ட ஒரே குரலில் சொன்னார்கள்: “ அம்மா… ஓ.. அம்மா..! எங்களைப் பாருங்களேன்..! எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறோம். நாங்கள் தெரியாமல் சண்டைப் போட்டுக் கொண்டோமம்மா..! இனிமேல் அப்படி செய்யமாட்டோமம்மா.. எங்களை மன்னித்துவிடுங்களம்மா..! அதற்காக எங்களிடம் பேசாமலிருக்காதீர்களம்மா..! எங்களால் தாள முடியாதம்மா..!”
அவர்கள் வார்த்தைகளை முடிக்கக்கூட இல்லை.
அதற்குள், ”என் செல்லங்களே..! கண்மணிகளே..!” என்று விம்மலும் அழுகையுமாய் அம்மா ஓடி வந்தார். அவர்களை அள்ளி நெஞ்சோடு அணைத்துக் கொண்டார். முத்தமாரி பொழிந்தார்.
”குழந்தைகளே..! நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள். அன்பு நபிகளார் என்றும் சண்டை, சச்சரவுகளை விரும்பியதில்லை. அதை அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். ஒற்றுமையாக வாழ்வதை மிகவும் விரும்பினார்கள்.
அன்பு நபிகளார் எதை வெறுத்தார்களோ அவற்றை நாமும் வெறுத்து ஒதுக்க வேண்டும். அன்பு நபிகளார் எதை விரும்பினார்களோ அவற்றை விரும்பி நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அதனால், குழந்தைகளே, நீங்கள் சண்டைப் போட்ட போது நானும் உங்களை வெறுத்தேன். இனி நீங்கள் எப்போதும் சண்டையிட்டுக் கொள்ளக்கூடாது புரிகிறதா?” – என்று அந்த பிஞ்சு குழந்தைகளான ஹஸன், ஹுஸைனுக்கு அறிவுரை வழங்கினார் அந்த உத்தம தாய், அன்பு நபிகளாரின் பிரியத்துக்குரிய மகள் ஃபாத்திமா நாச்சியார்.
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
மகளே, இது ஒரு வரலாற்று நிகழ்வு. நபிகளாரின் அன்பு மகள் ஃபாத்திமாவின் குழந்தை வளர்ப்பு முறைமை இதுதான்.
நபிகளார் வேண்டியது சமாதானம். சண்டையல்ல. அமைதி தொலைந்து போன சமுதாயத்தில் முன்னேற்றமும், வளர்ச்சியும் சாத்தியமே இல்லை என்பதே இந்த சம்பவம் சொல்லும் செய்தி.
மகளே, நீ தென்னாட்டைக் கடந்து வடநாடு சென்றிருப்பது கல்வி கற்றுக் கொள்வதற்காக. சிறப்பாக கல்வி கற்றுக் கொள்ளல் என்ற லட்சியத்தை எட்டும் வழிகளைத் தேட வேண்டுமேயொழிய சண்டை, சச்சரவுகளில் உன் லட்சியத்தை தொலைத்துவிடக் கூடாது. நீ அடைய வேண்டிய இலக்கிலிருந்து உன் சிந்தனையை திசை திருப்பிவிடக் கூடாது. அது உனது உற்றார் உறவுகளாக இருந்தாலும் சரி அல்லது உன் கூட படிக்கும் சக மாணவிகளாக இருந்தாலும் சரியே நீ எல்லோரிடமும் அன்புடனும், பண்புடனும் பழக வேண்டும்.
நீ செழித்து வளர வேண்டிய ஒரு விருட்சத்தின் விதை.
ஒரு நல்ல விதையின் முளைப்புத் திறன் தெரியுமா உனக்கு?
சொல்கிறேன் கேள்.
பல விதைகள் பூமியில் விழுந்தன.
ஆனால், அவற்றின் ஒரு விதை விழுந்த இடமோ வெறும் மலைப்பாங்கான பாறை பகுதி. அதிலும் முளைக்கும் சாதியமற்ற பாறையின் இடுக்கு.
அத்துடன் முடிந்துவிட்டதா என்றால் அதுதான் இல்லை.
அந்த விதையை சுட்டுப் பொசுக்கிட சூரியன் துடிதுடித்தான். நெருப்பு மழையாய் வெய்யிலை வாரி இறைத்தான். உஷ்ண மழைப் பொழிந்தான்.
”ஊஹும்..!” அவை எவற்றையும் அந்த விதை சட்டை செய்யவே இல்லை.
”உன்னை விட்டேனா பார்..!” – என்று காற்று, சூரியனுடன் கூட்டணி அமைத்துக் கொள்ள நிலைமை இன்னும் படு மோசமானது.
”உய்… உய்..!” – சூறைக்காற்றாய் சுழன்று விதையை அங்கிருந்து நகர்த்திட முயன்றது காற்று.
விதை அப்போதும் அலட்டிக் கொள்ளவில்லை.
இப்போது மழையும் இணைந்து கொள்ள, ”சத..சத.. பட்..பட்..” – என்று கூரான ஊசிகளாய் மழை பெய்து விதையை அழித்திட முயற்சி செய்தது.
பலனில்லை!
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நடுவே கண்விழித்த மலைப்பாறை, தன் மீதான அசாதாரண நம்பிக்கையால், ”பொடிப்பயல் எங்கே முளை விடப்போகிறான்?” – என்று சோம்பல் முறித்தபடி, பழையபடி உறங்க ஆரம்பித்துவிட்டது.
ஆனால், விதையோ இத்தனை ஆர்ப்பாட்டங்களையும், கூக்குரல்களையும், ஏசல்களையும், முனைப்புகளையும் பொறுமையுடன் சகித்துக் கொண்டது. இறையருளால் முழு முனைப்புடன் முளைவிட ஆரம்பித்தது.
சூரிய ஒளி, காற்று, நீர், மலைப்பாறையில் படிந்திருந்த மண் என்று தன்னை எதிரியாய் பாவித்தவர்களின் துணை கொண்டே விதை பிளந்து முளைத்தது.
தனது சின்னஞ்சிறு பிஞ்சு சல்லி வேர்களை மெல்ல மெல்ல படரவிட்டது.
முடிந்த இடங்களில் ஆழமாகவும், கடினமான இடங்களில் மேலோட்டமாகவும் வேர்களைப் பரப்பி துளிர்விட்டது. ஆணி வேரை ஆழமாய் பூமிக்குள் செலுத்தி உறுதியானது.
ஒருகாலம் வந்தபோது, அந்த மலைப்பாறைகளின் மீது காயும், கனியுமாய் படர்ந்த ஒரு இளம் விருட்சம் பலன் தர ஆரம்பித்தது.
யாரெல்லாம் தனக்கு இடர் விளைவித்தார்களோ அவர்களின் தீயச் செயல்களை மறந்துவிட்டது.
பூமிக்கு நிழல் தந்தது. சூரியனுடன் தோழமைப்பாராட்டியது. வானத்துக்கு இரு கரம் நீட்டியது. நீரை உறிஞ்சி ஆவியாக்கி மழை மேகங்களை உருவாக்கியது. காற்றோடு இசைந்து, இன்னிசை இசைத்தது. கால்நடைகளுக்கு தீவனமானது. பறவைகளுக்கு அடர்ந்த கூடுகளானது. மனிதர்களுக்கு நிழலும், கனிகளுமாய் அளித்து மகிழ்ந்தது.
மகளே, வீரியமான ஒவ்வொரு விதையின் கதையிது.
நீயும் இத்தகைய விருட்சமாய் வளர்ந்து, படர்ந்து மனித இனத்துக்கு பலனளிக்க வேண்டும் மகளே. அதனால், எதிர்மறை அம்சங்களை புறக்கணித்துவிட்டு, நேர்மறை அம்சங்கள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ அவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டு வானத்தை தொடும் அளவுக்கு நீ வளர வேண்டும். இதுவே இந்தத் தந்தைக்கு நீ செய்யும் பிரதிபலன். உன்னைச் சுற்றியுள்ள சூழல்களை எல்லாம் உனக்குச் சாதகமாக்கிக் கொண்டு வானுயர வளர்ந்துவிடு.
• நீ அன்பிற்காக
• ஏங்கிக் கொண்டிராதே..!
• அன்பு மழையாகி
• அடுத்தவர் மீது
• அன்பை பொழிந்திடு!
• அடுத்தவர் உன்னை
• நேசிப்பதிருக்கட்டும்..!
• நீ எல்லோர் மனங்களையும்
• கொள்கைக் கொள்ளும்
• மந்திரக்கோலாகிவிடு..!
அதேபோல, எந்நிலையிலும், என் பெயரைப் பயன்படுத்தி உனக்கு செல்வாக்கை தேட முயலாதே! உன்னையே நீ சார்ந்திரு.. உன் கால்களிலேயே நீ நின்றிடு..!
• ”வாழ்க்கை பறந்து கொண்டிருக்கிறது…!
• பொழுது புலரும் ஒவ்வொரு நாளும்…
• இறப்பும் உன்னை நெருங்கி வந்து கொண்டே யிருக்கிறது..!
• ஆகவே, உன் ஒவ்வொரு கணத்தையும்
• முற்றிலும் பயன்படுத்துவாயாக!”
சிறுவயதில் என்னுள் மாற்றங்களை நிகழ்த்திய அறிஞர்களில் ஒருவரான பீவர்புரூக்கின் இந்த பொன்மொழியையே உன் முன் வைக்கின்றேன்.
நீ நல்ல மனுஷியாக… பண்புள்ள … மனித நேயமிக்கவளாக மாற நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
உன்னோடு படிக்கும் மாணவிகள் அனைவருக்கும், உனது ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது சலாம்களையும், பிரார்த்தனைகளையும் சேர்த்துவிடு.
உன் பிரார்தனைகளில் எனக்காகவும் இடம் ஒதுக்குவாய் அல்லவா மகளே..!
உனது இம்மை, மறுமை நலன் நாடும் தந்தை,
இக்வான் அமீர்.
//உன்னைச் சுற்றியுள்ள சூழல்களை எல்லாம் உனக்குச் சாதகமாக்கிக் கொண்டு வானுயர வளர்ந்துவிடு//
ReplyDeleteஹைலைட் செய்யணும்னா பதிவின் ஒவ்வொரு வரியையும் மேற்கோள் காட்டணும் அத்தனை அருமையான வரிகள் ஐயா.
இந்த அறிவுரைகளை நானும் என் மகளுக்கு எடுத்து சென்று சொல்கிறேன் .இறைவனுக்கு சித்தமானால்இன்னும் சில வருடங்களில் மேற்படிப்புக்கென அவளும் வேறிடம் செல்லக்கூடும் ..இக்காலத்தில் பிள்ளைகளுக்கு பொன்னான அறிவுரை ஐயா .பள்ளி பருவம் வரை நம்முடனே இருப்பதால் உலகின் இருட்டும் கசடும் தெரிய வாய்ப்பில்லை ..பிள்ளைகளிடத்து தீமையை சொல்வதை விட இப்படி பாசிட்டிவ் எண்ணங்களை விதைப்பது நல்லதே .பகிர்வுக்கு நன்றி ஐயா
நன்றி Angelin
Delete